மணி பல்லவம் 5/10. கருணை வெள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

10. கருணை வெள்ளம்

சித்துக் கிடந்த புலி இரை கண்டு பாய்வது போல் பாய்ந்து திரும்பிய பெருநிதிச் செல்வரின் கண்களில் முதல் காட்சியாகத் தென்படும்படி தன் தாயின் ஓவியத்தைக் காட்டினான் இளங்குமரன். படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் ஒற்றைக் காலின் பலத்தினாலும் ஊன்றுகோலின் பலத்தினாலும் தளர்ந்தும் தயங்கியும் நின்ற அவர் வியப்பும் அச்சமும் மாறி மாறித் தெரியும் கண்களால் அந்த ஓவியத்தைப் பார்த்தார். எந்தப் பெண்ணுடைய கண்களின் அழகைத் தான் அடைய முடியாமல் பல ஆண்டுகளுக்கு முன் அமுதசாகரன் என்ற கவி தன்னை ஏமாற்றினானோ அந்தக் கண்களை இப்போது மீண்டும் இந்த ஓவியம் தனக்குக் காட்டுவதை உணர்ந்தார் அவர்.

‘இந்த மயக்கும் விழிகளில் என்னை நோக்கி மலர்ந்திருக்க வேண்டிய கனவு அப்படி மலராமற் போனதால்தான் அன்று என் மனத்தில் குரோதம் பிறந்தது. அந்தக் குரோதம் ஏற்கெனவே பலவகையில் கொடியவனாயிருந்த என்னை இன்னும் கொடிய அரக்கனாக மாற்றியது. உள் நெருப்பாக வீழ்ந்துவிட்ட தீய உணர்ச்சிகள் இன்னும் என்னுள் எங்கோ கனன்று கொண்டிருக்கின்றன. இல்லா விட்டால் இந்தப் பிள்ளையை இப்போது எதிரே காண்கிற நிலையிலும் என் நினைவுகள் இப்படிக் கொதிப்பதற்குக் காரணமில்லையே?’ என்று தனக்குள் விரைந்து எழும் எண்ணங்களோடும், அந்த எண்ணங்களின் மாறுபட்ட சாயல்கள் சிறிதும் தெரியாத முகத்தோடும் நின்றார் பெருநிதிச் செல்வர். அப்படி நின்றபோது அவருடைய செவிகளில் மறுபடியும் நியாயத்தின் குரலாய் இளங்குமரனுடைய பேச்சு எதிரேயிருந்து ஒலிக்கத் தொடங்கியது.

“இதோ இந்த ஓவியங்களையும் பாருங்கள். இவர்களையெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். நினைவில்லாவிட்டால் நினைவுபடுத்துவதற்காகவே நான் வந்திருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியபடியே தன் தந்தை அமுதசாகரருடைய ஓவியத்தையும், தாய்மாமனான காலாந்தக தேவருடைய ஓவியத்தையும் அவர் முன்பு காட்டினான் இளங்குமரன்.

அந்த விநாடி வரை அவன் முகத்தில் சிரிப்புக் குன்றவில்லை. ஆனால் எதிரே நின்றுகொண்டு அவற்றையெல்லாம் பார்க்கும்போது அவருக்கோ பதில் பேச நா எழாமல் உள்ளேயே கட்டுண்டு அடங்கிப் போய்விட்டாற் போலிருந்தது. நகைவேழம்பருடைய சாவுக்குப் பின்பு அருவாள மறவனும், அவனுடைய தோழனும் தன்னைப் புறக்கணித்துவிட்டுச் சென்றதிலிருந்து உலகமே தனக்கு முன் இருண்டு போய் அவநம்பிக்கைகள் சூழ்வதுபோல் பிரமை கொண்டு தளர்ந்து படுத்த படுக்கையாகியிருந்தார் அவர். இவ்வளவு காலம் கொடுமைகளும், சூழ்ச்சியும் செய்வதற்குக் காரணமாகத் தன் மனத்தில் இறுகிப் போயிருந்த உணர்வுகள் இப்போது எதற்கோ உடைந்து தளர்ந்து விட்டாற்போல அவருக்கே அச்சமாக இருந்தது. ஏதோ ஒரு வழியில் ஏதோ ஒரு காரணத்துடன் மூச்சு இரைக்கும்படி ஓடத்தொடங்கிய கால்கள் அந்த முடிவு தெரியாத வழியின் மேல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றவுடன் நெஞ்சுத் துடிப்பின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத தளர்ச்சியாலோ, இனிமேலும் ஒரு முடிவும் தெரியாத இந்த வழியில் தொடர்ந்து எதற்காகப் போவது என்று மலைப்பதனாலோ அப்படியே சோர்ந்து நின்றுவிடுவதைப் போன்று தமது பயங்கரமான வாழ்க்கையில் மேலே என்ன செய்வதெனத் தோன்ற முடியாத மலைப்போடு வழி தெரியாமல் இன்று மயங்கி நின்றார் பெருநிதிச் செல்வர்.

