மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/13. விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள்

விக்கிமூலம் இலிருந்து
13. விளையாட்டுகள் - தொழில்கள் - கலைகள்

பலவகை விளையாட்டுகள்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த விளையாட்டுப் பொருள்களில் கோலிகளே மிக்குள்ளன. எனவே, அந்நகரச் சிறார் கோலி விளையாட்டில் பெரு விருப்பம் கொண்டிருந்தனர் என்பது தேற்றம் களிமண் பந்துகள் பல மாதிரிக்காகச் செய்யப்பட்டுள்ளன. அவற்றால், சிறார் பந்து விளையாட்டிலும் பண்பட்டிருந்தனர் என்பது வெளியாகிறது. பெரியவர்கள் சதுரங்கம் சொக்கட்டான் முதலிய ஆட்டங்களை ஆடிவந்தனர். பாய்ச்சிகள் இக்காலத்தன போலவே புள்ளியிடப்பட்டுள்ளன. சதுரங்கம் ஆடுதற்குரிய காய்கள் மண்ணாலும் உறுதியான கற்களாலும் அழகுறச் செய்யப்பட்டுள்ளன. அவை பல நிறங்களைப் பெற்றுள்ளன. அவற்றை வைத்து ஆடுதற்குரிய சதுரங்கப்பலகைகள் மரத்தால் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்; நாளடைவில் அவை அழிந்து போயிருத்தல் வேண்டும்! அப்பல்கைகளில் சதுரச் சிப்பிகள் பதித்துக் கட்டங்கள் பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இச்சதுரச் சிப்பிகள் பல இந்நகர ஆராய்ச்சியிற் கிடைத்துள்ளன. இங்ஙனம் சதுரங்க விளையாட்டிற்குரிய சாதனங்கள் பல ‘உர்’ நகரத்திலும் கிடைத்துள்ளன. மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த ஒரு செங்கல் மீது நீள் சதுரக் கட்டங்கள் நான்கு ஒரே வரிசையில் இருப்பன போல மூன்று வரிசைகள் காணப்படுகின்றன. அக்கல் மற்றொரு வகைச் சதுரங்கப்பலகையாகப் பயன்பட்டிருக்கலாம். அதன் மீதுள்ள கட்டங்களுள் ஒன்று குறுக்குக் கோடுகளுடன் (இப்பொழுது காணப்படும் ‘மலை’ போலக்) காணப்படுகிறது. பிறிதொரு கல்மீது தாய விளையாட்டுக்கு உரிய கோடுகள் காணப்படுகின்றன. இத்தகைய விளையாட்டுகள் பல உர், எகிப்து ஆகிய இடங்களிலும் பழக்கத்தில் இருந்தன.

வேட்டையாடல்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த முத்திரைகள் சிலவற்றில் உள்ள அடையாங்களாலும் அங்குக் கிடைத்த மான் கொம்புகளாலும் வேட்டை நாய்ப் பதுமைகளாலும் அம் மாநகரத்தார் வேட்டையில் விருப்பங் கொண்டனர் என்பதை அறியலாம். ஒரு முத்திரையில், ஒரு மரக்கிளையில் இரண்டு மலையாடுகளின் தலைகள் தொங்கவிடப்பட்டிருத்தலைக் காணலாம். மலையாடுகள் கீர்தர்மலைத் தொடரில் மிக்கிருந் தனவாதல் வேண்டும். வேறொரு முத்திரையில், ஒருவன் கையில் வில்லும் அம்பும் கொண்டு நிற்பது போலவும், அவன் அருகே நாயொன்று இரு விலங்கின் வாலைப் பற்றி இழுப்பது போலவும் சித்திரம் செதுக்கப்பட்டுள்ளது. சில முத்திரைகளில் மனிதர் மானையும் மலையாட்டையும் வேட்டையாடுவது போலவும் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வேட்டைக்கு உரிய செம்பு வெண்கல அம்பு முனைகள் அகப்பட்டுள்ளன. பறவைகளை வேட்டை ஆடுவோர் களிமண் உருண்டைகளைக் கவணில் வைத்து எறிந்தமைக்குரிய சான்றுகளும் காணப்படுகின்றன.

கோழி கெளதாரிச் சண்டைகள்

ஒரு முத்திரையில், இரண்டு காட்டுக் கோழிகள் சண்டை இடுதல் போலப் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், இக்காலத்தில் நடைபெற்று வரும் மாட்டுச்சண்டை கோழிச் சண்டை முதலியன அக்காலத்தில் நடைபெற்றிருக்கலாம் என்று கருதுதல் தகும். கெளதாரிகளை வளர்ப்பவருடைய வீடுகளில் இருந்தனவாகச் சில கணிமண் கூண்டுகள் கிடைத்தன. வேறொரு மண்கூண்டில் கெளதாரி நுழைவது காட்டப்பட்டுள்ளது. ‘இன்று மொஹெஞ்சொ-தரோவைக் காண வரும் சிலர், தாம் வளர்க்கும் கெளதாரிகளைக் கூண்டுகளில் வைத்துக்கொண்டு வருகின்றனர். திருஷ்டி தோஷாதிகள் தாக்கா திருப்பதற்காக என்றே அக்கூண்டுகள் நீலநிற மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சொந்தக்காரர் அவற்றை அழைப்பதும், அவை அவர்கட்கு மறு குரல் கொடுப்பதும் மொஹெஞ்சொ-தரோவில் இருந்த பழைய கவுதாரி வளர்ப்பை நினைப் பூட்டுகின்றன.[1]

கொத்துவேலை

சிந்து வெளியில் வாழ்ந்த கொத்தர்கள் தம் தொழிலிற் பண்பட்ட புலமை உடையவர் ஆவர். அவர்கள் உலர்ந்த செங்கற்களையும் சுட்ட செங்கற்களையும் அடுக்கி, ஒழுங்கான சுவர்களையும் வீடுகளையும் மாளிகைகளையும் பொது இடங்களையும் கோட்டைகளையும் அப்பண்டைக் காலத்திலேயே பண்பட அமைக்கக் கற்றிருந்தனர் என்பது வியப்பூட்டுஞ் செய்தியே ஆகும். அவர்கள் ஒரு மாளிகையில் 2700 செ.மீ. கூடம் அமைத்து, அதன் மேல் அடுக்கைத் தாங்க 20 துண்களை நன் முறையில் நிறுத்தியுள்ளனர்; வீட்டுத் தரையை வழவழப்பாக்கி, அதில் வட்டக் கோடுகளும் சதுரக் கோடுகளும் வகையுற இழுத்துள்ளனர்; மழையில் நனையத்தக்க வீட்டுப்புறச் சுவர்களைச் சுட்ட செங்கற்களாலும் உட்புறச்சுவர்களை உலர்ந்த செங்கற்களாலும் கட்டியுள்ளனர். இஃதொன்றே அவர்கள் அறிவையும் அனுபவத்தையும் நன்கு விளக்க வல்லது; கிணற்றின் உட்புறத்திற்கென்றே தனிப்பட்ட கற்கள் செய்துள்ளமை வியத்தற்கு உரியது. சுவர்களுக்குள்ளும் கழிநீர்க் குழிகளை அமைத்து வீடு கட்டும் ஆற்றல் பெற்ற அப்பெருமக்களை எவ்வாறு புகழ வல்லேம்! வீடு - கிணறு - குளம் பற்றிய பகுதியில் பல வியத்தகு உண்மைகள் கூறப்பட்டமையால், இங்கு, அவற்றை மீட்டும் கூறல் கூறியது கூறலா’கும். சுருங்கக் கூறின், 5000 ஆண்டு கட்கு முன் இருந்த சிந்து வெளிக் கொத்தர்கள், தம் தொழில் முறையை அறிவு கொண்டு செய்து வந்தனர்: தொழிலை வயிற்றுக்காகச்செய்யவில்லை; கலைக்காகச் செய்து வந்தனர் என்னலாம். இவ்வுண்மையை அவர்கள் கட்டியுள்ள நீராடும் குளத்தின் நல்லமைப்பைக் கொண்டும் ஹரப்பாவில் கட்டியுள்ள மிகப்பெரிய களஞ்சிய வேலைப்பாட்டைக் கொண்டும் நன்கறியலாம். இதனை மேலும் விரித்தல் வேண்டா.

