வர்ணாஸ்ரமம்/அத்தியாயம்-2

விக்கிமூலம் இலிருந்து


II

இலட்சியத்துக்காகவும், அந்த இலட்சியத்தை அடைய உதவும் கருவி போன்ற கட்சிக்காகவும், சொந்த நலனையும், உயர் பதவியையும் வெறுத்து ஒதுக்கும் வீரமும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் சகிப்புத் தன்மையும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால், அவரைத் தலைவராகக்கொண்ட கட்சியும் அதனைச் சார்ந்துள்ள மக்களும், முன்னேற்றமடைய முடியுமென்பது திண்ணம். அரண்மனை மாடியிலே அம்சதூளிகா மஞ்சத்திலே அமர்ந்துள்ள அரிவையை அடைய வேண்டி, ஆங்குச் சென்ற ஆணழகன், அகழியின் ஆழத்துக்கோ அதிலே அலையும் முதலையின் வாய்க்கோ அஞ்சினால், யாங்ஙனம் மங்கையைப் பெறமுடியும்! இலட்சியமெனும் எழிலுடையாளைப் பெற்று இன்புற எண்ணுவோரிற் பலர், அகழிக்கு அஞ்சி, புறத்தே நின்று புகைபடு மனமுடன் போரிட்டுக் கொண்டோ, புலம்பியோ கிடப்பர். ஒரு சிலருக்கே, உழவுக்கேற்ற விளைவு எனும் மொழிவழி நடக்கும் அறிவாற்றலுண்டு. அவர்தமைச் சலிப்பு அண்டாது. சாகசத்துக்கு அவர் பலியாகார். போலியைக் கண்டு ஏமாறார். புல்லரின் புன்மொழி கேட்டுப் புழுங்கார். தாக்கிய வேலினைத் தூக்கி யெறிந்துவிட்டுப், போர்க்குப் புகின் யார்க்கும் இது நேரல் முறையே என்பது தெரிந்து புலியுடன் போரிடுகையிலே, கிலி எனும் வலி கொளல்கூடாது. என்பதறிந்து, உயிர் கெடும்வரை, நெடு வரை போல் நின்று போரிடுவர் வீரர். கட்சிப் பணியும், களத்துப் பணி போன்றே, வீரருக்கு ஏற்றதேயன்றி, விலாவிலே விரக்திப்புழு நடமாடுவோருக்கோ, மனத்திலே சுயநலமெனும் குளவி கொட்டிடுவோருக்கோ ஏற்றதன்று. சிறுசெயல் புரிய மட்டுமே தெரிந்தோர்க்குப் பெருநெறி பிடித்தலரிது. கட்சிப் பணிக்கு இத்தகைய கடமையுணர்ந்த காவலர் தேவை. அதிலும், தூங்கிடும் இனத்தைத் தட்டி எழுப்பிடும் பணி, சாமான்யமானதன்று. நான், சர் சண்முகம் அவர்களை, இப்பணி புரிய முன்வரவேண்டுமென்றுதான் அழைக்கிறேன். அரசோச்ச அல்ல! அதற்கு ஆயிரம் ஆட்கள், நான் நீ என்று போட்டியிட்டுக்கொண்டு முன் வருவர் என்பது எனக்குத் தெரியும். பாணரையும் பாடினிகளையும் முன் அனுப்பிப் பரிசும் ஈந்து, பட்டம்பெற முயலும் பேர்வழிகள் பலருண்டு. மரம் பழுத்தால் வௌவாலை வாவெனக் கூவி அழைப்பானேன்! "போ" வெனத் துரத்தவே, ஆட்கள் வேண்டும். நான், சர் சண்முகத்துக்கு அனுப்பும் அழைப்பு, அரசோச்ச அல்ல - அரசு அமைக்க!! இரண்டுக்கு மிடையே உள்ள வித்தியாசம் பெரிது. நாவாயில் செல்ல அழைப்பதற்கும், நாவாய் கட்டிச் செலுத்துமாறு கூறுவதற்கும் உள்ள வித்தியாசம் போன்றது. சர் சண்முகத்தின் ஆற்றல், அரசாள்வதின் மூலமாக விளங்குவது எளிது; அனால், அரசு அமைப்பதன் மூலம் அவர் ஆற்றலின் சிகரம் காண்போம்! கரியைக் கொண்டு கரும்பு பறிக்கச் செய்வதா? மலைமரங்களையன்றோ முறித்திடச் செய்ய வேண்டும்! வேங்கையை அழைத்து விளாங்கனியை ஓடித்திடச் செய்வதா! சர் சண்முகத்தின் அறிவாற்றலுக்கேற்ற காரியம், அரசாள்வதல்ல, அரசு அமைப்பது! அவர் ஆண்ட கொச்சியிலே, சின்னாட்கள் மிஸ்டர் டிக்சன் எனும் முன்னாள் சேலம் கலெக்டரன்றோ அரசாண்டார்! கொச்சியோ, வேறு எந்தச் சீமையோ, ஆள்வது, கொங்கு வேங்கையின் வீரதீரத்துக்குச் சரியான வேலை கொடுப்பதாகாது.

மாசிடோனியா (Macedonia) மன்னன் பிலிப், தன் மகனுக்கு, அரணும் அழகும் அமைந்த அரசைத்தந்து சென்றான். மகன், அந்த மண்டல முடிதரித்து மட்டுமே ஆண்டிருப்பின், அவன் புகழ் மங்கியிருக்கும். இங்கும் எங்கும். இன்றும் என்றும், அவன் புகழ் எவரும் படித்து இன்புறுமாறு, அவன் தன் நிலையைச் செய்து கொண்டான் ! யாங்ஙனம்? தந்தை தந்த தரணியுடன் அமைந்தானில்லை. "அவன் மகன் இவன்" எனும் சொல் போய், "இவன் தந்தை அவன்" எனும் மொழி தோன்றுமாறு, அவன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். அஃது என்னையெனில், பிலிப் தந்த மாசிடோனியா நாட்டு எல்லையிலே நின்று விடாது, அலெக்சாண்டர், காற்றெனச் சுழன்று களம்பல கண்டு, நாடு பல வென்று, நானிலம் புகழ, இன்றும் வரலாற்றின் மூலம், வாகையுடன் வாழுகின்றான்.

