மேனகா 1/008-022

விக்கிமூலம் இலிருந்து

4-வது அதிகாரம்

மனதிற்குகந்த மன்மதன்

ராகசாமிக்கு வயது இருபத்திரண்டாயிற்று. அவன் நடுத்தரமான உயரமும், சிவந்த மேனியும், வசீகரமான வதனமும் பெற்றவன். அவன் தன் சிரசில் அரையணா வட்டத்திற் குடுமி வைத்திருந்தமையால், உரோமத்திற்குப் பதில் ஒரு எலியின் வாலே சிரசிலிருந்தது. அவனது தேகத்தில் சுறுசுறுப்பொன்றே காணப்பட்டதேயன்றி தசைப் பிடிப்பதென்பதே காணப்படவில்லை. அவன் மிக்க கூர்மையான புத்தியைப் பெற்றிருந்தும், அது ஏட்டுச்சுரக்காயேயன்றி, அவனுக்கு உலகத்தின் அநுபவம் சிறிதும் கிடையாது. அவன் குழந்தைப் பருவத்திலேயே தனது தந்தையை இழந்து, விதவையான தன் தாயினாலேயே வளர்க்கப்பட்டு வந்தான். போதாக்குறைக்கு இரண்டு சகோதரிமார்களும் விதவை நிலை அடைந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஒரு கைம் பெண்டாட்டியால் வளர்க்கப்பட்டால் மனிதன் கழுதையாக மாறிவிடுவா னென்றால், மூன்று புண்ணியவதிகளும் தம்முடைய விவேகத்தைச் செலுத்தி ஆளாக்கிய வராக சாமியைப் பற்றி அதிகம் கூற வேண்டுவதுண்டோ? அவனுக்கு அவர்கள் எந்த விஷயத்திலும் சுயபுத்தியே இல்லாமற் செய்துவிட்டனர். அவன் நடந்தாற் கால் தேய்ந்து போகும்; அவன் தண்ணிரில் நனைந்தால் உப்பு மூட்டையாகிய அவன் தேகம் கரைந்து போகும்; அவன் வீட்டைவிட்டு வெளியிற் சென்றால் அவனை பூதம் விழுங்கிவிடும் என்று நினைத்து அவன் எந்தக் காரியம் செய்தாலும் அதனால் அவனுக்குப் பெருத்த துன்பமுண்டாகும் என்று அவனை வெருட்டி வந்தனர்.

ஒரு ஊரில் பெருத்த தனிகன் ஒருவன் இருந்தான். அவன் சங்கீதத்தில் மகா நிபுணன். தோடி ராகம் என்றால் தூக்கு என்ன விலை என்பான். பல்லவி என்றால் படி எத்தனை பைசா என்பான். அவன் வீட்டில் ஒரு கலியாணம் நேர்ந்தது. அதற்காக அன்றிரவு ஊர்வலம் வர நினைத்து, அதற்கு மேளக்காரனை ஏற்பாடு செய்து அவனுக்கு நூறு ரூபாய் முன் பணம் கொடுத்தனுப்பினான். அம்மேளக்காரன் அன்று பகலில் வேறொரு ஊர்வலத்தில் மேளம் வாசித்துக்கொண்டு வந்தான். அதைக் கண்ட நமது தனிகனுக்கு அடக்கமுடியாத கோபம் பிறந்தது. மேளக்காரனை வரவழைத்து “நாயே!” என்றும், “கழுதே!” என்றும் வைதுவிட்டு சீறி விழுந்தான். தன்னிடம் பெற்ற முன் பணத்தை கீழே வைத்து அப்பாற் போகும்படி உத்தரவு செய்தான். மேளக்காரன் உண்மையை அறிய மாட்டாமல் நடுநடுங்கித் திருடனைப்போல் விழித்துத் தான் எவ்விதப் பிழையும் செய்யவில்லை என்றான். அதைக் கேட்ட தனிகன், “அடே மேளக்கார போக்கிரிப் பயலே! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? இப்போது வந்த ஊர்வலத்தில் நீ மேளம் வாசிக்கவில்லையா? முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கவா பார்க்கிறாய்?” என்றான்.

மேளக்காரன் :- ஆம்; நான் மேளம் வாசித்தது உண்மை தான். அது எப்படி குற்றமாகும்? - என்றான்.

தனிகன் :- ஆகா இன்னமும் என்னை முட்டாளென்று மதிக்கிறாய்? இப்போது குழாயிலுள்ள பாட்டுக்களை யெல்லாம் ஊதிவிட்டு இரவில் வெறுங் குழாயோடு வந்து இருளில் எங்களை ஏமாற்றவா பார்த்தாய்? நானா ஏமாறுகிறவன் பணத்தைக் கீழே வையடா முட்டாப் பயலே. என்றான். மேளக்காரன் பொங்கி யெழுந்த தனது சிரிப்பை மிகவும் பாடுபட்டு அடக்கிக் கொண்டான். அத்தகைய மூட சிகாமணியிடத்தில் மேளம் வாசிக்காமல் இருப்பதே மேன்மை யென நினைத்து, தான் வாங்கிய முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போனானாம்.

