மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/12. வாணிபம்

விக்கிமூலம் இலிருந்து
12. வாணிபம்

உள் நாட்டு வாணிபம்

சிந்து வெளி மக்கள் கொண்டிருந்த வாணிபம் உள்நாட்டு வாணிபம், வெளிநாட்டு வாணிபம் என இரண்டாகக் கூறலாம். மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த செம்பு முதலிய கணிப் பொருள்கள் இராஜபுதனம், மத்திய மாகாணம் முதலிய இடங்களிவிருந்தும், மான் கொம்புகள் காஷ்மீரிலிருந்தும், வைரமும் வெள்ளி கலந்த ஈயமும் ஆப்கானிஸ்தானத்திலிருந்தும், ஒருவகை உயர்தரப் பச்சைக்கல் வடபர்மாவிலிருந்தும் அல்லது திபேத்திலிருந்தும், பொன் கோலார், அனந்தப்பூர் என்னும் சென்னை மாகாண இடங்களிலிருந்தும், ஒருவகைப் பச்சைக்கல் மைசூரிலிருந்தும், உயர்தர ‘அமெஸான்’ என்னும் பச்சைக்கல் நீலகிரியிலிருந்தும், சங்கு முத்து முதலியன பாண்டிய நாட்டினின்றும் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுவதால், அப்பண்டைக்காலத்தில் இந்திய உள்நாட்டு வாணிபம் சிறப்புற நடந்து வந்தது என்பதையும், சிந்து வெளி மக்கள் இந்தியா முழுவதையும் சுற்றுப்புற நாடுகளையும் நன்கு அறிந்திருந்தனர் என்பதையும் ஒருவாறு உணரலாம். ஹைதராபாதில் கண்டெடுக்கப்பட்ட சவக்குழிகள் மீதும், திருநெல்வேலிக் கோட்டத்திற் கிடைத்த நாணயங்கள் மீதும், மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த மட்பாண்டங்கள் மீது. காணப்படும் சில குறியீடுகள் போன்றவை காணப்பட்டமை இங்குக் கருதத் தக்கது.[1] இங்ஙனம் ‘தென்னிந்தியாவின் கடற்கரை,கத்தியவார், வடமேற்கு மண்டிலம், சிந்து-பஞ்சாப் மண்டிலங்கள், கங்கைச் சம வெளியின் வடபகுதி, இராஜபுதனம் முதலிய இந்தியப் பகுதிகள் அக் கால நாகரிகத்திற்கு உரியவையாகலாம்'[2] என்று தீக்ஷத் அவர்கள் கூறுதலால், அக்கால உள்நாட்டு வாணிபச்சிறப்பை ஒருவாறு உணரலாம்.

வெளி நாட்டு வாணிபம்

சிந்து வெளியிற் கிடைத்தி எழுத்துக் குறிகள், முத்திரைகள், ஒவியங்கள்,கருவிகள், மட்பாண்டங்கள் முதலியவற்றை ஆராய்ந்த நிபுணர் அவற்றுக்கும் ஏலம், சுமேர் மொசொபொட்டேமியா, எகிப்து முதலிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களுக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிந்து வியந்துள்ளனர். இப்பொருள்களின் ஒருமைப்பாட்டாலும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களாலும், நாம், சிந்து நாட்டவர் செய்துவந்த வெளிநாட்டு வாணிபத்தை ஒருவாறு உணரலாம்.

(1) மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த உயர்ந்த சலவைக்கல் முத்திரைகளைப் போன்றவை மிகப் பலவாக ‘ஏலம்’ என்னும் நாட்டிற் கிடைத்துள்ளன. சலவைக்கல் பொருள்கள் மிகுதியாகச் சிந்து நாட்டிற் கிடைக்காமையானும், அவற்றின் மீது அமைந்துள்ள வேலைப்பாடு அந்நாடுகட்கே உரியவை ஆதலாலும், அவை ஏலம்-சுமேரியநாடுகளில் மிகுதியாகக் கிடைத் தலாலும், அவை அந்நாடுகளிலிருந்தே சிந்துவிற்குக் கொண்டு வரப்பட்டிருத்தல் வேண்டும் என்பது வெள்ளிடை மலை.[3]