‘இன்று இந்த முன்னிரவுப் போதில் இளங்குமரன் எனக்கு முன்பு இப்படிச் சிரித்துக்கொண்டே வந்து நிற்பதற்குப் பதில் ஆறாத சினத்துடன் உருவிய வாளும் கையுமாக என் எதிரியாக வந்திருந்தால்கூட நான் பயமின்றி நிமிர்ந்து நின்றிருப்பேன். இப்படிச் சிரித்துச் சிரித்து இந்தப் பொறுமையையும் நிதானத்தையுமே ஆயுதங்களாகக் கொண்டு என்னைக் கொல்கிறானே இந்தப் பிள்ளை ?’ என்று எண்ணி, அந்தப் பொறுமையாலும், நிதானத்தாலும் கூடத் தாக்கப்பட்டவராய்த் தளர்ந்து போய் நின்றார் அவர்.

தனக்கு முன்னால் அவருடைய தொடர்ந்த மெளனத்தையும் திகைப்பையும் கண்டு உணர்ந்த இளங்குமரன் தன் வசமிருந்த ஓவியங்களையும் சுவடிகளையும் ஒரு புறமாக வைத்துவிட்டு இன்னும் அருகில் நெருங்கிச் சென்று அவரோடு பேசினான்.

“ஐயா! நீங்கள் ஏன் இப்படி வாய்திறந்து மறுமொழி கூறாமல் எனக்கு முன் திகைத்து நிற்கிறீர்கள்? நான் ஏழை. என் கைகளில் இப்போது ஆயுதங்கள் இல்லை. மனத்தில் கோபமும் இல்லை. என் குடும்பத்தின் இணையற்றதொரு தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களின் உயிர்களையும், செல்வங்களையும், நம்பிக்கைகளையும், நீங்கள் அழித்து நிர்மூலமாக்கியிருக்கிறீர்கள். அப்படியிருந்தும் உங்களை மலர்ந்த முகத்தோடும், சிரித்த வாயோடும் சந்திக்க வேண்டுமென்றுதான் ஆசையாயிருக்கிறது எனக்கு. இந்த மாளிகைக்குள்ளே இன்று நான் நுழையும்போது உங்கள் காவலாளிகள் நீங்கள் நோயுற்றுப் படுத்தபடுக்கையாயிருப்பதாகக் கூறினார்கள், உங்களுக்கு வந்திருக்கும் நோய் எதுவோ அதற்காகவும் நான் அநுதாபப்படுகிறேன்.” "உன்னுடைய அநுதாபத்திற்காக நான் ஏங்கித் தவித்துக் கொண்டு கிடக்கவில்லை. நீ இங்கிருந்து உடனே வெளியேறிப் போய்விடு. நீ இங்கே தாமதித்து நின்றால் உன் உயிரே என் நோய்க்கு மருந்தாக வேண்டுமென்று கூட நான் ஆசைப்பட நேரலாம். இப்படிச் சிரித்துக் கொண்டு என் கண்களுக்கு முன் நிற்காதே. இந்தச் சிரிப்பு என்னை என்னவோ செய்கிறது. நான் கொலைக்கு அஞ்சாதவன், சில நாட்களாக என் மனமும் ஒரு நிலையில் இல்லை. நான் எந்தக் கணத்தில் எப்படி மாறுவேன் என்று சொல்வதற்கும் முடியாது. மறுபடியும் நான் கொலைகாரனாவதற்கு வாய்ப்பளிக்காதே. வந்த வழியே திரும்பிப் போய் விடு.”

அவருடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு இளங்குமரன் முன்னிலும் நிறைவாகச் சிரித்தான். சிரித்துக் கொண்டே முகத்துக்கு முகம் சந்திக்க முடிந்த அண்மையில் இன்னும் அவரை நெருங்கி நின்று கொண்டு மறுமொழி கூறினான்:-