அதைப்போல வராகசாமி அதிகமாய்ப் பேசிவிட்டால், அவனுடைய தொண்டையிலுள்ள சொற்கள் செலவழிந்து போவதனால் தொண்டை காலியாய்போய் விடுமோவென அஞ்சியவரைப் போல் விதவைகள் அவனை மெளனகுரு சாமியாக்கி வைத்திருந்தனர். அதனால் அவனுக்கு பிறருடன் பேசும் திறமையும், வாக்குவாதம் புரியும் வன்மையும் இல்லாமற் போயிற்று.

அவனுக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் விதவையரே கவனித்து வந்தார்கள். ஆதலின், அவனுக்கு எதைக் குறித்த கவலையும் நினைவும் இல்லாமற் போயின. அவன் கடைக்குப் போய் ஒரு நெருப்புப் பெட்டியும் வாங்கியறியான். எப்போதாயினும் விலக்கக்கூடா வகையில் அவன் கடைக்குப் போக நேர்ந்தால், புளி வராகனிடை என்ன விலை யென்றும், ஜவ்வாது விசை என்ன விலை யென்றும் கேட்பான். இம்மாதிரி வளர்க்கப்பட்டு வந்தமையால், அவன் படிப்ப தொன்றிலேயே தன்முழு நினைவையும் வைத்து வந்தான். அதனால் அவனுக்குப் பெருத்த நன்மையும் பல தீமைகளும் உண்டாயின. அவன் எந்தப் புஸ்தகத்தையேனும் ஒருதரம் படிப்பானாயின், கிராமபோ (Gramaphone)னைப் போலப் புஸ்தகத்திலுள்ள விஷயங்கள் யாவும் அப்படியே அவன் மனதிற் பதிந்துபோம். முதலிலிருந்து முடிவு வரையில் மனப் பாடமாய்ப் பக்கங்களின் இலக்கம், பத்திகள், வாக்கியங்கள், முற்றுப் புள்ளிகள், மைப் புள்ளிகள் முதலியவற்றையும் மறவாமல் ஒப்புவிப்பான். அவன் ஒவ்வொரு பரிட்சையிலும் சென்னை இராஜதானிக்கே முதற் பையனாகத் தேறி வந்தவன். எம்.ஏ., பி.ஏ., பி.எல்., முதலிய எல்லாப் பரீட்சைகளிலும் அவ்வாறே முதன்மை யடைந்தான். வெளிப்டையான அந்தச் சிறப்பைக் கண்டு மகிழ்ந்தே நம் சாம்பசிவையங்கார் அவனுக்கு மேனகாவை மணம் புரிவித்தார்.

ஆனால் மாப்பிள்ளை (மணப்பிள்ளை)யின் உண்மைத் திறமை அவனை வீட்டிற் பார்த்தவருக்கே நன்கு விளங்கும். “அடே வராகசாமி! இடுப்புத்துணி அவிழ்ந்து போய் விட்டதடா!” என்று பெருந்தேவியம்மாள் சொன்னாலன்றி, அவனுக்கு தன் இடையிலிருந்த துணி நெடுந்துரம் பிரயாணம் சென்றது தெரியாது. “சாப்பிட்டு நிரம்ப நாழிகை யாயிற்று, உனக்குப் பசிக்கும், எழுந்துவா!” என்பாள் அன்னை. அவனுக்கு உடனே பசி வந்துவிடும்! எழுந்து உணவருந்தப் போவான். அதற்குள் பெருந்தேவியம்மாள், “ அடே பகலில் நீ அதிகமாய் சாப்பிட்டதினால்.இப்போது கூடப் புளித்த ஏப்பம் வந்ததே; திரும்பவும் இப்போது சாப்பிட்டால் அஜீரணம் அதிகமாய் விடும் பேசாமற் படுத்துக்கொள்!” என்பாள். உடனே அவனுக்கு பசியடங்கிப்போம். அஜீரணமும் இருப்பதாய்த் தோன்றும், உடனே படுக்கைக்குப் போய் விடுவான்.

