உள்ளடக்கத்துக்குச் செல்

முக அழகைக் காப்பது எப்படி/முக அழகைக் கூட்டும் முக்கிய உறுப்புகள்

விக்கிமூலம் இலிருந்து
8. முக அழகைக் கூட்டும் முக்கிய உறுப்புகள்

அழகாக வைத்துக் கொள்ள வேண்டியது முகத்தை மட்டும் அல்ல. உங்கள் முகத்திலே அமைந்துள்ள. முதன்மை உறுப்புக்களும் முக்கியமானவை.

1. முடிகள் 2. விழிகள் 3. செவிகள் 4. பற்கள் இவற்றையெல்லாம் நீங்கள் சீராகவும் சிறப்பாகவும் வைத்துக் கொள்கிறபோதுதான், முகமானது பளபளக்கும். பளிச்செனத் தெரியும்.

1. முடிகள்:

முதலில் முடியைப் பற்றி இனித் தெரிந்து கொள்வோம். உங்கள் முகத்திற்கு வசீகரமான ஒரு வனப்பையும். கவர்ச்சிகரமான ஒரு தோற்றத்தையும் கொடுப்பது முடிதான். மொட்டைத் தலையாய் இருக்கும் முகத்தைப் பாருங்கள். சொட்டைத் தலையுடன் இருக்கும் முகத்தைப் பாருங்கள். அலை அலையாக நெளிந்து கருமையாகக் காணப்படும் முடியிருக்கும் தலையமைந்த முகத்தைப் பாருங்கள். உங்களுக்குப் புரியும்.

முடியானது கேரேடின் (Keratin) என்ற ஒருவித புரோட்டின் சக்தியினால் உருவாக்கப்படுகிறது. தலையை மூடியுள்ள அந்தத் தோல் பகுதியிலிருந்து போலிகில் (Follicile) என்ற தலையோட்டின் பகுதியில் இருந்துதான் முடி முளைத்து வெளிவருகிறது. இப்படி முளைக்கின்ற முடியானது ஒரு மாதத்திற்கு 1.25 சென்டிமீட்டர் உயரம் வளர்கிறது. அப்படி வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்குள் உதிர்ந்துபோகின்றன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் முளைக்கின்ற முடியானது 1,50,000 வரை திரட்சியாக வளருகிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

உங்களுக்கு தலைமுடி எந்த வண்ணத்தில் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும். அப்படி வந்து விடாது. கருப்பா - வெளுப்பா - வெள்ளையா - செம்பட்டையா என்ற வண்ணங்களை மிலானின் (Melanin) என்ற பொருள்தான் நிர்ணயிக்கிறது.

உங்கள் முடியானது அலை அலையான சுருள் முடியாகவோ, அல்லது விரைப்பாக நிற்கும் கோரை முடியாகவோ, சீவினால் படிந்து கொள்கிற பதமான முடியாகவோ கூட அமைந்திருக்கும். உங்கள் தலையில் தோல் பகுதியில் முடி வளர்கின்ற இடத்தின் தன்மைக்கேற்பவே, முடியும் உருவாக்கப்படுகிறது.

ஆகவே, நீங்கள் முடியை வளர்க்கலாம். வெட்டிக் கிராப் செய்து கொள்ளலாம். தினமும் குளித்துச் சுத்தம் செய்யலாம். அதற்கு வண்ணப் பூச்சும் பூசிக் கொள்ளலாம். நீங்கள் விரும்பியவாறு கூட முடியை வளர்த்து முடிந்து கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் உங்கள் முடிக்கு எந்தவிதமான சிக்கலும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறபோதுதான். உங்கள் முக அழகு மிடுக்காகத் தோற்றமளிக்கும்.

எண்ணெய்ப் பசையுள்ள முடி பளபளத்துத் தோற்றமளிக்கும். முடிகளில் பல வகை உண்டு. உங்கள்முடிகளைப் பராமரிக்காமல், இருக்கிறபொழுது பலவிதமான சிக்கல்களும் சிதறல்களும் ஏற்படக்கூடும். முடி நுனியானது உதிர்ந்துபோவது போலக் கழன்று விழும் அபாயம் உள்ளது. (Splitends)

உடம்பிலே உள்ள தோல் பகுதியானது அடிக்கடி உதிர்ந்து புதுமைப்படுத்திக் கொள்வதுபோல, தலையிலுள்ள தோல் பகுதியும். அவ்வப்போது இழந்துபோன தோல்பகுதியை உதிர்த்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்து கொள்ளும். அதைச் சரியாகச் சுத்தம் செய்யாவிடில். தலைப்பகுதி முழுவதும் பொடுகாகி விடுகிறது. அப்படிப் பொடுகு ஆகிறபோது. அங்கே சரியான இரத்த ஓட்டம் இல்லாததால் அரிப்பு ஏற்பட்டுப் புண்ணாகிவிடுகிறது. ஆகவேதான் தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறோம்.

அடுத்துத் தலை முடியைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால். அங்கே ஈறும், பேனும் எளிதில் குடிகொண்டுவிடுகின்றன. ஈறும், பேனும் இருக்கிற தலையை எல்லோரும் சொறிந்து கொண்டும், பிய்த்துக் கொண்டும் இருப்பார்கள். பார்க்கப் பரிதாபமாக இருக்கும். மேலே கூறிய சிக்கல்கள் ஏற்படாமல் முடியைக் காக்க ஆறு முக்கிய விதிமுறைகளை நீங்கள் கடைப்பிடித்தால் போதும்.

1. தலைமுடி தெளிவாகப் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஷாம்பு போன்ற பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.

2. உங்கள் தலைமுடிக்கு அந்த குறிப்பிட்ட ஷாம்பு ஒத்துவருகிறதா என்பதை நன்கு தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

3. உங்கள் தலை முடியை நன்றாகத் தேய்த்து கழுவிச்சுத்தப்படுத்த வேண்டும்.

4. குளித்த பிறகு தலை முடியை நன்றாகக் காயவிடுவதுபோல தலைமுடியை உலர்த்துதல் நல்லது.

5. உங்கள் தலை ஈரமாக இருக்கும்பொழுது துண்டால் அதிவேகமாக, கடுமையாகத் துவட்டக் கூடாது. முடி அந்த நேரத்தில் பலஹீனமாய் இருப்பதால் கொத்துக் கொத்தாகப் பிய்த்துக் கொண்டு வந்துவிடும். மெதுவாக, மென்மையாகத் துவட்டவும்.

6. மிகவும் நெருக்கமான பற்கள் உள்ள சீப்பால் சீவாமல், இடைவெளியுடன் இருக்கும் சீப்பால் இதமாகச் சீவி விட வேண்டும்.