மட்பாண்டத் தொழில்

சிந்துவெளி நாகரிகத்தில் சிறப்பிடம் பெறத்தக்கவை மட்பாண்டங்களே ஆகும். ஆகவே, அவற்றைச் செய்த வேட்கோவர் திறமையே திறமை! அவர்தம் பெருமையே பெருமை! அவர்களே அவ்வெளியில் முதல் இடம்பெற்றிருந்தனர் என்னல் மிகையாகாது. வியப்பூட்டும் விதவிதவிதமான விளையாட்டுப் பொருள்கள், நுண்ணிய வேலைப்பாடு கொண்ட மிகச் சிறிய பொருள்கள், எலும்புகளையும் சாம்பலையும் பிறவற்றையும் புதைத்து அடக்கம் செய்வதற்கு அமைந்த தாழிகள்,[2] பலவகை ஒவியங்கள் தீட்டப்பெற்ற பாண்டங்கள், கழிநீர்க் குழைகள், ஒலி பெருக்கிக் குழைகள், பொருத்தமான அளவுகள் அமைந்த பலவகைச் செங்கற்கள், வீட்டு வேலைகட்கு உரிய பல்வகைப் பொருள்கள் இன்ன பிறவும் வேண்டியோர் வேண்டியவாறு செய்து தந்த வேட்கோவர் பேராற்றலை என்னென்பது!

மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த வேட்கோவரை விட ஹரப்பா வேட்கோவர் பின்னும் உயர்ந்தவராக இருத்தல் கூடுமோ என்று அறிஞர் ஐயுறுகின்றனர். அங்கு ஒர் இடத்தில் 16 காளவாய்கள் கண்டறியப்பட்டன. அவை அளவிற் சிறியவை: ஆனால், விரைவில் சூடேறத்தக்க முறையில் அமைக்கப்பட்டவை: களிமண் செப்புகள், பதுமைகள், மணிகள் நகைகள் ஆகிய வற்றைச் சூளையிடவும், கல் வளையல்கள், பட்டுக்கல்களிமண் முத்திரைகள் ஆகியவற்றைச் சுட்டு மெருகிட்வும், சிவப்பு மணிகளைச் செய்யவும் பயன்பட்டவை. வேண்டிய அளவு வெப்பத்தையும் குளிர்ச்சியையும் ஊட்டி, விதவிதமான நிறங்களை ஏற்றுதற்கு வசதியாக இருந்தவை. மொஹெஞ்சொ-தரோவில் ஒவியங்கள் தீட்டப் பெறாத மட்பாண்டங்களின் வேலைப்பாடு கண்கவர் வனப்புடையது. 1 செ. மீ. உயரத்தில் அழகிய பதுமைகள் செய்யக் கற்றிருந்த அவ்வேட்கோவர் திறமையை பண்பட்ட கலையறிவை இன்று எண்ணி எண்ணி வியவாத அறிஞர் இல்லை!

கல்தச்சர் தொழில்

சிந்து வெளியிற் கற் சட்டிகள், நீர் பருகும் பச்சைக் கல் ஏனங்கள், அம்மிகள், குழவிகள், உரல்கள், எந்திரங்கள், ஆட்டுக்கற்கள், தூண்களைத் தாங்கும் குழியமைந்த கற்கள், சிற்றுருக்கள், லிங்கங்கள், யோனிகள், முத்திரைகள் இன்ன பிறவும் செய்யப்பட் டுள்ளன. இவற்றைக் கொண்டு, சிந்து வெளியில் கல் தச்சர்கள் இருந்தனர் என்பதும் கல் வேலை நடைபெற்றது என்பதும் நன்கறியலாம். ஹரப்பாவில் அளவற்ற லிங்கங்கள் பல வடிவினவாகக் கிடைத்துள்ளன. மனித உருக்கள் (சிலைகள்) செய்யப்பட்டடுள்ளன. அவ்வேலைப்பாடு வியக்கத் தக்கதாக உள்ளதென்று அறிஞர்கள் கூறி வியந்துள்ளனர்.

மரத்தச்சர் தொழில்

மரப்பொருள்கள் விரைவில் அழியும் இயல்பின. ஆதலின், சிந்து வெளியில் இன்று கிடைத்தில எனினும், அங்கு மரத்தால் இயன்ற கட்டில்கள், நாற்காலிகள், மேசைகள், முக்காலிகள், பீடங்கள், மனைகள், கதவுகள், பெட்டிகள், தூண்கள், பலவகைக் கருவிகளின் கைப்பிடிகள், விளையாட்டுக் கருவிகள் முதலியன இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குரிய சான்றுகள் இருக்கின்றன. எருதின் கால்களைப் போலச் செய்யப்பட்ட கால்களைக் கொண்டமரத்தால் ஆன முக்காலிப்பீடங்களும் எருமைக் கால்கள் வைத்த சாய் மனைகளும் இருந்தன என்பதை முத்திரைகளைக் கொண்டு அறியலாம். அம்மரத்தச்சர்கள் காட்டிய பழக்கத்திலிருந்தே, சிங்கக் காலிகளைக் கொண்ட பீடங்கள் பிற்காலத்தில் தோற்றமெடுத்தன போலும்!

கன்னார வேலை

செம்பு, வெண்கலக்கருவிகளும் பிறபொருள்களும் நிரம்பக் கிடைத்தமை கொண்டு, சிந்து வெளியில் கன்னார வேலையும் சிறப்பாக நடைபெற்றமை அறியலாம். இக்கால அறிஞர்கள் பெரு வியப்புக்கொள்ளும்படி உருக்கி வார்க்கப்பட்ட சிறந்த வேலைப்படாமைந்த வெண்கல (நடனமாதின்) உருவச்சிலை ஒன்றே அக்கன்னாரப் பெருமக்களின் கைத்தொழிற் சிறப்பை உணர்த்தப் போதுமானது! மெல்லிய தகடுகளாக அமைந்துள்ள ஈட்டிகளும், சிறிய அழகிய கூர்மையான பற்களைக் கொண்ட இரம்பங்களும், கோடரிகளும், அரிவாள் மணைகளும். இடை வாள்களும், நீண்ட வாள்களும், அம்புகளும் பிறவும் அவர் தம் தொழிற் புலமையைத் தெற்றெனத் தெரிவிப்பனவாகும். மிகப் பலவாக-வகைவகையாகக் கிடைத்த மழித்தற் கத்திகள், மழித்தல் தகடுகள் ஆகியவற்றைக் காணும் இக்கால ஆராய்ச்சி அறிஞர், அக்காலக் கன்னாரது திறமையை எண்ணிப் பெருவியப்புக் கொள்கின்றனர் எனின், அவர்தம் பண்பட்ட தொழில் முறையை என்னெனப் புகழ்வது!