நாட் செல்லச் செல்ல அவன் படிப்பதிலேயே தன் புத்தியைச் செலுத்திச் செலுத்திப் பழக்கம் அடைந்தான் ஆகையால், அவனுடைய நினைவு அவனிருந்த இடத்திலேயே இருந்ததில்லை. அவனுடைய தேக சம்பந்தமான காரியங்கள் யாவும் இயந்திரத்தின் இயக்கத்தைப் போலப் பிறருடைய முயற்சியினால் தாமாய் நிறைவேறி வந்தன. அவன் வீட்டைவிட்டு வெளியில் சென்றால், அவன் மனது ரோமபுரியை ஆண்ட சீசரின் சரித்திரத்திற் சென்றிருக்கும். மனதில் நடக்கும் நாடகத்திற் கிசையக் கைவிரல்கள் அபிநயங்கள் காட்டிக் கொண்டும் யாதாயினும் எழுத்துக்களை எழுதிக்கொண்டும் இருக்கும். உதடுகள் சொற்களால் அசைந்தவண்ணம் இருக்கும். அவன் வெளிப் பார்வைக்கு உன் மத்தனைப்போல காணப்படுவான். அதனால் அவனுக்குப் பல துன்பங்கள் அடிக்கடி நேர்ந்து வந்தன. மோட்டார் வண்டிகளிலும், டிராம் வண்டிகளிலும் தினந்தினம் அவன் உயிர் தப்பி மறு ஜெனனம் எடுத்து வந்தான். வண்டி யோட்டுவோர் மணியை யடித்துக் குழாயால் ஊதி எவ்வளவோ கூச்சலிடுவார்கள். அவன் முழுச் செவிடனைப்போல போய்க்கொண்டிருப்பான். அவர்கள் வண்டிகளை நிறுத்திவிட்டு அவனை வாயில் வந்தவிதம் திட்டுவார்கள். அண்டையிற் செல்லும் மனிதர் அவனுடைய உடம்பைப் பிடித்து இழுத்து விடுவார்கள். அவன் ஒருநாள் இரவு 7 1/2 மணிக்குக் கடற்கரையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்தான். தன் வீட்டின் வாயிலில் வந்தவன் அதற்குள் நுழையாமல், மறதியாக மேலும் நெடுந்துரம் தெருவோடு போய் அங்கு தன் வீட்டை போலத் தோன்றிய வேறொரு வீட்டிற்குள் நுழைந்தான். காலையலம்பிக் கொண்டு உள்ளே நுழைவது அவனுடைய வழக்கம் ஆகையால், எதிரில் வைக்கப்பட்டிருந்த செம்பைக் கையில் எடுத்தான். கூடத்திலிருந்த அவ்வீட்டுப் பெண்டீர் அவனைக் கள்வனென மதித்துக் “கூ கூ திருடன் திருடன்!” எனக் கூவி ஆரவாரம் செய்தனர். அண்டை வீட்டாரும் தெருவிற் சென்றோரும் தடிகளோடு உள்ளே நுழைந்து செம்பைத் திருடிய கள்வனைப் பிடித்துக் கொண்டனர். வராகசாமி அப்போதே தான் செய்த தவறை உணர்ந்து, உண்மையைக் கூறினான். அதை எவரும் நம்பாமல் அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போயினர். ஐயங்கார், ஆடு திருடின கள்ளனைப்போலத் திருட்டு விழி விழித்து செய்யவேண்டுவ தறியாமல் தவித்து நின்றார். அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் சீதாராமநாயுடு அவனுடன் படித்தவ ராதலால் அவனைக் கண்டவுடன், “அடே வராகசாமி! என்னடா இது? எங்கடா வந்தாய்?” என்றார். ஐயங்கார் உண்மையைச் சொன்னார். அவர் விழுந்து விழுந்து சிரித்து ஜனங்களை அதட்டி யனுப்பி விட்டுத் தன் நண்பனது மானத்தைக் காப்பாற்றி அவனை வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னொருநாள் கச்சேரிக்குப் புறப்படும் அவசரத்தில், சட்டையைப் போட மறந்து தலைப்பாகையை மாத்திரம் அணிந்து கொண்டு வீட்டை விட்டு நெடுந்துரம் போய்விட்டார். தெருவிலிருந்தோர் யாவரும் அந்த அவதாரத்தைக் கண்டு வியப்புற்றுக் கைகொட்டி நகைத்தனர். கோமளம் ஓடிவந்து உடம்பில் சட்டையில்லை யென்பதை நினைப்பூட்டினாள்.

அவன் உணவருந்த இலையில் உட்கார்ந்து, சாதம் பரிமாறப்படு முன் பரிஷேசனம் (நீர் சுற்றுதல்) செய்தல் மாதம் முப்பது நாட்களிலும் நடைபெறும்.

