மாய வினோதப் பரதேசி 1/2-வது அதிகாரம்

விக்கிமூலம் இலிருந்து

2-வது அதிகாரம்
கலகவிலாசம்—கட்டியக்காரன் பிரவேசம்

றுநாட் காலை சுமார் எட்டு மணி சமயம். மன்னார் கோவிலில் அழகான ஒரு பெரிய மாளிகையின் கூடத்தில் போடப்பட்டிருந்த வழுவழுப்பான கருங்காலி விசிப்பலகையின் மேல் அந்த மாளிகையின் சொந்தக்காரரும், அந்த ஊரின் பிரபல மிராசுதாரருமான வேலாயுதம் பிள்ளை உட்கார்ந்து தமது கையில் இருந்த தாயுமானவர் பாடலில் ஏதோ ஒரு பாடலின் அர்த்தத்தைத் தமது மனதிற்குள்ளாகப் படித்துக் கொண்டிருக்கிறார். அவரது வயது சுமார் நாற்பத்தைந்துக்குக் குறையாதென்றே சொல்ல வேண்டும். உடம்பு செழுமையாகவும் பருமனாகவும் சிவப்பு நிறமானதாகவும் இருந்தது. அவர் அதிகாலையிலேயே ஸ்நானம் செய்து தமது இடுப்பில் உயர்வான பட்டுக்கரை உடையதும் தும்பைப் பூவிலும் அதிக வெளுப்பானதுமான பத்து முழ வேஸ்டியை வைதிகப் பிராம்மணர் போலப் பஞ்சகச்சமாக அணிந்து, நான்கு மூலைகளிலும் சிட்டைகள் உடையதுமான மாசு மறுவற்ற துல்லியமான பழுர்த்துண்டு ஒன்றைத் தமது வலது தோளின் மீது போட்டிருந்தார். அவரது முகத்தில் மீசை காணப்படவில்லை. நெற்றி கழுத்து மார்பு கைகள் முதுகு முதலிய இடங்களில் விபூதிப் பட்டைகள் பளிச்சென்று பிரகாசித்துக் கொண்டிருந்தன. நெற்றியில் விபூதி பட்டையின் நடுவில் இரண்டனா அகலத்தில் சந்தனப் பொட்டு, நிஷ்களங்கமான ஆகாய வட்டத்தில் அப்போதே முளைத்தெழும் சந்திரன் போலத் திட்டப் பெற்றிருந்தது. அவரது கழுத்தில் தங்கக் குவளைகள் கட்டப்பட்ட உருத்திராகூ மாலை அணியப் பெற்றிருந்தது. தாம் கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்த திருப்பாடலினிடம் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்தவர் என்பதை, அவர் தமது கால்களைக் கீழே தொங்கவிடாமல், பலகையின் மேலேயே சப்பணங்கோலி உட்கார்ந்து புஸ்தகத்தைப் படித்த மாதிரியே எளிதில் தெரிவித்தது. அவருக்கு வலது பக்கத்தில் சிறிது தாரத்திற்கு அப்பால் இருந்த பிரம்மாண்டமான ஒரு கம்பத்தின் மறைவில் மறைந்தும் மறையாமலும், அவரது தர்மபத்தியான திரிபுரசுந்தரியம்மாள் உட்கார்ந்து அவரது சிவபூஜைக்கு வேண்டிய புஷ்ப் மாலைகள், சாமக்கிரியைகள் முதலியவற்றை அத்தியந்த பயபக்தி விருப்பத்தோடு தயாரித்துக் கொண்டும், இடையிடையே தனது கணவர் கூறிய வார்த்தைகளுக்கு மறுமொழி சொல்லிக் கொண்டும், அந்த மாளிகையின் பின் புறத் தோட்டத்திலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் கொணர்ந்து உள்ளே பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டிருந்த வேலைக்காரிக்கு ஏதோ உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும் இருந்தாள். அந்த அம்மாளின் உடம்பும் கட்டுக் கலையாமல் தங்கம் போலப் பழுத்து அழகும் வசீகரமும் நிறைந்ததாக இருந்தது.

மஞ்சள் பூசி ஸ்நானம் செய்ததால், மங்களகரமாகத் தோன்றிய அந்த அம்மாளினது நெற்றியில் விபூதி, குங்குமப் பொட்டு முதலியவை அழகாய் ஜ்வலித்தன. உடம்பில் வைரம், கொம்பு, தங்கம் முதலியவற்றால் ஆன ஏராளமான ஆபரணங்களும் பட்டாடையுமே காணப்பட்டன.