(2) சில இந்திய முத்திரைகள் பழைய உர், கிஷ், டெல் அஸ்மர் என்னும் மொசொபொட்டேமியா நகரங்களில் கிடைத் துள்ளன. அங்கு இருந்த பிற பொருள்களும், அந்நகரங்களின் நாகரிக காலமும் கி.மு.3000 கி.மு.2500க்கு உட்பட்டன என்று அறிஞர் கூறுகின்றனர். எனவே, சிந்து நாகரிகமும் வெளிநாட்டு வாணிபமும் மேற்சொன்னகாலத்தனவேஎன்பது ஆராய்ச்சியாளர் முடிவாகும். டெல்அஸ்மரில் டாக்டர் பிராங்க்போர்ட் என்னும் அறிஞர் கண்டெடுத்த நீண்ட உருண்டையான முத்திரை சிந்து வெளியினதே ஆகும். அதில் பொறிக்கப்பட்டுள்ள யானை, காண்டா மிருகம், முதலிய ஆகிய மூன்றும் சுமேரியாவில் இல்லாதவை.

(3) அதே நகரத்தில், உடலில் துவாரமுள்ள முட்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மண் பாத்திரங்கள் சில கிடைத்தன. அவை இராக்கில் கி.மு.2800-கி.மு.2500க்கு உட்பட்ட காலத்துப் பொருள்களோடு கலந்திருந்தன. அவை இந்தியாவிற்கே உரியவை என்பது அறிஞர் கருத்து.[4]

(4) ஒருவகை வெளிறிய பச்சைக் கல்லால் செய்யப்பட்ட பாத்திரம் ஒன்று பாய் வடிவ வேலைப்பாடு கொண்டதாக மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்தது. அத்தகைய பாத்திரங்கள் பல டெல் அஸ்மர், கிஷ், சுசா முதலிய பண்டை நகரங்களில் கிடைத்துள்ளன.

நந்தி வழிபாடு

(5) 1936 இல் டெல் அக்ரப் (Tel Agrab) என்னும் இடம் புதிதாகத் தோண்டப்பட்டது. அங்குக் கி.மு. 2800 க்கு உரிய கோவில் ஒன்று காணப்பட்டது. அதனுள் பூசைக்குரிய பாண்டங்கள் பல கிடைத்தன. ஒருவகைப் பச்சைக் கல்லால் ஆன பாத்திரத்தின் மீது தொழுவத்தின் முன் பெரிய இந்திய பிராமனி எருது நிற்பதாகவும், அது நின்றுள்ள கட்டிடத்தின் முன்புறம் சுமேரிய மனிதன் உட்கார்ந்திருப்பது போலவும் சித்திரம் தீட்டப்பட் டுள்ளது. இப்படத்தினால், அப்பண்டைக் காலத்திலேயே நந்தி வழிபாடு (Bull Cult) சிந்துவிலிருந்து சுமேரியாவுக்குச் சென்றிருத்தல் விளங்குகிறது அன்றோ!

(6) முத்திரைகளும் பிற பாத்திரங்களும் செய்தற்குரிய உயர்தரக் கற்கள் சுமேரியாவிற்கு அனுப்பப்பட்டுச் செம்மைப் படுத்தப்பட்ட பிறகு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்னை? உயர்தரப் பச்சைக் கற்களும் வேறு கற்களும் கொண்டு செய்யப் பட்ட மணிகள் மொஹெஞ்சொ-தரோவைவிட ‘உர்’ நகரில் (சுமேரியாவில்) மிகுதியாகக் கிடைத்துள்ளமையால் என்க.

(7) நன்றாக வளைந்து முறுக்குண்ட கொம்புகளையுடைய செம்மறியாடுகளைக் குறிக்கும் சித்திரங்கள் சில மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ளன. அவை மொரேவியா, கிரீட் தீவு, அனடோலியா, எகிப்து சுமேரியா, ஏலம் என்னும் பண்டை நாடுகளில் மிக்கிருந்தன.

(8) மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த புதுவகைக் கோடாரி ஒன்று சுமேரியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருத்தல் வேண்டும். என்னை? அத்தகைய பல கோடரிகள் அங்குக் கிடைத்துள்ளன. ஆதலின் என்க.

