மெய்யறம் (மெய்யியல்)

விக்கிமூலம் இலிருந்து

121. மெய் யுண்மை[தொகு]

  • 1201. உயர்கரி சுருதி யுத்தி யநுபவம்.
  • சுருதி(வேதம்-sacred book), உத்தி(ஆராய்ச்சி-deliberation), அநுபவம்(experience) ஆகியவை உயர்ந்த சாட்சிகள் ஆகும்.
  • 1202. தூயர் பகருரை சுருதி யென்ப.
  • புனிதமானவர்கள் கூறிய உரைகள் சுருதி எனப்படும்.
  • 1203. பலமதத் தூயரும் பகர்ந்துள ருண்மை.
  • பல மதத்தைச் சேர்ந்த பெரியோரும் கூறியுள்ள உண்மை.
  • 1204. ஏது சிலகொண் டோதுவ துத்தி.
  • காரணங்கள் சிலவற்றைக் கொண்டு விளக்குவது உத்தி ஆகும்.
  • 1205. ஆத னிலவ லழித லிவணுள;
  • இவ்வுலகத்தில் உருவாதல், இருத்தல், அழிதல் ஆகியன உள்ளன.
  • 1206. அவைசெயக் கர்த்தா வவசிய மென்க.
  • அவற்றைச் செய்தற்குக் கடவுள் அவசியம்.
  • 1207. அறிந்துள் ளுணர்தலை யநுபவ மென்ப.
  • அநுபவம் என்பது இதனை அறிந்து உணர்வது ஆகும்.
  • 1208. இடருறும் போழ்துமெய் யெண்ணுகின் றனர்பலர்;
  • துன்பப்படும் போது மட்டும் பலர் கடவுளை எண்ணுகின்றனர்.
  • 1209. பாவஞ் செயவுளம் பதைப்ப தநுபவம்;
  • கடவுளை உணர்ந்தால் மனம் பாவம் செய்யப் பயப்படும்.
  • 1210. அரசரு மாளப் படுவ தறிகிறோம்.
  • அரசரும் கட்டுப்படுத்தப்படுவதைக் காண்கிறோம்.

122. மெய்யின் அடக்கநிலை[தொகு]

  • 1211. அடக்க நிலைமெய் யடங்கிய வறிவு.
  • அடக்கநிலை கடவுள் புலப்படாத நிலையில் உள்ள அறிவு ஆகும்.
  • 1212. அண்டப் பொருளெலா மணுக்களின் சேர்க்கை.
  • அண்டப் பொருள்கள் எல்லாம் அணுக்களின் சேர்க்கை.
  • 1213. வலியிலா தணுக்கண் மருவிநிற் கும்மோ?
  • வலிமை இல்லாமல் அணுக்கள் சேர்ந்து இருக்குமா?
  • 1214. அண்டஞ் சுற்றலு மதுகொண் டன்றோ?
  • அண்டம் சுற்றுவதும் அந்த வலிமையினால் தானே?
  • 1215. ஆதலா லெங்கணு மஃதமைந் துளதே.
  • ஆதலால் அவ்வலிமை எல்லா இடத்திலும் பரவி உள்ளது.
  • 1216. அகில நிகழுமா றாள்வ தறிவு.
  • உலகம் இயங்குமாறு செய்வது அறிவு ஆகும்.
  • 1217. அன்றே லொழுங்கா வவைகண நிகழுமோ?
  • இல்லையெனில் அவை ஒவ்வொரு கணமும் ஒழுங்காக நிகழ முடியுமா?
  • 1218. ஆதலா லெங்கணு மறிவமைந் துளதே.
  • ஆதலால் அவ்வறிவு எல்லா இடத்திலும் அமைந்து உள்ளது.
  • 1219. நிறைபொரு ளிரண்டு நிலவா வென்ப.
  • இரண்டு பொருள் எல்லா இடத்தையும் நிறைத்தல் இயலாது.
  • 1220. ஆதலால் வலியு மறிவு மொரேபொருள்.
  • ஆதலால் வலிமையும் அறிவும் ஒரே பொருள் ஆகும்.

123. மெய்யின் விளக்கநிலை[தொகு]

  • 1221. விளக்க நிலைமெய் விளங்கு மறிவு.
  • விளக்க நிலை கடவுளைப் புரிந்து கொண்ட நிலையில் உள்ள அறிவு ஆகும்.
  • 1222. அடக்கமெய் விறகு ளடங்கிய தீப்போன்ம்.
  • விறகில் அடங்கிய தீ போன்றது அடக்கநிலை ஆகும்.
  • 1223. விளக்கமெய் கடைய விறகெழுந் தீப்போன்ம்.
  • விறகைக் கடைந்த உடன் வெளிப்படும் தீ போன்றது விளக்கநிலை ஆகும்.
  • 1224. ஐயறி வுயிர்களின் மெய்யொளி யடங்கும்.
  • விலங்குகளில் மெய்யொளி அடங்கி இருக்கும்.
  • 1225. ஆறறி வினரு ளவ்வொளி விளங்கும்.
  • மனிதர்களில் மெய்யொளி விளங்கி இருக்கும்.
  • 1226. அவர்மறஞ் செயச்செய வதனொளி குன்றும்.
  • அவர்கள் குற்றம் செய்யச் செய்ய மெய்யொளி குறையும்.
  • 1227. அவரறஞ் செயச்செய வதனொளி பெருகும்.
  • அவர்கள் அறச்செயல்கள் செய்யச் செய்ய மெய்யொளி அதிகரிக்கும்.
  • 1228. அவரொழுக் கறிந்தபோழ் தஃதக விளக்காம்.
  • அவர் ஒழுக்கத்தைப் பற்றி அறிந்திருப்பது (அவர் உள்ளத்தில் ஏற்றப்பட்ட விளக்காக)அவருக்கு மட்டும் வழிகாட்டும்.
  • 1229. அவரொழுக் கடைந்தபோழ் ததுமலை விளக்காம்.
  • அவர் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும்போது அது (மலையில் ஏற்றப்பட்ட விளக்காக)உலகத்துக்கே வழிகாட்டும்.
  • 1230. ஒழுக்கில்வாய் ஞானமஃ தொழிக்குங் காற்றாம்.
  • ஒழுக்கம் இல்லாத ஞானம் அந்த விளக்கை அணைக்கும் காற்றாகும்.