"பொன் மூட்டையினைக் கழுதையின் முதுகிலே ஏற்றி, அக்கழுதையை அனுப்பினால், அது பிடித்து விடும் ஒரு பட்டினத்தை!” என்றுரைத்தானாம் பிலிப். அதாவது, இலஞ்ச இலாவணம் கொடுத்து எந்த இலங்கையையும் பிடித்துவிடலாம் என்றான்-- எங்கும் விபீஷணர் கிடைப்பர் என்ற எண்ணத்தால்! அலெக்சாண்டரோ, பொன்கொண்டு போனானில்லை, போருக்குப் போனான்;புகழொடு திரும்பினான்; தன் உயிரைப் பணயமாக வைத்து வீர விளையாட்டாடினான், வேந்தர்க்கழகு வேலியாளுதல், வீரர்க்கழகு வேலி கோலுதல் என்ற உரைக்கேற்ப, மாசிடோனியாவை மட்டுமே அலெக்சாண்டர் ஆண்டிருப்பின், கிரேக்க நாட்டிலேயோ, அதை ஒட்டிய நாட்டிலேயோ மட்டுமே அவன் பெயரை மாசிடோனிய மன்னருள் ஒருவன் என்ற பட்டியிலே படிப்பர்; உலகு அவனை அறிந்திராது. இன்றோ ! உலகு அறியும். உலகில் பலப்பல அழியும், அவன் புகழோ நிலைத்து நிற்கும்! அரசு ஆள்வதற்கும், அரசு அமைப்பதற்கும், வித்தியாசம் என்னை எனில், பிலிப்பின் மகனாக வாழ்வதற்கும் அலெக்சாண்டராகத் திகழ்வதற்கும் உள்ள வித்தியாசமென்பேன்! சர் சண்முகத்தை,நான், அவர் ஆற்றலறிந்தே அரசாள அழைக்காமல், அரசு அமைக்க அழைக்கிறேன். மரத்தில் பழங்குலுங்கும் வேளையிலே, மந்தி தாவுமானாலும், கனியுதிரும்! அதுபோலக் கட்சி கனியுந்தறுவாயிலே, கடுவனோ மந்தியோ களித்துக் கூத்தாடும், கனி கிடைக்குமெனும் கருத்தினால். ஆனால், தோட்டம் அமைத்துத் துரவு எடுத்து, நீர் பாய்ச்சித் தரு வளர்த்திடும் செயலே முக்கியமானது. சர் சண்முகத்தை நானழைப்பது, தீஞ்சுவை தரும் பதவிப்பலாவைப் பறித்திட அல்ல; அதற்குக் கீச்சிடும் கடுவன்களும்,மையலூட்டும் மந்திகளும் என்றுமுண்டு, எங்குமுண்டு, நான், சர் சண்முகத்தை அழைப்பது, திராவிடத் தனி அரசு அமைக்க, வெறும் பதவியில் அமரவல்ல. சர் சண்முகம் அவர்களைத் தலைவராக்கும் பணியினைத்தான் வேறு சிலர் மேற்கொண்டுள்ளனரே, பயமேன் உனக்கு, என்று கூறுவீர்கள். உண்மையிலே வேறு சிலர் வேண்டி அழைக்க வேண்டிய அளவு, சர் சண்முகம், தூர விலகி நிற்கலாமா,நிற்கிறாரா, நிற்பது ஏன் என்றகவலை எனக்கு. வினைமுற்றிய தலைவன், வீடு திரும்பாது, சோலையிலோ சாலை ஓரத்திலோ, தங்குவானேன் ? அவர், தமது அன்புக்கு இருப்பிடமான மனை புக, அழைப்பு வேண்டுமா? அதுவா, தமிழ்ப் பண்பு என்று, என்மனம் என்னைக் கேட்கிறது. அதுமட்டுமல்லவே? மகனே, வா! மாசிலாமணியே வா, வா! தலைமகனே வா, வா!-என்று வருக அந்தாதியைப் பலர் பாடப்பாட எனக்குப் பயந்தான் மேலிடுகிறது.

"ஊரைக் கலக்கி வைக்கும் ஊத்துக்காட்டு அம்மையே, நாட்டைக் கலக்கி வைக்கும் நல்ல பத்ரகாளியே, வேண்டி அழைக்கிறோமே வேலாத்து அம்மையே," என்று, சிலம்பைச் சுற்றி, உடுக்கை முழக்கி, உள்ளே சென்ற குடிவகை, ஆவி மயமாக வெளியே வருமளவு உரத்த குரலிலே அம்மனை வேண்டிக் கூவும், பூஜாரிகளை நான் கண்டிருக்கிறேன். அதன் பலனாக ஆவேசம் வரும். வந்ததும் ஊத்துக் காட்டாளோ, சோத்துக்குடையாளோ, பூஜாரியையும் பக்தர்களையும் பார்த்து, "ஆடுவெட்டிக் கொழிவெட்டி பூஜை ஏண்டா போடலே? ஆடிமாத நோன்புக்கு ஆறு இலை போடலே, வேண்டிக் கொண்டபடி விருந்து படைக்கவேயில்லை! என்று கோபத்தைக் கக்கக் கேட்டிருக்கிறேன். அது போன்ற பூஜை போடும் முறை, அரசியலிலே, மகா ஆபத்தாயிற்றே என்றன்றோ நான் அஞ்சுகிறேன். மேலும், கட்சிப்பணி புரியத் தலைமைப் பதவி தேவையா என்பது, ஆழ்ந்து பதில் கூறவேண்டிய கேள்வி என்பதை அறிஞர் சண்முகம் அறிவார். பெரியார் கட்சித் தலைவராக இருக்கையிலேயே, அவர் பக்கநின்று சர் சண்முகம் பணியாற்றவும், தமிழகம் அதைக் காணவும், ஒருகாலம் பிறக்கக்கூடாதா! 'இதோ எனது குடும்பமுதியோர்' என்று பெரியாரைச் சர் சண்முகம் சுட்டிக்காட்டவும்,"நான் வயதேறியவன், இதோ என் இளமையின் உருவம்" என்று பெரியார், சர் சண்முகத்தைச் சுட்டிக்காட்டவும் ஆலுக்கு விழுது விட்டது என்று ஆரியர் இது கண்டு அஞ்சவுமான நிலைமை, ஏற்படக்கூடாதா! பெரியாரின் தவறுகள்- பெரியாரின் குறைபாடுகள் - அவர் செய்யும் பிடிவாதம்- அவருடைய ஆற்றல் குறைவு-என்ற இன்னோசன்ன கூறி, பெரியாரைக் கண்டித்துவிட்டு, அவராலேயே கட்சி நசித்துவிட்டது என்று பொய்யுரைத்துவிட்டு, ஆகவே சர் சண்முகம் வரவேண்டும், என்று அழைக்கும் தோழர்கள், உண்மையிலே சர் சண்முகம், தலைவராகவேண்டுமென்று விரும்பி இதைச் செய்கிறார்களா என்பதே என் சந்தேகம். நாசியற்று, நடுத்தெருவிலே கிடத்தப்பட்ட அகதியைப் பெரியார், இன்று கூரைவீட்டிலே குடியிருக்கச் செய்திருக்கிறார்; இனி மாடிவீடு கட்ட, சர் சண்முகம் வரட்டும், வர வேண்டும், வருவது முறையுங்கூட. அதைக் கூறாது, ஏழடுக்கு மாளிகையைப் பெரியார் குட்டிச்சுவராக்கி விட்டதாகவும், மண்மேட்டிலே மாளிகை அழைக்கச் சர் சண்முகம் வரவேண்டுமென்றும் கூறுவது அழகா, நீதியா, மனச்சாட்சிக்குச் சரியா என்று கேட்கிறேன். உண்மையிலே, சர் சண்முகம் வேறுவேறு இடங்கட்கு "இரவல்" அளிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கும் எனக்கும், தமிழர் யாவருக்கும் சொந்தமான மனை, அரசியல் மார்க்கட்டிலே, காங்கிரஸ் மார்வாடியிடம் சிக்கி, ஏலம் கூறப்பட்டபோது, மனையை மீட்டவர் யார்? இதனை மற்றவர் கூறுவதைவிட, சர் சண்முகம் கூறவேண்டும். சண்முகமாலை பாடப் பெரியாரை வசைபாட வேண்டுமா! சண்முக வரவு பெரியாரின் துறவாக முடியவேண்டுமா! இருவரும் இருக்குமளவு கட்சியிலே இடமில்லையா! தேரை விரைவாகச் செலுத்திச், சர் சண்முகம் தமது மனைபுகவேண்டுகிறேன். ஆயிரக்கணக்கிலே தொண்டர்கள் அவரை ஆரவாரத்தோடு வரவேற்பர்! சிலம்பொலியும் பூஜையும் வேண்டாது நேரே, நொந்துகிடக்கும் முதியவர் அருகே நின்று," பெரியாரே ! அஞ்சற்க! வினைமுற்றி நான் வீடு திரும்பிவிட்டேன். இனி உமது பணி குறைய, நான் உதவி புரிவேன். என் ஆற்றல் இனி நமது மனைக்குப் பயன்படும்" என்று கூறவேண்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாருக்கு அவர் அளித்த அறவுரையின், அடுத்த அதிகாரம், இதுவாக இருக்க வேண்டுமென்பது என் அவா ! அது ஈடேறுமா?