அரண்மனையுள் காளவாய்கள்

மொஹெஞ்சொ-தரோவில் அரண்மனை என்று கருதப்பட்ட பெரிய கட்டிடத்தின் திறந்தவெளியில் சிறியவடிவில் சில காளவாய்கள் அகப்பட்டன. அவை அரசாங்கத்தாருடைய படைக்கலங்களைச் செய்யவும், பழுது பார்க்கவும் பயன்பட்ட காளவாய்களாக இருக்கலாம். அவை வட்டமாக அமைந்தவை. - இத்தகைய காளவாய்கள் ‘கிஷ்’ நகரத்து அரண்மனையுள் கண்டெடுக்கப்பட்டன. அவை நீள் சதுரமாக அமைந்தவை. அவற்றின் காலம் கி.மு.2800 ஆகும்.[3]

பொற்கொல்லர் தொழில்

சிந்து வெளியிற் கிடைத்துள்ள பொன்னாற் செய்யப்பட்ட அணிகளில் அமைந்துள்ள வேலைப்பாடு சிறப்புடையதாகும். காப்புகள், வளையல்கள், அட்டிகைகள், கழுத்து மாலைகள், அம் மாலைகளில் கோக்கப்பட்ட பலவகைப் பொன்மணிகள், பூ வேலைப்பாடு அமைந்த மணிகள், பல உருவங்கொண்டமணிகள், நுண்ணிய வேலைப்பாடமைந்த தலைச் சாமான்கள், சுட்டிகள், காதணிகள், கடகங்கள், மோதிரங்களும், இன்னபிறவும் அக்காலப் பொற்கொல்லர் வேலைப்பாட்டை விளக்குவன ஆகும். இவ்வணிகளில் இழைப்பு வேலைப்பாடு சிறந்து காணப்படுகிறது. மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்தவற்றைவிட ஹரப்பாவிலேயே பொன் அணிகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன.

இரத்தினக்கல் சோதனை

அணிகள் செய்தற்கமைந்த பல வகை இரத்தினக் கற்களையும், வேறு பல நிறக் கற்களையும் சோதிப்பதற்கென்றே பலர் இருந்திருத்தல் வேண்டும். என்னை? ‘நவரத்தினங்கள்’ என்று சொல்லப்படும் மணிகள் அனைத்தும் சிந்துவெளி மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன: பண்பட்ட வேலைப்பாடு கொண்டுள்ளன; நீலகிரி முதலிய நெடுந் தொலைவில் உள்ள இடங்களிலிருந்தும் கற்கள் கொண்டு செல்லப்பட்டன என்னும் விவரங்களால் என்க.

செதுக்கு வேலை

சிந்து வெளியில் இதுவரை 1000க்கு மேற்பட்ட பலவகை முத்திரைகள் கிடைத்துள்ளன. முத்திரையின் ஒரு புறம் ஏதேனும் ஒர் உருவமும் சித்திர எழுத்துகளும் மறுபுறம் வேறு குறியீடுகள் பலவும் காணப்படுகின்றன. இவை செய்யப்பட்டு 5000 ஆண்டு கட்கு மேலாகியும், இன்றும் புத்தம் புதியனவாகக் காட்சியளிக்கின்றன எனின், இவற்றைச் செய்தவர் தொழிற் புலமையை என்னென்பது? செம்பு நாணயங்கள் மீதும் முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன[4]; எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இம்முத்திரைகளில் காணப்படும் குறிப்புகளைக்கொண்டே அப்பண்டை மக்கள் மொழியையும் எழுத்துக்களையும், சமயச் செய்திகளையும், ஓவியம், சிற்பம், செதுக்கு வேலை இன்ன பிறவற்றையும் அறிய இடம் ஏற்பட்டுள்ளது எனின், இவற்றைத் தயாரித்த பேரறிஞர் நம் போற்றுதற்குரியரே யாவர் அல்லரோ? பல முத்திரைகள் வெண்கல் கொண்டு செய்து சூளையிடப்பட்டு மெருகிடப்பட்டவை. இவை 1 செ. மீ. முதல் 6 செ. மீ. வரை சதுரமாக உள்ளன. சில 2 செ. மீ. முதல் 3 செ.மீ. வரை சதுரமாக இருக்கின்றன. சித்திரங்கள் மட்டுமே கொண்டவை சில; சித்திரங்களோடு எழுத்துக் குறிகள் கொண்டவை பல. இவை அனைத்தும் இரம்பம் கொண்டு ஒழுங்காக அறுக்கப்பட்டவை; சிற்றுளியாலோ - கத்தியாலோ ஒழுங்குபெறச் செதுக்கப்பட்டவை; பின்னரே மெருகிடப்பட்டவை. இவை இவ்வாறு தயாரிக்கப் பட்ட பிறகே, இவற்றின்மீது உருவங்களும் எழுத்துக்களும் செதுக்கப்பட்டுள்ளன. பின்னர் இவை, ஏதோ ஒருவ்கைப் பொருள் மேலே பூசப்பட்டுச் சுடப்பட்டிருக்கின்றன.அப்பண்டைக்காலத்தில் இத்துணை முறைகளும் ஒரு முத்திரை செய்யக் கையாளப்பட்டன எனின், முத்திரைத் தொழில் ஈடுபட்டிருந்த மாந்தர் தம் தொழில் அறிவையும் கலையுணர்வையும் என்னென்பது!

சங்குத் தொழில்

அக்காலத்தவர் சங்கைக்கொண்டு பலவகை நகைகளையும், நகைகளிற்பதிக்கும் சிறு பதக்கங்களையும் பிற பொருள்களையும் செய்துகொண்டனர் சங்கை அறுத்து, அரம் செதுக்கும் கருவி முதலியவற்றைக்கொண்டு பல்சக்கரம், சதுரத்துண்டு, முக்கோணத் துண்டு. இருதயம் போன்ற வடிவங்கள் முதலியவற்றைச் செய்தனர்; இவற்றைப் பொன், வெள்ளி, செம்பு இவற்றால் ஆன நகைகளிற் பதித்து வந்தனர். இவ்வாறு செய்யப்பட்டு வந்த வேலை வியப்பூட்டுவதேயாகும்.

மீன் பிடித்தல்

மொஹெஞ்சொ-தரோ நகரம் சிந்து யாற்றின் கரை மீதே இருந்த நகரமாதலாலும், ஹரப்பா ராவியாற்றின் அண்மையில் இருந்ததாதலாலும், அவ்வெளிகளில் வாழ்ந்த மக்கள் மீன் பிடிக்குந் தொழிலையும் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர் என்பது தவறாகாது.அங்கு மீன் பிடிக்கப் பயன்பட்டசெம்பு-வெண்கலத் தூண்டில்கள் பல கிடைத்துள்ளன. மீன் பிடிக்கும் வலைகளின் ஒரங்களிற் கட்டப்பட்ட மண் உருண்டைகளும் கிடைத்துள்ளன. ‘மொஹெஞ்சொ-தரோ மக்கள் மீன் உணவைப் பெரிதும் பயன் படுத்தினர் என்று கூறலாம்’ என்று மக்கே போன்ற ஆராய்ச்சியாளர் கூறுவதிலிருந்து, மீன் பிடிக்குந் தொழில் அக்காலத்தில் சிறப்புடையதாகக் கருதப்பட்டு வந்தது என்பது வெளியாம்.[5]

வண்டி ஒட்டுதல் .

