முடியரசன் தமிழ் வழிபாடு/045-049

விக்கிமூலம் இலிருந்து

45. தமிழ் – என் தாய்

செந்தமிழ் என் பவளாம் - நல்ல
          செல்வக் குடி மகளாம்
முந்தை மொழி களிலே - அவளும்
          மூத்தவ ளாய்ப் பிறந்தாள்
முந்திய மூ வரசர் - அவையில்
          மொய்ம்புறத் தான் வளர்ந்தாள்
வந்தவர் யா வருக்கும் - செல்வம்
          வாரி வழங் கிடுவாள்.

தென்ற லுடன் பிறந்தாள் - நல்ல
          செய்கையொன் றே யறிவாள்
என்று பிறந் தவளோ? இவள்
          எத்தனை ஆண் டினளோ?
இன்றும் இள மையுடன் - அன்னை
          ஏற்றம் உறப் பொலிவாள்
ஒன்றிய நான்கு பெண்கள் - பெற்ற
          ஒண்டொடியா மவளே.

கன்னடத் தான் துளுவன் - மலையன்
          கண்டு மொழித் தெலுங்கன்
என்னுமிந் நால் வருக்கும் - அவரை
          ஈந்து மணம் முடித்தாள்

பெண்ணெடுத் தே மகிழ்ந்தோர் - என்னைப்
          பெற்றவ ளைப் பகைத்தார்
நன்னடைப் போக் கிழந்தார் - அந்த
          நால்வரும் நன் றிகொன்றார்.

ஈன்றெனைக் காத் தவளை - மனமே
எங்ஙனம் நான் புகழ்வேன்
சான்றவர் மெச் சிடவே - முப்பால்
தந்து வளர்த் தனள்தாய்
தோன்றுசங் கப் புலவர் - படைத்த
தொட்டிலில் ஆட் டினவள்
மூன்றர சர் கதைகள் - சொல்லி
மூள்வலி யூட் டினள்தாய்

என்றன் வய துநிலை - பருவம்
ஏற்பவை தான் உணர்ந்தே
நன்றறி வுக்கதைகள் - நகை
நாட்டும் பிற கதைகள்
ஒன்றிய வீ ரமுடன் - காதல்
ஊட்டுஞ் சுவைக் கதைகள்
மின்றளிர் மேனியினாள் - சொல்லி
மேன்மை யுறப் பணித்தாள்.

மேவுக தொண் டுளமே - என்பாள்
மேகலைக் கா தையினால்
பாவுக நீ தியென்பாள் - எங்கள்
பாண்டியன் கா தையினால்
கோவுயர் குட் டுவனால் - வீரங்
கொட்டி முழக் கிடுவாள்
பாவில் நகைச் சுவையாத் - தருவள்
பாண்டவர் காதையினால்.

வாழ வழி வகுத்த - திரு
வள்ளுவன் ரா மலிங்கம்
ஆழ நெடும் புலமைக் - கம்பன்
அவ்வை யுட னிளங்கோ
சோழரில் பாண் டியரில் - கவி
சொன்னவர் சீத் தலையான்
தோழர்கள் என் றிவர்போல் - பலரைத்
தொல்புகழ்த் தாய் கொடுத்தாள்.

தன்கடன் ஆற் றிவிட்டாள் - தமிழ்த்
தாயெனைக் காத் தமையால்
தன்கடன் போற்றுதற்கே - கவிஞன்
தந்தனன் வேற் படையே
நன்னடை நல் கினரோ - இந்த
நாட்டினை ஆள் பவரே
என்கடன் ஆற் றிடுவேன் - பகையை
எற்றி முருக் கிடுவேன்.

[காவியப் பாவை]