சர் சண்முகம் கட்சித் தலைவராக வேண்டும், என்ற பிரச்னையைக் கிளப்பும் வேலையுடன் வேலையாகப், பெரியாரைக் கண்டித்தும் சிலர் இருப்பது, உண்மையில் எனக்குப் பிடிக்கவில்லை. சர் சண்முகத்துக்கும் அது- பிடிக்காது என்றே நான் கருதுகிறேன். பெரியாரின் பெருந்தொண்டு, வரப்பும் வாய்க்காலும் அமைந்த கட்சிக்குமட்டுமல்ல, தமிழகத்துக்கே பெரிதும் பயன்பட்டதென்பதை மறுத்துப் பேசுவோர், நாளை சர் சண்முகத்தைச் சாடாமலா இருப்பர் ! தமிழரின் தன்மானத்துக்கே வித்தூன்றிய தலைவரின் வயோதிகப்பருவம், வாகைசூட்டி வாழ்த்தும் 'பக்தர்கள் ' நிரம்பியதாக இருப்பது முறை! அஃது. இல்லையே, என்ற குறையோடு மட்டுமன்றி, அவருக்கு வசைமாலை தொடுத்துச் சூட்டிடல் முறையாகுமா, என்று கேட்கிறேன்.

உலகிலே பலபல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசிய நாவலரையும் நானறிவேன். நெருப்பாறு தாண்டும் வீரரும் எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கும், பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்யாசத்தை உணரவேண்டுகிறேன். அவர்கள் படித்த,பக்குவ மனம் படைத்த கூட்டத்திலே பேசினர், அவர்களுக்கு எழுதினர். பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே, கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே, என்பதை அறியவேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலா வல்லவர்களும், வெறும் சாமியாடிகளைக் கண்டித்துப் பேசவும் சக்தியற்றுக் கிடந்தகாலை, பெரியாரின் பெருங்காற்றுத் - தமிழகத்திலே வீசி, நச்சு மரங்களை வேரோடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதை உணரவேண்டும். உணர்ந்திடின், கட்சித் தலைமையை ஏற்கச் சர் சண்முகம் வரவேண்டும் என்று எழுதுவதுடன், பெரியாரையும் சேர்த்துக் கண்டிக்கும் செயலை எவரும் புரியார். சர் சண்முகம், கட்சியின் நடுநாயகமாகத் திகழ்வதற்குப் பிறரின் தூண்டுதல் தேவையா! அதிலும் தூற்றல் முதலடியாகவும் தூண்டுதல் கடையடியாகவும் கொண்ட கவிதை, காதுக்கும் கருத்துக்கும் கேடுண்டாக்கும், கட்சியிலே கலகலப்பையும், அதன் மீட்சிப் பாதைக்கு வழி அடைப்பையும் உண்டாக்கும் என்பது என் அபிப்பிராயம். அதனை நான் வெளியிட்டதற்குக் காரணம், பெரியாருக்கு வக்காலத்துப் பெறவேண்டுமென்பது அல்ல. அவர் எவ்வளவோ எக்ஸ்-பார்ட்டித் தீர்ப்புகளைக் கண்டு கடகடடுவனச் சிரித்து விட்டு, மடமடவென நடப்பவர். சர் சண்முகம் போன்றாரின் பணி, கட்சிக்கும், கட்சியின் மூலம் தமிழருக்கும் பயன்படவேண்டுமே என்ற கவலையினாலேயே, இதனை எழுதினேன்.

இன்றுமுதல் வேண்டுமானால் சர் சண்முகம், கட்சிப்பணி புரியத் தொடங்கட்டும், ஆயிரக்கணக்கிலே வாலிபர்கள் அவருடைய அணிவகுப்பிலே நிற்பர், அதைக் காணலாம். கட்சியின்பொருட்டுக் கொள்கைக்காகத், திராவிடத் தனி அரசு அமைக்கத் தியாகமும் வீரமும் உடனிற்கச் சர் சண்முகம், போர்க்கோலம் பூண்டால், எத்தனையோ வாலிபர்கள், தங்கள் வாழ்க்கையினைத் திரணமாகக் கருதித், தீயிலே குதிக்கவுந்தயாராவர். ஓராண்டு கட்சித் தொடர்பு, ஈராண்டு கட்சிநிழல்,மூன்றாண்டு கட்சி முறுவல் பெற்றோரும், இன்னமும் எனக்கொரு பதவியில்லையா, பட்டம் கிட்டவில்லையா, என்று கேட்டிடுவது என்போன்றவர் உள்ளத்தை என்ன பாடுபடுத்துகிறது, என்பதை விவரிக்கத் தேவையில்லை, இத்தகையோர் மத்தியிலே இருந்துழலும் ஒரு சில உண்மைத் தொண்டர்கள், உள்ளம் ஒடிந்துபோவதும், விழலுக்கு நீர்வார்த்துக் கெடுவானேன் என்று எண்ணுவதும் சகஜந்தானே! இந்நிலையை நீடிக்கவிடுவது, திராவிடத்தைக் கெடுப்பதாகும் என்று எச்சரிக்கிறேன், விசனத்தோடு, கட்சித் தலைவர் மாறவேண்டுமென்பதற்காகப் பெரியாரைக் கண்டித்து எழுதுவது முறையாகாது என்பதையும், கட்சிக்குப் பணிபுரிய, தலைமைப் பதவி இன்றியமையாததல்ல வென்பதையும், தியாக உணர்ச்சியுடன் தொண்டாற்றும் திறன் உள்ள தலைவர் வேண்டுமென்பதையும், இன்று நமக்கு வேண்டிய தலைவர் அரசாள அல்ல, அரசு அமைக்க, என்பதையும் எடுத்தெழுதினேன். இவ்வளவும், வர்ணாசிரமம் ஒழிக! என்ற பரணியைப் பல்கலைக் கழகத்திலே, அன்று சர் சண்முகம் பாடின தன் விளைவே. எனக்கு எவ்வண்ணம் இப்பரணி, எழுச்சியை ஊட்டிற்றோ, அதேபோலே, இந்து, மித்திரன், முதலிய ஏடுகட்கு எரிச்சலையூட்டிற்று. பாசிபடர்ந்த மனத்தினிடம் நான் பரிசுத்தத்தை எதிர்பார்க்கவில்லை. எனவே அப்பத்திரிகைகளின் போக்கு எனக்கு வியப்பூட்டவில்லை. அவை கக்கிய கண்டனம், காசநோயாளியின் இருமல்போல, அவைகளின் நோய்க்குள்ள குறிகளேயன்றி வேறல்ல; எனவே பரிதாபமன்றிச் சீற்றமெழவில்லை, அவற்றிடம். ஆனால் அவைகளிலே ஒன்றான மித்ரன், கண்டனத்தினூடே கோத்திருந்த ஒரு கருத்து, என்னைச் சற்றுச் சிந்திக்கச் செய்தது, தோழர்களே ! சற்றுச் சோகத்தையும் தந்தது.