சிந்து வெளியில் பெரும்பாலும் மாட்டு வண்டிகளே மிக்கிருந்தன. அவற்றை ஒட்டுவதற்கென்றே வண்டிக்காரர் பலர் இருந்தனர். ‘சாட்டை’ இருந்தது. வண்டி கூண்டு உடையது. இக்குறிப்புகளை உணர்த்தும் விளையாட்டு மண் வண்டி ஒன்று ஹரப்பாவில் கிடைத்தது. ஹரப்பாவில் கிடைத்த விளையாட்டு வண்டி செம்பாற்செய்யப்பட்டது. வண்டி ஒட்டியின் முகம் வட்டமானது: மூக்குத் தட்டையாகவும் ஒரளவு உயர்ந்தும் இருக்கிறது; கூந்தல் சிவிப் பின்புறம் முடியிடப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்து வண்டிகளே உலகிற் பழைமையானவை என்னலாம். சிந்து வெளி நாகரிக காலத்திற்குப் பல நூற்றாண்டுகட்குப் பின்னரே எகிப்தில் வண்டிகள் தோன்றலாயின. டாக்டர் மக்கே சான்ஹு-தரோவில் இரண்டு மண் வண்டிகளைக் கண்டெடுத்தார். ஒன்று நன்னிலையில் இருந்தது; மற்றது சக்கரங்கள் இல்லாமல் இருந்தது.

ஹரப்பாவிற் கிடைத்த வண்டிகள் (1) இன்றைய வட இந்திய வண்டிகளைப் போலுள்ள சதுர வண்டிகள், (2) மோட்டார் லாரியைப் போன்ற சாமான் ஏற்றிச் செல்லும் வண்டிகள், (3) இக் காலத்துச் சாரட்டு வண்டியைப் போல எதிரெதிர் ஆசனங்களைக் கொண்ட வண்டிகள், (4) படகு போன்ற வண்டிகள் என நால் வகைப்படும். இவையன்றி இரண்டு உருளைகளைக் கொண்ட இரதங்கள் என்பனவும் இருந்தன. இவை மரத்தால் செய்யப் பட்டனவாதல் வேண்டும். இத்தகைய விளையாட்டு வண்டிகள் இன்னும் பஞ்சாப்பில் ஹொஷியர்ப் பூர் என்னும் இடத்திற் செய்யப்படுகின்றன.[6]

நாவிதத் தொழில்

கணக்கற்ற சுவரக் கத்திகள் கிடைத்துள்ளமையால் சிந்து வெளி மக்கள் க்ஷவரத்தில் மிக்க அக்கறைகொண்டு இருந்தனர் என்பதும், அத்தொழிலாளர் பலர் இருந்தனராதல் வேண்டும் என்பதும் கூறாமலே விளங்கும் செய்திகளாம்.

தோட்டி வேலை

‘நகர சுகாதாரத்தைக் கவனித்த பெருமை, அப்பண்டைக்கால நாகரிக நகரங்கள் அனைத்தையும் விட மொஹெஞ்சொ - தரோவுக்கே உரியதாகும்’ என்று ஸர் ஜான் மார்ஷல் கூறுதலால், அந்நகராண்மைக் கழகத்தினர் னர் தோட்டிகளை வைத்திருந்தனர் என்பதை நன்கு உணரலாம்.

காவல் தொழில்

பெரிய மாளிகைகளின் முன்புற அறைகளும் தெருக் கோடிகளில் இருந்த அறைகளும் காவற்காரர்க்கு உரியவை என்பது முன்னர்க் கூறப்பட்ட தன்றோ? மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா என்னும் பெரிய நகரங்கள் வாணிபப் பெருக்குடையன - ஆதலின், அவற்றைக்காக்க வேண்டிய பொறுப்பு அந்நகரக் கழகத் தாரையோ-அரசரையோ சார்ந்ததாகும். அவர்களால் அமர்த்தப் பட்ட பாதுகாவலர் பலர் நகரங்களைப் பாதுகாத்து வந்தனர்.[7]

கப்பல் தொழில்

சிந்து வெளி மக்கள் ஆற்று வாணிபத்திலும் கடல் வாணிபத்திலும் சிறந்திருந்தனர். ஆதலின், ஆறுகளுக்கு வேண்டிய படகுகளையும் கடற் செலவுக்குரிய கப்பல்களையும் கட்டத் தெரிந்திருந்தனராதல் வேண்டும். மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த முத்திரை ஒன்றில் படகின் உருவம் காணப்படுகிறது. அதிற் பாய்மரம் இல்லை. சுக்கானும், படகின் நடுவில் ஒர் அறையும், மீகாமன் இருக்க இடமும் உள்ளன. அப்படகின் அமைப்பைக் கொண்டு, அக்காலப் படகுகளை நாம் ஒருவாறு அறிந்துகொள்ளலாம். அவை நாணற்கோல்கள் கொண்டு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் செய்யப்பட்ட படகுகள் பண்டை எகிப்திலும் இருந்திருக்கின்றன. மட்பாண்ட ஒட்டில் தீட்டப்பட்டிருந்த ஒவியம் ஒன்று படகினும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. அதன் இருபுறங்களும் வளைந்து உயர்ந்து காணப்படுகின்றன. நடுவில்அறையே இல்லை; 180 செ.மீ. உயரத்தில் பாய் மரம் இருக்கிறது. சுக்கானும் உளது. அப்படகு ஆற்றிலும் கடலிலும் பயன்பட்டதாதல் வேண்டும்.[8] எனவே, சிந்து வெளி மக்கள் படகுகளைக் கட்டவும் வேறு வகைக் கப்பல்களைக் கட்டவும் அறிந்திருந்தனர் என்பது தெளிவாம்.

பயிர்த் தொழில்

நெல், கோதுமை, வாற்கோதுமை, எள், பருத்தி முதலியன பயிரிடப்பட்டன. எனவே, உழவு சிறப்புற்ற தொழிலாகவே இருந்துவந்த தென்னலாம். வயல்கட்கு வேண்டிய நீரைச் சிந்து யாறே தந்து வந்தது. அம்மக்கள் சிந்து யாற்றுநீரைக் கால்வாய்கள் மூலம் கொண்டு சென்று வயல்களிற் பாயச் செய்திருத்தல் வேண்டும். கலப்பைக்காரர்களும் அரிவாள்களும் கிடைத்தமை கொண்டும் சிறிது கோதுமை இருந்ததைக் கொண்டும் பயிர்த்தொழில் சிறப்புடைய தொழிலாகக் கருதப்பட்டதென்பது வெளியாகும்.