“ஐயா! இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. உங்களுக்கு வந்திருக்கும் நோய் என்னவென்று நான் விளங்கிக் கொண்டேன். செய்த தீவினைகள் பழுத்து அவற்றின் விளைவை அநுபவிக்கும் காலம் வரும்போது மனிதர்களுக்கு இந்தத் தவிப்பு ஏற்படத்தான் செய்யும். சில நாட்களாக உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் மனம் ஒருநிலைப்படாத தன்மை இப்போது சில நாட்களாக மட்டும் உங்களைப் பற்றியிருப்பதாய் நீங்கள் நினைப்பது தான் தவறு. தொடக்கத்திலிருந்தே உங்கள் மனத்திற்கு அந்த நிலையில்லாத் தன்மை உண்டு என்று தான் நான் நினைக்க முடிகிறது. ஒருநிலைப்பட்ட மனம் உங்களுக்கு இருந்திருந்தால் தொடக்க நாளிலிருந்தே நீங்கள் வேறு விதமாக வாழ்ந்திருக்க முடியும். தான் மட்டும் வாழ ஆசைப்படுகிற மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் வாழ ஆசைப்படுகிற சான்றோர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். பிறரை அழித்துக் கொண்டே தான் மட்டும் வாழ ஆசைப்படும் விலங்குக் குணம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்றாவது வகை மனிதர்களுக்கு இக்குணமே நாளுக்கு நாள் வெளிப்படாத நோயாய்ப் பெருகி உள்ளுக்குள்ளேயே வளர்கிறது. இந்த நோய் முற்றி இதை வளர்த்துக் கொண்டவன் தன்னுடைய தீயசக்திகள் எல்லாம் தனக்குப் பயன்படாமல் ஒவ்வொன்றாய்த் தன்னைக் கைவிடுகின்றன என்பதை உணரும்போது தன் முன் தனக்கு எதிரே அதுவரை தெரிந்து கொண்டிருந்த உலகமே இருண்டுபோய் விடுகிறதாக எண்ணி மலைக்கிறான். இந்த இருளில் சிக்கிக் கொண்டவர் யாராயிருந்தாலும் பரிதாபத்துக்குரியவர். உங்களைச் சுற்றி இப்போது சூழும் இருள் அத்தகையது. இப்போது இந்த இருளில் நீங்கள் தவிப்பதைப் பார்த்து நீங்கள் பகைக்குலத்தின் கடைசிக் கொழுந்தாகிய நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்து கொண்டிருக்கிறேனோ என்று நீங்கள் என்மேல் சந்தேகப்படலாம். அப்படிச் சந்தேகப்படுவதும் மனித இயற்கைதான். ஆனால் என் மேல் அந்தச் சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். உங்கள் மேல்கூட நான் கருணை காண்பிக்க முடியும். உங்களைப் பகைமையின் எல்லையாகக் குறி வைத்துக்கொண்டு குமுறுவதற்குப் பதில் என்னால் எவ்வளவு அநுதாபப்பட முடியுமோ, அவ்வளவு அநுதாபத்திற்கும் உங்களையே எல்லையாக்கிக் கொண்டு நான் கருணை வெள்ளமாய்ப் பெருகி, அதில் நீங்களும் மூழ்கி எழுதுவதற்கு இடமளிக்க முடியும். நீங்கள் என் தந்தையை இந்த மாளிகையின் நிலவறையில் துடிக்கத் துடிக்கக் கொன்றிருக்கிறீர்கள். என் தாயின் இனிய நினைவுகளும் மங்கல நம்பிக்கைகளும் அழிவதற்கும் அவள் இறப்பதற்கும் காரணமாயிருந்தீர்கள். என்னுடைய தாய் மாமன் காலாந்தக தேவரை ஏமாற்றி அழைத்துப் போய்க் கொலை செய்துவிட்டு அவர் எனக்கு அணிவிக்கக் கொண்டு வந்திருந்த நவரத்தின ஐம்படைத் தாலியையும் பிறவற்றையும் கொள்ளையடித்தீர்கள். என்னையும் எனக்குப் பாதுகாப்பாயிருந்து வளர்த்த அருட்செல்வ முனிவரையும் பலமுறை கொன்றுவிட முயன்றீர்கள். இப்போது இன்று இந்த நிலையிலும் என்னைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்துகிறீர்கள். என் குலத்து முன்னோர்களைக் கொன்றாற் போலவே என்னையும்கூட உங்களால் கொன்றுவிட முடியும். ஆனால் ‘நாம் இன்னாரைக் கொன்றோம் என்று ஒவ்வொரு நாளும் உங்கள் மனச்சாட்சியின் ஞாபகக் குரல் இடைவிடாமல் உங்களுக்குள்ளேயே ஒலித்துக் கொண்டிருக்குமே, அந்த ஒலியை உங்களால் ஒருபோதும் கொல்ல முடியாதே?...”

இவற்றைக் கேட்டுப் பெருநிதிச் செல்வரின் உடல் நடுங்கியது. உடம்பு முழுவதும் பாதாதி கேசபரியந்தம் தீப்பற்றி எரிவதுபோல் வெம்மைப்பட்டு வேர்த்தது. எதிரே வந்து நின்றுகொண்டு நியாயத்தைப் பேசுகிறவனுடைய சொற்களே ஒவ்வொன்றாகப் புறப்பட்டுப் பாய்ந்து துளைக்கும் அம்புகளாக வந்து தாக்கித் தன்னை வீழ்த்தி விட்டாற்போல ஒரு கையால் நெஞ்சை அழுத்திக் கொண்டு தளர்ந்து போய்ப் பின்னால் சிறிது சிறிதாக நகர்ந்து கட்டிலில் அமர்ந்தார் அவர். அமர்ந்தபடியே மற்றொரு கையிலிருந்த ஊன்றுகோலை நெஞ்சருகே கொண்டுபோய் இரண்டு கைகளும் நடுங்கிடப் பிடியைத் திருகி அந்த ஐம்படைத் தாலியை எடுத்து இளங்குமரனுக்கு முன்னால் வீசி எறிந்தார்.