2. கண்கள்:

முகத்திற்கு அழகு விழிகள்தான். விழிகள் இரண்டும் முகத்தின் அழகைக் கூடுதல் கவர்ச்சியாகக் காட்டி விடுகின்றன. உடலிலே இருக்கும் உறுப்புக்கள் அனைத்திலும், மிக நுண்ணியதான, உணர்வு பூர்வமாக அமைந்த சிறப்புப் புலன்களாக, உலகத்தை ரசிக்க மட்டுமல்ல, உபத்திரவம் எதுவுமில்லாமல் நடமாடுவதற்கு உதவியாக அமைந்திருப்பதும் இந்தக் கண்கள்தான். கண்களைப் பாதுகாப்பதற்கு உடலின் செயல்பாடுகள் கெட்டிக்காரத்தனமாகச் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.

கண்களுக்கு உள்ளே அடிப்பாகத்தில் கண்ணிர் சுரப்பிகள் இருக்கின்றன. அந்தச் சிறப்புச் சுரப்பிகளுக்கு உள்ள பெயர் லாக்கிரிமல் (Lacrmel). கண்களில் உள்ள கருவிகளைச் சுற்றிப் பாதுகாக்கும் இரும்புக் கோட்டையாக கண்ணிமை (Eyelash). அதற்கும் மேலாகப் புருவம் (Eye Brow).

ஏதாவது வெடிச்சத்தம் கேட்டாலோ, மின்னல் ஒளிபோல ஒளிக் கீற்றுப் பாய்ந்தாலோ, கண்ணிமைகளானது உடனே சிறுக மூடிக் கொண்டு. கருவிழியை, கண் உறுப்பை ஆபத்திலிருந்து தடுத்து விடுகிறது.

ஏதேனும், எப்பொழுதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கண்ணிமையானது ஐந்து நொடிகளுக்கு ஒரு முறை கண்ணை மூடி மூடித்திறந்து இமைத்துக் கொண்டு இருக்கிறது.

கண் இமைப்பவர்களை மனிதர் என்றார்கள். கண் இமையாதவர்களைத் தேவர் என்றார்கள். அதாவது அவர்கள் இமையோர்.

இப்படி இரும்புக் கோட்டையாக விளங்கும். இமைகளையும் மீறி, தூசி விழிக்குள் விழுந்து விட்டால் அதைக் கரைத்து வெளியேற்றும் சக்தியைக் கொண்டதாகக் கண்ணீர் விளங்குகின்றது. மனத் துயரத்தால், மாறாத வேதனையால், ஒருமனம் வெதும்பிக் கதறுகிறபோது இந்தக் கண்ணீர்தான் வந்து, கண்களை நனைத்து அவர் படுகின்ற எரிச்சலைத் தணித்து, மனதுக்கு ஒரு ஆறுதலையும். வேதனைக்கு விடிவுகளையும் தருகிறது.

கண்கள் பிரகாசமாகவும். பிரமாதமாகவும் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் கண்களைக் கருத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் முக அழகைக் காக்கிறபொழுது விழிகளை மறந்து விடாதீர்கள்.

கட்டாயமாக ஒருவர் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது உடலுக்கு ஓய்வுதர மட்டுமல்ல. களைத்துப்போன உறுப்புக்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. கண்களுக்கு ஒய் வையும். விழிப்பிலிருந்து ஒரு மாற்றத்தையும் கொடுப்பதற்காகத்தான். கண்களுக்கு ஓய்வு தரவில்லை என்றால் கண்கள் தளர்ச்சியடைந்து, ஒருவித எரிச்சலை ஏற்படுத்தித் தலை வலியையும் உண்டாக்கிவிடுகிறது. அதிக நேரம் கண்களைப் பயன்படுத்துகிறபோது பார்வை நரம்புகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் படிக்கின்ற பொழுது பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குக் கண்களை மூடிக் கொண்டு ஓய்வு கொடுத்தால் கண்கள் மீண்டும் புத்துணர்ச்சியோடு செயல்படத் தொடங்கும்.

உங்கள் கண்கள் அதிகமாக களைப்படைந்தாலும், அல்லது அதிக வெளிச்சத்தில் எரிச்சல் அடைந்திருந்தாலும், கண்களின் வெள்ளைப் பகுதி முழுவதும் இரத்தச் சிவப்பாகிவிடுவது உண்டு. காற்று அடித்த புழுதியாலும், அல்லது தெளிவற்ற சுற்றுப்புறச் சூழ்நிலையாலும் வெண் பகுதி எரிச்சல் அடையும் பொழுது நீங்கள் கண்களைத் தேய்க்காதீர்கள். நீங்கள் அழுத்தித் தேய்க்கின்ற பொழுது, பிராணவாயு இயக்கிக் கொண்டிருக்கிற மெல்லிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால், அப்படியே சிறிது நேரம் விட்டு விடுங்கள். உள்ளுறும் கண்ணிர் அவற்றை வெளியேற்றிவிடும். இல்லையேல் டாக்டரின் ஆலோசனையைக் கேட்டுக் கண்மருந்துச் சொட்டுக்கள் போட்டுக் கொள்ளுங்கள்.

கடுமையான களைப்புக்கு ஆளாகிறபொழுது அல்லது கடுமையான ஜலதோசம் பிடித்திருக்கிற பொழுது, அல்லது உண்ட உணவினால் ஒவ்வாமை (Allergy) ஏற்படுகிற பொழுது. ஒரு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். மூக்கடைப்பு ஏற்படும். கண்கள் பஞ்சடைந்ததுபோல ஆகிவிடும். மூக்கில் சளி ஒழுக ஆரம்பித்து விடும்.

நீங்கள் உரிய மருந்தை எடுப்பதற்குமுன், நீங்கள் தேவையான நேரம் தூங்கினீர்களா? சரியான உணவைச் சாப்பிட்டீர்களா? என்பதையெல்லாம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கண்களைக் குளிர்ச்சிப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். சாதாண டீத்துள் பையையோ அல்லது வெள்ளரிக்காயை சிறிது அறுத்து வைத்தோ கண்களுக்கு இதம் சேர்க்கலாம்.

சில சமயங்களில் இரண்டு கண்களால் ஒன்றைப் பார்த்தாலும் அதில் வித்தியாசம் காண்பார்கள். மாறுகண் வந்துவிட்டால் முகத்தையே விகாரப்படுத்திவிடும். வேறுசில சமயங்களில் கண்பகுதிகள் பாதிக்கப்பட்டுக் கண் கட்டிகள் கூடவரலாம். அதனை எல்லாம் கண் மருத்துவரிடம் காட்டி தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.

கண்களுக்கு உரிய கண்ணாடிகளைத் தேர்ந்து எடுக்கும்போது மிகவும் எச்சரிக்கையாகத் தேர்ந்து எடுக்க வேண்டும். உங்கள் முகவடிவத்திற்கு ஏற்றாற்போல அழகான கண்ணாடிகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

3. செவிகள்:

முகத்தின் பக்கவாட்டில் இருபுறமும் தெரிகிற காதுகள். கேட்பதற்கு மட்டும் பயன்படும் புலன் அல்ல. கவர்ச்சியான முக அழகைத் தருவதற்கும் அவை பயன்படுகின்றன.