(9) மீன் பிடிக்கப் பயன்பட்ட வலையின் ஒரங்களில் கட்டப்பட்டிருந்த மண் குண்டுகள் இரு நாடுகளிலும் ஒரு விதமாகவே கிடைத்தன.[5]

(10) ‘உர்’ நகரத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அரசர் தம் கல்லறைகளில் தீட்டப்பட்ட சித்திரங்களுட் குரங்கு ஒன்றாகும். அஃது அந்நாட்டு மக்கட்குத் தெரியாத விலங்கு. எனவே, அந் நாட்டவர் நெருக்கமான வாணிபத்தொடர்புகொண்டிருந்த சிந்து வெளி மக்களிடமிருந்தே குரங்கினைப் பெற்றவராதல் வேண்டும்.

(11) மேற் சொல்லப்பட்ட கல்லறைகளில் சிறந்த வேலைப்பாட்டுடன் கூடிய இரத்தின மணிகள் கிடைத்தன. அவையும் சிந்துவெளியிலிருந்தே சென்றனவாதல் வேண்டும்.

(12) கூந்தலைத் தலையைச் சுற்றிலும் வாரிச் செருகிப் பின்புறம் கற்றையாக முடிதலும், வெவ்வேறு முறைகளில் முடிதலும் அவற்றின்மீது கொண்டை ஊசிகளைச் செருகுதலும் இரு நாட்டாரும் பொதுவாகக் கொண்டிருந்த பழக்கமாகும்.[6]

(13) சிந்து வெளி மக்கள் யானைத் தந்தம், யானைத் தந்தத்தாலான சிப்புகள், சதுரங்க விளையாட்டுக் கருவி கள் முதலியவற்றைச் சுமேரியாவுக்கு ஏற்றுமதி செய்திருக் கின்றனர்.[7]

(14) சிந்து வெளி மட்பாண்டங்கள் மீது பூசப்பட்ட செங் காவிப்பொடி இந்தியாவில் இன்ன இடத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டதென்பது துணிதற்கில்லை. ஆயின், பாரசீக வளைகுடாவை அடுத்துள்ள ஹொர்முஸ் (Hormuz) என்னும் இடத்திலிருந்து உயர்தரச் செங்காவிப் பொடி இன்றும் இந்தியாவில் இறக்குமதி ஆகி வருவதால், அவ்விடத்திலிருந்தே அப்பழங்காலத்திலும் வந்திருக்கலாம்.

(16) வடநாட்டு மிட்டாய் வகைகளைத் தட்டுகளில் வைத்து தெருக்களில் விற்கும் வடநாட்டவர், அத்தட்டுகளைத் தாங்க மூங்கிற் குச்சிகளால் ஆகிய தண்டுகளை எடுத்து வருதல் காண்கிறோம். அத்தகைய நாணலாலான தண்டுகள் பலவற்றை மொஹெஞ்சொ-தரோ மக்கள் பயன்படுத்தி வந்தனர்.அதைப் போன்ற தண்டுகள் சுமேரியா, எகிப்து, ஏலம் முதலிய இடங்களில் கல்லாலும், மண்ணாலும் செய்யப்பட்டுள்ளன. எனினும், இம்மூன்று நாட்டவரும் சிந்துவெளி மக்களிடமிருந்தே இத்தண்டுகள் செய்தலைக் கற்றிருத்தல் வேண்டும்.

(16) இருதய வடிவத்தில் எலும்புகளைக் கொண்டு செய்யப் பட்ட நுணுக்க வேலைப்பாடு அமைந்த வேறு அணிகளில் பதிக்கத்தக்க சிறிய அழகிய பொருள்கள் டெல்அஸ்மரில் கிடைத்துள்ளன. அவை சிந்து வெளியிற் கிடைத்த சிப்பிகளால் ஆன பொருள்களைப் பெரிதும் ஒத்துள்ளன. இவை இருவகை யினவும் ஒரே காலத்தன.

(17) கிரேக்க சிலுவை (Greek Cross) வடிவம் பொறிக்கப் பட்ட முத்திரை ஒன்று வட கிழக்குக் கிரீஸில் கிடைத்தது. அது புதிய கற்காலத்திற்கு உரியது. அதுபோன்றவை பல மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளன. எனவே, அவை சிந்து வெளிக்கே உரியன எனக் கூறுதல் பொருந்தும். அவற்றின் அமைப்பு முறை ஹரப்பாவிற் கிடைத்தவற்றிலிருந்து நன்கு அறியக் கிடக்கிறது.[8] அவை சுமேரியாவிலும், கீரீட் தீவிலும் கிடைத்துள்ளன.

(18) மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த படிவங்களில் உள்ளபடி மீசையைக் சிரைத்துத் தாடியைப் பலவாறு வைத்துக்கொள்ளும் முறை சுமேரியாவிலும் காணப்படுகிறது.