அவர்களிருந்த கூடத்திற்குப் பக்கத்தில் இருந்த பெருத்த சமையலறை ஓர் அற்ப மாசு மறுவேனும் காணப்படாமல் மகா பரிசுத்தமாக மெழுகிப் பெருக்கி நன்றாகக் கோலமிடப் பெற்றிருந்தது. அதற்குள் காணப்பட்ட கெங்காளங்கள், குடங்கள், கவலைகள், செம்புகள், தண்ணீர் பருகும் குவலைகள் முதலிய சகலமான பாத்திரங்களும் பளிச்சென்று சுத்தி செய்யப்பட்டு அதனதனிடத்தில் நேர்த்தியாகவும் வசீகரமாகவும் வைக்கப் பெற்றிருந்தன. அடுப்பில் கமகமவென்று மணம் கமழ்ந்த மாதுரியமான பதார்த்தங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. அடுப்பின் பக்கத்தில் சிறிது தூரத்திற்கப்பால், விசாலமான ஒரு பெருத்த மணைப்பலகையின் மீது புத்தரைமாற்றுத் தங்கத்தினால் வார்க்கப் பெற்றது போலவும், அப்போதே முளைத்தெழும் பூர்ண சந்திரோதயம் போலவும் ஒரே அழகுத் திரளாக அமைந்து, அங்கே தயாரான பக்குவ பதார்த்தங்களைக் கடாக்ஷித்த வண்ணம் ஒரு பெண் வடிவம் காணப்பட்டது. அந்த மின்னற் கொடியோள் நிரம்பவும் கவனமாக அப்புறம் இப்புறம் திரும்பித் தனது அலுவலை அந்தரங்க பக்தி விநயத்தோடு செய்து கொண்டிருந்தாள் என்பது, கயல் : மீனைப் போலத் துள்ளித் துள்ளிக் குதித்து மை தீட்டப்பெற்ற அவளது வசீகரமான கருவிதிகளின் சுறுசுறுப்பான் பிற்ழ்ச்சியிலிருந்து எளிதில் தெரிந்தது.. மணிப்புறாவின் முகம் போல அவளது வதனம் சாந்தமும், அழகும், நிஷ்கபடமும் தோற்றுவிப்பதாகவும், காண்போர் மனதைக் காந்தம் போலக் கவரும் மந்திர உச்சாடன வதிகரச் சக்கரம் போலவும் காணப்பட்டது. அவளது வயது சற்று ஏறக்குறைய பதினெட்டே இருக்கலாம். அவளும் திரிபுரசுந்தரியம்மாளைப் போல நீராடி விபூதி, செஞ்சாந்துத் திலகம் முதலியவற்றை அணிந்து, தகத்தகாயமான பனாரீஸ் புடவை, ரவிக்கை, வைரக்கம்மல், வைரமூக்குப் பொட்டு, வைர அட்டிகை, வைரமிழைத்த தங்க ஒட்டியாணம் முதலியவற்றை அணிந்து கந்தருவ தேசத்து ராஜகுமாரி போல விளங்கினாள். கூடத்தில் தனது மாமன் மாமியார். சம்பாஷித்து இருந்ததையும் அவள் கவனித்து, சமைலையும் கவனித்திருந்தாள். ஆதலால், சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி அவளது சுந்தரவதனம் மாறிமாறித் தோன்றிக் கொண்டிருந்தது, உயர்தர வைரக்கல்களில் தோன்றும் ஜிலு ஜிலுப்பைப் போலத் தென்பட்டது. அவளது முகம், மகாநுட்பமான புத்தி விசேஷத்தையும், சாந்தம், பொறுமை, அடக்கம், பணிவுடைமை, உழைப்புக் குணம், கற்பின் உறுதி, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு, மன அமைதி, திருப்தி முதலிய மங்களகரமான கலியாண குணங்கள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்நானம் போல விளங்கியது. எப்பேர்ப்பட்ட பரம தரித்திரனும், துரதிர்ஷ்டவானும் காலையில் எழுந்து அந்த உத்தமமாது சிரோன் மணியின் முகத்தில் விழிப்பானாகில், ஏழேழு தலைமுறைக்கும் அவனைப் பிடித்த பீடை விலகிப் போவதோடு, அவனது மனதில் உண்டாகும் ஆனந்தப் பெருக்கு ஆறுமாசத்திற்கு அடங்காதென்றே சொல்ல வேண்டும். அவனது ஆயிசுகாலம் முடிய அவனுக்குப் பசி என்பதே தோன்றாதென்று சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட தெய்வீகத் தோற்றம் வாய்ந்த பெண்பாவை இன்னாள் என்பது நாம் பகராமலே விளங்கி இருக்கும். ஆனாலும், அந்த உத்தமியின் பெயரைத் தினமும் ஒருதரமாவது சொன்னால், நமக்கும் நல்லகதி கிடைக்கும், ஆதலால், அதை வெளியிடுகிறோம். அந்த ஏந்தெழில் மடவன்னம், கோடீசுவரரான சுந்தரம் பிள்ளைக்கும், சிவபக்தையும் உத்தமோத்தமியுமான சிவக்கொழுந்தம் மாளுக்கும் ஜனித்த நமது வடிவாம்பாள்.

விசிப்பலகையின் மேல் உட்கார்ந்திருந்த வேலாயுதம் பிள்ளை ஒரு பாட்டின் கருத்தைப் படித்தபின் அதை மனத்தில் படிய வைப்பவர் போலத் தமது நெற்றியைத் தமது வலது உள்ளங்: கையால் தடவிக் கொடுப்பார்; பிறகு தமது மனைவியிடம் ஏதோ ஒரு வார்த்தை சொல்வார். அவ்வாறு செய்து வந்தவர் ஒரு பாட்டு முடிந்த பிறகு தமது மனைவியை நோக்கி, "கலியாணத்தின் போது நல்ல பௌர்ணமி காலமாக இருக்கும்படி. பார்த்து நாம் முகூர்த்த நாள் வைக்க வேண்டும். அப்போது கிரமப் பிரதக்ஷிணம் சிறப்பாக இருக்கும்" என்றார். திரிபுரசுந்தரியம்மாள் கீழே குனிந்த படி, "இன்று பிரதமை. இன்னம் இருபத்தைந்து தினங்களுக்குப் பிறகு முகூர்த்தம் வரும்படி ஏற்பாடு செய்யுங்களேன். சரியாய்ப் போகிறது" என்று பணிவாகக் கூறினாள்.

வேலாயுதம் பிள்ளை இன்னொரு பாட்டின் இரண்டொரு வரிகளைப் படித்த பின் சிறிது மௌனம் சாதித்து, "சம்பந்திகளை இறக்குவதற்கு நம் வடிவாம்பாளுடைய பங்களாதான் வசதியாக இருக்கும். கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, நம்முடைய சுந்தரம் பிள்ளையையும், அவர்களுடைய பத்தியாரையும், நாம் பிரார்த்தித்து இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட வேண்டும்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "நேற்றைய தினமே வடிவாம்பாள் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பிரஸ்தாபித்தாள், அப்படித்தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் இருவரும் பேசி எங்களுக்குள் ஒருவாறு முடிவு செய்திருந்தோம். இப்போது நீங்களும் அதே அபிப்பிராயத்தை வெளியிடுகிறீர்கள். சம்பந்திகளின் பெரிய அந்தஸ்துக்குத் தக்க இடம் வடிவாம்பாளுடைய பங்களாவைத் தவிர எங்கே இருக்கிறது. அங்கே தான் அவர்களை வைக்க வேண்டும்" என்றாள்.