124. மெய் யுணர்தல்[தொகு]

  • 1231. ஒழுக்க முடையா ருணர்வர் மெய்யை.
  • ஒழுக்கம் உடையவர்கள் கடவுளை உணர்வார்கள்.
  • 1232. அறநூ லெண்ணில வறைந்துள வொழுக்கம்.
  • எண்ணற்ற அற நூல்கள் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறியுள்ளன.
  • 1233. அவற்றைவிட் டயலுற றவற்றைப் புரிதலாம்.
  • அந்த நூல்களைப் படிக்காமல் மற்றவற்றைப் படிப்பது தவறு செய்வது ஆகும்.
  • 1234. அடிவிட் டேணியி னந்தமே றுவரோ?
  • ஏணியின் முதல் படியில் ஏறாமல் கடைசிப் படியில் ஏற இயலுமா?
  • 1235. அறநூல் கற்றுநின் றான்மநூ லாய்க.
  • அறநூல்களைக் கற்ற பிறகு ஆன்மநூல்களை ஆராய வேண்டும்.
  • 1236. ஓருட லளவி லுறுமறி வான்மா.
  • ஓர் உடலில் தங்கியிருக்கும் அறிவு ஆன்மா ஆகும்.
  • 1237. அணையுள குளநீர்க் கான்மா விணையாம்.
  • எல்லா இடத்திலும் தங்கியிருக்கும் அறிவு கடவுள் ஆகும்.
  • (அணையைக் கடவுளுக்கும் அணைக்குள் உள்ள குளத்தை ஆன்மாவுக்கும் ஒப்பிடலாம்.)
  • 1238. ஆன்மா மெய்யொன் றாணவம் வேற்றுமை.
  • ஆன்மாவும் கடவுளும் ஒன்றுதான். ஆணவம் ஆன்மாவை இறைவனை அடையவிடாமல் தடுக்கும் மும்மலங்களில் ஒன்று.
  • 1239. அறஞ்சே ரொழுக்கா லாணவங் களைக.
  • அறத்தின் பாற்பட்ட ஒழுக்கத்தினால் ஆணவத்தை நீக்க வேண்டும்.
  • 1240. உண்மை மெய்யான்மா வுலகுமெய்த் தோற்றம்.
  • உண்மை கடவுளின் ஆன்மா. உலகம் கடவுளின் தோற்றம்.

125. மெய்ந்நிலை யடைதல்[தொகு]

  • 1241. உயிரியல் விடமெய் யியலுறு முடனே.
  • உயிரின் மீதுள்ள பற்றை விட்டால் கடவுள் தன்மை உடனே ஏற்படும்.
  • 1242. விடலே வீடது மெய்யறஞ் செயினாம்.
  • மெய்யறம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும்.
  • 1243. மெய்யற மாந்தர் மிகைவிட வுதவல்;
  • மெய்யறம் என்பது மனிதர்கள் குற்றத்தைவிட உதவுவது;
  • 1244. ஒழுக்க வுயிர்மெய் யுணர்ந்திட வுதவல்;
  • ஒழுக்கம் என்பது உயிர்கள் கடவுளை உணர்ந்திட உதவுதல்;
  • 1245. உலகி லுயிர்க ணிலவுற வுதவல்.
  • உலகில் உயிர்கள் வாழ்வதற்கு உதவுதல் வேண்டும்.
  • 1246. இவ்வற மரசர்க் கியற்றுத லெளிது.
  • இந்த அறம் செய்வது அரசருக்கு எளிதான செயல் ஆகும்.
  • 1247. அறிவ ரரச ராகுத லரிதோ?
  • அறிவுடைய அரசர் ஆகுதல் சிரமமான செயலா?
  • 1248. அரசரை யாள்வ தமைச்சறி வன்றோ?
  • அரசரை வழிநடத்துவது அமைச்சரின் அறிவு அல்லவா?
  • 1249. அறிந்தில் வாழ்ந்துல காண்டறஞ் செய்க.
  • இறைவனை அறிந்து இல்வாழ்க்கை நடத்தி எல்லா இன்பங்களும் அநுபவித்து அறம் செய்தல் வேண்டும்.
  • 1250. அருள்கொடு மெய்யற மாற்றிமெய் யடைக.
  • அன்புடன் அறச் செயல்கள் செய்து இறைவனை அடைதல் வேண்டும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=மெய்யறம்_(மெய்யியல்)&oldid=19814" இலிருந்து மீள்விக்கப்பட்டது