மேனகா வீட்டிற்கு வந்த சில மாதங்களில் அவனுடைய தாய் இறந்தாள். அவளுக்குப் பதிலாக அடுத்த வீட்டு சாமாவையர் மூன்றாம் விதவையின் பட்டத்திற்கு வந்து சேர்ந்தார். வராகசாமி தன் யெளவன மனைவி யிடத்தில் அதிக விருப்பம் வைத்துவிட்டால் தம்முடைய அதிகாரம் குறைந்து போகுமென நினைத்த பெருந்தேவி முதலியோர் அவன் அவள்மீது வெறுப்பையும் பகைமையும் கொள்ளும்படி செய்து வந்தனர். அவன் இயற்கையில் இரக்கம், தயாளம், அன்பு, நல்லொழுக்கம் முதலிய குணங்களைக் கொண்டவன். பிறருக்கு தீங்கு நினைப்பவனன்று. பிறர் காலில் முள் தைத்தால் அதைக் காணச் சகியாதவன். என்றாலும், அவன் சகோதரிமாரின் சொற்களுக்கு அதிகமதிப்பு வைத்திருந்தமையால், மேனகா விஷயத்தில் மாத்திரம் மிக்க கொடியவனாய் நடந்து வந்தான். அவர்கள் அடிக்கடி அவள்மீது கோள்சொல்லி அவனுக்குத்தூபம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவன் தலை, கால் பாராமல் அவளை அடித்து விடுவான். இரண்டு மூன்று முறை கையிலும் பிறவிடங்களிலும் சூடு போட்டுவிட்டான். தன்னுடைய கலியானம் சாந்தி முகூர்த்தம் முதலியவற்றில் அவளுடைய தந்தை தனக்குத் தக்க மரியாதைகளும், சீரும் செய்யவில்லை யென்று சகோதரிமார் அவனிடம் அடிக்கடி உபதேசித்து வந்தனர். மேனகா குணத்தழகும், கல்வியழகும், மேனியழகும், நடத்தையழகும், வேலைத்திறமையும், புத்தி நுட்பமும் பெற்ற மாதர் திலகமாயிருந்தாள் ஆயினும், அவள் எவ்விதக் குற்றங் கூறுதற்கும் வழியின்றி ஒழுகி வந்தாள் ஆயினும், எவராலும் கோயிலில் வைத்து தெய்வமென வணங்கத்தகுந்த உத்தமியாயிருந்து வந்தாள் ஆயினும், அவர்கள் அவள் மீது பொய்க் குற்றங்களை நிர்மாணம் செய்து சுமத்தி ஒவ்வொரு நாளும் அடிவாங்கி வைப்பார்கள், அவனும் அவளும் ஐந்து நிமிஷமேனும் தனிமையிற் பேச விடமாட்டார்கள். அந்த மனைவியே தனக்குத் தேவையில்லை யென்று அவன் அவளை வெறுக்கும்படி செய்துவிட்டனர். அவளுடைய தந்தையின் மீதும் பகைமையை உண்டாக்கி வைத்தனர்.

பெருந்தேவி யம்மாள் அதுவரையிற் சேர்த்த பணத்தை யெல்லாம் 300 - பவுன்களாக மாற்றி அதை ஒரு சிறிய மூட்டையாகக் கட்டி, அம் மூட்டையைத் தன் இடையில் புடவைக்குள் வைத்துச்சுமந்து வந்தாள். அத்துடனே நீராட்டம், போஜனம், நித்திரை முதலிய யாவும் நடைபெற்றன. அந்த இரகசியத்தை எவரும் அறியவில்லை. சாமாவையருடைய கூரிய நாசி அதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. அவள் வீணிற் சுமந்திருந்த அந்தப் பளுவைத் தான் ஏற்றுக் கொண்டு அவளுக்கு உதவிபுரிய வேண்டும் என்பதே சாமாவையரின் அந்தரங்க நினைவு. அதற்காகவே அவர் அவர்களுடன் நட்புக்கொண்டு அன்னியோன்னியமாய்ப் பழகி வந்தார். அவள் ஊதியதற்குத் தகுந்தவாறு அவர் மத்தளந் தட்டி வந்தார்.

அவர் விதவைகளோடு தனிமையில் இருக்கையில், பெருந்தேவி சொல்வதே சரியென்பார். வராகசாமியோடு இருக்கையில் அவன் சொல்வதே சரியென்பார். இருவரும் இருக்கையில், “இதுவும் சரி அதுவும் சரி; வராகசாமி மகா புத்திசாலி; அவன் வக்கீல்; மற்ற எந்தக் கோர்ட்டுத் தீர்மானத்தின் மேலும் அவன் அப்பீல் செய்யலாம். அக்காள் தீர்மானத்திற்கு அப்பீல் கிடையாது” என்று கோமுட்டி சாட்சியாக நயமாகச் சொல்லிவிடுவார்.

மேனகா தன் தகப்பன் வீட்டிற்குப் போய் ஒரு வருஷகாலமாயினும், வராகசாமி தனக்கொரு மனைவி இருந்தாள் என்பதை நினைத்தானோ இல்லையோ கடவுளுக்கே தெரியும். ஆனால் மந்திரிமார் மூவரும் அவனுக்கு பெண்ணை மணம் புரிவிக்க வேண்டுமென்று பன்முறை கூறிய காலத்தில் அவன் அதைப்பற்றி எவ்வித ஆக்ஷேபனையும் சொல்லவில்லை. இவ்வாறு அவன் அவர்களால் சூத்திரப் பாவையைப்போல ஆட்டப்பட்டு வந்தான்.

சாமா வையரும், விதவை மாரும் முன்னொரு அதிகாரத்தில் தமக்குள் பேசித் தீர்மானம் செய்துகொண்ட பிறகு அவர்கள் அவனுடைய மனதை மெல்ல மாற்றி, மேனகாவின் மீது அவன் விருப்பம்கொள்ளும்படி சொற்களைக் கூறி வந்தனர்.