சிறிது நேரம் இருவரும் மௌனம் சாதித்த பிறகு திரிபுரசுந்தரி அம்மாள், "காலையில் எழுந்து வெளியில் போன பெரிய தம்பி கண்ணப்பாவை இன்னமும் காணோமே. வழக்கம் போல் பண்ணையைச் சுற்றிப் பார்க்கப் போனானா? வேறே ஏதாவது: காரியமாக அனுப்பினீர்களா? மணி எட்டு இருக்கும் போல் இருக்கிறது. இன்னம் பழைய அமுதுகூடச் சாப்பிடவில்லையே என்று நிரம்பவும் கவலையோடு கேட்க, வேலாயுதம் பிள்ளை "தம்பி இன்றைக்குப் பண்ணைக்குப் போகவில்லை; வேறே காரியமாய்த்தான் அனுப்பி இருக்கிறேன். நாம் நிச்சயதார்த்தத் துக்குச் சென்னப் பட்டணம் போனால், நம்மோடு சுமார் ஐம்பது ஜனங்களாவது வருவார்கள் என்று நினைக்கிறேன். எல்லோரும் தக்க மனிதர்கள் ஆகையால், நாம் அவர்களுக்கெல்லாம் சரியான வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அல்லவா, நாளை வெள்ளிக்கு அடுத்த வெள்ளியன்று நிச்சயதார்த்தம் அல்லவா, நாம் புதன் கிழமை இரவு வண்டியிலேயே புறப்பட்டு வியாழக் கிழமையே பட்டணம் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதற்காக நமக்குப் பிரத்தியேகமாக ஆறு முதல் வகுப்பு வண்டிகளுக்கு முன் பணம் கட்டி ஏற்பாடு செய்துவிட்டு வரும்படி, அவனை ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பினேன். திரும்பி வரும்போது அப்படியே நம்முடைய (திகம்பர சுவாமியாருடைய ஜாகைக்குப் போய் விட்டு வரச் சொன்னேன். நேற்று நாம் வடிவாம்பாளுடைய வீட்டுக்குப் போய், நிச்சயதார்த்தத்துக்கு நம்மோடு பட்டணம் வரும்படி அழைத்து விட்டு வந்தோம் அல்லவா. அதுபோல, இன்றைய தினம் நாம் இருவரும் போய் நம்முடைய சுவாமி யாரையும் பிரார்த்தித்து அழைத்துவிட்டு வரவேண்டும் என்று உத்தேசித்திருந்தேன். நேற்று சாயங்காலம். நான் நம்முடைய சத்திரத்துக்குப் போய் மேல் விசாரணை செய்துவிட்டுத் திரும்பிய போது, நம்முடைய சுவாமியாரிடம் வேலை செய்யும் ஒரு போலீஸ் ஜெவானைக் கண்டு அவர் ஊரில் இருக்கிறாரா என்று விசாரித்தேன். ஒரு ரகசியமான திருட்டு விஷயமாகத் துப்பறிய அவர் நேற்று காலையிலே புறப்பட்டு எங்கேயோ போயிருப்பதாகவும், அநேகமாய் இரவில் திரும்பி வந்து விடலாம் என்றும் சொன்னான். அவர் திரும்பி வந்துவிட்டாரா என்பதையும் அறிந்து கொண்டு வரும்படி நம்முடைய பெரிய தம்பிக்குச் சொல்லி அனுப்பி இருக்கிறேன். இரண்டு இடங்களுக்கும் போய்விட்டு வரக் கொஞ்ச நேரம் பிடிக்கும் அல்லவர். திரும்பிவரும் நேரம் ஆய்விட்டது. வந்துவிடுவான்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "ஓகோ! அப்படியா சங்கதி! அதற்காகவா போயிருக்கிறான்! வழக்கமாக ஏழு மணிக்கே வந்து சாப்பிடுகிற குழந்தை இந்நேரம் வரவில்லையே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் எங்கே காணோமே' என்று வடிவாம்பாள் என்னிடம் இதற்குள் நூறுதரம் கேட்டு விட்டாள். வடிவூ தம்பி போயிருக்கும் காரணம் தெரிந்ததா?" என்றாள்.

உள்ளே இருந்தபடி வடிவாம்பாள், “தெரிந்து கொண்டேன்" என்று மிருதுவாக மறுமொழி கூறினாள்.

உடனே திரிபுரசுந்தரியம்மாள், "ஆம்; நாம் இத்தனை பேர் போகிறோமே, எல்லோரும் பட்டணத்தில் எங்கே இருக்கிறது? நம்முடைய புதிய சம்பந்தி எங்கேயாவது இடத்துக்கு ஏற்பாடு செய்யப் போகிறாரா?" என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, "நமக்குப் பிரத்தியேகமான இடம் அமர்த்தி வைக்கலாமா என்று புதிய சம்பந்தி கடிதத்தில் எழுதிக் கேட்டிருந்தார். அவர்களுக்கு நாம் ஏன் வீண் சிரமம் கொடுக்க வேண்டும். என்று நான் இடம்: தேவையில்லை என்று எழுதி விட்டேன். நம்முடைய கந்தசாமியும் வேலைக்காரியும் இருப்பதற்காக நான் அமர்த்தி இருக்கும் வீடும் பெரிய மெத்தை வீடு; அது நிரம்பவும் வசதியானது கோகளேசுவரன் பேட்டையில் இருக்கிறது. அதில் ஒரே காலத்தில் இருநூறுபேர் வசதியாக இருக்கலாம். ஒரு நாள் இருந்துவிட்டுத் திரும்பப் போகிற நமக்கு அந்த இடமே போதுமானது. அதையே நன்றாகச் சுத்தம் செய்து, வாழை மரங்கள் தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரித்து வைக்கவும், சுமார் ஐம்பது ஜனங்களுக்குச் சாப்பாடு, படுக்கை முதலியவைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து வேண்டிய சாமான்களை எல்லாம் வாங்கி வைக்கவும், ஐந்தாறு சமையல்காரர்களை அமர்த்தி வைக்கவும் எழுதி இருக்கிறேன்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள்:- (சிறிது கவலையோடு) அப்படியா! நம்முடைய பெரிய தம்பிக்கு இந்த விஷயத்தில் எல்லாம் அதிக அனுபோகம் உண்டு, சின்னத்தம்பி இப்படிப்பட்ட காரியங்களை எல்லாம் செய்து பழகியதில்லை. அவனுக்குத் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால், அவனுடைய பள்ளிக்கூடத்துத் தோழனும், இந்த ஊர் மிராசுதார் அண்ணாசாமி முதலியாருடைய மகனுமான கோபாலசாமி அவனுடைய ஜாகைக்குப் பக்கத்தில், உள்ள ஹோட்டலில் இருந்து வருகிறானாம். அவனும் இவனும் எப்போதும் இணைபிரியாதிருப்பார்கள். அவன் இந்த விஷயத்தில் எல்லாம் நிரம்பவும் சமர்த்தன். அவன் எல்லாக் காரியங்களையும் திறமையாக முடித்து வைப்பான் என்று நினைக்கிறேன்" என்றாள். வேலாயுதம் பிள்ளை, "சென்னப் பட்டணத்தில் பணம் மாத்திரம் கையில் ஏராளமாக இருக்க வேண்டும். ஒரு நாழிகை சாவகாசத்தில் ஆயிரம் கலியாணத்துக்கு வேண்டிய சகலமான சாமான்களையும் சேகரித்து விடலாம். நாம் எல்லோரும் போய் இறங்குவதற்கு வசதியான இடம் இருக்கிறது. அங்கே போனால், எப்படியாவது சரிப்படுத்திக் கொள்ளலாம். அதைப்பற்றிக் கவலை. இல்லை" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "ஆம், அதிருக்கட்டும்; நிச்சயதாம்பூலம் மாற்றும் போது; நாம் முதலில் பழம் பாக்கு வெற்றிலை முதலிய வைகளை வைக்க வேண்டுமே, அப்போது வழக்கமாக எல்லோரும் செய்கிறது. போல நாம் நம்முடைய கௌரதைக்குத் தகுந்தபடி ஏதாவது புடவை, நகை, பரிசப்பணம் எல்லாம் வைக்க வேண்டுமல்லவா" என்றாள்.