நெசவுத் தொழில்

மொஹெஞ்சொ-தரோவில் உள்ள வீடுகள் பலவற்றுள் நெசவுத் தொழில் நடந்து வந்தது என்பதை அறிவிப்பன் போலக் ‘கதிர்கள்’ பல கிடைத்துள்ளன. அவை பளிங்காலும் சங்கினாலும் களி மண்ணாலும் செய்யப்பட்டவை. எனவே, செல்வர் முதல் வறியர் ஈறாக இருந்தவர் அனைவரும் நூல் நூற்றலில் ஈடுபட்டிருந்தனர் என ஒருவாறு கூறலாம். சிந்து வெளியிற் பருத்தியே மிகுதியாகப் பயன்பட்டது. கம்பள ஆடைகள் ‘இருந்தில’ என்று சிலரும், இருந்திருக்கலாம் என்று சிலரும் கூறுகின்றனர். நாரினாற் செய்யப்பட்ட ஆடைகள் பிற இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டன. ‘கித்தான்’ போன்ற தடித்த துணியும் பயன் படுத்தப்பட்டது. மொஹெஞ்சொ-தரோவில் 5000 ஆண்டுகட்கு முன் இருந்த பஞ்சு கிடைத்துள்ளது. அஃது இன்றைய இந்தியப் பஞ்சைப்போலவே இருக்கிறது. இப்பஞ்சைத்தான் பாபிலோனியர் சிந்து[9] என்றும், கிரேக்கர் சின்டன் என்றும் வழங்கி வந்தனர். செல்வர்கள் சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகளை அணிந்து வந்தனர்; பூத் தையல்களைக் கொண்ட மேலாடைகளைப் போர்த்து வந்தனர் என்பதைச் சில வடிவங்களைக் கொண்டே கூறலாம்.

தையலும் பின்னலும்

இவை இரண்டும் அங்கு இருந்தன என்பது மேலே கூறப்பட்டது. இவ்வேலைகட்கு உரிய ஊசிகள் பல கிடைத்துள்ளன. அவை செப்பு, வெண்கலம், எலும்பு, தந்தம், தங்கம் இவற்றால் செய்யப்பட்டவை. அவற்றுள் சில நூல் கோத்துத் தைப்பதற்கு உதவும் ஊசிகள்; சில பூத் தையல்கள் போடவும், சித்திரங்கள் பின்னவும் பயன்பட்டவையாகக் காணப்படுகின்றன.

தந்த வேலை

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த பொருள்களுள் இரண்டு யானைக் கோடுகள் குறிப்பிடத்தக்கவை. ஒர் அழகிய பாத்திரத்தின் அடிப்புறத்திற்கோ அன்றி மேற்புறத்திற்கோ பயன்படுத்தப்பட்ட தந்தத் தகடு ஒன்று கிடைத்துள்ளது. அது சில அழகிய வேலைப்பாடு களைக் கொண்டுள்ளது. தந்தப் பாத்திரங்கள் இருந்திருக்கலாம்; பெரிய பாத்திரங்களை அழகு செய்யத் தந்தத் தகடுகளைப் பயன்படுத்தி இருக்கலாம்: தந்த ஊசிகள், தந்தக் கதிர்கள் முதலியன கிடைத்துள்ளதைக் கொண்டும் முத்திரைகள் பலவற்றில் கோடுள்ள யானைகள் காணப்படலைக்கொண்டும், சிந்துவெளியில் யானைகள் புதியன அல்ல என்பதும் தந்தத் தொழில் நடைபெற்று இருக்கலாம் என்றும் கூறலாம்,[10] தந்தப் பொருள்கள் சில சுமேரியாவிற் காணப்படு தலைக்கொண்டு. அவை சிந்து வெளியிலிருந்தே போயிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுவதால், தந்த வாணிபமும் நடைபெற்றிருக்கலாம் என்று கருத இடம் உண்டு.

மணி செய்யுந் தொழில்

பற்பல இடங்களிலிருந்து உயர்தரக் கற்களை வரவழைத்து, அவற்றை அறுத்துப் பற்பலவித மணிகளாக்கி மெருகிட்டுச் செவ்வைப்படுத்தும் தொழில் வல்லார் பலர் இருந்தனர் என்பது, சிந்து வெளியிற் கிடைத்துள்ள அளவிறந்த மணிகளைக் கொண்டு எளிதில் அறியலாம். அம்மணிகளில் ஒரே அளவுள்ள வழவழப் பான துளைகள் கிடைந்துள்ளதைக் கண்டு ஆராய்ச்சியாளர் வியப்புறுகின்றனர் எனின், அத்தொழில் வல்லார் வைத்திருந்த நுண்ணிய கருவிகளையும் அவர்தம் ஆற்றலையும் என்னெனப் பாராட்டுவோம்! சுருங்கக் கூறின், அவ்வேலை முறையே இன்றுள்ள மணி வேலைகட்குப் பிறப்பிடம் என்னல் மிகையாகாது.

பாய் பின்னுதல்

மாடங் கட்டியவர் பயன்படுத்திய கோரைப் பாய் ஒன்று பழுதுற்ற நிலையிற் கிடைத்தது. சிந்து ஆற்றுப் படுகையில் கோரையும் நாணலும் இயல்பாகக் கிடைத்தமையின், சிந்து வெளி மக்கள் அவற்றைக் கொண்டு பாய்களைப் பின்னிக் கொண்டனர்; கூரைகளை அமைத்துக் கொண்டனர். எனவே, பாய் பின்னுந் தொழில் அங்கு இருந்தது என்பது தோற்றம்.

எழுதக் கற்றவர்

சிந்து வெளி மக்கள் எழுதக் கற்றவர் ஆவர். இதனை, அவர்கள் வெளியிட்டுள்ள செம்பு நள்ணயங்களாலும் 1000க்கு மேற்பட்ட முத்திரைகளாலும் மட்பாண்டங்கள் மீது தீட்டப்பட்டுள்ள குறியீடுகளாலும் நன்குணரலாம். அவர்கள், மட்பாண்டங்கள் மீது எழுத ஒருவகை நாணற் பேனாவைப் பயன்படுத்தினர். அத்தகைய பேனாக்களைக் கிரீட் தீவினர் பயன்படுத்தினர். அவை நாகரிகம் மிகுந்த எகிப்திலும் உரோமர்கள் காலத்துக்கு முன் இருந்ததில்லை. எழுதப் பயன்பட்ட சிவந்த களிமண் பலகைகள் சில கிடைத்தன. அவற்றின் நீளம் 10 செ.மீ. அகலம் 8 செ.மீ, கனம் 180 செ. மீ. அவற்றின் மீது ஒருவகைப் பொருள் தடவப்பட்டு, அப்பொருள்மீது எழுதப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.[11] கணக்கற்ற முத்திரைகளிற் காணப்படும் சித்திர எழுத்துகளைக் கானின், சிந்து வெளி மக்களது எழுத்து முறையை நன்கு அறியலாம். அவ்வெழுத்துகள் இன்று வசிக்கப்படவில்லை. ஆயினும், ‘அவையே இந்திய முதல் எழுத்துக்கள் என்று இதுகாறுங் கருதப்பட்ட பிராமி எழுத்துகட்கே பிறப்பிடமாகும்’ என்று லாங்டன் (Langdon) ஹன்ட்டர் போன்ற மொழில்லுநர் அறைந்துள்ளனர். அவ்வெழுத்துகளை ஆராய்ந்து பாகுபடுத்தி ஹன்ட்டர் என்பவர் ஏறக்குறைய 250 பக்கங்கள் கொண்ட பெருநூல்[12] ஒன்றை 1934 இல் வெளியிட்டுள்ளார். ஹீராஸ் என்னும் பாதிரியார் ஒருவரும் இத்தகைய ஆராய்ச்சிப் பணியில் இறங்கியுள்ளார்.அவரும் விரைவில் நூல் ஒன்றை வெளியிடுவார். இங்ஙனம் அறிஞர் பலர் கவனத்தையும் ஈர்த்துள்ள அற்புத எழுத்துக்களைப் பண்டைச் சிந்துப் பிரதேச மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