அவன் கச்சேரிக்குப் போகாமல் வீட்டிலிருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை பெருந்தேவியம்மாள் அவன் மனதிற்குப் பிடித்த சிற்றுண்டிகள் முதலியவற்றைச் செய்து அவனை உண்பித்தாள். அவன் தாம்பூலந்தரித்து ஊஞ்சற்பலகையில் உட்கார்ந்திருந்தான். அடுத்த வீட்டு சாமாவையரும் தமது இயற்கை யலங்காரத்தோடு வந்து ஊஞ்சற் பலகையை அழகுபடுத்தினார். யாவரும் உல்லாசமாக ஊர் வம்புகளைப் பேசிய வண்ணம் இருந்தனர். அப்போது சாமாவையர் பெருந்தேவியம்மாளை எதிர்த்து வாதம் செய்பவரைப் போல் நடித்து, “பெருந்தேவி! உனக்குக் கோபம் வந்தால் வரட்டும்; நீ இதனால் என்னோடு பேசாவிட்டாலும் பரவாயில்லை. நீ எங்கேதான் தேடிக் கலியாணம் செய்தாலும் மேனகாவைப் போன்ற நல்ல குணவதி உனக்குக் கிடைப்பது கடினம். இக்கரைக்கு அக்கரை பச்சை யென்று நீங்கள் நினைக்கிறீர்கள். மற்ற வீடுகளில் நாட்டுப் பெண்கள் இருக்கும் ஒழுங்கைப் பார்த்தால் இவளை நாம் கோயிலில் வைத்தே பூஜை செய்யவேண்டும். அற்பங்களெல்லாம் தலைகால் தெரியாமல் துள்ளி விழுந்து போகின்றன. அவருடைய தகப்பனார் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறாரே என்கிற அகம்பாவம் சிறிதாயினும் உண்டா? அவள் காரியம் செய்யும் திறமையும், அவளுடைய பணிவும், அடங்கிய சொல்லும், நாணமும் யாருக்கு வரும்?” என்றார்.

எதிர்பாரா அம்மொழிகளைக் கேட்ட வராகசாமியினது மனம் ஒருவாறு கலக்கம் அடைந்து, அதற்கு இன்னவிதம் பதில் சொல்வதென்பதை அறியாமல் அவன் பேசாமலிருந்தான். சாமாவையரின் சொல் அவனது மனதில் ஒருவித ஆத்திரத்தை உண்டாக்கியது. ஆனாலும், விஷயம் உண்மையாகவே தோன்றியது. அப்போது பெருந்தேவி, “அது நிஜந்தான் என்னவோ அவளுடைய அப்பன் லோபித்தனம் செய்கிறான் என்கிற ஒரு வெறுப்பைத் தவிர வேறென்ன இருக்கிறது? அவள் பேரில் நமக்கென்ன வர்மம்? அவள் தங்கமான பெண், அவளுடைய பொறுமைக் குணம் ஒன்று போதுமே! பாவம் நாம் அயலார் பெண்ணின்மேல் வீண்பழி சுமத்தினால் பொய் சொன்ன வாய்க்கு போஜன மற்றுப்போம்” என்றாள்.

சாமா:- அவளுடைய தகப்பனார் நம்முடைய விஷயத்தில் என்ன லோபித்தனம் செய்தார்? அவருடைய குடும்பக் கவலைகள் ஆயிரமிருக்கும். தமது சொந்தக்காரியத்தில் அவர் செட்டுக்காரரா யிருக்கலாம். அத்ற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம்முடைய காரியங்களை யெல்லாம் அவர் சொன்னபடி ஒரு குறைவுமின்றிச் செய்துவிட்டார் அல்லவா? நமக்கு வேறென்ன வேண்டும்?

கோம:- தங்கந்தானென்ன பொல்லாதவளா? அவள் நம்மிடத்தில் எவ்வளவு அந்தரங்க வாஞ்சையோடும் கபடமில்லாமலும் பேசுவாள்? அவள் முகத்தில் கோபமும் வாயிற் கொடுமையான சொல்லும் தோன்றியதை நான் அறியேன்.

சாமா:- பாட்டி கனகம்மாளுக்கு அப்புறந்தான் மற்றவர்கள். அவளுடைய பிரியத்துக்கு மற்றவர்களுடையது உறை போடக் காணாது; வராகசாமி! வராகசாமி! என்று இவனைக் கீழே விடமாட்டாளே! அப்பேர்ப்பட்ட அருமையான மனிதர்களிடம் நமக்கு மனஸ்தாபம் உண்டானது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னவோ நம்முடைய வேளைப் பிசகினால் இப்படி நடந்து விட்டதே யொழிய யார் பேரிலும் குற்றமில்லை - என்றார்.

அம்மூவரும் கூறிய சொற்களைக் கேட்ட வராகசாமியின் மனதில் தன் மனைவி முதலியோர் மீது உண்டாயிருந்த வெறுப்பு முற்றிலும் ஒரு நொடியில் அகன்றது. அவன் புரிந்த கொடுமைகளைக் குறித்து ஒரு வித கழிவிரக்கம் தோன்றி அவனை வருத்த ஆரம்பித்தன.