வேலாய்தம் பிள்ளை, "அதைப்பற்றி உனக்கு ஏன் சந்தேகம் உண்டாகிறது? அவர்கள் பெரிய கலெக்டர் உத்தியோகத்தில் உள்ளவர்களாயிற்றே. அவர்கள் பரிசப்பணத்தை ஏற்றுக் கொள்ளுவார்களோ மாட்டார்களோ என்று சந்தேகிக்கிறாயோ" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், “நான் அந்தச் சந்தேகம் கொள்ளவில்லை. எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் செய்யும் மரியாதையை ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே முறை. அதைப்பற்றி நான் நினைக்கவில்லை. நாம் அதிகமான பொருள்களை வைத்தால், அவர்கள் நம்மைவிட உயர்வானவர்கள் என்றும், நாம் அபாரமான பணத்தைக் கொடுத்து அவர்களுடைய சம்பந்தத்தைப் பெறுகிறோம் என்றும் ஜனங்கள் நினைப்பார்கள். அதுவும் அன்றி, சம்பந்தி வீட்டாரும் தங்களை உயர்வாக நாம் மதிப்பதாக நினைத்துச் செருக்கடைவார்களோ என்னவோ” என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, “சேச்சே! நம்முடைய சம்பந்தி பட்டாபி ராம பிள்ளை அப்பேர்ப்பட்ட மனிதரே அல்லர். அவர் இந்த ஊரில் அடிஷனல் மாஜிஸ்டிரேட்டாக இருந்த காலத்தில் நம்மிடத்தில் எவ்வளவு அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொண்டாரோ, அப்படியே தான் இப்பவும் இருக்கிறார் என்பது அவர் சமீப காலத்தில் இங்கே வந்திருந்த போது தெரிய வில்லையா. அவர் நமக்கு எழுதியுள்ள எத்தனையோ கடிதங்களில், நம்முடைய சம்பந்தம் உயர்வானதென்றும், அது தமக்குக் கிடைக்குமானால், தாம் பாக்கியவான் என்றும் பல தடவைகளில் அவர் எழுதி இருக்கிறாரே. அப்படி இருக்க, அவர் இப்போது அதற்கு விரோதமாக நினைத்துக் கொள்வாரா? ஒரு நாளும் அப்படிச் செய்யமாட்டார். தவறி நினைத்துக் கொண்டாலும், அதனால் நமக்கு இழிவு ஏற்படப் போகிற தில்லை. எந்தெந்த சந்தர்ப்பங்களில் நாம் எதிராளிக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டுமோ அதைப் பூர்த்தியாகச் செய்தே தீர வேண்டும். அது அவர்களை நாம் கெளரவப்படுத்துகிறது போலவும் இருக்கும்; நம்முடைய பெருந்தன்மையைக் காட்டியது போலவும் இருக்கும். எதிலும் நாம் லோபம் செய்யக் கூடாது. நமக்கு ஈசுவரன் ஒரு குறைவையும் வைக்கவில்லை. என்னுடைய ஏராளமான சொத்து போதாதென்று கந்தசாமி சுவீகாரம் போன வகையில், வருஷத்தில் லட்சம் ரூபாய் வருமானம் வரக்கூடிய எதேஷ்டமான செல்வமும் வந்து சேர்ந்திருக்கிறது. நம்முடைய பெரியவர் நடராஜ பிள்ளையின் செல்வமெல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. இவ்வளவையும் சேர்த்தால், ஒரு மகாராஜனுடைய அபார சம்பத்துக்குச் சமமாகச் சொல்லலாம். ஈசுவரன் நமக்கு அவ்வளவு தூரம் கொடுத்திருக்கி றார்கள். அதில் கந்தசாமியின் சுவீகாரத்தில் வந்தது முக்கால் பங்குக்கு மேல் இருக்கும். அப்படி இருக்க, அவனுடைய கலியாணத்தை நாம் ஒரு மகாராஜனுடைய கலியாணத்தைப் போல நடத்த வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்தப் பணச் செல்வத்தை எல்லாம் நான் பெரிதாக மதிக்கவே இல்லை. நற்குணங்களும், நல்லொழுக்கமும் நிறைந்த இரண்டு விலையில்லா மாணிக்கங்களைக் கடவுள் நமக்கு இரண்டு குழந்தைகளாகக் கொடுத்திருக்கிறார். அவர்களுடைய குணாதிசயங்களைப்பற்றி சிந்திக்கும் போது ராமன், பரதன் ஆகிய இருவரையுமே இவர்களுக்கு உவமை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் என் மனசில் தானாகவே உண்டாகிறது. எல்லோருக்கும் சிரோரத்னமாக நம்முடைய குழந்தை வடிவாம்பாள் அமைத் திருக்கிறாள். இந்த மூன்று குழந்தைகளையுந்தான். நான் என்னுடைய உண்மையான செல்வமாக மதித்து வருகிறேன். ஆகையால் நமக்குள்ள பணச்செல்வத்தை எல்லாம் இவர்களுக்கு ஏற்படும் சுப காலங்களில் சிறப்பாகச் செலவு செய்வதே என் ஆத்மாவுக்கு அளவற்ற ஆனந்தத்தை உண்டுபண்ணுகிறது. தெய்வத்தின் அருளால் இப்போது வரப்போகும் மனோன்மணி அம்மாளும் நம்முடைய வடிவாம்பாளைப் போலவே இருந்து விடுவாளானால் இந்த உலகத்தில் நான் அனுபவிக்கக் கூடிய ஆனந்தமும் செல்வமும்' பரிபூர்ணம் ஆகிவிடும். ஆயிரம் வருஷம் நான் உயிரோடிருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், என் மனம் தெவிட்டாது. இந்த உலகை விட்டுப் போகவும் மனம் வராது. அப்படிப்பட்ட கண்மணி 'களுடைய கல்யாணத்தில், நாம் எதைப்பற்றியும் சிந்தனை செய்யாமல், பொருளை ஏராளமாகச் செலவு செய்வது அத்யாவசியம்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள் அளவற்ற குதூகலமும் ஆனந்தமும் அடைந்து புன்னகை பூத்த முகத்தினளாய், "அப்படியானால், நிச்சயதார்த்தத்தன்று, என்னென்ன செய்வதாக உத்தேசம்?" என்றாள்.