தரையில் மின்னல் விழுந்து நெளிவதைப் போலத் தனக்கு முன் வீழ்ந்து கிடந்த அந்தப் பொருளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவன் நின்றபோது அதை அவனுக்கு முன் வீசி எறிந்ததைவிட வேகமாகத் தன்னுடைய சொற்களை வீசி எறிவதுபோல் குமுறிக் குமுறிப் பேசலானார் அவர்:-

“உன்னுடைய தாய்மாமனிடமிருந்து நான் கொள்ளையடித்து விட்டதாக நீ சொல்லிக் குறைபட்டுக் கொள்கிற பொருளை இதோ உன் காலடியில் தூக்கி எறிந்து விட்டேன். இதை எடுத்துக் கொண்டு போய்விடு.

என்னுடைய கோபத்தை வளர்க்காதே. நான் மிகவும் பலவீனமான நிலையிலிருக்கிறேன். இந்நிலையில் எப்படி நடந்து கொள்வேனென்று எனக்கே தெரியாது! சந்தர்ப்பம் மறுபடி என்னைக் கொலைகாரனாக்கி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

“உங்களுடைய கோபத்தைப் பார்த்து எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் இந்த விதமான கோபம் கோழைகளுக்குத்தான் சொந்தமானது. யாரிடம் தவிர்க்க முடியாத காரணத்திற்காகக் கோபப்பட வேண்டுமோ அங்கேகூட அந்தக் கோபத்தை இழந்து விட்டு நிற்கவும், சிரிக்கவும் பக்குவமான வீரனால் முடியும். எல்லாவற்றுக்கும் பிடிவாதமாக முயல்வதைப் போலவே எல்லா ஆசைகளையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு இருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு முன்னால் வந்து நிற்பது என்னுடைய செல்வங்களை உங்களிடம் இருந்து மீட்டுக்கொண்டு போவதற்காக அன்று. எப்படி வாழக்கூடாதோ அப்படி நீங்கள் இதுவரை வாழ்ந்துவிட்டீர்கள். இதற்காக உங்களைப் பாராட்ட முடியாது. ஆனால் மன்னிக்கலாம். மன்னிக்க முடியும். அளவுக்கு மீறிய வறுமையைப் போலவே நீங்கள் கொடுமையும் துரோகமும், சூழ்ச்சியும் புரிந்து சேர்த்திருக்கும் அளவுக்கு மீறின செல்வமும் உங்களைச் சார்ந்துள்ள நோய்தான். நோயாளிகள், துன்பப்படுகிறவர்கள், ஏழைகள் ஆகியோர் மேல் எல்லாம் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே எனக்கு நிறைய அநுதாபம் உண்டு. இலஞ்சி மன்றத்திலும், உலக அறவியலிலுமுள்ள நோயாளிகளுக்காக நான் என் மனத்தின் உள்ளேயே அநுதாபப்பட்டு அழுவதுண்டு. அப்படி உங்களுக்காகவும் நான் அநுதாபப்பட்டு அழ முடியும். இதோ ஒருகணம் இப்படி என் பக்கமாகத் திரும்பித் தலை நிமிர்ந்து பாருங்கள். என்னுடைய உறவுகளையும், செல்வங்களையும், உங்களுடைய குரோதத்திற்கும் கொடுமைக்கும் சிறிது சிறிதாக இழந்து பறி கொடுத்துவிட்ட நான் அப்படி இழந்துவிட்ட உண்மையைத் தெரிந்துகொண்ட பின்னும் உங்களுக்கு முன்னால் உங்களைவிட நிம்மதியோடும், நிதானத்தோடும் சிரித்துக்கொண்டு நிற்க முடிகிறது. நீங்களோ இவ்வளவு பெரிய மாளிகையில் எவ்வளவு என்று கணித்துச் சொல்ல முடியாத அவ்வளவு செல்வத்தைச் சேர்த்து ஆண்டு கொண்டிருந்தும், இப்போது எனக்கு முன்னால் நிம்மதியும் நிதானமும் இழந்து தோன்றுகிறீர்கள். உங்களைப் பார்த்து நான் கோபப்பட ஒன்றுமில்லை. ஆனால் இரக்கப்படுவதற்கும் கருணை கொள்வதற்கும் உங்களிடம் நிறையப் பலவீனங்கள் இருக்கின்றன...” என்று சொல்லிக்கொண்டே வந்த இளங்குமரனை மேலே பேச விடாமல் செய்யும் ஆத்திரத்தோடு துள்ளி எழுந்து பின்னால் பிடித்துத் தள்ளிவிட முயன்றார் பெருநிதிச் செல்வர். அவருடைய கைகள் அவனை நோக்கி மேலெழுந்து ஓங்கின.