(19) பூசனைக்குரிய தட்டுகளைத் தாங்கும் தண்டுகள் பல சிந்து வெளியிலும் சுமேரியாவிலும் ஒன்று போலவே கிடைத்துள்ளன.

(20) எழுத்துக் குறிகள் சிறிது வேறுபடினும் அடிப்படை ஒன்றாகவே இரண்டு இடங்களிலும் காணப்படுகிறது.[9]

(21) சிந்து வெளியிற் கிடைத்த கோடரிகளைப் போன்ற வெண்கலக் கோடரி ஒன்று காகஸஸ் மலைநாட்டைச் சேர்ந்த ‘கூபன்’ ஆற்றுப் படுகையிற் கிடைத்தது.

(22) விசிறிபோன்ற தலைமுண்டாசு துருக்கியில் உள்ள ‘அடலியா’ என்னும் இடத்திற் கிடைத்த பதுமைகளிலும், சிரியாவிற் கிடைத்த சித்திரம் ஒன்றிலும் சிந்து வெளியிற் கிடைத்த சித்திரங்களிலும் ஒத்தே காணப்படுகிறது.

(23) நாணற் பேனா ஒன்று மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தது. அது போன்ற எழுதுகோல் கிரீட் தீவில் பாத்திரங்கள் மீது எழுதப் பயன்பட்டதாகத் தெரிகிறது. அப்பேனர் உரோமர்கள் காலம் வரை எகிப்தியருக்குத் தெரியாததாகும்.[10]

(24) அக்கேடியர் நகரமான ‘எஷ்ணன்னா’வில் கண்டறியப் பட்ட அரண்மனையுள் நீராடும் அறை அமைக்கப்பட்டது, அக்கேடியர் சிந்து வெளி மக்களோடு கொண்டிருந்த கூட்டுறவினாலேயாம் என்னை வேறு எந் நாட்டிலும் நீராடும் அறைகள் அப்பழங்காலத்தில் அமைக்கப் படாமையின் என்க.[11]

எகிப்தியருடன் வாணிபம்

சிந்து வெளி மக்கள் எகிப்தியருடன் நேராகவோ அன்றிச் சுமேரியர் மூலமாகவோ வாணிபம் செய்து வந்தனர் என்பது கீழ்வரும் உண்மைகளால் உணரலாம்:

(1) சிந்து வெளியிலும் எகிப்திலும் கிடைத்த கழுத்து மாலைகள் வட்டமாகவே அமைந்துள்ளன.

(2) எகிப்தில் கிடைத்த பீடங்கள் சிலவற்றின் கால்கள் எருதின் கால்களைப் போலச் செய்யப்பட்டுள்ளன. கட்டில் கால்களும் அங்ஙனமே அமைந்துள்ளன. சிந்து வெளியில் அத்தகைய பீடம் ஒன்றின்மீது சிவனார் உருவம் அமர்ந் திருப்பதாக உள்ள முத்திரை கிடைத்துள்ளது.[12]

(3) எகிப்தில் உள்ள பிரமிட் கோபுரங்களாகிய அரசர் சவக்குழிகளில், பெண் உருவங்கள் செதுக்கப்பட்ட நன்மணிகள் பல கிடைத்தன. அவை இறந்தவரின் மனைவியரைக் குறிப்பன; அம்மனைவியர் மறுபிறப்பில் தம் கணவரைக் கூடி வாழ்வர் என்பது அப்பண்டைக்கால எகிப்தியர் எண்ணம். அவ்வெண்ணம் சிந்து வெளியிலும் சுமேரியாவிலும் இருந்ததாகத் தெரிகிறது.

(4) தாய் குழந்தைக்குப் பால் கொடுத்தல் போன்ற சித்திரங்கள் பல எகிப்தில் கிடைத்தன. ஆனால், அவை சுமேரியாவில் காணப்படவில்லை. மொஹெஞ்சொ-தரோவில் இரண்டொரு சித்திரங்களே காணப்படுகின்றன. சில ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன.

(5) பல முகப்புகளைக் கொண்ட உயர்தர மணிகள் மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளன. அவை எகிப்தைத் தவிர வேறு எந்தப் பண்டை நாட்டிலும் கிடைத்தில; எகிப்திலும், பிற்கால ரோமர்களின் கல்லறைகளிற்றாம் கண்டெடுக்கப்பட்டன. எனவே, அவை இந்தியாவிற்கே உரியவை என்பது அறியத்தக்கது.