வேலாயதம் பிள்ளை, "நிச்சயதார்த்தத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் திட்டம் போட்டிருக்கிறேன். ஆனால் அதில் நம்முடைய ரயில் செலவு படிச்செலவு முதலிய சொற்ப பாகம் போக மிகுதி எல்லாம், பெண் வீட்டாருக்குப் பரிசாகக் கொடுக்கப் போகிறேன். முழுதும் தங்க ஜரிகையும் - நற்பவழங்களும் நல்முத்துகளும் வைத்திழைத்த புடவை, ரவிக்கை இரண்டும் மாத்திரம் ஐயாயிரம் ரூபாய், ஒரு ஜோடி வைரக் கம்கமல், வைரங்கள் பதித்த தங்க ஒட்டியாணம், ஐந்து வைரப் பதக்கங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தொங்கும் வைர அட்டிகை முதலிய நகைகள் எல்லாம் சுமார் ஐம்பதாயிரம்: ரூபாய். இவை தவிர, இந்த வருஷமே தங்க சாலையில் அடித்து வெளியானதும் பளபளவென்று மின்னிக் கண்ணைப் பறிக்கக் கூடியதாகவுடன் இருக்கும் முழுப்பவுன்களில் இரண்டாயிரம் பவன்களை ஒரு தங்கத் தாம்பாளத்தில் புடவை ரவிக்கை முதலிய சாமான்களை வைத்து சம்பாவனை செய்யப் போகிறேன். வெற்றிலை இருநூறு கவளி, பாக்கு 2 மூட்டை; ரஸ்தாளி வாழைப்பழம் ஒரு வண்டி, மஞ்சள் ஒரு மூட்டை, குங்குமம் ஒரு மூட்டை, கற்கண்டு 2 மூட்டை சீனிச்சர்க்கரை 2 மூட்டை இவைகளையும் வாங்கி எல்லாவற்றையும் கொண்டு போய் அவர்களுக்கெதிரில் பரப்பிவிடப் போகிறேன். அந்த ஊரில் உள்ள ஜனங்கள், இப்படிப்பட்ட அபாரமாக வரிசைகளைக் கண்டு அவர்களைப் பற்றியும் நம்மைப் பற்றியும் நிரம்பவும் மதிப்பாக எண்ணக் கொள்ளுவார்கள். சம்பந்தியும் நம்மைத் தக்க மனிதர்கள் என்று மதிப்பார். மனோன்மணியும். நம்முடைய பையனை அற்ப சொற்பமான மனிதன் என்று நினைக்க மாட்டாள்" என்றார்.

அதைக் கேட்ட திரிபுரசுந்தரியம்மாள் அடக்க இயலாத பெருங் களிப்படைந்து, "ஆகா பேஷ் பேஷ் நல்ல ஏற்பாடு!- நீங்கள் இத்தனை எண்ணங்களையும் மனசிற்குள்ளாகவே வைத்துக் கொண்டு இதுவரையில் கொஞ்சமாவது வெளியிட வில்லையே. நம்முடைய பெரியவரை இதற்காகத் தான் முன்பாகப் பட்டணத்துக்கு இன்று அனுப்புகிறீர்கள் போலிருக்கிறது. நீங்கள் இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றி என்னைவிட நம்முடைய வடிவாம்பாளுக்குத், தான் அடக்க முடியாத சந்தோஷம் உண்டாகும்" என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, "இதெல்லாம் நம்முடைய வடிவாம் பாளுக்குத் தெரியாதென்று நீ நினைத்துக் கொண்டு இருக்கிறாயா? அன்றைய தினம் சிவக்கொழுந்தம்மாளிடம் நீ பேசிக் கொண்டிருந்த போது, நானும் அந்தக் குழந்தையும் கலந்து யோசனை செய்து தான் இப்படிச் செய்வதென்று தீர்மானித்தோம். எல்லாம் வடிவாம்பாளுடைய ஏற்பாடுதான். என்னுடையது ஒன்றுமில்லை" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "ஓகோ அப்படியா! மாமனாரும், மருமகளும் இம்மாதிரியான யோசனைகளை எல்லாம் ரகஸியத்தில் செய்து, நாங்கள் எல்லோரும் பிரமித்துப் போகும்படி செய்ய வேண்டும் என்று உங்களுடைய எண்ணம் போலிருக்கிறது. இந்த நிச்சயதார்த்தத்தின் வரிசையே இப்படி இருக்கிறது. இன்னம் கலியாணத்திற்கு என்னென்ன வரிசைகள் செய்ய ஏற்பாடாகி இருக்கிறதோ தெரியவில்லையே! இந்த ஏற்பாடெல்லாம், இந்தக் கலியாணத்தை இணைத்து வைத்த நம்முடைய சாமியாருக்குத் தெரியுமோ" என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, "இதெல்லாம் அற்ப விஷயம். இதை எல்லாம் நாம் சுவாமியாரிடத்தில் சொல்லுகிறதா? அவருடைய கவனம் எல்லாம் அபாரமான பெரிய பெரிய காரியங்களில் சென்று கொண்டிருக்கிறது. நாம் இன்னின்ன வரிசைகள் செய்கிறோம் என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. முக்கியமாக இந்தக் கலியாணக் காரியம் நடைபெற வேண்டும். அது ஒன்றே அவருடைய கவலை. மற்ற சில்லரை விஷயங்களை எல்லாம் நாம் எப்படிச் செய்தாலும், அதைப்பற்றி அவர் சிந்தனை செய்ய மாட்டார். இப்போது நாம் முதலில் இந்த நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டு வந்தால், அதற்கு மேல் கலியாண ஏற்பாடு களைப்பற்றி அப்பால் யோசனை செய்து கொள்ளலாம்" என்றார்.