ஆனால் அவர் அப்படிச் செய்வதற்கு ஆத்திரத்தோடு கைகளை ஓங்கிக் கொண்டு நின்றபோது அந்தக் கைகள் இரண்டும் அதே நிலையில் மரத்துப்போனாற்போல் தயங்கிவிட, அவர் செயலிழக்கும்படிச் செய்யவல்ல கம்பீர ஆகிருதி ஒன்று அந்தக் கூடத்துக்குள் புயல் புகுந்தது போலப் பிரவேசித்தது.

“நிறுத்து! இளங்குமரனுக்கு இந்த மாளிகையில் ஏதாவது நேர்ந்தால் உன்னுடை குலத்தையே பூண்டோடு அழித்துவிடுவேன். இந்தப் பெரிய நகரத்தையே என் கைகளால் ஆட்டிப் படைக்கிற வலிமை இருந்தும், நான் இவ்வளவு காலமாக எதற்கும் வைரம் கொண்டு குமுறியதில்லை. என்னைப் போன்றவர்களின் கோபத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு என்று நானே நிரூபித்துக் காட்ட வேண்டிய காலம் வந்து விட்டது போலிருக்கிறது” என்று எரிமலையாகக் கொதித்து பேசும் சொற்களோடு நீலநாக மறவர் மணிமார்பன் பின் தொடர அங்கு வந்து நின்றார்.

சோழநாட்டிலேயே பெரிய வீரராகிய நீலநாகர் அங்கு வந்து நின்றதைக் கண்டபோது பெருநிதிச் செல்வரின் உணர்வுகள் ஒடுங்கின. கண்களுக்கு முன்னால் உலகம் இன்னும் அதிகமாக இருண்டு போவதுபோல் தோன்றியது.

அந்தத் தோற்றத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசிக் கொண்டு கீழே குனிந்து தரையைப் பார்த்தார் அவர் .

“தம்பீ! இந்த மனிதனிடம் வாயினால் பேசி நியாயம் கேட்டுப் பயனில்லை. கைகளால் பேச வேண்டும். எவ்வளவு பாவங்களைச் செய்யக் கூடாதோ அவ்வளவு பாவங்களையும் செய்துவிட்டு மேலும் செய்வதற்குப் பாவங்களைப் தேடிக் கொண்டிருக்கிறவன் இவன்” என்று சொல்லிக் கொண்டே தனக்கு அருகில் வந்த நீலநாகரை இளங்குமரன் அவ்வளவாக மகிழ்ச்சியோடு வரவேற்கவில்லை. உள்ளடங்கிய மெளனத்தோடு சில விநாடிகள் அசையாது நின்றபின், ஒரு காலத்தில் தனக்கு வீரத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்த அந்தப் பெருவீரரை நோக்கி இளங்குமரன் இப்போது ஒரு கேள்வி கேட்டான்.

“ஐயா! யாருடைய துணையுமில்லாமல் நம்முடைய பகையை நாமே தனியாக எதிர்கொள்ளலாம் என்று திடமான எண்ணத்தோடு புறப்பட்டு வந்திருக்கிற வீரனுடைய பெருமிதம் உயர்ந்ததா, இல்லையா?”

“உயர்ந்தது மட்டுமில்லை, இணையில்லாமல் உயர்ந்தது! அப்படிப்பட்ட வீரமுள்ளவர்கள் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வதோடு தங்களைச் சார்ந்துள்ள வீரம் என்னும் குணத்தையே பெருமைப்படுத்துகிறார்கள், இளங்குமரா!”

“மிகவும் நல்லது ஐயா! அத்தகைய தன்னம்பிக்கை வாய்ந்த வீரன் தன் எதிரியைத் தான் மட்டும் சந்திக்க வேண்டிய களத்தில் தனக்குத் துணையாக எவரேனும் பின்தொடர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியுமோ?”

நீலநாகர் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறமுடியாமல் அப்படியே அயர்ந்துபோய் நின்றுவிட்டார். மேல் நோக்கி ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய பார்வை கூசித் தாழ்ந்தது. இளங்குமரனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவர் எதிர்பார்க்கவே இல்லை. இதனால் சுட்டிக் காட்டப்படுகிற குற்றம் தன்னுடையது என்பதை உணர்ந்தபோது அவருக்கு மிகவும் நாணமாயிருந்தது. அப்போது இளங்குமரனுக்கு அவர் கூறிய மறுமொழிச் சொற்கள் ஒலி குன்றித் தன் தவற்றைத் தானே அங்கீகரித்துக் கொண்டது போன்ற தொனியோடு வெளிப்பட்டன.