சர் சண்முகம், வகுப்புத் துவேஷம் வளர்க்கிறார், என்றுரைத்தது மித்ரன். இது, பழய பஞ்சாங்கத்திலே ஒருபகுதி ! அதுகண்டு நான் ஆச்சரியப்படவுமில்லை ஆயாசப்படவுமில்லை. "நாசமாய்ப் போனவன், மணி பன்னிரண்டாகியும் தூங்கக் காணோமே" என்று கைநொடிப்புடன் கூறுவாள் கள்ளி. காமவேசனையாலும், அதனைத் தீர்த்திடும் கள்ளப் புருடனாலும் பீடிக்கப்பட்ட கள்ளிக்குக் கணவன் விழித்திருப்பது கூடக் குற்றமெனத் தோன்றலாம். விபசாரியின் இந்த விசாரத்தைக் கண்டு, அபசாரம் அபசாரம் என்று கூறும் பேர்வழி, ஆண்மையற்றவனாகத்தானே இருக்கமுடியும் ! வில்லுக்கு ஒரு அம்பு, பல்லுக்கு ஒரு எலும்பு, அதுபோல் பாதிராத்திரி வேளையிலே பக்கத்துக்கோர் ஆள்,தேடும் பாதகியின் மொழியைத் துச்சமெனத் தள்ளிடுதல்போல, நான் ஆரிய ஏடுகளின், கண்டனமொழிகளைத் துச்சமாகவே கருதுகிறேன். ஆனால் மித்ரன் ஒன்று எழுதிற்று, என் உள்ளம் கொஞ்சம் வேதனையடைந்தது. சர் சண்முகம் வர்ணாசிரமக் கோட்டையைத் தகர்க்கவேண்டுமென்று கூறுகிறார். அவர் நமது பழய நூற்களின் அருமை பெருமைகளை இப்போதுதான் கொஞ்சங் கொஞ்சம் தெரிந்துகொண்டதாகக் கூறுகிறார். இனி, அவைகள் முழுதும் உய்த்து உணர்ந்துவிட்டால், வர்ணாஸ்ரமக் கோட்டையைத் தகர்க்கும் எண்ணத்தையே, அவர் கைவிட்டு விடுவார் !-என்று மித்ரன் எழுதிற்று.

சர் சண்முகம், கலையின் உயர்வுபற்றி, தமிழ்க் காப்பியங்களின் அருமை பெருமை பற்றிப் பேசினாரல்லவா! அதை மித்ரன், தனக்குச் சாதகமாக உபயோகிக்கிறது. வர்ணாசிரமத்தை ஒழிக்கவேண்டுமென்ற எண்ணம் ஒருநோய், தமிழ்க்கலையுணர்வு அதனை நீக்கிடும் ஒரு மருந்து ; மருந்துபோன்ற அந்தக் கலையுணர்வினைச் சர் சண்முகம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு வருகிறார். இன்னும் மருந்தினைச் சற்று அதிகமாகப் பருகினால்,நோயேபோய் விடும், என்ற தொனியிலே மித்திரன், தனது தம்பூரை மீட்டுகிறது. இது வெறும் நாரதகானமாக இருக்கக் கூடும். வர்ணாசிரமம் நோயா, வர்ணாசிரமத்தை ஒழித்தாகவேண்டும் என்ற விருப்பம் நோயா, எது நோய், என்பது வேறு விஷயம். கலை, மருந்தா விருந்தா, என்பது வேறு விஷயம். அறிஞர் யாவரும், நாட்டை நலியச் செய்த நோய், வர்ணாசிரமம் என்றே கூறினர். வர்ணாசிரமத்தை மித்திரன், நாட்டைவளமாக்கும் வனிதாசிரமமாகக் கருதலாம், மித்ரபலம் பெருக அது ஏதுவாகக் கூடும்: அதுவும் வேறு விஷயமே. வர்ணாசிரமத்தை ஒழிக்கும் எண்ணம், பழங்காப்பியப் படிப்பினால் பாழ்பட்டுவிடும், என்ற கருத்தை மித்திரன் வெளியிட்டிருக்கிறது; உவமைத் தகராறுகளை ஒதுக்கிவிட்டால் இது விளங்குகிறது. இதிலே உள்ள சூட்சமம், என்னைச் சோகிக்கச் செய்கிறது. உண்மையிலேயே, கலை உணர்வு பெருகப் பெருக, தமிழர் என்ற இன உணர்வு அருகுமோ, அண்ணல் சண்முகத்துக்கும் இது நேருமோ, என்றே நான் அஞ்சுகிறேன். சர் சண்முகம், இதுபோது, தமிழ்க் காப்பியமெனும் பூங்காவிலே உலவுகிறார்

என்பதும், அங்குபறித்தெடுத்துத் தொடுத்த அழகிய மாலையினை வசந்த வட்டிலிலே வைத்துத் தமிழருக்குத் தருகிறார் என்பதும், கலாரசிகர்களுடன் கூடிக்குலவி, காவியக்கனி ரசமருந்திக்களிக்கிறார் என்பதும் பிறர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். மித்திரனும் அதனை அறிந்து, "சரி! சரி !! அந்த ரசம் இன்னும் கொஞ்சம் உட்கொண்டால், வர்ணாசிரம ஒழிப்பு என்ற பேச்சு ஒழியும். என்று எழுதுகிறது. இது என்னைச் சிந்தனையிலாழ்த்திற்று. இனி அச்சிந்தனை பற்றிக் கூறுகிறேன். இதுபோது நீவிர் சற்றே உமது சிந்தனையைச் செலவிட வேண்டுகிறேன். மித்திரன் கூறின வாசகத்தின் மர்மம் என்ன?