வாணிபத் தொழில்

சிந்து மக்கள் தொழில்களிற் சிறந்திருந்தவர் என்பதற்கு அவர்களது வாணிபமே சிறந்த சான்று பகரும், அவர்கள் ஏறக்குறைய 4800 கி.மீ. தொலைவில் நடு ஆசியாவிலிருந்து எகிப்து வரை வாணிபம் நடத்தி வந்தனர். இக்காலப் புகை வண்டியோ, வான ஊர்தியோ, நீராவிக் கப்பலோ, மோட்டார் லாரிகளோ இல்லாத 5000 ஆண்டுகட்கு முன் அவர்கள், தங்கள் பண்டப் பொதிகளை எருதுகள் மீது ஏற்றிக்கொண்டு சென்றும், கப்பல்கள் மூலம் கரையோரமாகவே சென்றும் கடல் வாணிபம் - ஆகிய இரண்டையும் வெற்றி பெற நடத்தி வந்தனர் என்பது முற்பகுதியில் விளக்கமுறக் கூறப்பட்டது. அவர்கள் தங்கள் நாட்டுப் பொருள்களையும் கலையுணர்வையும் பிற நாட்டினர்க்குக் கொடுத்து, அவர் தம் பொருள்களையும் கலையுணர்வையும் பெற்று, வாணிபத்தையும் கலையுணர்வையும் வளர்த்து வந்தனர். ‘திரைகடல் ஒடியும் திரவியம் தேடு’ என்பதற்கு அப்பெருமக்களே சான்றாவர். அவர்கள் இந்தியாவின் பல பகுதியிலிருந்தும் தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்று உள்நாட்டு வாணிபத்தையும் வளர்த்து வந்தனர்.

சிற்பக் கலை

சிந்து வெளி மக்கள் சிற்பக் கலையைத் தோற்றுவித்தவர் என்னல் தவறாகாது. மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த சுண்ணாம்புக்கல் கொண்டு செய்யப்பட்டிருந்த சிலை ஒன்று அறிஞர் கவனத்தை ஈர்த்தது. அவ்வுருவம் யோகியின் உருவம் என்றும், சமயத் தலைவர் உருவம் என்றும் அறிஞர் பலவாறு கருதுகின்றனர். அவ்வுருவம் சித்திரத் தையலைக்கொண்ட போர்வை ஒன்றைப் போர்த்துள்ளது; மீசையின்றித் தாடியை மட்டும் வைத்துள்ளது; அத்தாடி ஒழுங்குபெற அமைக்கப்பட்டுள்ளது. தலைமயிர் ஒழுங்காகச் சீவப்பெற்று, வட்டப் பதக்கத்துடன் கூடிய தலையணியால் அழுத்தப்பட்டுள்ளது.இந்த அமைப்பு முறை கண்கவர் வனப்பினது.

ஹரப்பாவில் கிடைத்துள்ள கற்சிலைகள் சிந்து வெளி மக்களின் சிற்பக்கலை அறிவைத் திறம்படக் காட்டுவனவாம். அவை வியக்கத்தக்க முறையில் செய்யப்பட்டுள்ளன. கைகள் தனியே செய்து இணைப்பதற்கு ஏற்றவாறு அச்சிலைகளில் துளைகள் காணப்படுகின்றன; அங்ஙனமே தலைகளும் இணைக்கப்படும் போலும் கற்களில் இணைப்பு வேலையைச் செய்யத் துணிந்த அம்மக்களின் கலையறிவை என்னென்பது! இவ்வாடவர் சிலைகள் மணற் கல்லாலும் பழுப்பு நிறக் கல்லாலும் செய்யப்பட்டுள்ளன. இக்கற்கள் சிந்து வெளியிற் கிடைப்பன அல்ல; வெளி இடங்களிலிருந்தே கொண்டுவரப் பட்டவை. இக்கற்களைப் பிற்கால இந்தியர் இன்றளவும் சிலைகட்குப் பயன்படுத்த அறிந்திலர் என்பது கவனிக்கத் தக்கது.

சிற்பக் கலை கிரேக்கரிடமிருந்துதான் இந்தியாவிற்கு வந்தது என்று இதுகாறும் கூறி வந்தது இன்று தவறாகிவிட்டது. அவர்தம் கலை தோன்றற்கு முன்னரே சிந்துவெளி மக்கள் சிற்பக் கலையைத் தோற்றுவித்தனராதல் வேண்டும். ‘இந்தியச் சிற்பக் கலை இந்தியாவிற்கே உரியது’ என்று சர்ஜான் மார்ஷல் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.[13]

வெண்கலத்தாற் செய்யப்பட்ட நடனமாதின் உருவம் ஒன்றும் சிந்துவெளி மக்களின் சிற்ப அறிவைச் சிறப்புறக் காட்டுவதாகும். அதனைப்பற்றி வியந்து எழுதாத அறிஞர் இலர் எனின், அதன் வேலைப்பாட்டுச் சிறப்பை என்னென்பது! வெண்கல வார்ப்படங் கொண்டு செய்யப்பட்ட அவ்வுருவம் வழவழப்பாகவும் ஒழுங்காகவும் அமைந்துள்ளது வியப்புக்கு உரியதேயாகும். சில உருவச் சிலைகள் நடனம் செய்வத்ற்கு ஏற்றவாறு நிற்பனபோலச் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வோர் உருவமும் இடது காலைத் தூக்கி வலது கால்மீது நின்று நடனம் செய்வது போல அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலைகள், சிவபெருமானது பிற்கால நடனத்திற்கு தோற்றுவாய் ஆகலாம் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

சிந்து வெளியிற் கிடைத்த விலங்குப் படிவங்களைக் கொண்டும் அம்மக்களது சிற்ப அறிவை உணரலாம்; ஒரு குரங்கு தன் குட்டியுடன் உட்கார்ந்திருப்பது போலச் செய்யப்பட் டுள்ளது. வேறு ஒரு குரங்கு தன்முழங்கால்கள் மீது கைகளை ஊன்றிக்கொண்டு உட்கார்ந்திருப்பது போலச் செய்யப்பட்டுள்ளது. இங்ஙனம் செய்யப்பட்ட உருவங்களில் கற்களும் சிப்பிகளும் கண்களாக வைத்துப்பதிக்கப்பட்டுள்ளன. இம்முறை எகிப்திலும் சுமேரியாவிலும் கையாளப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட எருமை, குரங்கு, வெள்ளாடு என்பன பார்க்கத் தக்கவை; சிறந்த முறையில் அமைந்துள்ளவை.