மனிதன் எப்பொழுதாவது காதுகளைப் பயன்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றானே தவிர, காதுகள் எப்போதும் தம் கடமையைச் செய்து கொண்டுதான் வருகின்றன. காதுகளை நாம் கவனித்தாலும். கவனிக்காவிட்டாலும், நினைத்தாலும் அல்லது நினைக்காமற் போனாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவைகள் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.

நீங்கள் ஒரு இசையைக் கேட்கின்றீர்கள். இரசிக்கிறீர்கள். மகிழ்ச்சியாக தலையை அசைக்கிறீர்கள். ஆடுகிறீர்கள். பாடுகிறீர்கள். எல்லாம் காதுகள் கொடுக்கிற விலைமதிக்கமுடியாத கொடையாகும்.

நீங்கள் இசையைக் கேட்கும்பொழுது நீங்கள் ஒலி எழுப்புகின்ற அதிர்ச்சியைத் தான் கேட்கின்றீர்கள் (Vibrations). அதாவது ஒலி அலைகள் காற்றிலே மிதந்து வந்து உங்கள் காதுக்குள்ளே நுழைகின்றன. உங்களது காதுகளே அவற்றை வரவேற்று ஏற்றுக் கொண்டு, அப்படியே அந்த ஒலி அலையை உங்களது மூளைக்கு அனுப்பிவைக்கின்றன. அதை ஏற்றுக் கொண்ட மூளை. அது என்ன ஒலி, எப்படிப்பட்டவை போன்றவற்றைத் தரம் பிரித்து அறிந்து உங்களை மேலும் கேட்கத் தூண்டுகிறது.

இவ்வாறு வெளியுலகச் சத்தங்களை மூளைக்கு அனுப்பிவைக்கிற வேலையைக் காதுகள் எப்படிச் செய்கின்றன. ஒரு காதானது. வெளிக்காது - நடுக்காது - உட்காது என மூன்று வகையாகப் பிரிந்துதான் இந்தப் பணியைச் செய்கிறது.

வெளிக்காது: விரிந்த மடலாகத் தோன்றுகிற வெளிச்செவி. வெளியுலகச் சத்தங்களை மடக்கி உள்ளே அனுப்புகின்ற வகையில் அமைந்திருக்கின்றன. அங்கே உள்ளேயுள்ள நடுக்காது வழியாக உட்காதிலுள்ள செவிப்பறைக்குக் கொண்டு செல்கின்றன. இப்படியெல்லாம் இயற்கையே நமக்கு உதவி செய்து கொண்டு இருக்கின்றது. அவற்றைப் பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமை அல்லவா உள்காதுக்குள்ளே ஒட்டிக்கொள்ளும் பொருள்போன்ற குறும்பி ஒன்று இருக்கிறது. வெளியிலிருந்து வருகிற தூசி, தும்புகளை உள்ளே புகவிடாமல், நடுக்காதிலேயே தடுத்துநிறுத்துகிற அற்புதமான பணியை ஈரப்பசையுள்ள (Wax) இந்தக் குறும்பி செய்து நன்றாகக் கேட்க உதவுகின்றன. குறும்பிகளில் தூசிகள் சேரும்போது தானாகத் திரண்டு உருண்டு வெளியே வந்துவிடும். சில சமயங்களில் உள்ளுக்குள்ளே தங்கிவிடும். அப்படிக் குறும்பி. கட்டியாகி திரட்சியாக இருக்கிறபோது காதுகேட்காமல் மந்தமாகக் கூட இருக்கும். அப்போது நீங்கள் அந்தக் குறும்பியை எடுப்பதற்காகக் குச்சியையோ, ஊக்கு, ஊசிபோன்ற பொருள்களையோ உள்ளேவிட்டுக் குடையக் கூடாது. அப்படிச் செய்கிறபோது காதின் செவிப்பறைகள் குத்திக் கிழிக்கப்பட்டுவிட்டால் காலமெல்லாம் நீங்கள் செவிடர்களாகத் தான் வாழ நேரிடும். எனவே குறும்பியை நீக்க நல்ல டாக்டரை அணுகவும்.

காது குடைவதால் மட்டும் செவிப்பறை கிழிந்து போவதில்லை. இடி இடிப்பது போன்ற சத்தத்தைக் கேட்கும்போது கூடச் செவிப்பறை கிழிந்து நிரந்தரமான செவிடர்களாக ஆக்கியிருக்கும் வரலாறு நிறைய இருக்கிறது.

விஞ்ஞானிகள் ஒலியின் சத்தத்தின் அளவை பகுத்துப் பார்த்திருக்கிறார்கள் பகுத்துப்பார்த்த அந்த முடிவிற்கு டெசிபெல் (Decibal) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ஒருவர் வாய் வழியாக, முணுமுணுக்கிறபொழுது ஏற்படுகிற சத்தத்தின் அளவு 20 டெசிபெல்.

ஒரு டெலிபோன் மணியானது அடித்து ஓசையெழுப்புகிறபோது அந்த அளவு 70 டெசிபெல்.

ஒரு மோட்டார் சைக் கிள் புறப்படும்போது அலறுகிற ஒலியின் அளவு 90 டெசிபெல்.

ஏறத்தாழ 120 டெசிபெல் சத்தத்தை ஒருவர் கேட்டுக் கொண்டேயிருந்தால் அவரது காதுகள் நிச்சயமாக செவிடாகிவிடுகின்றன. மேளவாத்தியம். மிலிட்ரி ட்ரம்ஸ் போன்றவற்றிலிருந்து எழுகிற சத்தத்தின் அளவு 130 டெசிவேல் என்கிறார்கள்.

ஆக, நீங்கள் காதுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் முக அழகைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

4. பற்கள்:

உணவைக் கடித்து அரைத்து வயிற்றுக்குள்ளே அனுப்புகிற வேலையைத்தான் பற்கள் செய்கின்றன. இது பொதுவான பணிதான் என்றாலும். முகத்திற்கு முத்தான அழகை மிகுதியாகத் தருவது பற்கள்தான் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.

பற்கள் என்பவை எதனால் ஆக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு பல்லானது பல அமைப்புக்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்லின் வெளிப்புற அமைப்பானது கடினமான வெண்மையான பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பளபளப்புப் பூச்சுக்குப் பெயர் (Enamel) என்பதாகும். அதன் உள்ளடுக்காக அமைந்திருப்பது எலும்பு போன்ற ஒரு பொருள். அதன் பெயர் டென்டைன் (Dentine).