அந்தச் சமயத்தில், "அப்பா! அப்பா!" என்று ஆவலோடு கூப்பிட்டுக் கொண்டு அவர்களுடைய மூத்த குமாரனான கண்ணப்பா உள்ளே நுழைந்தான். அவ்வாறு பதறிய தோற்றத் தோடு அவன் வந்தது முற்றிலும் புதுமையாக இருந்தது ஆகையால், அதைக்கண்ட வேலாயுதம் பிள்ளையும். திரிபுரசுந்தரி அம்மாளும் திடுக்கிட்டு நிரம்பவும் ஆச்சரியமும் கவலையும் அடைந்து, பையன் என்னவிதமான செய்தி கொணர்ந்திருக்கிறானோ என்பதை அறிய ஆவல் கொண்டவர்களாய், அவனது முகத்தை உற்று நோக்கினர். அதுவரையில் மடப்பள்ளியில் தனது சிம்மாசனத்தில் வீற்றிருந்தபடி தனது மாமனார் மாமியாரினது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த மடவன்னமான வடிவாம்பாளும் தனது புருஷன் "அப்பா! அப்பா!" என்று விபரீதக் குரலோடு அழைத்துக் கொண்டு வந்ததை உணர்ந்து திடுக்கிட்டெழுந்து விரைவாக வாசற்படியண்டை.. வந்து நின்று கொண்டு தனது கணவனது முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். அந்த ஒரு நொடியும் அந்த மடமங்கையின் மனம் பட்ட பாடு இன்னதென்று விவரிக்க சாத்தியமற்றதாக இருந்தது.

உடனே திரிபுரசுந்தரியம்மாள் நயமான குரலில், "என்ன தம்பீ விசேஷம்? ஏன் நீ இப்படி மாறிப் போயிருக்கிறாய்? என்ன நடந்தது? நம்முடைய மனிதர் யாருக்கும் கெடுதல் ஒன்றும் இல்லையே" என்று மிகுந்த வாத்சல்யத்தோடு வினவினாள். வேலாயதம் பிள்ளையோ, அவனே விஷயத்தை உடனே வெளியிடுவான் என்று மௌனமாகவும் கம்பீரமாகவும் இருந்த படியே அவனது வாயைப் பார்த்தார்.

அவன், "நம்முடைய விரோதியான கும்பகோணம் வக்கீல் சட்டைநாத பிள்ளையைத் தஞ்சாவூர் ஜெயிலில் வைத்திருந் தார்கள் அல்லவா! அவன் அங்கே இருந்து தப்பி ஓடிவந்து விட்டானாம்" என்றான்.

அந்த அதிசயச் செய்தியைக் கேட்ட மற்ற மூவரும் திடுக்கிட்டு வியப்பே வடிவாக மாறி சிறிது நேரம் ஸ்தம்பித்து மௌனமாய் இருந்து விட்டனர். அடுத்த க்ஷணத்தில் வேலாயுதம் பிள்ளை, "என்ன ஆச்சரியம்! இந்தச் சங்கதி நிஜமாயிருக்குமா? புரளிக்காகிலும் யாராவது இந்தப் பொய்யைக் கட்டிவிட்டிருப்பார்களா? தஞ்சாவூர் ஜெயிலென்ன சாதாரணமான கட்டிடமா! அதற்குள் இருந்து மனிதர் எப்படி வெளியில் வரமுடியும்? இந்தச் சங்கதியை உனக்கு யார் சொன்னது?" என்றார்.

அதே காலத்தில் திரிபுரசுந்தரியம்மாள், "என்றைய தினம் தப்பித்துப் போனானாம்? எப்படித் தப்பித்துப் போனானாம்" என்றாள்.

உடனே கண்ணப்பா பேசத்தொடங்கி, "நேற்று காலையில் தான் அவன் தப்பித்துப் போனானாம். எல்லா விஷயமும் இதோ இன்றைய தினம் தபாலில் வந்துள்ள சமாசாரப் பத்திரிகையில் வெளியாகியும் இருக்கிறது. சங்கதி நிஜமான சங்கதி; பொய் என்று நாம் சந்தேகிக்கவே காரணமில்லை" என்று கூறினான். வேலாயுதம் பிள்ளை, "பத்திரிகையிலும் சங்கதி வந்திருக்கிறது என்றால், அதைத் தவிர வாய்மூலமாகவும் இந்தச் சங்கதி ஊர் முழுதும் பரவி இருக்கிறதா" என்றார்.

கண்ணப்பா, "இல்லையப்பா! நான் காலையில் எழுந்து நேராக ஸ்டேஷனுக்குப் போய், நமக்கு வேண்டிய வண்டிகளுக்காகப் பணமும், கடிதமும் கொடுத்து காலந்தவறாமல் வண்டிகளுக்கு ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டு நேராக நம்முடைய சுவாமியார் ஜாகைக்குப் போனேன். போன இடத்தில் அவர் இந்தச் சங்கதியை என்னிடம் சொல்லி, இந்தப் பத்திரிகையையும் காட்டினார். நேற்று காலையிலேயே அவருக்குத் தஞ்சாவூர் போலீஸ் சூபரின்டெண்டென்டின் இடத்திலிருந்து அவசரமான ஒரு தந்தி வந்ததாம். அதில் விவரம் ஒன்றும் இல்லையாம். இன்னார் ஜெயிலில் இருந்து தப்பி ஓடி விட்டார் என்றும், உடனே புறப்பட்டு தஞ்சைக்கு ரகசியமாக வரும்படியும் அவர் எழுதி இருந்தார். சுவாமியார் ஏதோ திருட்டைப்பற்றி துப்பு விசாரிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு உடனே மோட்டார் வண்டியில் ஏறிக்கொண்டு தஞ்சாவூருக்குப் போய்,

சூபரின்டென்டெண்டுக்கு வேண்டிய யோசனைகளை எல்லாம் - சொல்லிவிட்டு நேற்று ராத்திரிதான் வந்தாராம். நேற்று பகலிலேயே இந்தச் சங்கதி தந்தி மூலமாக சென்னப்பட்டணம் போய் பத்திரிகையில் வெளியாய், இன்று இங்கே வந்திருக்கிறது.

எல்லா விவரமும் பத்திரிகையில் குறிக்கப்பட்டிருக்கிறது" - என்றான்.

வேலாயுதம் பிள்ளை, "பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பதைப் படி" என்றார். உடனே கண்ணப்பா அதைப் படிக்கலானான். விவரம் அடியில் வருமாறு:

ஒரு பிரபலக் கைதி ஜெயிலிலிருந்து
தப்புவிக்கப்படுகிறார்.

