முடியரசன் தமிழ் வழிபாடு/035-049

விக்கிமூலம் இலிருந்து

35. அன்னாய் வாழ்க!


ஆடகக் குழைகள் ஆட
          அடியினிற் சிலம்பும் ஆடப்
பாடமை வளைகள் ஆடப்
          பையமே கலையும் ஆடக்
கூடெழில் மணிகள் ஆடக்
          குலவியே எனது நெஞ்சுள்
நாடகம் ஆடும் நங்காய்
          நற்றமி ழன்னாய் வாழ்க

முதுமைவந் துற்ற போதும்
          முழுவலி யற்ற போதும்
கதுவுபல் பிணிகள் பற்றக்
          கலங்கியே நின்ற போதும்
எதுதுயர் நேர்ந்த போதும்
          எவர்பழி செய்த போதும்
புதுமையோ டிளமை பூண்டு
          பொலிவுடன் ஆடு கின்றேன்

உற்றுளே கலந்து நீயென்
          உயிருடன் உறைத லாலே
கற்றவன் போல யானும்
          களிநடம் ஆடு கின்றேன்
குற்றமொன் றுறுமேல் நின்றன்
          குறையலால் என்பா லில்லை
சற்றுநீ விழித்து நின்பின்
          சாருமோ குற்ற மிங்கே

[இளம்பெருவழுதி]]