“தம்பீ! என்னைப் பொறுத்துக்கொள். நான் உனக்குத் துணையாயிருக்க வேண்டுமென்ற ஆவலோடு இங்கு வந்ததை நீ இப்படி உன் பெருமைக்குக் குறைவாக நினைப்பதாயிருந்தால் என்னைப் பொறுத்துக்கொள். பிறர்மேல் நமக்குள்ள மிகுதியான வெறுப்பினால் சில வேளைகளில் தாம் தவறு செய்து விடுவதைப் போலவே, பிறர்மேல் நமக்குள்ள அதிகமான அன்பினால் சில தவறுகளைச் செய்துவிடுகிறோம். உன் மேலுள்ள அன்பின் மிகுதியால் உனக்கு இங்கே என்னென்ன கெடுதல் நேருமோ என்று எண்ணிக்கொண்டு நான் பின் தொடர்ந்தேன். மேலும் எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் பசித்துத் தளர்ந்த உடம்பும் உணர்வுகள் நெகிழ்ந்த மனமுமாக நீ இங்கே புறப்பட்டதாக மணிமார்பன் என்னிடம் வந்து கூறினான். அவன் என்னிடம் வந்து கூறிய சூழ்நிலையும் என்னை ஆத்திரமடையச் செய்துவிட்டது.”

“உங்களுடைய அன்புக்கும் பாசத்திற்கும் நான் நிறைந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் பெருமாளிகைச் செல்வரை வெற்றி கொள்வதற்கு நான் ஆயுதங்களோடு வரவில்லையே என்று நீங்கள் கவலைப்பட்டு எனக்குத் துணையாக என்னைப் பின் தொடர்ந்திருக்க வேண்டியதில்லை. எனக்கு நான் இவரிடம் பேச முடிந்த சொற்களைவிடப் பெரிய ஆயுதங்கள் வேறு எவையும் இருக்க முடியாது. என்னை எதிர்ப்பதற்கு என் சொற்களைவிடப் பெரிய வேறு ஆயுதங்கள் எவையும் இவரிடம் இருக்க முடியாது.”

“உயிரை அழிப்பதில் சொற்களைக் காட்டிலும் விரைந்து முயலும் இயல்பு ஆயுதங்களுக்கு இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம் தம்பீ.”

"ஒப்புக் கொள்கிறேன். ஆனால் என் நாவிலிருந்து பிறக்கும் நியாயமான சொற்களுக்கு மறுமொழி சொல்ல முடியாதவரை இவர் எனக்குத் தோற்றுப் போய்க் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். இவர் வேண்டுமானால் என் உடம்பை அழிக்கலாம். ஆனால் அப்படி அழித்தோம் என்ற நினைவைத் தன் மனத்திலிருந்து என்றுமே இவரால் அழிக்க முடியாது. இந்த நிலையில் நீங்கள் எனக்குச் செய்யும் பெரிய துணை என்னை இவரோடு தனியே விடுவதுதான். இவரை என்னுடைய எதிரி என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்க்கையிலேயே நான் இதுவரை அநுதாபம் கொள்ள நேர்ந்தவர்களையெல்லாம்விட அதிகமாக அநுதாபம் கொள்ளுவதற்கு உரியவர் இவர் என்றுதான் எண்ணுகிறேன். என்னுடைய இந்தப் பரந்த அதுதாபத்தைச் சான்றாண்மை எனக்குத் தந்திருக்கிறது. இதை இவர்மேல் நான் செலுத்த முடிவதற்குத் தடையாக உங்கள் வரவு எனக்குத் தோன்றுகிறது.”

“என்னை மன்னித்துவிடு. நான் இங்கே உனக்கு அத்தகைய தடையாக நிற்க விரும்பவில்லை” என்று கூறி விட்டு மறுபடியும் இளங்குமரனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்குக் கூசியவராக மணிமார்பனையும் கைப்பற்றி இழுத்துக்கொண்டு நீலநாகர் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். எவ்வளவு ஆவேசமாகவும் ஆத்திரமாகவும் அவர் அந்த மாளிகைக்குள் நுழைந்தாரோ அவ்வளவிற்குத் தளர்ந்து துவண்டு குனிந்த தலையோடு திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியால் தன் தந்தைக்குச் சமமான அந்தப் பெருவீரரின் மனம் புண்பட்டிருக்குமோ என்று உள்ளூர வருந்தினாலும் அப்பொழுது தான் நிற்கும் சூழ்நிலையில் இதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று மனத்தைத் தேற்றிக்கொண்டவனாகத் தான் எதிர்க்க விரும்பாத தன் எதிரியின் பக்கம் பார்த்தான் இளங்குமரன். முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டு நின்றிருந்தார் பெருநிதிச்செல்வர். இளங்குமரன் சிரித்துக்கொண்டே நிதானம் மாறாத குரலில் அவரைக் கேட்டான்: "இப்போது இங்கிருந்து வெளியேறிச் செல்கிறாரே, இந்த ஆலமுற்றத்துப் பெரியவர் குறிக்கிட்டிராவிட்டால் நீங்கள் என்னைக் கீழே பிடித்துத் தள்ளியிருப்பீர்கள். அப்படித் தள்ளிவிட்ட பின்பு இன்னும் கொடுமையாக ஏதேனும் செய்து என்னை அழிக்கவும் முயன்றிருப்பீர்கள் அல்லவா? இப்போதும் உங்கள் முயற்சிக்குப் பழுதில்லை. நான் தனியாகத்தான் உங்கள் முன் நிற்கிறேன், எந்த விதமான கோபதாபங்களும் இல்லாமல், நீங்கள் அதிக பட்சமாக எனக்குச் செய்ய முடிந்த பெருங்கொடுமை எதுவாயிருந்தாலும் அதற்கு என்னை இலக்காக்கிக் கொள்ளத் துணிந்துதான் நிற்கிறேன். உங்களுக்குத் தோன்றுவதைச் செய்யலாம்.”