(6) ஈ வடிவத்தில் செய்யப்பட்ட மணிகள் எகிப்திலும் மொஹெஞ்சொ-தரோவிலும் கண்டெடுக்கப்பட்டன. இவை, சுறுசுறுப்பையும் தொழில் முறுக்கையும் அறிவிக்கும் அடையாளங்கள் என்று அறிஞர் கருதுகின்றனர்.

(7) எகிப்தில் இருந்த 13, 17 ஆம் அரச தலைமுறையினர் காலத்தவை ஆகிய சித்திர எழுத்துக்களைக் கொண்ட மூன்று செம்புத் தகடுகள், மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தவற்றையே பெரிதும் ஒத்துள்ளன.

(8) மெழுகு வர்த்தியைத் தாங்கும் மட்பாண்டங்கள், இரண்டு இடங்களிலும் ஏறக்குறைய ஒன்றாகவே கிடைத்துள்ளன.[13]

- (9) கற்பலகைகொண்டு சிப்பி வடிவிற் செய்யப்பட்ட கரண்டிகள் பல எகிப்தில் கிடைத்தன. சிந்து வெளியிலும் அத்தகையன கிடைத்துள்ளன. இவை களிமண்ணாலும் செம்பினாலும் செய்யப்பட்டவை. ஒவ்வொன்றன் நுனியிலும் கைப்பிடி இணைப்புக்கு உரிய துளை காணப்படுகிறது.[14] இன்ன பிற சான்றுகளால், அப்பழங்காலச் சிந்துவெளி மக்களின் வாணிப உலகம், எகிப்துவரை பரவி இருந்தது என்பதை நன்கறியலாம் அன்றோ?

நீர்வழி வாணிபம்

உள் நாட்டு வாணிபத்தின் ஒரு பகுதி சிந்து ஆற்றின் மூலமாகவே நடந்தது. அப்பண்டைக் காலத்தில் ஒரே வித நாகரிகத்தில் இருந்த சிந்துவெளி நகரங்கள் பல சிந்து ஆற்றின் வழியே தமக்குள் வாணிபம் நடத்திக் கொண்டன; அரபிக் கடல் துறைமுகப் பட்டினங்கட்குத் தம் பொருள்களைப் படகுகளில் ஏற்றிச் சிந்து ஆற்றின் மூலம் அனுப்பின: மேற்குப் புற நாடுகளிலிருந்து துறைமுகப் பட்டினங்களை அடைந்த பொருள்களை முன்சொன்ன படகுகள் மூலமே பெற்றுக்கொண்டன.

பண்டை மக்கள், இங்ஙனம் சிந்துயாற்று வழியே வந்த பொருள்களைக் கப்பல்களில் ஏற்றிக்கொண்டு துறைமுகங்களை விட்டுக் கரை ஓரமாகவே தென் பலுசிஸ்தானம், தென் பாரசீகம், இராக், அபிசீனியா, எகிப்து என்னும் நாடுகளுடன் வாணிபம் செய்தனராதல் வேண்டும். அப்பண்டை மக்கள் பயன்படுத்திய முத்திரை ஒன்றில் கப்பல் படம் ஒன்றும், பானை மீது ஓடத்தின் படம் ஒன்றும் காணப்படுகின்றன. இப்படங்களால், அவர்கள் கடலிற் செல்லும் கப்பல்களையும் ஆற்றிற் செல்லும் ஒடங் களையும் நன்கு அறிந்து பயன்படுத்தினர் என்பதை அறியலாம்.

காம்பே வளைகுடாவைச் சேர்த்த புரோச்(Broach) காம்பே (Combay) என்னும் துறைமுகங்கள் இரண்டும் சிந்துவெளி நாகரிக காலத்தில் செழிப்புற்று இருந்தனவாதல் வேண்டும். அத்துறை முகங்களின் வழியே செந்நிறக்கல் மணிகளைப் பற்றிய வாணிபம் உயரிய நிலையில் இருந்திருத்தல் வேண்டும் நருமதை யாற்றுப் பள்ளத் தாக்குகளில் ஒழுங்கான ஆராய்ச்சி நடைபெறுமாயின், பல உண்மைகள் வெளியாகும்.[15]