அழகான அந்திவானம்! ஆற்றோரத்திலே நாரை, கவலையுடன். கண்கள் முழுதும் திறந்துமில்லை, முழுதும் மூடியுமில்லை. கபடம் நிறைந்தவிழி, நாரைக்கு. நின்ற கோலத்திலே, தவங்கிடக்கிறது நாரை; சாதாரண ரிஷிகள்போலத் தனது முக்தி கோரியல்ல! ஆற்றிலே துள்ளிக் குதித்து அல்லற்படும் மீன்களுக்கு, முக்தி தர!! எந்த ஆற்றோரத்திலும், பிற நீர் நிலையங்களிலும், நாரை நின்றிடும் இக் காட்சியை எவரும் காணலாம். கல்லெடுத்து வீசிடின், நாரை சென்றுவிடும். ஆனால் கவிதையை வீசி, அந்தக் காட்சி, என்றும் கருத்துள்ளோரின் மனதைவிட்டு அகலாதவண்ணம் ஒருவர் நாரைக்கு "அமரத்துவம்" அளித்துள்ளார். நாரை மீனைக் கொத்தித் தின்பதற்காக, அடக்கமே உருவானதுபோல, அங்குக் காத்திருக்கிறது அதன் தீய எண்ணம் துளியும் வெளியே தெரியாதபடி.நாரை நடிக்கிற நேர்த்தியைக் கவிஞர் காணுகிறார். மீன் தேடிடும் நாரை, ஆற்று நீரிலே இறங்கி அலையக்காணோம், வட்டமிடவுமில்லை, பதைக்கவில்லை; வேறு ஏதோ காரியத்துக்காக, அல்லது வெறும் பொழுதுபோக்குக்காக அந்த ஆற்றோரத்தை அடைந்தது போலப் பாவனை புரிகிறது. அந்த நாரையின் நினைப்பு முழுதும், மீனின் மீது ! நடிப்போ,சர்வ பரித்தியாகத்துக்கும் தயாராக இருப்பதுபோல் ! இதைக் கண்ட கவிஞர், பறவை இனங்களிலே இவ்வளவு கவடம் கற்றதாக நாரை இருப்பதுபோல, மக்களிலே யார் உளர், என்று எண்ணாமலிருப்பரா? கற்றோர்க்கும் மற்றையோர்க்கும், இதுதானே வித்யாசம்! கற்றோர், காட்சியுடன் கருத்தினைப் பிணைப்பர். மற்றையோர், காண்பர், களிப்பர், மறப்பர்! கவிக்கு, ஆற்றோரத்திலே நாரை நிற்கும் காட்சி, வஞ்சகத்தை மறைக்கும் நடிப்பு, மக்களிலே ஒருசாராரின் மனப்பாங்கையும் நடவடிக்கையையும் நினைவூட்டுகிறது. உவமை கண்டு உளம் களிக்கிறார். இயல்பினால்மட்டுமே உவமையன்று? இடமுங்கூட, ஒன்றாகவே இருக்கும் உவமை அவருக்குத் தோன்றுகிறது. அதே ஆற்றங்கரைகளிலே, செவ்வானம் தோன்றும் வேளையிலே, நாரை போலவே, நினைப்பை நடிப்பால் மறைக்கும் ஒரு கூட்டத்தாரின் குணம் அவருக்கு நினைவிற்கு வருகிறது; ஒரு நேர்த்தியான கவிதையும் பிறக்கிறது, கவிஞரின் உள்ளத்திலிருந்து.


"பொன்மலைசுடர் சேரப்
புலம்பிய விடனோக்கித்
தன்மலைந்துலகேத்தத்
தகைமதியேர்தரச்
செக்கர்கொள் பொழுதினா
னொளி நீவியிள நாரை
முக்கோல்கொள் அந்தணர்
முதுமொழி நினைவார்போ

லெக்கர்மேலிறை கொள்ளு......."

நாரையைக் கண்டதும், பார்ப்பனரின் நினைவு, கவிக்கு! ஆற்றோரத்திலே, அந்திவானத்திலே, நிற்கும் நாரை, மந்திர உச்சாடனம் செய்வதுபோன்ற பாவனை யுடன், நீர்நிலையங்களருகே நித்த நித்தம் அமர்ந்துள்ள, பார்ப்பனரின் உருவம் போன்றிருந்ததாம் கவிக்கு! எந்தக் காலத்துக் கவி? கவித்தொகைகாலம்!! அந்தக் காலத்திலேயே, ஆரிய இனம், காரியம் பலிக்கக் கவட வேடமிட்டுக் கிடந்தது என்பதற்குச் சான்றுகள் அனேகமுண்டு. இன்றும் அந்த இயல்பு கொஞ்சமும் மாறாது தானிருக்கிறது. நாரைபோல நின்றிருக்கும் நடிப்புத் திறனை அந்த இனத்தவர் செம்மையாகச் செய்வர்.

கலை எனும் அருவியோரத்திலே, ஆரிய நாரைகள் அமர்ந்துள்ளன; கலையருவிக் காட்சியிலே, தம்மை மறந்திருப்பதாகப் பாவனை! முதுமொழி நினைவார் போல, கலையின்பத்தையே நினைத்தவண்ணம், ஆரிய காரைகள் அமர்ந்துள்ளன. இரையும் வேண்டாம் இந்த இன்பமே போதும், என்று கூறுவர்! இதிலுள்ள உண்மையின் உயர்வும், நேர்த்தியும், வேறு எதிலே காணமுடியும் என்றுரைப்பர். வேறொன்று வேண்டாப் பராபரங்களாக, வழிபாடன்றிப் பிறிதோர் பெறத்தக்க பேறில்லை என்ற பெருங் குணவான்களாக, மன இருள், கலை ஒளிபட்ட மாத்திரத்திலே, அடியோடு தொலைந்ததென்று கூறும் ஞானவான்களாக, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று உபதேசிக்கும் உத்தமர்களாக, அறிவு பெரிது, அதனினும் பெரிது அறிவின் பயனாக விளையும் ஆனந்தம், அதனினும் பெரிது, அந்த ஆனந்தத்தை அனைவரும் பெற்றிடச் செய்தல் என்று கூறிடும் ஆசிரியர்களாகக் காட்சியளிப்பர். அவர்தம் நெஞ்சமோ,ஓர் எரிமலை! விழியோ, எவர் உழைப்பை எங்ஙனம் ஏய்த்துப் பெறுவது என்ற தந்திரத்தைக் கக்கும் குழிகள்! அருவியோரத்து நாரையின் நினைப்புத் துள்ளிக் குதித்திடும் மீனினத்தின்மீது ! ஆரிய நாரைகட்கோ, கலையருவியில் குளித்து இன்புற வேண்டிவரும் தமிழரைக் கொத்தித் தின்பதன்றி வேறில்லை. கலையருவியே, இக்காரணத்திற்குத் துணையாக நிற்கிறது. கடிவாளத்திற்கு வாய் திறந்த பிறகு, குதீரையின் கொட்டம் அடக்கப்படுவது ஆச்சரியமாகுமா? மூக்கணாங்கயிற்றுக்குச் சம்மதித்த பிறகு, மூலைவாரினால், சாட்டைதானே பேசும்! அதுபோலத்தான், கலையருவியிலே நீந்தி மகிழத் தொடங்கிவிட்டால், ஆரியநாரைகளின் கூரியமூக்கின் வேலையும் தொடங்கும். கலையருவி அங்ஙனமுளது இங்கு. எனவேதான், "சரி, சரி, செட்டியாரே ! கலை உணர்வு பெற்றுவருகிறீர்களல்லவா! அந்த உணர்வு இன்னும் கொஞ்சம் அதிகரிக்கட்டும், பிறகு ஆரிய திராவிடப் போராட்டத்திலே உமக்கிருக்கும் ஆர்வம், பஞ்சாகப் பறக்கிறது. பாரீர்" என்று மித்திரன் கூறுகிறது.

"ஒரே ஒரு செங்கல் பெயர்த்துவிட்டால் போதும்!" என்று கருக்கலிலே நின்று கன்னமிடும் கள்ளன் கூறுவான்.

"கண் சிவந்துவிட்டது. கைகால் துடிக்கிறது. பேச்சும் படபடக்கிறது. இன்னும் ஒரேஒரு கிளாஸ் குடித்துவிட்டால் போதும், ஆசாமி கீழேசாய்வான். பிறகு அகப்பட்டதைச் சுருட்டலாம்" என்று மதுவை ஊற்றி மடியைத் தடவும் தடியர் கூறுவர்.

"இப்போதுதான் என்னிடம் அவருக்குப் பிரேமை அதிகரிக்கிறது. இது இன்னும் கொஞ்சம் வளர்ந்துவிட்டால் போதும், பிறகு நான் சொன்னபடி ஆடுவார்; சொத்து முழுவதையும் எழுதிக் கொடுத்தாகவேண்டும் என்று கட்டளையிட்டாலும் தட்டாமல் செய்வார்'" என்று கண்வெட்டால் கருத்தைவெட்டிய காமக்கள்ளி, தன்னிடம் சிக்கிய சீமானைக் குறித்துக் கூறுவாள்.