ஓவியக் கலை

சிந்து வெளி மக்களின் ஒவியத் திறமை அவர் தம் மட்பாண்டங்களிலிருந்தே அறியப்படுகின்றது. அங்குக் கிடைத்துள்ள மட்பாண்டங்கள் மீது தீட்டப்பட்டுள்ள ஒவியங்கள் மிகத் தெளிவாக அக்கால நிலையையும் நாகரிகத்தையும் உணர்த்த வல்லவையாக இருக்கின்றன. அவை வரலாற்றுக் காலத்து ஒவியங்கட்கு முற்பட்ட ஓவியக் கலையை அளவிட்டு அறியப் பேருதவி புரிகின்றன. ஒரு வட்டத்திற்குள் பல வட்டங்கள் இட்டுள்ள முறை போற்றுதற்குரியது. பல பாண்டங்கள் மீது மரங்கள், இலைகள், இலைக்கொத்துகள், சதூக்கட்டங்கள், குறுக்கும் நெடுக்குமாக உள்ள முக்கோணங்கள், பறவைகள், பாம்புகள், மீன்கள், காட்டு எருமைகள், மலை ஆடுகள்,மயில்கள், மான்கள், கப்பல்கள் ஆகியவற்றின் உருவங்கள் ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து வரும்தொன்மை நாகரிகம்

இவையன்றி, மிக்க வேலைப்பாடுகள் அற்ற சிலைகளும் ஒவியங்களும் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சிந்து கங்கை வெளிகளிலும் பரவி இருக்கின்றன. ஆதலின், சிந்து வெளிப் பண்டை நாகரிகம் கங்கை வெளியிலும் பரவி இருந்தமை நன்கு புலனாகின்றது. மேலும் அப்பண்டைக் காலச் சிற்பக் கலையும் ஓவியக் கலையும் வரலாற்றுக்காலம் வரை தொடர்ந்து கைக் கொள்ளப்பட்டு வந்திருந்தமை வெளியாகின்றது. பாடலிபுரத்தில் அகப்பட்ட மோரியர் காலத்து மட்பாண்டங்களும் சிந்து வெளியின் மட்பாண்டத் தொடர்ச்சியாகவே கருதப்படுகின்றன. சிந்து வெளி நாகரிக காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்கும் - இடையில் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருந்த போதிலும் வாழ்க்கையில் பல மாறுதல்கள் உண்டாகி இருப்பினும் ஒவியக் கலையும் சிற்பக் கலையும் வரலாற்றுக் காலம்வரை தொடர்ந்தே வந்துள்ளன என்று அறிஞர் கருதுகின்றனர். இவற்றால், இந்தியச் சிற்பக் கலைக்கும் ஒவியக் கலைக்கும் சிந்து வெளியே தாயகமானது என்பது தெளிவாகும் அன்றோ?

இசையும் நடனமும்

களிமண்ணாற் செய்யப்பட்ட ஆண் உருவம் ஒன்றன் கழுத்தில் ‘தவுல்’ கட்டப்பட்டுள்ளது. வெண்கலத்தாற் செய்யப்பட்ட நடனமாதின் வடிவம் ஒன்று கிடைத்துள்ளது. சில கற்சிலைகள் நடனமுறையிற் காணப்படுகின்றன. இரண்டு முத்திரைகளில் ‘மிருதங்கம்’ போன்ற தோற் கருவிகள் பொறிக்கப் பட்டுள்ளன. இக்காலத்து ‘வீணை’ போல ஒவியம் ஒன்று தீட்டப் பட்டுள்ளது. இக்காலத்துப் பாகவதர்கள் கைகளில் வைத்துக் கொண்டு தாளமிடும் கருவிகள் போன்றவையும் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் நோக்க, சிந்து வெளி மக்கள் இசைக் கலையிலும் நடனக் கலையிலும் ஓரளவு பயிற்சி உடையவர் என்பது நன்கு விளங்குகிறது.

கணிதப் புலமை

சிந்து வெளியிற் கிடைத்துள்ள நிறைக் கற்கள் மிகப்பல. அவை பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பயன்பட்டன எனக் கூறலாம். நிறைக் கற்களைப் பற்றிய விளக்கம் சென்ற பகுதியிற் கூறப்பட்டமையின் ஈண்டு விரித்தல் வேண்டா. நிறையின் மிகச் சிறிய அளவு தசாம்ச பின்னத்திற் செல்கின்றது; பேரளவு 15 பவுண்ட் வரை செல்கின்றது எனின், அக்கால மக்களது கணிதப் புலமை தெற்றெனத் தெரிகிறதன்றோ? நிறைகள் 64 வரை இரட்டை எண்களாக இருக்கின்றன. பின்ன அளவைக் குறிக்கும் நிறைகள் ஒரு கிராமின் 0.8565 அளவு வரை போகின்றன எனின் அம்மக்களது. கணிதக் கலை வளர்ச்சியை என்னென்று கூறி வியப்பது. ‘இந்நிறைக் கற்கள் மெசொபொட்டேமியா போன்ற அக்கால நாகரிக நாடுகளில் இருந்த நிறைக் கற்களை விட எடையில் சரியானவையாகவும் அளவில் ஒழுங்கானவையாகவும் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் அறைந்து வியக்கின்றனர்.

மருத்துவக் கலை

இன்று இந்தியா முழுதிலும் ஆயுர்வேத யூனானி மருத்துவப் புலவர் பயன்படுத்துகின்ற ‘சிலா சித்து’ என்னும் மருந்து மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளது. சிந்து வெளியினர், சம்பர் (Sambur) மான் கொம்புகளைப் பொடியாக்கி மருந்தாகப் பயன்படுத்தினர் என்பது தெரிகிறது. மான் கொம்புகளும், மாட்டுக் கொம்புகளும் பல கிடைத்துள்ளன. மாட்டுக்கொம்புகள் சில கிண்ணம் போலக் குடையப்பட்டுள்ளன. அவை மருந்து வைத்துக் கொள்ளப் பயன்பட்டன ஆகும். நாட்டு மருத்துவத்தில் ‘சிலா சித்து’ உயர்தர மருந்தாகும். அது வயிற்றில் உண்டாகும் குடல், நுரையீரல் முதலியன பற்றிய நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. அது, இமயமலைப் பாறைகளிலிருந்து கசிந்து வருவது. அதனை மலை வாழ்நர் கொண்டுவந்து இன்றும் உள் நாடுகளில் கொடுக்கின்றனர். சிந்து வெளியிலேயே மொஹெஞ்சொ-தரோவை ஒத்த நாகரிகநகரமாக இருந்த ‘ஒத்மஞ்சொ-புதி’ என்னும் இடத்தில் மருந்துக்குரிய ஒருவகை எலும்புகள் சில கிடைத்துள்ளன. அவை காது, கண், தொண்டை தோல் பற்றிய நோய்களைக் குணப்படுத்தும் வன்மையுடையன. ‘மொஹெஞ்சொ-தரோ மக்கள் விருந்தில் விருப்புடையர் என்பது நன்கு புலனாகின்றது. ஆதலால், அவர்கள் அசீரணத்தால் துன்புற்றனராதல் இயல்பே. அவர்களைக் குணப்படுத்த மகளிர் சில மருத்துவ முறைகளை அறிந்திருந்தனர் என்று கூறல் தவறாகாது’.[14] ‘...இன்ன பிறவற்றால், இன்றுள்ள ஆயுர்வேத மருத்துவக் கலை பற்றிய மூல உணர்ச்சிகள் சிந்துவெளி மருத்துவர்களிடமிருந்தே தோற்றமாயின என்னல் நன்கு வெளியாம்’.[15]