நிலவழி வாணிபம்

சிந்து வெளிக்கு ஜேட் (lade) என்னும் ஒருவகைக் கல் நடு ஆசியாவிலிருந்து வந்துகொண்டிருந்தது. அக்கல் சிந்து வெளி மூலம் தென் பாரசீகம், இரர்க், சுமேரியா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகட்கு அனுப்பப்பட்டது. எனவே, அக்காலத் தரைவழி வாணிபம் ஏறக்குறைய 4800 கி.மீ. தொலைவில் நடந்து வந்தது என்பது அறியத்தகும்.[16]

இத்தரை வழி வாணிபத்திற்கு அப்பண்டை மக்கள் எருதுகளையும் கோவேறு கழுதைகளையும் பயன்படுத்தினர். அவற்றுள்ளும் எருதுகளே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. சுருங்கக் கூறின், எருதுகளே அப்பண்டைக்கால வாணிபத்தை வளர்த்தன என்னலாம். இந்தக் காரணம் ஒன்றைக் கொண்டே அப்பண்டைமக்கள் எருதை உயர்வாக மதித்து அன்பு காட்டினர் என்பதும் மிகையாகாது.

பண்டைக்காலப் பலுசிஸ்தானம்

அப்பழங்காலத்தில் ւலுசிஸ்தானம் செழுமையுடையதாக இருந்திருத்தல் வேண்டும் மக்கட் பெருக்கம் உடையதாகவும் இருந்திருத்தல் வேண்டும். அவருட் சிலரேனும் மேற்சொன்ன தரைவழி வாணிபத்திற் பங்கெடுத்தனராதல் வேண்டும் சிந்து வெளி மக்களோடு நெருங்கிய உறவானவராகவும் இருத்தல் வேண்டும்; அம்மக்களது மேற்குப்புற வாணிபத்திற்குப் பேருதவி புரிந்தினராதல் வேண்டும்.[17]

சிந்துவெளி மக்கட்குப் பின்

இங்ஙனம் பெருஞ் சிறப்புடன் நடைபெற்று வந்த மேற்குப்புற வாணிபம், ஆரியர் வந்தவுடன் திடீரென நின்று விட்டது. ஆரியர் பஞ்சாபிலிருந்து, பின் கங்கைச் சமவெளியிற் குடி புக்கனர். அவர்கள் இங்ஙனம் உள்நாட்டில் தங்கிவிட்டதாலும் சிந்துவெளி மக்கள் நிலை குலைந்து விட்டனர் ஆதலாலும் அவ்வாணிபம் அடியோடு நின்றுவிட்டது. அதனாற்றான், சிந்து வெளிநாகரிக காலத்திற்குப்பிற்பட்ட ஆரம்ப அசிரியப் பேரரசின் காலத்திலும், எகிப்தியர் இடை-கடை ஆட்சிக் காலங்களிலும் அவ்விரு நாடுகளிலும் இந்தியப் பொருள்களே கிடைத்தில போலும்![18]

நிறைக் கற்கள்

கல்லால் செய்யப்பட்ட நிறைக் கற்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் வழவழப்புடனும் பளபளப்புடனும் காணப்படுகின்றன. நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்று அளவுகளும் ஒரே முறையில் இருக்கும்படி செய்துள்ள கற்களே பலவாகும். இவை மிகச் சிறிய அளவு முதல் 274938 கிராம் (gramme) வரை பல்வேறு நிறைகளைக் குறிப்பனவாக இருக்கின்றன, உச்சியிலும் அடியிலும் தட்டையாக்கப்பட்ட உருண்டை நிறைகள் அடுத்தாற்போல் மிகுதியாக இருப்பவை ஆகும். இவற்றுள் சில வியத்தகு பேரளவைக் குறிப்பன. மூன்றாம் வகையான நிறைகள் உருண்டு நீண்டனவாக இருக்கின்றன. இம்மாதிரி நிறைகள் சுமேரியா, ஏலம், எகிப்து ஆகிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. வேறு சில நிறைகள் இன்றைய விறகு விற்கும் கடைகளில் இருப்பவை போலப் பெரியனவும் உச்சியில் வளையத்திற்கு அமைந்த துளை உடையனவுமாகக் காணப்படுகின்றன. அவை கூம்பிய உச்சியை உடையன. அவற்றுள் ஒன்று 25 கிலோவுக்கு மேற்பட்ட நிறையுடையதாக இருக்கிறது. பெரிய வியாபாரத்திற்கே அக்கற்கள் பயன்பட்டனவாதல் வேண்டும். இந் நால்வகைக் கற்களும் கருங்கல், பளிங்குக்கல், பச்சைக்கல், மங்கிய சிவப்புக்கல் முதலிய பலதிறப்பட்ட கற்களால் அழகுறச் செய்யப்பட்டுள்ளன. சிந்து வெளியினர். இக்கற்களை வேண்டிய வடிவத்தில் வெட்டி, சானைக்கல் போன்ற கற்பலகைமீது நன்றாகத் தேய்த்து, இறுதியில் மெருகு கொடுத்து வந்தனர். ஒரு நிறைக்கல்லிலேனும் ‘எண்’ இடப்படாதது வியப்புக்கு உரியது. சிறு கூழாங்கற்களும் நிறைகளாகப் பயன்பட்டன.