"முகத்திலே இன்னும் ஒரே ஒரு குத்துவிழுந்தால் போதும், ஆசாமி கீழே விழுவான். தங்கத்தோடாவும் வெற்றிமாலையும் நமக்குத்தான் " என்று கூறுவான், குத்துச்சண்டைப் பந்தயத்திலே ஈடுபட்டவன்.

"இன்னும் சில நாட்களில் ஆசாமி சிவலோகப் பிராப்தியடைவான். பிறகு நானே சீமான், நமதே வாழ்வு" என்று லோபியின் வாரீசு கூறுகிறான்.

இந்த "ரகங்களிலே" எதை நீங்கள், மித்ரன் வாசகத்திற்கு உவமையாகக் கொள்வீர்களோ, எனக்குத் தெரியாது தோழர்களே ! எனக்கென்னமோ, இவ்வளவும் இன்னும் பலவும் தோன்றின, மித்திரன், சர் சண்முகம், பண்டைக் காப்பியங்களை மேலும் நன்றாகப் படிப்பாரானால் வர்ணாசிரமக் கோட்டையைத் தகர்க்க வேண்டுமென்ற நினைப்பையே விட்டு விடுவார், என்று எழுதி இருந்ததைப் படித்தும். சூட்சுமமின்றிச் சுதேசமித்திரன் எழுதாதே, வீணுக்கு வார்த்தையை வீசிடாதே, இந்த வாசகத்திற்கு விசேஷார்த்தமின்றி மித்திரனில் இடம்பெறாதே, என்று எண்ணியே ஏங்கினேன். சென்ற கிழமையே உம்மிடம் இயம்பினேன்; இக்கிழமை, அதுகுறித்துச் சிந்தித்தேன்; செக்கர்கொள்வானமும், சிந்துபாடும் சிற்றாறும்,நின்றிடும் நாரையும், நினைவிலே நின்றன!

"வர்ணாசிரமம் ' என்ற தலைப்பிலே, கலைப்படிப்பு, ஆரியக்குழியிலே, தமிழரைத் தள்ளக்கூடியதாக இருக்கிறது என்று எழுதுகிறாயே, சர் சண்முகம், தமிழ்க்கலையிலே ஆர்வங்கொண்டிருப்பதால், நல்லது விளையுமேயன்றி நாசமா நேரிடும். விளக்கு, என்று அன்பரொருவர் கேட்கிறார். பழைய காப்பியங்களைப் படிக்கப் படிக்க, ஆரிய திராவிடப் போராட்ட உணர்ச்சி ஒழியும் என்பது, ஆரியருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஆகவேதான், தற்காலப் புத்தறிவுப் பிரச்னைகளைப்பற்றிப் பேசும்போதும் எழுதும்போதுங்கூடப், பழைய ஏடுகளுடன் அவைகளை இணைத்துக் காட்டுகின்றனர். இரு கருத்துகள் அவர்கட்கு, இரண்டும் இடையூறு உண்டாக்குவனவே ! ஒன்று இன்றைய உலகிலே புதிதாக ஒரு அறிவும் இல்லை, பழமையிலேயே யாவும் உள, என்று பேசுவதன்மூலம், புத்துலக உணர்வு வராமல் தடுப்பது.மற்றொன்று, அத்தகைய பழமை உணர்வின்படி நிற்பின், வர்ணாசிரமம் நிலைக்கும் என்பது. இவ்விரண்டும், நாட்டுமக்களை நலியவைத்து, "முகத்துதித்தோரை" முடிசூடா மன்னராக்கும் முறைக்குப் பயன்படுகின்றன. எனவேதான், நான் கலையருவியிலே கவலையுடன் ஆரியநாரை அமர்ந்திருக்கிறது, அதைக் கவனத்தில் வையுங்கள் என்று கூறினேன்.

எந்தச் சந்தர்ப்பத்தையும் நழுவவிடாதே! எதையும் உனக்குச் சாதகமான தாக்கிக் கொள்ளத்தவறாதே! என்பவை, ஆரியரின் இலட்சியம், இரண்டாயிரம் ஆண்டுகளாகவே! இதன்படியேதான், கலையையும் அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் புகுத்தும் கருவியாக்கினார்கள். உணவு கண்முன் ஊசலாடுகிறது. என்ற உவகையுடன் துள்ளிக் குதிக்கும் மீனுக்குத் தூண்டிலே தூக்குமரமாகிறது! அதுபோலக் கலையழகு காண்போம் என்று எண்ணிப், பழமைமுன் கூத்தாடும் தமிழர், ஆரிய ஆதிக்கத்திலே சிக்கிவிடுகின்றனர். ஒரு சிறு சம்பவம். புத்துலகப் பற்றுக் கொண்ட ஒரு திருவாளரின் திருமனையிலே நடை பெற்றது, கற்பனையல்ல ; ஆனால் கண்ணியமான முறைக்காகவேண்டி, பேருக்கு முகமூடியிட்டிருக்கிறேன், உமது மன்னிப்பை எதிர்பார்த்து.

"வாருங்கோ! நேற்றுமாலை நெடுநேரம்வரை காணோம், எங்கே போயிருந்தீர்கள்?" கேட்டார் புத்துலகப் பற்றுடையார். பழமையாளர் சொன்னார் "பரதநாட்டியம் காணச்சென்றேன். பரமானந்தம் கொண்டேன். பாத்திரம் முதல்தரமானது. அபிநயம் அபாரம். கீதம், லலிதமாக இருந்தது" என்று. புத்துலகப் பிரியருக்கு நடனங் காண ஆவல் பிறந்தது, கலைக்காகத்தான்! கண்டார். "கண்டவுடன் எந்தன் உள்ளம் கொள்ளைகொண்ட கள்வா" என்ற சகானா பாட்டுக்கு அபிநயம் அழகுற நடந்தது. அம்மையும் கலைக்காகத்தான் அதனை நடத்தினார். இருவரும் தங்களை அறியாமல் கட்டிலறை நோக்கி நடந்தனர், அதுவேறு விஷயம். பிறகு, நர்த்தனத் தத்துவந்தான் நடராஜர், என்று புத்துலகப்பிரியருக்குப் பழமையாளர் புகன்றார். விக்ரகம் வாங்கப்பட்டது, அந்தத் தூக்கிநின்றாடும் காட்சியிலே, கூத்தின் விளக்கங்காணத்தான், வேறு எதற்குமல்ல; காலையிலே காண்பார், கலையழகை எண்ணுவார், கூத்தனின் சிலை மூலம். பிறகு பழமையாளர், விக்ரகத்தை வீணாகப் பாழாக்குகிறீர். நீராட்டாது விட்டீரேல், அது பாசி ஏறிப் பாழ்படுமே" என்றுரைத்தார். ஆமென்றார் புத்துலகர். அபிஷேகம் என்ற முறையிலே அல்ல. விக்ரகத்தைத் தூய்மையாக வைத்திருப்பது என்ற முறைக்காக, நீராட்டி வரலானார்.