மன்னார் கோவிலில் உள்ள துப்பறியும் நிபுணரும், பரோபா காரியுமான திகம்பர சாமியார் என்பவரால் சுமார் இரண்டு வருஷ காலத்துக்கு மூன் ஒரு விநோதமான வழக்கு கொண்டுவரப் பட்டதும், அதன் முடிவில் கும்பகோணத்தில் இருந்த பிரபல வக்கீலான சட்டைநாத பிள்ளையும், வேறு சிலரும் கடுமையான தண்டனை அடைந்ததும், பொது ஜனங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கலாம். அப்போது சட்டைநாத பிள்ளை பத்து வருஷத்திற்கும், சப்ஜட்ஜி சர்வோத்தம சர்மா, நமசிவாய பிள்ளை, அஞ்சலையம்மாள் ஆகிய மூவரும் இரண்டிரண்டு வருஷத்திற்கும், முதல் குற்றவாளியின் தம்பி மாசிலாமணி என்பவர் ஒரு வருஷ காலத்திற்கும் கடினக்காவல் தண்டனை அடைந்தார்கள் அல்லவா. அவர்களுள் மாசிலாமணி என்பவர் சிறையில் ஒரு வருஷ காலம் இருந்து கழித்துவிட்டு வெளியில் வந்து பதினோரு மாத காலமாகிறது. மற்ற மூவர்கள் வெளியில் வர இன்னம் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே செல்ல வேண்டும். ஆனால் சட்டைநாத பிள்ளை இன்னம் எட்டுவருஷ காலம் சிறையில் இருக்க வேண்டியவர். சிறையில் இருந்து வெளிப்பட்டு வந்த மாசிலாமணி என்பவர் தமது அபார சொத்துக்களை எல்லாம் ஒப்புக் கொண்டு கும்பகோணத்தில் தமது ஜாகையில் இருந்து வருகிறார். அவர்களுக்கு நேர்ந்த அவமானத்தைக் கருதி அவர் அதிகமாக வெளியில் வராமல் எப்போதும் வீட்டிற்குள்ளாகவே இருந்து வருகிறதாகத் தெரிகிறது. இந்தக் குற்றவாளிகள் எல்லோரும் தஞ்சாவூர் பெரிய ஜெயிலில் இருந்து வந்தார்கள். அந்த ஜெயிலிற் குற்றவாளிகளைக் கொண்டு செக்கில் நல்ல சுத்தமான நல்லெண்ணெய் தயாரித்து ஊரில் உள்ள ஜனங்களுக்கு விற்பது வழக்கம். ஒரு குடத்தில் எண்ணையை நிரப்பி வைத்து ஒரு குற்றவாளி அதைத் தனது தலையில் சுமந்து கொண்டு வருவான். அவனோடு பாதுகாப்பாக இரண்டு சேவகர்கள் (வார்டர்கள்) இரண்டு பக்கத்திலும் வந்து, வீட்டுத் திண்ணைகளில் கூடையை இறக்கச் செய்து வீட்டாருக்கு எண்ணெய் விற்றுக்கொண்டே போவார்கள். அப்படி வரும் கைதியின் இரண்டு கால்களிலும் இரும்பு விலங்குகள் போட்டு, அழுத்தமான சங்கிலியால் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கும். அந்தச் சங்கிலியின் நடுவில் ஒரு கயிற்றைக் கட்டி சங்கிலி கீழே இழபடாமல் மேலே தூக்கி இடுப்பில் கட்டிக் கொண்டிருப்பது வழக்கம். அந்தச் சங்கிலியோடு கைதி சாதாரணமாக நடக்க முடியுமேயன்றி - ஓடமுடியாது. அவ்வாறு எண்ணெய்க் குடத்தைத் தூக்கிக் கொண்டு வெளியில் வருவதற்கு, துஷ்டத்தனமும் மூர்க்கத்தனமும் இல்லாத சாதுக்களாகவும் திடகாத்திரம் உள்ளவராகவும் பார்த்து நியமிப்பது வழக்கம். சிறைச்சாலைக்குப் போனவுடன் சட்டைநாத பிள்ளை அங்குள்ளோரிடம் நிரம்பவும் பணிவாக நடந்து, செக்கில் உட்கார்ந்து, மாடுகளை ஓட்டும் வேலையைச் செய்து வந்தாராம். இதுவரையில் வேறே ஒருவன் வழக்கமாக எண்ணெய்க்குடம் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தானாம். அவன் விடுதலை அடைந்து அவ்விடத்தை விட்டுப்போய் இரண்டு மாதகாலம் ஆகிறதாம். அதன் பிறகு தாம் குடத்தை எடுத்துக் கொண்டு வருவதாக சட்டைநாத பிள்ளை கேட்டுக் கொண்டதன்மேல் இந்த இரண்டு மாத காலமாக அவரை அந்த வேலைக்கு உபயோகப் படுத்தி வந்தார்களாம். அவர் பரம சாதுவாகவும் தேகவலுவோடும் அந்த வேலையைச் செய்து வந்தாராம். இன்றைய தினம் காலையில், அவர் எண்ணெய்க் குடத்தைத் தூக்கிக்கொண்டு இரண்டு வார்டர்கள் சமேதராக தஞ்சை மேற்கு ராஜவீதியின் வழியாக வந்தபோது, ஓர் ஆள்வந்து, பக்கத்தில் இருந்த ஒரு சந்திற்குள் ஓர் அம்மாளுக்கு எண்ணெய் வேண்டும் என்று அழைத்தானாம். வார்டர்கள் அதை நம்பி கைதியோடு அங்கே போனார்களாம். சந்திற்குள் ஒரு மெத்தை வீட்டின் நடையில் நிரம்பவும் அழகு வாய்ந்தவளும், ஏராளமான உயர்தர ஆபரணங்களும் பட்டாடையும் தரித்தவளும், தாசியைப் போலக் காணப்பட்டவளுமான ஒரு பெண் பிள்ளை நின்று கொண்டிருந் தாளாம். அவள் வார்டர்களைப் பார்த்து மரியாதையாகவும், அன்பாகவும் பேசி எண்ணெயை உள்ளே கொண்டு வரச் சொன்னாளாம். அவள் யாரோ பெரிய மனுஷியென்று நினைத்த வார்டர்கள் கைதியை அழைத்துக் கொண்டு உள்ளே போனார்களாம். அவர் நடையைக் கடந்து முற்றத்தில் போய்க் கொண்டிருந்தார்களாம். உடனே படேரென்று வாசல் கதவு சாத்தி மூடப்பட்டதாம். சுமார் 10 முரட்டு மனிதர்கள் எங்கிருந்தோ குபீர் என்று பாய்ந்து, இரண்டு வார்டர்களின் மென்னியைப் பிடித்து பலமாக அழுத்தி அவர்கள் கூச்சலிடாமல் பிடித்துக்கொண்டு, அவர்களுடைய வாயில் துணியை அடைத்து, கைகளையும் கால்களையும் மணிக்கயிற்றால் கட்டிப்போட்டுக் கீழே உருட்டி விட்டார்களாம். சட்டைநாத பிள்ளை எண்ணெய்க் கூடையை உடனே கீழே வைத்தாராம். அவருடைய கால் விலங்குகளை ஆள்கள் வெட்டிரும்பால் உடனே வெட்டி எறிந்து அவருடைய ஜெயில் உடைகளையும் விலக்கி, சிறப்பான வஸ்திரங்களை அணிவித்து அவரை அழைத்துக் கொண்டு உடனே வெளியில் போய்விட்டார்களாம். அவர்களை உள்ளே அழைத்த தாசியும் வெளியில் போய்விட்டார்களாம். அதன் பிறகு ஒரு நாழிகை காலம் வரையில் அந்த வார்டர்கள் தத்தளித்து முற்றத்தில் கிடந்து புரண்டதில், ஒருவருடைய வாய்த்துணி கீழே வீழ்ந்து விட்டதாம். அவர் உடனே பலமாகக் கூச்சலிட்டாராம். அதைக் கேட்டு யாரோ வழிப்போக்கர் சிலர் வந்து பார்த்து விஷ்யங்களை அறிந்து ஆச்சரியம் அடைந்து, கட்டுகளை அவிழ்த்துவிட, வார்டர்கள் வெளியில் ஓடிக் கூக்குரல் செய்ய, ஜனங்கள் எல்லோரும் வந்து திரண்டு நாலா பக்கங்களில் ஓடி கைதியையும் மற்றவரையும் கண்டுபிடிக்க முயன்றார்களாம். அந்தச் செய்தி போலீஸ் சூபரின்டென்டெண்டுக்கும் ஜெயிலருக்கும் எட்ட, அவர்களும் போலீஸ் வீரர்களோடு வந்து கைதியைப் பிடிக்க ஏற்பாடு செய்தார்களாம். தஞ்சையில் இருந்து வெளியூருக்குப் போகும் ரஸ்தாக்களில் எல்லாம் ஜெவான்கள் நின்று ஊரிலிருந்து வெளியில் போகும் வண்டிகளையும் மனிதரையும் கவனித்துப் பார்த்தபடி இருக்கிறார்கள். ரயிலடி.யிலும் ஜெவான்கள் நின்று உள்ளே போகும் மனிதர்களைக் கவனித்துப் பார்த்தே விடுகிறார்கள். தஞ்சையில் உள்ள சந்து பொந்துகளில் எல்லாம் ஜெவான்கள் காவலாக நின்று கொண்டிருக்கிறார்கள். தவிர, உடனே கும்பகோணத்துக்கும் தந்தி போயிருக்கிறது. அந்த ஊருக்குள் வரும் சகலமான பாதைகளிலும் ரயிலடியிலும் ஜெவான்கள் எச்சரிப்பாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். சட்டைநாத பிள்ளையின் வீடுகளுக்கு எதிரில் எல்லாம் ஜெவான்கள் நின்று, அவர் எங்கே வந்தாலும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். கைதியும், அவரை விடுவித்தவர்களும் இன்ன இடத்திற்குப் போனார்கள் என்பது தெரியவில்லை. கைதியின் தம்பி மாசிலாமணி என்பவர் தமது ஜாகையில் ஒன்றையும் அறியாதவர் போல இருந்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்டே இந்தக் காரியம் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் யூகிப்பது சகஜமானாலும், அவரைச் சம்பந்தப்படுத்துவதற்கு எவ்வித சாட்சியும் எதுவுமில்லை. ஆகையால், போலீசார் அவரைப் பிடிக்கப் பின் வாங்குகிறார். தமது தமையனார் சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டார் என்ற செய்தியையும், அவரைப் பிடித்துக் கொடுப்பதற்கு 5000 ரூபாய் வெகுமதி கொடுப்பதாக போலீசார் விளம்பரப்படுத்தி இருப்பதையும் கேள்வியுற்ற மாசிலாமணி அதைப்பற்றித் தாமும் ஆச்சரியம் அடைவதாகவும், தமது தமையனார் செய்த காரியம் தம் மனதிற்கும் பிடிக்கவில்லை என்றும், அவரைப் பிடித்து சர்க்காரிடம் ஒப்புவிப்போருக்குத் தாமும் இன்னொரு பதினாயிரம் ரூபாய் வெகுமதி கொடுப்பதாகப் பத்திரிகைகளுக்கு எழுதப் போவதாகவும் சொன்னாராம். இவ்வளவே இப்போது கிடைத்த விவரம்; மேல் விவரம் கிடைக்கக் கிடைக்க வெளியிடுகிறோம்