நிறை அளவுகள்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த நிறைகளையும் ஹரப்பாவிற் கிடைத்தவற்றையும் செவ்வையாகச் சோதித்த அறிஞர் ஏ.எஸ்.ஹெம்மி என்பவர். அவர், சிறிய நிறைகள் இரட்டை எண்களைக் குறிப்பன. பெரியவை தசாம்ச பின்ன அளவை உடையன. அவை 1, 2, x8, 4, 8, 16, 32, 54, 160, 200, 320, 640, 1500, 3200, 5400, 8000, 12800 ஆகிய எண்களைக் குறிப்பன. ‘ஒன்று’ (குறிப்பிட்ட ஒரு நிலைத்த நிறை - ‘unit') என்பது 0.8565 கிராம் ஆகும். இவை முற்றும் சிந்து வெளிக்கே உரிய நிறைகள் ஆகும். இவற்றுள் ஒன்றிரண்டு பிற நாட்டு நிறைகளுடன் ஒப்பிடத் தக்கன ஆயினும், இந்நிறைகள் இயல்பாகவே செய்யப்பட்டனவே யாம்’, எனக் கூறியுள்ளார். இந் நிறைக் கற்கள் அளவிறந்தனவாக இருத்தலைக் காணின், மொஹெஞ்சொ-தரோ சிறந்த வாணிபப் பெருக்கமுடைய நகரமாக இருந்தது என்பது அங்கைக் கனிபோல் ஐயமற விளங்குகிறது.

தராசுகள்

தட்டுகள் செம்பாலும் தண்டு வெண்கலத்தாலும் செய்யப்பட்ட தராசு ஒன்று மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தது. அதன் தோற்றம் உயரியதாக இல்லை. எனினும், அதைக் கொண்டு அந்நகரத் தராசுகள் எளியவை எனக் கூறுதல் தவறு. நிறைகளை நோக்க தராசுகள் வன்மையுடன் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகும். நம் நாட்டு மண்டிக் கடைகளிலும் விறகுக் கடைகளிலும் பயன்படும் பெரியதராசுகள் பல அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்று டாக்டர் மக்கே கருதுகிறார்.

அளவு கோல்

அக்காலத்தில் அளவு கோல்களும் இருந்திருத்தல் வேண்டும். ஆனால், அவற்றுள் ஒன்றேனும் கிடைத்திலது. ஒரு சிப்பியின் உடைந்த பகுதியில் சில அளவுக் குறிகள் குறிக்கப் பட்டுள்ளன. அப்பகுதி நீளப்பகுதி ஒன்றின் துண்டாகும். அதில் இரண்டு வித அளவுகள் காணப்படுகின்றன. அவை தசாம்ச பின்னத்தைக் குறிப்பனவாகும். அக்காலத்தவர், இச்சிற்பிப் பகுதிகள் மீது தசாம்ச பின்ன அளவுகளைக் குறிப்பிட்டு, அப்பகுதிகளை உலோகத் தகட்டில் பொருத்திப் பதிந்திருக்குமாறு செய்து, நீட்டல் அளவைக்குப் பயன்படுத்தினர் போலும்! இந்தத் தசாம்ச பின்ன அளவைச் சிந்து வெளி நாகரிக காலத்திலும் அதற்குச்சிறிது முன்னரும் ஏலம், மெசொபொட்டேமியாவிலும் வழக்கில் இருந்தது. என்னை? இந்த அளவை பழைய எலமைட் சாஸனங்களிலும், மெசொபொட்டேமியாவில் உள்ள ஜெம்டெட் நஸ்ர் (Jemdet Nasr) என்னும் இடத்திற் கிடைத்த பண்டைச் சாஸனங்களிலும் காணப்படலாம் என்க.[19]