பல்லின் நடுப்பாகம் மென்மையான திசுக்களால் ஆக்கப்பட்டு இருக்கின்றன. அதனைப் பல்ப்பு (Pulp) என்பார்கள். அதனுள்ளே இரத்தக் குழாய்களும், நரம்புகளும் சென்று உயிரோட்டமான உணர்ச்சி உள்ளதாக ஆக்கி வைத்திருக்கின்றன. அந்தப் பல்லைச் சுற்றிதான். ஈறு, பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டு நாடி நரம்புகளின் ஆணிவேராக இருக்கிறது.

உங்கள் பற்கள் பலவிதமான அமைப்புக்களைக் கொண்டிருந்தாலும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்து வருகின்றன. பற்களின் அமைப்புப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இனி அவற்றைப் பாதுகாக்கும் முறைகளையும் அறிந்து கொள்வதோடு மட்டுமல்ல. கட்டாயமாகப் பின்பற்றவும் வேண்டும். பாதுகாக்கும் முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. வருடத்திற்கு இரண்டு முறையாவது பல்வைத்தியரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.

2. ஒரு நாளைக்குக் காலையிலும், இரவிலும் இரண்டு முறையாவது பற்களைத் துலக்க வேண்டும்.

3. ஆலமரத்தின் விழுதும், வேப்பமரத்தின் குச்சியும் பல்துலக்கச் சிறந்தவை என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். முடியாத நேரத்தில், மணல், செங்கல், கரித்துள்கள் போன்றவற்றைப் பல்துலக்கப் பயன்படுத்தினார்கள். பிறகு மென்மையான பற்பொடி வந்தது. இப்போது குளோரைடு கலந்து பற்பசைகள் பல வண்ணங்களில் வந்து கொண்டு இருக்கின்றன.

நீங்கள் எந்தப் பற்பசையைப் பயன்படுத்தினாலும். குளோரைடு இருக்கிறதா என்பதைக் கவனித்து வாங்கவும்.

4. கண்ட கண்ட நேரத்தில் கண்ட கண்ட பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிட்டவுடன் வாயைக் கொப்பளித்துச் சுத்தப்படுத்தவும். சதவிகித உணவு (Balanced Diet) சாப்பிடுவதால் சீரான செழுமையான பற்கள் எப்பொழுதும் இருக்க உதவி செய்யும்.

5. அதிகமாக இனிப்புப் பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். படுக்கப் போகுமுன் வாய் அலம்பாமல் படுத்துவிட்டால், பற்களுக்கு அடியில் தங்கியிருக்கும், உணவுத் துகல்களை நோய்க்கிருமிகள் பற்றிக் கொண்டு உங்கள் பற்களைச் சொத்தையாக்கி விடும். ஆட்டம் காண வைத்துவிடும். விழ வைத்து விடும். முக அழகையும் சிதைத்து விடும்.

வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் பற்களை நாசமாக்கி விடும் என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால் முக அழகு எப்படிச் சிதைகிறது என்பதுதான் எங்களுக்கு விளங்கவில்லை என்ற சந்தேகம் உங்களுக்கு இப்போது எழுந்து இருக்கிறது.

பற்கள் கம் என்ற (Gum) ஈறினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மேல்வரிசைப் பற்களின் மேலேயுள்ள அந்த ஈறானது மேடாக இருப்பதால் மேலுதடு எப்பொழுதும் சீராக மேடாக மூக்கின் அடிப்பாகத்தைத் தொட்டுக் கொண்டு முகத்திற்கு ஒரு கம்பீரமான அழகைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஈறின் மேடான தன்மை குறையாமல், கரையாமல் இருக்கும் வரை முக அழகு வளமையாகவே தெரியும்.

உங்கள் பற்களை நீங்கள் கவனிக்காமல் விட்டு விடுகிறபொழுது பற்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை பற்களைப் பாதுகாக்கும் ஈறும் பங்கப்பட்டுப் போகிறது.

அப்படி மேல் உதட்டின் கீழ் உள்ள ஈறானது கரைந்து போவதால் மேல் உதடு அந்தயிடத்திலே இறங்கிப் போகிறது. இறங்கிப்போகப் போக அடி மூக்கிற்கும் உதட்டிற்கும் ஏற்படுகிற இடைவெளி அதிகமாகிப் போகிறது.

இதைப்படித்த பிறகு ஒரு வாலிபனது முகத்தைப் பாருங்கள். வயதான ஒருவரின் முகத்தைப் பாருங்கள். மேல் உதடு - மேடு இறங்கிப் போய் இருப்பது நன்றாகத் தெரியும். அது மட்டுமல்ல. ஈறின் உட்பகுதி இன்னும் இறங்கிப் போவதால் மூக்கின் இருபக்கங்களிலும் உள்ள கன்னங்களில் கோடு போன்ற ஒரு அமைப்பும் உண்டாகிறது. அந்த இருபக்கம் கீற்றுகள்தான் முகத்தின் எழிலுக்கு முக்கியமான எதிரிகளாக அமைந்து விடுகின்றன. அதனால்தான் “ஈறுகெட்டால் எழில் கெட்டுவிடும்” என்ற பழமொழியும். உண்டாகி விட்டது.

பற்களில், குழியோ, கூச்சமோ, நாசமோ எதுவும் ஏற்படாமல் பக்குவமாக பாதுகாக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பல்லுக்கு வருகிற இரத்த ஓட்டத்தைத் தடுத்து விடாதீர்கள். பல்லுக்கு உணர்ச்சி தருகிற நரம்புகளைத் தடுத்துவிடாதீர்கள். எப்போதும் அழகை ஊட்டும் முக அழகை வீணாக்கிவிடாதீர்கள். உங்கள் முக அழகைக் காப்பதில் பற்களும் முக்கிய பங்கு வகிக்கிறது

என்பதை நீங்கள் மறக்காமல் இருந்தால் அதுவே பேரின் பந்தரும் விஷயமாகும். “பற்கள் போயின் சொற்கள் போகும்” என்பார்கள். பிறந்து வளரும் பல்லில்லாக் குழந்தைகளும், முதிர்ந்து தளரும் தொன்னூறு வயதுக் கிழங்களும், சொல்லும் மொழியை புரிந்து கொள்ளவே முடியாது. பொருள் தெரியாத புதிராகத்தான் இருக்கும். காரணம் பல் போனால் சொல்போச்சு என்பதுதானே.

5. வாய்:

பற்கள் பதுங்கியிருக்கும் பெட்டியாகிய வாயைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பார்ப்போமா? பற்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதும் வாய்தானே. வாயை மூடிக் கொண்டால் பற்களெங்கே பளிச்செனத் தெரியப் போகிறது.

சிலருக்கு வாயை மூடிக்கொண்டாலும் ஓரிரு பற்கள் உதட்டை விலக்கிக் கொண்டு வெளிக்காட்டி நிற்கும். இந்தக் கோரைப் பற்களை வெட்டிக் குறைத்துக் கொள்ளாவிட்டால் பல் டாக்டரிடம் காட்டி, அறுவை சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் அவர்கள் முகம் பார்க்கப் பயங்கரமாகத்தானே இருக்கும். இப்படிப்பட்ட முகத்தை இராட்சச முகம் என்பார்கள். அதாவது அரக்கர் முகம்.