அவனுடைய முகக்குறியை உணர்ந்த பெருந்தேவி அதுவே சமயமென நினைத்து, “ஆகா! மேனகாவின் கடிதத்தைப் பார்த்தது முதல் என் மனம் படும்பாட்டை எப்படி வெளியிடுவேன் சொல்லின் அழகும், கருத்தின் உருக்கமும் என்னைப் பிடித்து உலுக்கி விட்டன. கடைசியில் அவள் உயிரை விட்டுவிடப் போகிறேன் என்றல்லவா எழுதியிருக்கிறாள்! அடே சாமா! அந்தக் கடிதத்தை எங்கே வைத்தீர்கள்? அதை இன்னொரு தரம் படிக்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது” என்றாள்.

சாமா:- அடி கோமாளீ! நீதானே அதை வராகசாமிக்குக் காட்டிவிட்டு பெட்டியில் வைத்துப் பூட்டினாய். அதை எடு - என்றான்.

அவள் உடனே கடிதத்தை எடுத்து வந்து அடியில் வருவாறு படித்தாள்.

“பிராண நாதர் திருவடித் தாமரைகளில் அடியாள் மேனகா தெண்டன் சமர்ப்பித்து எழுதிய விக்ஞாபனம்:-

இவ்விடத்தில் மற்றவர் யாவரும் க்ஷேமம். அவ்விடத்தில் தேவரீருடைய திருமேனியின் க்ஷேம லாபத்தைப் பற்றியும், அக்காள் தங்கை முதலியோரின் க்ஷேமத்தைப் பற்றியும் ஸ்ரீமுகம் தயை செய்தனுப்பப் பிரார்த்திக்கிறேன். தேவரீரை விடுத்துப் பிரிந்திருக்கும் துர்பாக்கியத்தை நான் அடைந்த இந்த ஒருவருஷ காலமாக என் மனம் பட்ட பாட்டைத் தெரிவிப்பதற்கு இந்தச் சிறிய கடிதம் எப்படி இடந்தரப் போகிறது! எத்தனையோ நாட்களுக்கு முன்னமேயே கடிதம் எழுதி அனுப்ப என் மனம் என்னைத் தூண்டியது. கையும் துடித்தது. தேவரீருக்கு என்மீதிருந்த வெறுப்பும், கோபமும் தணியா திருக்கும்போது, மகா பாவியாகிய என்னுடைய எழுத்து கண்ணில் பட்டால் கோபமும் வெறுப்பும் அதிகரிக்குமோ வென்றும், கடிதத்தைப் பிரித்துப் பாராமலே எரித்து விடுவீர்களோ வென்றும் அஞ்சி என் ஆசையை அடக்கிப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். கடைசியில், தேவரீருடைய மனசோடு ஒன்று பட்டுப் பேச அவாக் கொண்டு துடிக்கும் என் மனசை இனி ஒரு நொடியும் தடுக்க வல்லமை அற்றவளாய், இதையனுப்பத் துணிந்தேன். க்ஷமிக்க வேண்டும்.

நான் அங்கிருந்த போது ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாழிகையும், இரவிலும், பகலிலும், துயிலிலும், விழிப்பிலும் தேவரீருடைய திருவுள்ளத்திற்கு சந்தோஷ கரமாகவும், இன்ப மூட்டும் விதமாகவும் நடந்து கொள்வதையே பாடமாகப் படித்து, அதையே என்னுடைய ஒயாக் கவலையாகக் கொண்டு, அவ்விஷயத்திலேயே என்னுடைய முழு மனதையும், தேகத்தையும், நான் அர்ப்பணம் செய்து வந்தும், என்னுடைய பொல்லாத வேளையின் பயனாக நான் உங்களுடைய வெறுப்பைப் பெற்றேன். நான் யாதொரு தவறையும் செய்யவில்லை யென்று சொல்லவில்லை. பேதமை என்பது மாதர்க்கணிகலன் அல்லவா? நான் எவ்வளவு தான் ஒழுங்காய் நடக்க முயன்றாலும், என்னையும் மீறி யாதாயினும் பிழை நேருதல் கூடும். என்னுடைய உயிருக்குயிராகிய தேவரீர் என் விஷயத்தில் க்ஷமையும், தயையும் காட்டாவிட்டால் எனக்கு வேறு யார் கதியிருக்கிறார்கள்? காரிகையாருக்குக் கணவன் சன்னிதானமே புகலிடம். அடிப்பதும் உங்கள் கை; அணைப்பதும் உங்கள் கை, பெற்றோர் எவ்வளவுதான் பாடுபட்டு தேக போஷணைக்குக் குறையின்றி என்னைப் பாதுகாக்கினும், அவர்களால் என் மன நோய்க்கு மருந்து செய்தல் கூடுமோ! அதற்குரிய வைத்தியர் தாங்களன்றோ? என் ஆத்ம ரக்ஷகர் தேவரீரேயாகும். பட்டினியாக வருந்தித் தவிக்கும் என் மனசுக்கும் ஆன்மாவுக்கும் போஷணை செய்ய அவர்களால் எழுமோ? அதற்குரிய வள்ளல் தேவரீரே யென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இவ்வொரு வருஷமாய் தேவரீர் என்னை அகல விலக்கியபோதிலும், என் மனசை விட்டு அரை நொடியும் தேவரீர் அகல நான் விடவில்லை. ஆனால், இதனால் என் உணர்வு, துயில் முதலியவை மாத்திரம் விலகி விட்டன. என்னுடைய உயிர் கொஞ்சங் கொஞ்சமாய் முக்காற் பாகம் போய்விட்டது. இன்னம் சொற்ப பாகம் விண்ணிற்கும் மண்ணிற்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்கவோ, அல்லது நிற்க வைக்கவோ வல்லமை பெற்ற ஒரு தனிப்பிரபு இவ்வுலகில் தேவரீர் ஒருவரே, அக் காரியம் ஈசுவரனாலும் ஆகாது.