"பளபளப்பான சிலைக்கு ஒரு பட்டுத் துண்டும் கட்டிப்பாருங்கள். அதன் அழகே அலாதிதான்" என்றார் திருவாளர் பழமை, மிஸ்டர் புதுமை, "இது ஒரு பிரமாதமா, கொண்டுவா, கொள்ளேகாலம் பட்டு வேஷ்டி" என்றார். "வீட்டிலே, பறிப்பாருமின்றி மலரும் மலர், உமது அறையிலே மண மூட்டட்டும். அதைப்பறித்து மாலை தொடுத்துக் கூத்தன் சிலையிலே போட்டுவிடுங்கள்" என்றார், பழமை. அதுவும் நடந்தது. "உங்களுக்கிருக்கும் வேலையிலே, காலையிலே இந்தக் காரியங்களையெல்லாம் எப்படிச்செய்து கொண்டிருக்க முடியும், யாராவது ஒரு ஐயனை வேலைக்கு வைத்து விடுங்கள்" என்று பழமை யோசனை கூறினார். ஐயரும் வந்துசேர்ந்தார். அவர் தமது வேலையைச் சரியாகச் செய்கிறாரா என்று பார்க்கக் காலையிலே மிஸ்டர் புதுமை செல்லலானார். ஐயர், விபூதிமடலை நீட்டினார். இரண்டொரு வாரங்களிலே "குனித்தபுருவம் எனும் தோத்திரம் பாடவும், கூத்தனை எட்ட நின்று கும்பிடவும், குடும்பக்கோயில் குருக்கள் தரும் குங்கும விபூதியைப் பயபக்தியுடன் வாங்கவும், மிஸ்டர் புதுமை பழகிவிட்டார். திருவாளர் பழமை "தீர்த்துக்கட்டிவிட்டோம் ஒரு தீப்பொறியை" என்று தமது குறிப்புப் புத்தகத்திலே பொறித்துக் கொண்டார்.

இதுபோலக் கலையிலே தொடங்கி ஆரியவலையிலே வீழும்வரை பலர் சென்று விடுவதைக் கண்டதாலேயே நான், "கலையின் பேரால் ஆரியர் நடத்தும் சூது இது, எச்சரிக்கை" என்றுரைக்கிறேன்.

பழைய காப்பியங்களைப் படித்துக் கலையுணர்வு பெறுவது, இன எழுச்சியைச் சாகடிக்கும் நச்சு, என்ற மித்திரன் வாசகம், ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதென்பது என்கருத்து. ஒருவரை மற்றொருவர் அடிமைகொள்ள, வசியப்படுத்த, வீழ்த்த, வகை பல உண்டு. முறை பல உண்டு. வீரர் வேல்கொண்டு போரிடுவர், தமது ஆற்றலையே, ஆதிக்க அளவுகோலாகக்கொண்டு. வீரமற்று வஞ்சக உள்ளங் கொண்டோர், மறைந்திருந்து தாக்குவர், மாற்றாணை மாய்த்திட எம்முறையும் ஏற்றதே என்று கூறுவர். மராமரங்களுக்குப் பின்புற மிருந்து வாலியைக்கொன்ற ஆரிய இராமன்போல! நண்பனாக நடித்து நயவஞ்சகத்தால் காரியத்தைச் சாதிக்கும் கயவரும் உண்டு! எதிர்ப்போனின், உடன்பிறந்தாரையோ, ஏவலரையோ, விலைக்குப்பெற்று, விபீஷணாஸ்திரத்தால் வீரனை வீழ்த்தும் வகையுமுண்டு. மாயமொழி பேசியும் மாற்றானை மாய்ப்பதுண்டு ! எதிரியின் ஏமாளித்தனத்தைத் தெரிந்து அவனைச் சாய்ப்பவருமுண்டு. உலகம் பலவிதம். கரியைப் பிடித்திழுத்துக் கரகர வெனச் சுழற்றி அடிக்கும் வீரனானாலும், காமவல்லிகளின் கடைக்கண் பார்வையாலோ, புன்சிரிப்பெனும் பாணத்தாலோ, அதரமெனும் அஸ்திரத்தாலோ, அடியற்ற நெடும் பனையாவதுமுண்டு. தேவர்கள் யாவரையும் தீர்த்துக்கட்டும் மாவலிபெற்ற அசுரர்கட்கு, அமிர்தம் தந்திடின், அமரர் உலகு அசுர உலகாகுமென்றெண்ணிய அரி, அழகி உருக்கொண்டு ஆடிப்பாடி அசுரரை ஏய்த்த சூது, ஆண்டவன் லீலையாகப்போற்றப் படும் இந்தநாட்டிலே, வேறுபலர், மோகினிருபம் வீரரை வீழ்த்தும் வேல் என்று கொண்டதிலே

ஆச்சரியப்படுவதற்கில்லை. "சர்வ வல்லமையுள்ளவரே, சாகசத்தைச் சக்கரமாகக்கொண்டே அசுரரை சம்ஹரித்தார் என்றால், சாதாரணமக்கள், அம்முறையைக் கையாளாமல் இருப்பரோ! இங்ஙனம், ஒருவரை ஒருவர் வீழ்த்தப் பல்வேறுவகையும், பல்வேறு கருவியும் இருத்தல் போலவே, ஒரு இனத்தை மற்றோர் இனம் அடக்கக் கையாளும் முறையும் பலவகைப்படும். தீப்பந்தமும் திடீர்த் தாக்குதலும் ஒரு முறையாக அமைந்திருக்கிறது! படையில் கலகமூட்டுவதும் பாசறை கெடுத்தலும், சிலசமயம் கையாளப்பட்டன. அடுத்துக் கெடுப்பதும், அணைத்து அழைப்பதும் சில சமயம் நடந்ததுண்டு. உலகிலே இதுபோல, இனப்போரின்போது, ஒவ்வோர் விதமான முறையைக் கையாண்டிருக்கிறார்கள். ஆரிய இனம் எப்படை கொண்டும் திராவிடரை வீழ்த்தவில்லை ; அப்புற்படையினருக்குப் போரிடும் ஆற்றலே இருந்ததில்லை. திராவிட இனம், ஆரிய தாசராக மாறிட ஆரியர் கையாண்ட முறை, கலையருவியிலே திராவிடரைத்தள்ளியதுதான்! எமது கலையழகைக் காணீர், என்றுகூறித் திராவிட இனத்தை மயக்கி, வீரரைக் கோழைகளாக்கி வீழ்த்தினர். அன்று வீழ்த்தியது மட்டுமல்ல, இன்றும், இனி என்றுங்கூட அந்தக் கலை எனும் அங்குசத்தால் திராவிடமெனும் மதகரியை அடக்கலாம், என்ற மனப்பான்மையுடனேயே ஆரிய இனம் இருக்கிறது. அதிலே ஓரளவு உண்மையும் இருக்கிறது.