அரக்கர்களின் அழகினைக் கம்பன் வர்ணிக்கும் போது,

வயிற்றிடை வாயினர்
வாள் எயிற்றினர்

என்கிறார்.

வாய் முகத்தில் இருப்பதற்குப் பதிலா வயிற்றிலிருந்தால் எப்படியிருக்கும்?

அந்த வாயிலும் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நீண்ட வாள்களைப் போலிருந்தால் எப்படி இருக்கும்? அகோரமாகத்தானே இருக்கும்.

கண், காது, பற்கள் என்பனவற்றோடு, வாயையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். வாய் பேசுவதற்கு மட்டுமல்ல. பேரழகை முகத்திற்குக் கூட்டுவதற்கும், வெளிக்காட்டுவதற்கும் உறுதுணையாகவே அமைந்திருக்கிறது என்ற உண்மையையும் நாம் மறந்து விடக்கூடாது.

‘வாய் கிழியப் பேசுகிறான்’ என்கிறோம். வாயைக் கிழித்துக் காட்டுவது இரு உதடுகளேயாகும். ஒன்று மேல் உதடு. இரண்டாவது கீழ் உதடு. இந்த உதடுகள் கூட முகத்திற்கு அழகு சேர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும். சிலருக்கு உதடுகள் வீங்கி, விரைத்து, பெருத்து கருத்துக் காணப்படும். இப்படிப்பட்ட இதழ்களை முகத்தில் பெற்று இருப்பவர்களுக்கு முக அழகா இருக்கும்? முக விலாசமே, முகவிகாரமென்றுதானே ஆகிவிடும்.

நோய் என்றால் துன்பம், வாய் என்றால் வழி வாய் தான் அத்தனைக்கும் வழி என்பார்கள். அனுபவப்பட்டவர்கள் பேச்சுக்கும் அதுதான் காரணம். சொல் வீச்சும், பேச்சுக்கும் வாய்தான். செயல் வீச்சுக்கும் வாய்தான். பலப்பல நேரங்களில் மூச்சுக்கும் வாய்தான் வழியாக இருக்கிறது. அது படுத்துகிற பாடுதான் அகோரமாக விளங்குகிறது.

உடல் என்றால் இரத்தமும், சதையும், எலும்பும், நரம்பும் கொண்ட கூட்டுச் சரக்கு என்பார்கள். இந்த உடலைக் கொஞ்சம் கவனிக்காமல் விட்டுவிட்டால், முதலில் வருவது நாற்றம். அப்புறம் எத்தனை மாற்றம் ஏற்படுகிறது தெரியுமா?

“நல்ல, நல்லபழக்கம்” என்று சொல்லிச்சொல்லிப் பின்பற்றினால்தான், உடலும் நலமாக வாழும். பலமாக வளரும். அதாவது நல்ல உணவு, நல்ல பழக்கம், நல்ல வழக்கம், நல்ல பண்புகள், நல்ல செயல்கள் என்பதுபோல.

நல்ல என்பது அல்ல என்று மாறினால், பொல்லாத நோய்கள் உடலுக்குள்ளே புகுந்து, புறப்பட்டு வெளிவந்து விடும். பிறகு என்ன? புலம்பலும் கலங்கலும்தான்.

அதனால்தான் பழம் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது.

“சம்பத்துடன் பிணியிலே மெலிவதின்
நோயற்ற தரித்திரம் நன்று காண்”

பிணியுள்ளவன் என்ன செய்ய முடியும்! மனிதனாகக் கூட அவனால் உலவ முடியாது. அவனை ‘செத்தபிணம்’ என்றல்லவா இகழ்ச்சியாகப் பேசுகின்றார்கள்.

இந்தச் சுகத்திற்கு எவ்வளவு மதிப்பும், பெருமையும் இருக்கிறது பாருங்கள். புத்தரின் போதனை என்ன? ஆசையை அடக்குங்கள் என்பதுதான். ஆசைதான் அனைத்திற்கும் காரணம் என்று நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆசைதானே முனைப்பாகும் முன்னேற்ற நினைப்புக்கும், ஆற்றலின் இணைப்புக்கும், அதன் பின் பிணைப்புக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. எனவே, ஆசையில்லாத உயிரினம் ஏது?

வளமான வாழ்விற்கு, ‘வாயைக் கட்டு, வயிற்றைக்கட்டு’ என்பார்கள். வாயைக் கட்டு என்றால் அதைக் கயிற்றைப் போட்டுக் கட்டுவதா? இல்லை. கண்டதைத் தின்று, உண்டது செறிக்காமல், நோய்வாய்ப்பட்டு முடங்கிக்கிடந்து நொந்து போகாதே என்பதற்காகத்தான் வாயைக்கட்டு என்றார்கள்.

‘அற்றது அளவறிந்து உண்டால்’ நீண்டநாள் உயிர் வாழலாம் என்கிறார் திருவள்ளுவர். பசிதான் ருசி அறியும். ‘பசித்த பின் புசி’ என்பது பழமொழி. பசிக்காத நேரத்திலும். உணவு உண்பது பஞ்சமா பாதகம். உழைத்து அதன்பின் உண்டால் உணவும் செரிக்கும். உட்கார்ந்து இருந்து உண்டு கொண்டே இருந்தால் அஜீரணம், வயிற்றுக் கோளாறு, தலைவலி, மூலம், பெளத்திரம் என்று பற்பல நோய்கள் தொடர்ந்து தொற்றிக் கொள்ளும்.

சிலர் வாழ்வதற்காக உண்கிறார்கள். பலர் உண்பதற்காகவே வாழ்கிறார்கள். ஒருவேளை உண்பவன் யோகி. இருவேளை உண்பவன் போகி, மூன்று வேளையும் உண்பவன் ரோகி என்பார்கள். வாய்தான் இருக்கிறதே, வயிறுதான் இருக்கிறதே என்று எப்பொழுதும் எதையாவது தின்று கொண்டே இருப்பவனை என்ன சொல்வது? துரோகி என்றுதானே சொல்லவேண்டும். அவன் தனக்குத்தானே துரோகியாவ தோடு சமுதாயத்திற்கும் துரோகியாகிவிடுகிறான்.

ஆகவே, வாயை அடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இப்படிச் சொல்வது பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும், கண்டதைத் தின்று வயிற்றைக் கெடுத்துக் கொள்ளாமல் அளவோடு உண்டு, வளமோடு வாழுங்கள் என்பதற்காகத்தான் வாயை அடக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள்.