என்னைத் தேவரீர் எவ்வளவுதான் அடித்தாலும், வைதாலும் அது அப்போது என் தேகத்துக்குத் துன்பமாய்த் தோன்றினாலும் அடுத்த க்ஷணமே தேவரீரைப் பற்றிய நினைவு என்னை வருத்தி வந்தது. என் கையிலுள்ள சூட்டுத் தழும்புகளைக் காணும்போதெல்லாம் என் மனம் வருந்தித் தவிக்கிறது. சூட்டைப் பெற்றதற்காக வன்று, என்னை உங்களுடைய உரிமைப் பொருளாக மதித்து முத்திரை போட்ட தேவரீர் இப்போது என்னை உரிமை யற்றவளாக்கி விலக்கியதே என் மனசைக் கலக்குகிறது. நிமிஷத்திற்கு ஒரு சூட்டைப் பெற்றாலும், தேவரீருடைய சன்னிதானமே எனக்கு இன்பமாய்த் தோன்று மன்றி, வேறிடம் சுக முடைய தாமோ? பன்னிரண்டு மாதங்களாய் வானைக்காணாப் பயிரைப் போல வாடி வதங்கிக் கிடக்கும் இந்த அற்பப் பிராணியைக் கைதுக்கிவிடுவீர்களென்று ஒவ்வொரு நிமிஷமும் எதிர் பார்த்தேன். இன்னமும் என் பொல்லாத வேளை அகல வில்லை. தேவரீரை விடுத்துப் பிரிந்து இவ்வாறிருந்து இந்தச் சரீரம் இனி என்ன பயனை அடைப்போகிறது? இன்னம் சில நாட்களில் நான் இவ்வுடம்பைத் துறந்துவிடுவேன் என்பது நிச்சயம். அதற்குள் ஒரு தரமாவது தேவரீருடைய திருமேனியைக் கண்டு தரிசித்தாலன்றி என் கட்டை கடைத்தேறாது; என் மனமும் வேகாது.

கொண்டவரால் வெறுத்து விலக்கப்படும் பெண்டிருக்குக் குளங்களும், கிணறுகளுமே பேருபகாரிகளாயிருந்து கைகொடுத்து உதவுதல் வழக்கம். இவ்வூரில் சாமந்தான்குளம், ஐயன்குளம் என்று இரு குளங்களும் இதற்காகவே இருந்து உதவி புரிந்து வருகின்றன. எத்தனையோ தடவைகளில் அவைகளை நோக்கி நான் நடந்தேன். என் உயிரையும் மனசையும் கொள்ளை கொண்ட தேவரீருடைய முகாரவிந்தத்தை ஒரு தரமாவது காணாமல் போக என் மனம் சகிக்க வில்லை; என் செய்வேன்! இனி வேறு எவ்விதம் எழுதுவேன்? அபயம் அபயம் காத்தருளல் வேண்டும். அடியாள் மேனகா.”

என்று கோமளம் மிக்க உருக்கமாகவும், கேட்போர் மனது இளகுமாறும் படித்தாள். அக்கடிதத்தின் கருத்தை அப்போதே ஊன்றிக் கேட்டறிந்த வராகசாமியினது கண்களும், மனமும் கலங்கின. அது கனகம்மாளின் தூண்டலினால் எழுதப் பட்டதாகவும், முழுதும் பகட்டென்றும் நினைத்து அவன் அதை அதுவரையில் நன்றாய்ப் படிக்கவில்லை. அப்போதே அதில் எழுதப்பட்டிருந்த ஒவ்வொரு மொழியும், அந்தரங்க அவாவினால் மனப்பூர்வமாக எழுதப்பெற்றதாக அவனது செவிகளில் கணிர் கணிரென்று ஒலித்தது, அவனது சிரத்தின் ஒவ்வொர் உரோமத்தையும் பிடித்து உலுக்கியது. முன்பே கனிந்திருந்த அவனுடைய மனது எளிதிற் கலங்கி முற்றிலும் நைந்து அவனது முகத்தை விகாரப்படுத்தியது. கண்களினின்று கண்ணீர்த் துளிகள் வெளிப்பட்டன. அங்கவஸ்திரத்தால் அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். நல்ல பரிசுத்தமான மனதையும், அன்பையும், கல்வியறிவினையும் பெற்ற பெண்மணியான தனது பேதை மனையாட்டியைத் தான் குடிகாரனைப்போல அடித்ததும், வைததும், சுட்டதும் நினைவுக்கு வந்தன. அவன் தன்னைத் தானே வெறுத்து வைதுகொண்டான். அவனது அப்போதைய மன நிலையைக்கண்ட அவ்வஞ்சகர், அதுவே சரியான பாகுபத மென்று நினைத்தனர்.