மாயா உலகைத் துறக்க எண்ணினார் ஓர் மலையாண்டி. காவி அணிந்தார், காடேகினார். கடும் பசி வந்துற்றபோதன்றி கண்திறவார். கடுந்தவம் செய்துவந்தார். ஓர் மாலை, முல்லை மலர்ந்திருக்கக் கண்டார், நறுமணத்தைப் பெற்றார், நன்றுநன்றென நவின்றார். இரவு இறைவனின் திருவருளை வேண்டினார், உறங்கினார். காலையிலே, முல்லை கண்ட பக்கம் சென்றார், மலரைக் காணோம்! மகேஸ்வரனைச் சில விநாடி மறந்தார், முல்லையைப் பறித்தது யாரோ, என்ற சிந்தனையில் ஈடுபட்டார். அருகே, காலடிக்குறி கண்டார், சற்றுக் கோபங்கொண்டார். மாலைவேளையில் கைப்பிடியாகக் கள்ளனைப் பிடிப்போமென்று கருத்துட்கொண்டார் ; காயமே இது பொய்யடா என்றார் கண் மூடினார் கனிமரத்தடியிலே. மாலையில் சென்றார் முல்லைப் புதருக்கு. முழுமதியன்ன முகவதி, முல்லைச் சிரிப்புடன் நின்றிடக் கண்டார், முல்லையைப் பறித்த படி! "பேசா மலரைப் பறிக்கும் பேசும் மலரே!" என்று அழைத்தார். வணங்கினாள் வனிதை, வந்தவழி சென்றாள்; விழியை அப்பக்கமிருந்து வாங்கிட விரக்தி மார்க்க வித்தகருக்கு நெடுநேரமாயிற்று. மறுதினம் மாலை, மங்கை வருமுன்னம், மலரைப் பறித்தார். வந்ததும் வாஞ்சனையுடன் அவளிடம் தந்தார். தருகையிலே, கரத்தோடு கரம் சேரக் கருத்தோடு கருத்து மோதிக்கொண்டது. மறுதினம், காலைமுதல் காடு முழுதும்சுற்றி வகைவகையான புஷ்பங்களைப் பறித்தார் துறவி ; மாலைநேரத்திலே, முல்லைப் புதருக்கு ஓடோடிவந்தார், முல்லையைக் கொய்தார்; ஏன் இன்னும் அந்த இரஞ்சித சுந்தரி வரவில்லை என்று தன் நெஞ்சைக் கேட்டார். மங்கை வந்ததும், "இதோ மல்லிகை, இது முல்லை, செண்பகக்கொத்து, ரோஜா, இதோ செந்தாமரையும் உண்டு காண்" என்று, மலர்க் குவியலைக் காட்டினார். "மகானே ! இந்த மங்கையின் பொருட்டு இவ்வளவு சிரமமா?" என்று கேட்டாள் மங்கை. அன்று அந்த மது உண்டதால் புதிய உற்சாகம்பெற்ற நீறுபூசி, நீற்றையும் நிகண்டையும், நித்ய பூஜையையும் நிஷ்டையையும் துறந்தார் ; மலர் பறித்திடவும் மாலை தொடுத்திடவும், மங்கையைக் கண்டிடவும் மலர் தந்திடவுமே அவருக்கு, நேரமும் நினைப்பும் இருந்தது. இந்த 'சக்தி' பூஜையின் பயனாக, அவர் சன்யாச ஆசிரமத்திலிருந்து கிரஹஸ்தாசிரமம் புகுந்து,மாயா உலக பந்தம் வேண்டேன் என்ற மனனத்தைத் துறந்து மனையறம் படித்து, அந்த ஊரிலேயே முதல்தரமான புஷ்பம் விற்பவரானார், என்றோர் கதை உண்டு. கலை இங்குள்ள நிலையிலே, அதிலே இலயிப்பவர் கதியும், மலையாண்டி மனையாண்டியானதுபோலத் தான் முடிகிறது, என்று நான் எண்ணுகிறேன். கலா ரசிகராகத் தொடங்கும் வாழ்க்கை கனபாடியின் தோழராக்கி, பக்தராக்கி, ஆரிய அடிமையாக்கி விடுகிறது. அந்த விதத்திலே கலை அமைந்திருக்கிறது. சங்க நூற்களிலேயுங்கூட சந்து கண்ட இடங்களிலே வந்து நுழைந்துகொண்டது ஆரியம். கடைச் சங்கத்திற்குப் பிறகோ எனில், ஆரியக் கருத்தே உட்பொருளாகவும், கலையே கவசமாகவும் அமைந்த நூற்கள் பெருகிவிட்டன. சங்க நூற்களிலே, யானை அலறக்கேட்டு அஞ்சிய தலைமகளை, அஞ்சற்க என்று கூறி ஆதரித்த தலைமகனைக் காண்கிறோம்; பிறகோ, அண்ணனை ஆனையாக்கியனுப்பி வள்ளியைப் பயமுறுத்தி மணம்புரியும் வேலன்கதை வீடுதோறும் புகுந்தது. காண்கிறோம். சங்கநூற் சித்திரம் சிலருக்கே தெரியும்; புராணக் குப்பையோ, தெரியாதார் மிகமிகச் சிலரே.

சங்க நூற்களிலே, மந்திக்குக் கனி பறித்தீயும் காதற்கடுவனைப் பற்றிய சித்திரம் காண்கிறோம். பிறகோ, சஞ்சீவி பர்வதத்தைப் பெயர்த்தெடுக்கும் சர்வ பண்டிதனாம் அனுமனைக் காண்கிறோம். உண்மை உவமையை உரைத்த உயர் நூலை அறிந்தோர் சொற்பம்; புராணப் புளுகைப் போற்றிடுவோரோ, பெருந் தொகையினர். ஆண்மான் பெண்மானுக்குத் துணை நிற்கும் அழகிய காதலறத்தைக் காட்சியாக்கிய கவிதை படித்த தமிழனுக்கு, மாரீசனின் மாய மான் கதை கலையாக்கப்பட்டு விட்டது! முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம், பாலை,எனும் நிலப்பண்பு தெரிந்து இன்புற்ற இயல்பு முன்பு! பிறகோ, நாலுவர்ணமெனும் நச்சுப்பொய்கையில் நெளியும் நிலைமை!! கலையின்பேரால், ஆரியக் கற்பனைகள், தமிழரின் கருத்திலே தூவப்பட்டு விட்டன. இதனை நன்கறிந்தே சுதேசமித்திரன், "கலையுணர்வு பெறப் பண்டைய காப்பியங்களைப் படித்திடட்டும் சர் சண்முகம், அதன்மூலமாகவே அவரை முறியடிக்க முடியும்" என்று கருதுகிறது. முடியுடை வேந்தரையும் வீரரையும் வீழ்த்தியமுறை அதுவன்றோ, சர் சண்முகம் மட்டும் என்ன, தப்பவா போகிறார், என்று மித்திரன் கருதுகிறது. நறுமலர்க் கூடையிலே நச்சரவு இருந்திடின், மலர்தேடும் கையிலே விஷப்பல்லன்றோ தீண்டும் ! பழைய காப்பியத்திலே பிரேமை அதிகரித்தால், திராவிடப்பண்பு பாழ்பட வழி இருக்கிறது என்பதறிந்தே, சுதேசமித்திரன் அந்தச் சொல்லை வீசியிருக்கிறது. உண்மையிலேயே, சர் சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கக் காப்பியக் கடலிலே மூழ்கிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே, ஆரிய அலை மோதுகிறது. சனாதனமெனும் சுறாமீன்கள் உலவுகின்றன, வர்ணாசிரமம் எனும் வாயகன்ற திமிங்கிலமுளது, என்று எச்சரிக்கை செய்யாவிடின், எனக்கு அவர்பால் உள்ள அன்பினை மறந்தவனாவேன். கலையுலகிலே, அவர் உலவுவது, ஆரியபுரிக்கு அவரை அழைத்துச் செல்லாதிருக்கவேண்டும். கலையார்வத்திலே ஈடுபட்டு, ஆரியராவது திராவிடராவது, என்று கூறிடும் முத்துரங்கமாகவோ, இகலோகத்தைப்பற்றி இவ்வளவு கவலைப்பட்டுக் கிடப்பானேன் பரலோகத்தைப் பற்றியன்றோ சிந்தனை செயல்வேண்டும் என்று கூறிடும் பாராயண பக்தராகவோ, மாறிடாதிருக்கவேண்டும்.