வாய் என்பது முகத்திற்கு அழகு சேர்க்கும் ஒரு உறுப்பு என்பதை நாம் உணர்ந்து இருந்தாலும். அதுவே நம் நல் வாழ் விற்கும் வழியாக அதாவது வாயிலாக இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

செந்தமிழைச் சொன்னால் வாய் மணக்கும். பற்பல ஜீவன்களைக் கொன்று தின்றால் வாயாமணக்கும். வாய் நாறும். வாய் திறந்தாலே துர்வாடை வீசும்.

ஆகவே, வாய் ஒருவழி. அது எதையும் உட்கொள்ளும். எதையும் வெளிப்படுத்தும். அதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப்பழகிக் கொள்ளுங்கள்.

6. மூக்கு:

முகத்தின் அழகிற்கு மூக்கும் ஒரு முக்கியமான உறுப்பாகவே இருக்கிறது. சவாலாக ஒரு காரியத்தில் ஈடுபட்டுத் தோல்வியைச் சந்திக்க நேரிட்டால், “என்னப்பா மூக்கு அறுபட்டாயா?” - என்று சிலர் கேட்பதுண்டு. மூக்கு அறுபட்டதற்கு இதிகாசத்திலே, இராமாயணத்திலே சூர்ப்பனகையே சாட்சியாகக் காட்சி தருகிறாள். சூர்ப்பனகையின் அறுபட்ட மூக்கைக் கம்பன், “தூம்பு எனத் தெரிந்த மூக்கினள்” என்றான்.

இராமாயணத்திலே தூக்கத்திற்குப் பேர்போனவன் கும்பகர்ணன். அவன் படுத்துத் தூங்கும்போது, அவனது இரண்டு மூக்குத் துவாரங்களும், ஒருமலையில் உள்ள இரண்டு பெரும் குகைகளைப் போல இருந்ததாம். அவன் மூச்சுக் காற்றினை இழுக்கும்போது அருகிருந்த உயிர்கள் உற்றனவும், உயிர்கள் அற்றனவும் மூக்கிற்குள் போய்புகுந்து கொள்ளுமாம். அவன் மூச்சை விடும்போது அவைகள் பதறிப்போய் வெளியே வந்து விழுமாம். அவ்வளவு அரிய, பெரிய மூக்கிற்குச் சொந்தக்காரன் அந்தக் கும்பகர்ணன் என்பார்கள்.

“அதோ போகிறானே! அவனைப் பாருங்கள்; மூக்கும், முழியுமா - எவ்வளவு லெட்சணமாக இருக்கிறான்” என்பார்கள். விழியை முழியென்றவர்கள், மூக்கை மட்டும் மூக்கென்றே மொழிவார்கள். ஆகவே, முக லெட்சணத்திற்கு, அதாவது முக வசீகரத்துக்கு மூக்கும் ஒரு காரணமாக இருக்கிறது என்பது தெரிகிறதல்லவா.

சப்பை மூக்கு, ஊளை மூக்கு, குடமிளகாய் மூக்கு என்றெல்லாம் மூக்கைப் பழித்துரைப்பார்கள். இவையெல்லாம் அழகும். நல்ல அமைப்பும், எடுப்பும், எழிலும் இல்லாத மூக்குகளைத்தானே விவரிப்பார்கள் மூக்கு நுகர்வதற்கும், சுவாசிப்பதற்கும் மட்டுமன்று, முகவசீகரத்திற்கும் உரிய ஒன்றாகவே இருக்கக் காண்கிறோம்.

ஜப்பானியர்களுக்குச் சப்பை மூக்குகள். நம் நாட்டிற் கூட, பிறக்கும் குழந்தைகட்கு மூக்குகள் சப்பையாக இருந்தால், விரல்களால் தினந்தோறும் மூக்கை நீவி விட்டுச் சரிசெய்து விடுகிறார்கள். முகத்தின் வடிவமைப்பிற்கு ஏற்ப மூக்கு இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் முக அழகு மாறித்தான் போய்விடும். எனவே உங்கள் மூக்கையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். முகத்தின் எழிலைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நம் நாட்டுப் பெண்கள் மூக்குக் குத்திக் கொள்கிறார்கள். மூக்குத்திகளை, வைரக்கற்களைப் பதித்துக் கூடத் தங்கத்தில் அணிந்து கொள்கிறார்கள். பெண்களின் காதுகளில் மட்டுமல்ல, மூக்குகளிலும் விதவிதமான அணிகலன்கள் அழகு சேர்க்க அணியப்பட்டு வரக்காண்கிறோம். சப்பை மூக்கைக் கூடத் தற்காலத்தில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரி செய்து விடுகிறார்கள். முகத்தின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், மூக்கின் மேலும் அக்கரை காட்டத்தான் வேண்டும்.

இதுவரை முகத்தின் அழகிற்கு உரிய சிற் சில விளக்கங்களை உங்கள் முன்வைத்தேன். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்?” என்பது பழமொழி.

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
தடுத்தது காட்டும் முகம்”

சினம், காமம், பகை, பாசம், அன்பு, ஆசை, வெறுப்பு, விருப்பு, தவிப்பு, துடிப்பு, நகைப்பு என்று எல்லாவிதக் குணங்களையும் முகம்தான் காட்டி மனிதனை வகைப்படுத்துகிறது. ‘புன்னகை பூத்த பூமுகம்’ என்கிறோம். ‘மாசற்ற மலர் முகம்’ என்கிறோம். அதே நேரத்தில் சிலர் முகத்தைப் பார்த்து, மறைமுகமாகக் கோரமுகம், விகாரமுகம் என்றெல்லாம் விமர்சிக்கிறோம்.

கைகேயி இராமனிடம் “அயோத்தியின் அரசுரிமை பரதனுக்கே உனக்கில்லை” என்கிறாள். இதைக் கேட்டபின் இராமன் முகம் கோபத்தால் அல்லவா சிவந்திருக்க வேண்டும். பின்னர் எப்படி இருந்ததாம். கம்பன் கூறுகிறான்.

“தெம்மடங்கிய சேண் நிலம், கேகயர்
தம்மடந்தை உன் தம்பிய தாம் எனா
மும் மடங்கு பொலிந்த முகத்தினன்
வெம்மடங்கலை உன்னி வெதும்புவாள்.”

மும்மடங்கு அழகாக இருந்ததாம் இராமனின் திருமுகம்.

“மெய்திருப்பதம் மேவு என்ற போதினும்
இந்திருத்துறந்து ஏகென்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.”

இத்திருத் துறந்து கானகம் ஏகென்ற சொன்னபோது கூட இராம பிரானின் முகம் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையை ஒத்திருந்ததாம். ஆகவே, துன்பத்திலும், துயரத்திலும் கூட மலர்ந்த முகத்தோடு, வருத்தப்பாட்டை வெளிக்காட்டாமல் இருக்கமுடியும். இருக்க வேண்டும் என்பதை மேற்கூறிய கம்பனின் பாடல்கள் நமக்கு வழிகாட்டுகின்றன அல்லவா.