பெருந்தேவி, “என்னவோ போனது போகட்டும்; இப்போது அவர் இன்னொரு இரண்டாயிரம் ரூபாயும், நகைகளை மீட்க ரூ.800ம் தருவதாயும், நாம் கடிதம் எழுதினால் அவளை அழைத்து வந்து விடுவதாயும், சாமாவுக்கு எழுதியிருக்கிறார். ஏனடா வராகசாமி! அழைத்துக்கொண்டு வரும்படி எழுதுவோமா? பாவம்! நல்ல வயசுக் காலத்தில் பெண் அங்கே இருந்து பாலியத்தை ஏன் வீணாக்கவேண்டும்? குளத்தில் கிணற்றில் விழுந்து செத்து வைத்தாளானால், பாவமும், பழியும் நமக்கு வந்து சேரும். என்னவோ கோபம் பாபம் சண்டாளம், அப்பா! நீ கோபத்தை மனசில் வைக்காதே!” என்றாள்.

சாமா:- வராகசாமிக்குத்தான் அவள் மேல் அவ்வளவு கோபமென்ன? இவன் மனசு தங்கமான களங்கமற்ற மனசு. பிறர் காலில் முள் தைக்க இவன் சகிக்க மாட்டானே! மேனகாவை நிரந்தரமாய் விட்டுவிட இவனுக்குத் தான் மனம் வருமா ? என்னவோ இவனுடைய மாமனார்தான் புத்தியில்லாமல் பெண்ணை அழைத்துக் கொண்டு போனார். எத்தனை நாளைக்குப் பெண்ணைத் தகப்பன் வீட்டில் வைத்துக் கொள்ள முடியும்? - என்றார்.

உடனே வராகசாமி விம்மி விம்மி அழுதவனாய்த் தனது மன வெழுச்சியை அடக்கிக்கொண்டு, “உங்களுக்கு எது சம்மதமோ, அது எனக்கும் சம்மதந்தான், சாமாவே பதில் எழுதட்டும்” என்றான்.

சாமா:- இல்லையப்பா! அவர் உன்னுடைய கையால் பதிலை எதிர்பார்க்கிறார். ஏனென்றால், பின்பு ஒருகால் நீ சண்டை போடுவாயோ என்கிற அச்சம் போலிருக்கிறது. இது பெரிய காரியம். அன்னியனாகிய நான் எழுதினால் அவருக்கு வருத்தம் உண்டாகும். நீயே ஒரு வரி எழுதிவிடு.

பெரு:- வராகசாமி! உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை; கடைசியில் அவர் யார்? உன்னுடைய மாமனார்தானே? மாமனார் தகப்பனாருக்குச் சமானம். இதனால் உனக்கு ஒரு குறையும் வந்து விடாது. நீயே ஒரு வரி எழுதிவிடு.

வராக:- என்னவென்று எழுதுகிறது?

சாமா:- வேறே ஒன்றும் அதிகமாக எழுதவேண்டாம். “விஷயங்கள் ஏதோ கால வித்தியாசத்தால் இப்படி நேர்ந்துவிட்டன. இரு திறத்தாரும் ஒருவர்மேல் ஒருவர் வருத்தம் என்பதையே வைக்காமல் யாவற்றையும் மறந்து விடுவோம். தேவரீர் சாமாவையருக்கு எழுதியது என் மனசுக்கு சம்மதமாயிருக்கிறது. எப்போது தேவரீருக்கு செளகரியமோ அப்போது செளபாக்கியவதி மேனகாவை அழைத்துவந்து விட்டுப் போகலாம். இனி நம்மிரு குடும்பத்தாரும் பாலுந்தேனும் போல இருப்போம் என்பது என்னுடைய மனப்பூர்வமான நம்பிக்கை” என்று எழுது, வேறொன்றும் வேண்டாம்- என்றார்.

வராகசாமி முதலில் சிறிது நாணித் தயங்கினான். தன் மாமனாரிடம் தான் தாறுமாறாய்ப் பேசிய சொற்கள் நினைவிற்கு வந்தன. எனினும், மேனகாவின் கபடமற்ற குளிர்ந்த வதனம் அவனுடைய மனக்கண்ணில் தோன்றி அவனிடம் மன்றாடியது. அவன் உடனே கடிதம் எழுத, அதை சாமாவையர் எடுத்துப் போய் தபாற் பெட்டியில் போட்டு வந்தார்.

மறுநாள் தஞ்சையிலிருந்து தந்தி யொன்று வந்து சேர்ந்தது. வராகசாமி பதைத்து அதைப் பிரித்துப் பார்த்தான். டிப்டி கலெக்டரும் மேனகாவும் அன்றிரவே புறப்பட்டு மறுநாள் சென்னைக்கு வருவதாக அதில் எழுதப்பட்டிருந்தது.


❊ ❊ ❊ ❊ ❊

"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/008-022&oldid=1252320" இலிருந்து மீள்விக்கப்பட்டது