முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/1. சிறந்த பத்து

விக்கிமூலம் இலிருந்து


முதுமொழிக் காஞ்சி


1. சிறந்த பத்து


1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
   ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை.

2. காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.

3. மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை.

4. வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை.

5. இளமையின் சிறந்தன்று மெய்பிணி இன்மை.

6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.

7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.

9. செற்றாரைச் செறுத்தலின் தன் செய்கை சிறந்தன்று.

10. முன்பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.

1. சிறந்த பத்துக் கருத்துகள்
  1. கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம், கல்வியைக் காட்டிலும் நல்லொழுக்கம் உடைமை சிறந்ததாகும்.
  2. ஒருவரிடம், அன்பைக் காட்டிலும், தமது உயரிய பண்பைக் கண்டு மதிக்கும் முறையில் அவர் அஞ்சி ஒழுகும்படி நடந்து கொள்ளுதல் சிறந்தது.
  3. கல்வியில் பெரிய மேதையாய் வல்லமை பெற்று இருப்பதைக் காட்டிலும், கற்ற வரைக்கும், மறவாமல் அதன்படி ஒழுகுதல் சிறந்தது.
  4. வளமான செல்வம் உடைமையை விட, உண்மையான (முறை தவறாத) வாழ்வு உடைமை சிறந்தது.
  5. நோயோடு கூடிய இளமையை விட, நோயின்றி ஒரளவு முதுமை இருப்பினும், அது நல்லது.
  6. எல்லாச் செல்வ நலன்களைக் காட்டிலும், நாணமும் மானமும் உடைய வாழ்க்கை சிறந்தது.
  7. உயர் குலத்தோர் என்னும் பெருமையினும், கற்பு-கல்வி உடையவர் என்னும் பெருமை சிறந்தது.
  8. ஒருவர் தாம் கற்பது போதாது; கற்றவர்களைப் போற்றி வழிபடுதல் சிறந்தது.
  9. பகைவரை ஒறுத்தலைவிட (தண்டித்தலை விட), அவரினும் தம்மை உயர்ந்தவராக்கிக் காட்டுதல் சிறந்தது.
  10. முன்னால் ஆரவாரமாக வாழ்ந்து வளம் குன்றிப் போவதினும், பின்னால் நிலைமை குறையாமல், நிறையுடன் வாழ்தல் சிறந்தது.