7. உணவு:

உணவு முறையிலும், உணவை உண்ணும் முறையிலும் நமது முன்னோர்கள் ஒரு சில வரன்முறைகளைப் பின்பற்றி வந்தார்கள். பெரும்பாலும் நம் தமிழகத்தில் “உணவே மருந்து. மருந்தே உணவு” என்று சொல்வார்கள். அதாவது நமது அன்றாட உணவில், சீரகம், சோம்பு, வெந்தயம், வெங்காயம், கடுகு, இஞ்சி, கேழ்வரகு, சோளம், பால் , தயிர், மோர், நெய், முந்திரி, திராட்சை, மஞ்சள், எலுமிச்சம்பழம் என்று பல்வேறு பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இந்தப் பொருள்கள் யாவும் மருத்துவ குணங்கள் உள்ளவைகளாகும்.

உணவே விருந்தாக இருப்பதோடு மட்டுமின்றி நம் நாட்டில்தான் மருந்தாகவும் இருந்துகொண்டு வருகிறது. நாம் உண்ணும் உணவு நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்வோம்.

1. உணவு உடலுக்கு சக்தி அளிக்கிறது.

2. உணவு உடலை உருவாக்கவும், செல்களைப் புதுப்பிக்கவும் உதவுகிறது.

3. உள்ளுறுப்புக்களை இயல்பாக இயக்கி ஒழுங்குபடுத்துகிறது.

இம் மூன்று செயல்களையும் சற்று விரிவாகக் காண்போமே. முக அழகிற்கும் உணவு முறைகளுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். உடலிலே ஒரு உறுப்பாக இருப்பதுதானே முகம். “எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்பார்கள், சிரசு என்று சொல்லப்படுகின்ற தலையில் தானே முகம் அமைந்திருக்கிறது. எனவே உடலுக்குக் கூறப்படும் ஆலோசனைகளும், முகத்திற்கும் உரித்தானவைகள்தானே. எனவேதான் இங்கே உடலுக்குச் சக்தியை அளிக்கின்ற உபகரணமாகவே உணவு உதவுகிறது.

அதாவது ஓடுகின்ற நீராவி எஞ்சின் அல்லது கார் முதலியவற்றை உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம். நீராவி எஞ்சினுக்கு நீரும், நிலக்கரியும், உல்லாசமாக ஓடுகின்ற காருக்குப் பெட்ரோலும் உணவுபோலத் தேவைப்படுகின்றன.

இவையில்லாவிட்டால், அந்த இரண்டும் இடம்விட்டு நகராது. அப்படிப்பட்ட தன்மையில்தான் உடலை இயக்கும் முக்கிய சூத்ரதாரியாக உணவு நமக்கு உதவுகிறது.

இனி உணவு எப்படி உடலுக்குச் சக்தியாக மாறுகிறது. என்ற முறையையும் நாம் அறிந்து கொள்வது மிகமிக அவசியமல்லவா.

நடக்க, பேச, நினைக்க, படிக்க என்பன போன்ற அன்றாடக் கடமைகளுக்கு நமக்குச் சக்தி தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட செயல்களைச் செய்து முடிக்கின்ற சக்தி உணவாலும், உயிர்க் காற்றாலும்தான் உருவாகிறது.

நாம் உண்ணும் உணவிலே உள்ள கார்போஹைடிரேட்டுக்கள், கொழுப்பு, புரோட்டின் போன்ற சத்துக்கள், நாம் உள்ளே இழுத்துப் பெறுகின்ற பிராண வாயுவினால் தூளாக்கப்படுகின்றன.

அதாவது உணவும் காற்றும் சேர்ந்து நமது உடலுக்கு வேண்டிய சக்தியை உண்டாக்குகின்றன. உணவுடன் உடலில் சுரக்கின்ற சில அமிலங்களுடன், காற்றும் சேர்ந்து கொண்டு, அங்கு ஒரு புதிய மாற்றத்தை உடலுக்குள் ஏற்படுத்தி, சக்தியாக வெளிப்படுத்துகின்றன.

நாம் உண்ணுகிற உணவை உடல் சேர்த்து வைத்துக் கொள்ளும். ஆனால் நாம் சுவாசிக்கின்ற காற்றை மட்டும் உடலால் சேர்த்து வைத்துக் கொள்ள முடியாது.

நமது தேவைக்கு மேலே சக்தி தருகின்ற உணவை நாம் உட்கொண்டு விட்டால், சேகரித்த சக்தியினை செலவழித்ததுபோக, மீதியைச் சேர்த்து வைத்துக் கொள்கிறது நமது உடல் இதேபோல, ஆக்ஸிஜன் என்கிற உயிர்க்காற்றை உடலில் சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான் சுவாசித்தல் தொடர்ந்து செய்யப்படுகிறது. உணவு இரண்டு மூன்று முறை உண்ண நேரிடுகிறது.

உணவு, இரசாயன மாற்றம் பெற்று உருவாக்குகிற சக்தி, உடலுக்கு வெப்பம், இயக்கம், மின்சார இயக்கம் போன்ற நரம்பணுக்கள் தொடர்ந்து பணிசெய்து சக்தியை அளிக்கிறது. இந்த இரசாயன மாற்றத்தால் எழும் அடிப்படை சக்தியை உடல் வெப்பத்திற்காகவும். வேலைக்காகவும் மாற்றிக் கொள்ளும் அற்புதப் பணியைத்தான் உடல் ஒப்பற்ற முறையில், நொடிக்கு நொடி செய்து கொள்கிறது.

உணவு உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. உழைப்பால், அன்றாட அலுவல்களினால் உடைந்துபோன செல்களைப் புதுப்பித்தும், புதிதாகப் படைத்தும் உதவுகிறது. செல்களுக்கிடையே செழிப்பினை உண்டாக்க, ஹார்மோன்ஸ், என்சைம் போன்ற சக்திகளைப் பிறப்பிக்க உற்சாகம் ஊட்டுகிறது. அப்படிப்பட்ட அனைத்து சக்திகளும் மிகுந்த உணவினையெல்லாம் கார்போஹைடிரேட், கொழுப்பு, புரோட்டின், வைட்மின் என்று வகைப்படுத்திக் காட்டுகிறார்கள்.

கார்போஹைடிரேட் எனும் மாவுச் சக்தியானது அரிசி, கோதுமை போன்ற எல்லாத் தானிய வகைகளிலும், உருளைக் கிழங்கு மற்றும் எல்லா இனிப்புப் பண்டங்களிலும் பெருவாரியாகக் கிடைக்கிறது. இந்த மாவுச் சக்தியானது சர்க்கரை ஸ்டார்ச்சு என்று இருவகைப்படும்.

உணவில் அதிகமாக மாவுச்சக்தி சேர்ந்து விடுமானால் தேவைக்கு செலவானதுபோக, மீதியைக் கொழுப்பாக மாற்றி உடல் சேகரித்து வைத்துக் கொள்கிறது. இவ்வாறு அதிகம் சேரச் சேரத்தான், உடல் சற்று கொழுத்துக் குண்டாகிவிடுகிறது.