என்று இவ்வண்ணம் எழுதப்பட்டிருந்ததை கண்ணப்பா படிக்க, எல்லோரும் முற்றிலும் பிரமிப்படைந்து, அப்படியே ஒடுங்கி ஓய்ந்து போயினர்.
உடனே கண்ணப்பா, "எல்லாம் அந்த மாசிலாமணி செய்த காரியம் என்பதற்குச் சந்தேகமே இல்லை. சட்டைநாத பிள்ளையின் இருப்பிடத்தை யாரும் கண்டுபிடிக்க முடியாதென்ற அகம்பாவத்தினால் அவன் சர்க்காருக்குப் போட்டியாக அவர்களுடைய தொகையைவிட, இரட்டிப்புத் தொகை வெகுமதி கொடுப்பதாக வெளியிட உத்தேசிக்கிறான் போலிருக்கிறது. நம்முடைய சுவாமியார் இந்த விஷயத்தைக் கேட்டு நிரம்பவும் கவலை கொண்டிருக்கிறார். அவர்கள் நமது பேரிலும் சுவாமியார் பேரிலும் அடங்காத ஆத்திரமும் பகைமையும் வைத்து, பலவகையில் தீங்கிழைக்க முயலுவார்கள். ஆகையால், நாம் எல்லோரும் ஜாக்கிரதையாயும் பாதுகாப் பாகவும் இருக்க வேண்டும் என்று சுவாமியார் உங்களிடம் சொல்லச் சொன்னார். அவரும் இன்று மத்தியானம் இங்கே வருவதாகச் சொன்னார்" என்றான்.