வான நூற் புலமை

சிந்து வெளி மக்கள் வீடுகள் கட்டியுள்ள முறையிலிருந்து இராசி கணங்களின் இயக்கங்களைக் கவனித்து வந்தனர் என்பது தெளிவாகிறது, முத்திரைகளிற் குறிப்பிடப்பட்டுள்ள சில குறியீடுகள் இராசிகளைத் தாம் குறிக்கின்றனர்; அம்மக்களது ஆண்டுத் தொடர்ச்சி ஏறக்குறையத் தை மாதத்திலிருந்தே தொடக்கமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர்.[16] ஆனால், அவற்றைத் திட்டமாகக் கூறக்கூடவில்லை என்று இராவ் பகதூர் தீக்ஷித் போன்றோர் கூறுகின்றனர்.[17] ஹிராஸ் பாதிரியார், ‘சிந்து வெளி மக்கள் இராசி மண்டலத்தை நன்கு அறிந்தவர்கள், அவர்கள் காலத்தில் எட்டு இராசிகளே இருந்தன, சுமேரியர் காலத்திற் பத்து இராசிகள் கணக்கிடப்பட்டன. சிந்து மக்களின் இராசி மண்டலக் குறிப்பைக் கணித்துப் பார்க்கையில், அக்காலம், ஏறக்குறைய கி.மு. 5610 எனக் கூறலாம். இது, சுமேரியர் நாகரிகமே தோன்றாத காலம் ஆகும் என்று பேசியுள்ளார்.[18]

உடற் பயிற்சி

ஹரப்பாவிற் கிடைத்த முத்திரை ஒன்றில் ஒர் ஆடவன் உடற் பயிற்சி செய்வதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், சிந்துவெளி மக்கள் ஓரளவு உடற்பயிற்சி முறைகளை அறிந்திருந்தனர் என்று கூறுதல் தவறாகாது.[19]

நகர மக்கள்

தொழில்களையும் கலைகளையும் நோக்க, சிந்து வெளி நகரங்களில் மொழிப் புலவர், நிமித்தங் கூறுவோர், காலக்கணிதர், மருத்துவர், இசைவாணர், கூத்தப் புலவர், கூத்த மகளிர், அரசியற் மகளிர், அரசியற் பணியாளர், நகரக்காவலர், சமயக் குருமார் (புரோகித்ர்), வேளாளர், உணவுப் பொருள் விற்போர், கூல வாணிகர், பொற்கொல்லர், கன்னார், தச்சர், மீன்வாணிகர், அப்ப வாணிகர், உப்புவாணிகர், மரக்கலம் ஒட்டுவோர், வண்டி ஒட்டுவோர், மரக்கலம் கட்டுவோர், வேட்கோவர், இரத்தினப் பணியாளர், செதுக்கு வேலையாளர், ஒவியந் தீட்டுவோர், சிற்பிகள், கால் நடை வளர்ப்போர், சங்கு அறுப்போர், சிற்ப வேலை செய்பவர், வெண்கல்-மாக்கல் முதலிய பலவகைக் கல்வேலை செய்வோர், தந்தவேலை செய்பவர், விளையாட்டுப் பொருள்கள் செய்வோர், நீர்கொண்டு வருபவர், கொத்தர்கள், முத்திரை செய்பவர், நாவிதர், தோட்டிகள் முதலிய பல தொழில் புரியும் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதைத் தெளிவுற அறியலாம். இவர்கள் அல்லாமல் எகிப்து, அஸிரியா, பாபிலோனியா, ஏலம், சுமேரியா, பாரசீகம் நடு ஆசியா, பர்மா, தென் இந்தியா முதலிய இடங்களிலிருந்து வாணிபத்தின் பொருட்டுக் குடியேறியிருந்த மக்கள் சிலராவர். ஆதலின், மொஹெஞ்சொ-தரோ இக்காலத்துக் கராச்சி நகரைப்போலப் பல நாட்டவரைக் கொண்டிருந்த வாணிகப் பெருநகர் ஆகும்: பண்டைப் பூம்புகார் , கொற்கை, முசிறி, தொண்டி போன்ற வாணிப நகரம் ஆகும் என்பது அறியத்தக்கது. இதனாற்றான் அங்குக் கிடைத்த எலும்புக் கூடுகளும் மண்டை ஒடுகளும் மங்கோலியர், அல்பைனர், மத்யதரைக் கடலினர், ஆஸ்ட்ரேலியா இனத்தவர் ஆகிய பல் நாட்டு மக்களுடையனவாகக் காணப்பட்டன.

  1. Mackay’s ‘The Indus Civilization’ pp.187, 188.
  2. 1. தமிழ் அகத்து வேட்கோவா பெருமையைப் புறநானூற்று 32,828. 256 முதலிய பாடல்களால் அறிக. எகிப்திய மொழியில் ‘வேள்’ என்பதுமட்பாண்டத்தைக் குறிக்கும் சொல்லாதல் அறிக.
  3. Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’,Vol. I p.172.
  4. ; இத்தகை செம்பு நாணயங்கள் பல திருநெல்வேலிக் கோட்டத்திற் கிடைத்துள்ளன. அவற்றின் விவரம்.'சிந்து வெளி மக்கள் யார்?’ என்னும் பகுதியிற் காண்க.
  5. பண்டைத் தமிழகத்தில் அத்தொழில் சிறப்புற நடந்து வந்தது உலர்த்திப் பக்குவப்டுத்தப்பட்ட ‘மீன் உணங்கல்’ வெளி நாடுகட்கு அனுப்பப்பட்ட செய்தி மதுரைச் காஞ்சி முதலிய தொன்னூல்களால் அறியக் கிடக்கிறது.
  6. 1. M.S.Vat’s ‘Excavation at Harappa, ‘Vol.I pp.99, 100, 451, 452.
  7. பண்டைத் தமிழ் நாட்டுக் காவற்காரர் ‘களவு நூலைக்கற்றவர். கள்வர் போக்கை உணர்ந்து மறைந்து. நின்று பிடிப்பவர்’ என்னும் சுவை பயக்கும் செய்திகளை மதுரைக் காஞ்சி முதலிய நூல்களால் உணர்க
  8. Mackay’s ‘The Indus Civilization’ p.175. Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’ Vol.I. p.340
  9. திராவிட மொழிகளுள் ஒன்றாய் கன்னடத்தில் ‘சிந்து’ என்பது ஆடையைக் குறித்தல் இங்குக் கருதத்தகும்.
  10. Mackay’s ‘The Indus Civilization’, 172.
  11. Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’ Vol. I. pp. 215, 430.
  12. Dr.G.R.Hunter’s ‘The ScriptofAarappaand Mohenjo-Daro'(1934)
  13. M.S. Vats’s ‘Excavations at Harappa’, Vol. I. pp. 76, Vol. II. PI. LXXX, LXXXI.
  14. Mackay’s ‘The Indus Civilization pp. 189, 190.
  15. K.N. Dikshit’s ‘Pre-historic Civilization of the I.V.P. 31.
  16. பண்டைத் தமிழமக்களின் ஆண்டும் தை மாதத்திலிருந்தே கணிக்கப்பட்டதென்று தமிழறிஞர் சிலர் கூறுகின்றனர்.
  17. Vide his book, p.31.
  18. Vide his Lecture, ‘Madras Mail’ (21-10-37).
  19. M.S.Vats’s ‘Excavations at Harappa’. Vol. I. p. 295.