அதிக சக்தியை அளிக்கும் ஆற்றல் கொழுப்புச் சக்திக்கு உண்டு. இந்தக் கொழுப்புச் சக்தியானது, மாமிசவகைகள், பால், பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளில் அதிகமாகக் கிடைக்கிறது.

இந்தக் கொழுப்பானது, உடலுக்கு சக்தி அளிக்கிற நீண்டகால சேமிப்பாக விளங்குகிறது. இந்த சக்தி செல்களின் அடிப்படை இயக்கத்திற்கும், நரம்புகளின் நுண் இயக்க ஆற்றலுக்கும் தூண்டுகோலாக இருக்கிறது.

புரோட்டீன் என்பது வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத சக்தியாகும். மிருகங்கள் மூலமாகக் கிடைக்கின்ற உணவு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகமாக இருக்கிறது. காய்கறி, பால், கீரை போன்றவற்றில் குறைந்த ஆற்றலுடன் இது இருக்கிறது.

அடுத்து நமக்குத் தேவைப்படுவன வைட்டமின்களாகும். வைட்டமின்களில் பல வகைகள் இருக்கின்றன. அவைகள் தங்கள் திறமைக்கேற்ப பற்பல பணிகளை ஆற்றுகின்றன.

இயங்கும் உறுப்புக்களுக்கு வழவழப்புத் தன் மையூட்டும் (எண்ணெய்) பசைத் தன்மையை உண்டாக்கும் ஒருவகைப் பணியை வைட்டமின்கள் செய்கின்றன.

வைட்டமின்கள் A, B, C, D, E, K என்று இருக்கின்றன. A வைட்டமின் நலம் சார்ந்த தோல் வளத்திற்கு உதவுகிறது. முகத்தோலுக்கும்தான்.

B, B1, B2 என்ற வைட்டமின்கள் நாம் உண்ணும் கார்போஹைடிரேட் உணவுச் சக்திகளைக் கரைத்து, உடலுக்குள் கலந்துவிட உதவுகின்றன. நரம்புகளை உணர்வுடன் இயங்கச் செய்கின்றன.

C வைட்டமின் இரத்தம் உருவாவதற்கு முக்கியமாக உதவுகிறது. உடைந்துபோன திசுக்களைப் பழுது பார்த்துச் செப்பனிடவும், பற்கள், ஈறுகள், எலும்புகள், இரத்தக் குழாய்கள் உறுதி பெற்று உழைக்கவும் உதவுகிறது.

D வைட்டமின் பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலிமை தருகிறது. இது சூரிய ஒளியில் அதிகமாகக் கிடைக்கிறது.

வைட்டமின் E இரத்த ஓட்டத்தில் பிராணவாயுவை ஏந்திச் செல்லவும், வைட்டமின் K காயம் படும் போது அதிக இரத்தம் வெளியேறாமல் இரத்த உறைவை உண்டாக்கவும் உதவுகிறது.

இவை மட்டுமன்றி உலோகச் சத்துக்களும், நமது அன்றாட உணவில் இடம்பெற்றுத்தான் இருக்க வேண்டும் என்பதையும் நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

முகத்தில் தொடங்கி எங்கெங்கோ சென்று விட்டீர்களே என்று நீங்கள் நினைக்கலாம். முக எழிலுக்கு மட்டுமா நாம் உணவை உண்கிறோம். முழு உடம்பிற்கும்தானே உணவு உண்கிறோம்.

உடலில் ஒரு அங்கமான முகத்திற்கும் சத்தான உணவு என்பது முக்கியத் தேவைதானே. அதனால்தான் உணவுபற்றியும் சற்றே இங்கு உங்களுக்கு விளக்கமாக அல்ல சுருக்கமாகவே சொல்லி வைத்தேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் அன்றாடம் உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டு வருவீர்களே யானால் உங்களது உடல் நிறத்திலே ஒரு புதிய அழகைப் பெறலாம். உங்களது முகத்திலே ஒரு மலர்ச்சியை அடையலாம். ஒளிமிகுந்த கண்களை உடையவர்களாக இருக்கலாம். இனிய குரலுக்குச் சொந்தக்காரர் என்ற பேர்வாங்கலாம்.

எந்தச் செயலையும் சிரமமின்றிச் சீரோடும் சிறப்போடும் செய்யலாம். நோயற்ற வாழ்வு வாழலாம். எடுப்பான உடலும், எழிலான முகமும் கொண்டு உலாவலாம்.

ஆகவே, நமக்குப் புரிந்த உண்மையானது. உடல் நலம் என்பது சிறந்த உயிர் வாழ்க்கைக்கு மிகவும் வேண்டற்பாலது என்பதுதான். அதை அறிந்திருந்தும் இத்தனைக் காலம் சும்மாயிருந்து ஏமாந்துபோய் வாழ்ந்திருந்தாலும், இனிமேலாவது சரியான முறையைப் பின்பற்றிச் செல்வது தானே அறிவுடையோர்க்கு அழகு!

ஒருவனது சிறந்த பிறப்புரிமை என்பது உடல் நலத்தோடும், முகஅழகோடும் வாழ்வதுதான். உடன் வரும் நோய்க் கூட்டத்தின் சத்திரமாக வாழ்வது அல்ல, வலிமையோடு வாழ வேண்டும். வலிமையின்றி வாழ்ந்து, வாழ்வில் என்ன சாதிக்க முடியும்?

சிறந்த உடல் நலத்தையும் முக அழகையும் யாரும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது. பணம் கொடுத்து மருந்தை வாங்கலாம். ஆனால் நல்ல உடல், ஆரோக்கியத்தை அடையவே முடியாது.

நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள். அந்த நல்ல மனம் நிறைப்பெற்று, இயற்கையாகவே, இனிய பண்பும், அன்பும் கொண்டு மலர் முகத்தோடு என்றும் நீங்கள் வாழ, இந்தச் சிறிய நூலில் கூறியிருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு வழிகாட்டட்டும் என்று வாழ்த்தி, உங்கள் கைகளிலே இந்த நூலைத் தவழவிடுகிறேன்.

சொல்ல வேண்டியவை ஏராளம் சொல்லலாம் இன்னும் சற்று தாராளம். என்றாலும்கூட இதுபோதும் முக அழகைப் பாதுகாப்பதற்கு என்று எண்ணி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். என் முயற்சிக்கும், முயன்றெழுதும் பயிற்சிக்கும், உயர்ச்சியையே உரித்தாக்கி வருகின்ற வாசகப் பெருமக்கள் இந்த நூலையும் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன். படித்துப் பார்த்துப் பயன் பெறுவது இனி உங்களிடமேதான் உள்ளது. அகமகிழ்ந்து படித்து, முகம் மலர்ந்து வாழ்வீர்களாக.