இளங்குமாரனின் இந்தச் சொற்களைக் கேட்டு அவர் அவன் பக்கமாகத் திரும்பினார். அவ்வாறு திரும்பிய போது அவர் முகம் வெளிறினாற் போலப் பயந்து தோன்றியது. கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. முகத்திலும் கழுத்திலும் வேர்த்துப் பெருகியிருந்தது. பிச்சை கேட்டதுபோல் ஒடுங்கி நலிந்த குரலில் அவனருகே வந்து மன்றாடினார் அவர்.

“தயைகூர்ந்து நீ என் எதிரே நிற்காமல் போய்விடு! உன்னைப் பார்ப்பதற்குப் பயமாயிருக்கிறது. உன் கண்களின் பார்வை கணத்துக்குக் கணம் நெருப்பாகி என்னைச் சுடுகிறது. உன்னுடைய சொற்கள் என்னைக் கொல்வதற்கு முன் உன் பார்வையே கொன்றுவிடும்போல் இருக்கிறது. நான் என் வாழ்வில் இப்படிப்பட்ட எதிரியை இதுவரை சந்தித்ததில்லை. என் மனம் உன் முன்னால் பதறி நடுங்குகிறது. எனக்குள்ளேயே ஏதோ நெருப்பு மூண்டதுபோல் பற்றி எரிகிறது. நீ சொல்லியது உண்மை தான். எப்படி வாழக்கூடாதோ அப்படி நான் வாழ்ந்து விட்டேன். இப்படி வாழ்ந்துவிட்டதைப் பாராட்ட முடியா விட்டாலும் மன்னிக்க முடியும் என்று நீ சொல்கிறாய். ஆனால் உன்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ள எனக்குத் துணியவில்லை. நான் மன்னிப்பதற்குக் கூடத் தகுதியற்றவன். நீ என்மேல் அநுதாபம் செலுத்துவது உண்மையானால் எனக்கு ஒர் உதவி செய். இந்த உதவியைத் தவிர வேறு எதையும் இனிமேல் நீ எனக்குச் செய்ய முடியாது.”

“சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?”

“பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். என்னுடைய செல்வமும், பீடும் போய்விட்டால் இந்தப் பெரிய நகரத்தில் அரசனிலிருந்து ஆண்டிவரை என்னை யாரும் மதிக்கமாட்டார்கள். ஏனென்றால் செல்வம் ஒன்றைத் தவிர என்னை மதிப்பதற்குரிய வேறு நிலையான காரணங்களை நான் பெறவில்லை. இந்தச் செல்வங்கள் என்னை விட்டுப் போகும்போது நானும் உலகத்தை விட்டுப் போய்விட வேண்டும். இனிமேல் நான் வாழக்கூடாது. நல்ல நண்பர்களும், நல்ல குணங்களும் இருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் கெட்டுப் போயிருக்க மாட்டேன். இவ்வளவு பாவங்களுக்கு அதிபதியாகவும் ஆகியிருக்கமாட்டேன். பூர்வ புண்ணியம் உள்ளவர்களுக்குத்தான் நல்ல குணங்களும் நல்ல நண்பர்களும் வாய்ப்பார்கள் போல் இருக்கிறது. எனக்கு அவையெல்லாம் கொடுத்து வைக்கவில்லை. நான் பிறவியிலேயே கெட்டவன். உன் தாயின் அழகை அடைய முடியாமல் ஏமாற்றம் அடைந்த போது அந்தச் சிறிய ஏமாற்றத்தைக்கூடத் தாங்கிக்கொள்ள இயலாமல் மேலும் கெட்டவனாக மாறினேன். சுற்றியிருந்தவர்கள் என்னைக் கொடிய வழியிலேயே தூண்டி விட்டு விட்டார்கள். இனி நான் மாற முடியாது. ஆனால் சாக முடியும்.