முத்திரை பதித்தல்

சிந்து வெளி மக்கள் விற்பனையான பொருள்கள் மீதும், பொருள்கள் நிறைந்த தாழிகள் வாய்ப்புறத்தில் உள்ள மூடி மீதும் பூட்டப்பெற்ற வீட்டுக் கதவில் இருந்தபூட்டுகள் மீதும் முத்திரையிட்டு வந்தனர்.[20] இவ்வழக்கம் இன்னும் இருந்து வருகிறதன்றோ? இத்தகைய் முத்திரைகளும் பிற இலச்சினை பதித்த தாயித்துகளும் பிற பண்டை நாடுகளில் களிமண்ணாற் செய்யப்பட்டிருந்தன. ஆனால் சிந்து வெளியில் அவை செம்பாலும் களிமண்ணாலும் செய்யப்பட்டுள்ளன.

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த சுட்ட களிமண் துண்டு ஒன்றில், நெற்றி நடுவே நீண்ட ஒற்றைக் கொம்புடைய குதிரைபோன்ற நூதன விலங்கின் உருவம் ஒரு புறம் பதிந்திருந்தது. மறுபுறம் நாணற்கட்டு ஒன்று கயிறுகொண்டு இறுக்கிக் கட்டப்பட்டு இருப்பது போன்ற உருவம் பதிந்துள்ளது. ஆகவே, இந்த முத்திரை, நாணலால் செய்யப்பட்ட பெட்டிகட்கோ கதவுகட்கோ பொருத்தும் தனிச் சிறப்புடையதாக இருத்தல் வேண்டும் என்று தீக்ஷத் கருதுகின்றார். இத்தகைய நூதன விலங்கு பதிக்கப்பட்ட முத்திரைகள் பல, மொஹெஞ்சொத்ரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன. சுட்ட மண்ணாலான முத்திரைகள் சில குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டுமே முத்திரையிடப் பயன்பட்டன.[21]




  1. Hyderabad Archaeological Society Journal, 1917, Mysore Archaeological Report, 1935.
  2. ‘Pre-historic Civilization of the Indus Valley, p.18.
  3. Mackay’s Further Excavations at Mohenjo-Daro’ p. 639.
  4. K.N.Dikshit’s Pre-historic Civilization of the IV’, pp 52, 56.
  5. Dr.E.J.H.Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’.p.640.
  6. Patrick Carletoo’s ‘Buried Empires’, pp. 160, 161.
  7. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the Indus Valley’, p.39.
  8. M.S.Vats’s Excavations at Harappa, ‘Vol, II, pl xci 193-199, 295.
  9. Dr.Mackay’s ‘The Indus Civilization’, pp.142, 154.
  10. Dr.Mackay’s ‘Further Excavations at M-daro, pp.215, 340.
  11. Patric Carletons’s ‘Buried Empires’, p. 148.
  12. எருதின் கால்களைப் போலச் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட பீடத்திலிருந்தே நாளடைவில் சிங்காதனம் தோன்றியிருக்கலாம் அன்றோ? இங்ஙனம் எருதின் கால்களைக் கொண்ட பீடத்தின் மீது அமர்த்தப்பட்ட பழமை நோக்கிப் போலும் பிற்கால நூல்கள். சிவனார் எருதை ஊர்தியாகக் கொண்டவர் (ரிஷப் வாஹனர்) என்று கூறுகின்றன!
  13. Mackay’s Further Excavations at Mohajo Daro. 641-643.
  14. Mackay’s ‘The Indus Civilization’, pp.196-197.
  15. K.N.Dikshit’s Pre-historic Civilization of the ‘IV’. p.12
  16. E.W.Green’s ‘An Atlas of Indian History’.
  17. Mackay’s ‘The Indus Civilization’, p. 19.
  18. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the I. V.’ p.57
  19. Dr. Mackay’s ‘The Indus Civilization’, pp.133-136.
  20. இப்பழக்கம் புகார் முதலிய துறைமுகப் - பட்டினங்களில் இருந்ததென்பதைச் சிலப்பதிகாரம் முதலிய சங்க நூல்களால் உணர்க
  21. K.N. Dikshit’s ‘Pre-historic Civilization ofthe IV’ p.44.