என்னைத் துடிக்கத் துடிக்கக் கொன்று பழிவாங்க வேண்டிய நீயோ என் முன்னால் வந்து சிரித்துக் கொண்டு நிற்கிறாய். என்மேல்கூட அநுதாபப்படுவதாகச் சொல்கிறாய். என்னுடைய இந்தச் செல்வங்கள் உனக்குப் பெரியவையாகத் தோன்றவில்லை. நீ உன் மனத்தையே செல்வமாக வளர்த்துக் கொண்டிருக்கிறாய். இருப்பினும் நீ ஒன்று செய்ய வேண்டும். என்னைக் கொன்றுவிட்டு இந்தச் செல்வங்களையெல்லாம், உனக்குரியவையாக்கிக் கொண்டு நீ வாழவேண்டும். நானே என்னைக் கொன்று கொள்ள முடியும். ஆனால் அதற்கும் எனக்கு உறுதியான மனம் வாய்க்கவில்லை. உன்னுடைய பரிசுத்தமான கண்பார்வை, சத்தியமான சொற்கள், எதிரியையும் வசப்படுத்திவிடும் புன்னகை இவற்றாலேயே நீ என்னை முக்கால் பகுதி கொன்றுவிட்டாய். மீதமிருக்கும் கால் பகுதியையும் உன் கைகளாலேயே நீ அழித்துவிடு! கடைசி வேளையில் நான் மனம் மாறி உனக்குத் தோற்றுப் போக ஆசைப்படுகிறேன். உன்னைப் போன்று தூய்மையான மனம் உள்ளவன் என்னை வெற்றி கொள்ள அநுமதித்து நான் தோற்பத னால், வருகிற பிறவியிலாவது எனக்குப் புண்ணியம் வாய்க்கும். இதோ நீ என்னைக் கொன்று கொள். என்னை வென்றுகொள்” என்று கதறிக் கொண்டே பொறியற்ற பாவைபோல் தளர்ந்து அவனுக்கு முன் முழந்தாள்களை மண்டியிட்டுக் கொண்டு அமர்ந்தார் அவர்.

அவருடைய சொற்களைக் கேட்டு இளங்குமரன் கைகட்டி நின்றுகொண்டு நகைத்தான். அவர் நிலையைக் கண்டு பரிதாபமாயிருந்தது அவனுக்கு. இந்த மாறுதலை வியந்துகொண்டே அவருக்கு மறுமொழி கூறினான் அவன்.

“ஐயா! பிறரை வென்றுவிட வேண்டும் என்ற ஆசை கூடத் துறவிக்கு இருக்கக்கூடாது. வெற்றிக்கும் ஆசைப் படாத மனம்தான் துறவியின் செல்வம். அந்தச் செல்வம் தோல்வியினாலும் குறையாது. உங்கள் மனத்தில் இவ்வளவு காலமாக இப்படிக் கொடுமை செய்து வாழக் காரணமாக நின்ற பலம் எது என்று பரிசோதனை செய்து பார்க்க மட்டும்தான் நான் விரும்பினேன். உங்களை வெல்லவும், கொல்லவும் நான் விரும்பவில்லை. வெற்றியைக்கூட என்னால் விட்டுக் கொடுக்க முடியும். அப்படிப் பலமுறை என் வாழ்வில் நேர்ந்திருக்கிறது."

முகுந்தபட்டர் என்ற ஞானி எனக்கு அறிவில் தோற்றுப் போக ஆசைப்பட்டார். உங்கள் மகள் சுரமஞ்சரியும், வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லையும் எனக்குக் காதலில் தோற்றுப்போக ஆசைப்பட்டார்கள். இன்று நீங்கள் எனது சொற்களுக்குத் தோற்றுப்போய்விட்டதாகச் சொல்கிறீர்கள். இப்படித் தற்செயலாக நேரும் தோல்விகளை அங்கீகரித்துக் கொள்வதே வெற்றியாகிவிடுமோ என்று வெற்றி அகங்காரத்திற்குப் பயந்து கொண்டிருக்கிறேன் நான். எல்லா ஆசைகளையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு வேண்டுமல்லவா? யாரை அதிகமாக வெறுக்க வேண்டுமோ அவர்கள்மேல்கூட அன்பு செய்யத் துணிந்துவிட வேண்டும். அந்த நிலைதான் கருணையின் இறுதி எல்லை. உங்கள் பாவங்களை நீங்களே உணர்கிறீர்கள். அந்த உணர்ச்சி மாறுதலை வாழ்த்துகிறேன். அவ்வளவு போதும் எனக்கு. நான் வருகிறேன்” என்று அவரை வாழ்த்திவிட்டு மாபெரும் தியாகியாய் அவன் அங்கிருந்து வெளியேற முற்பட்டான். ஆனால் அவன் அந்தக் கூடத்திலிருந்து வெளியேறி மாளிகையின் பிரதான வாயிலைக் கடப்பதற்குள் கண்ணிரும் கம்பலையுமாய்ச் சுரமஞ்சரி ஓடிவந்து அவனுடைய வழியை மறித்துக் கொண்டுவிட்டாள்.