வேங்கடம் முதல் குமரி வரை 4/008-032

விக்கிமூலம் இலிருந்து
8. ராமேச்சுரத்து ராமலிங்கர்

சிவன் கோயில்களில் கருவறையில், கோயிலுக்கே நடுநாயகமாய் இருப்பது சிவலிங்கம். சிவலிங்க வழிபாடு மிகமிகப் பழமையானது. திருமூலர் தமது திருமந்திரத்தில் அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவ லிங்கம், சிவலிங்கம், ஆத்மலிங்கம், ஞானலிங்கம் முதலியவைகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

இலிங்கமதாவது யாரும் அறியார்
இலிங்கமதாலது எண்திசை எல்லாம்
இலிங்கமதாவது எண்ணெண் கலையும்
இலிங்கமதாவது எடுத்தது உலகே

என்பது திருமந்திர வாக்கு. பாதாளம் முதல் ஆகாச பர்யந்தம் எல்லையில்லாத அனந்த சொரூபமாகப் பிரகாசிப்பது லிங்கம். இதனையே 'ஆபாதால' என்ற தியான சுலோகம் கூறியே ருத்ராபிஷேகத்தைத் தொடங்க வேன்டும் என்பது விதி. அண்டமெல்லாம் நிறைந்து நிற்கும் இறைவனை அணுவிலே காட்ட முயன்றவன் கலைஞன், அருவுருவமான கடவுளை உருவத்திலும் அரு உருவத்தில் காட்டுவதில் வெற்றி பெற்றவன் அவன். அந்த அருஉருவத் திருமேனிபயே சிவலிங்க வடிவம், அதாவது வடிவம் போலவும் இருக்கும்; அதே சமயத்தில் வடிவம் ஒன்று இல்லாமலும் இருக்கும் நிலை. இந்த லிங்க வடிவினை அரசர்கள், முனிவர்கள், பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். முசுகுந்தன் பிரதிஷ்டை காளத்தியில், தொண்டைமான் சக்கரவர்த்தியின் பிரதிஷ்டை வட திருமுல்லைவாயிலில், இடும்பன் பிரதிஷ்டை இடும்பா வனத்தில். திரிசிரன் பிரதிஷ்டை திருச்சிராப்பள்ளியில். அகஸ்தியர் பிரதிஷ்டை அகஸ்தியன் பள்ளியில், மூன்று கோடி முனிவர்கள் சேர்ந்த பிரதிஷ்டை செய்தது கோடிகாலில், ஆனால் எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் வகையில் மூவர்க்கும் மேலான ராமனே பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கம்தான் ராமலிங்கம்.

மூலமும் நடுவும் ஈறும்
இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த
காரணன் கைவில்லேந்தி
சூலமும் திகிரி சங்கும்
கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப்
பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்

ராமன் என்பான் கம்பன். அந்த ராமனே பிரதிஷ்டை பண்ணிய லிங்கம்தான் ராமலிங்கம். அந்த ராமலிங்கம் இருப்பது ராமேச்சுரம். அந்த ராமலிங்கத்தைத் தரிசிக்கவே செல்கிறோம் நாம் இன்று.

ராமேச்சுரம் என்னும் ராமேசுவரம், வங்காளக் குடாக் கடலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தீவு, சென்னை-ராமேசுவரம் ரயில்பாதையில் மண்டபம் கடந்து பாம்பன் வழியாக ராமேசுவரம் செல்லவேனும். இந்தத் தீவு மாகாவிஷ்ணு தாங்கியிருக்கும் வலம்புரிச் சங்கின் வடிவில் இருக்கிறதென்பர். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் தூரத்தில் கோயில் இருக்கிறது. கோயில் பிரும்மாண்டமான பிராகாரங்களுடன் கூடியது. கோயில் கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 675 அடி அகலமும் உள்ளது. கிழக்கு வாயிலை 126 அடி உயரமுள்ள கோபுரம் அழகு செய்கிறது. மேல் வாயிலில் 78 அடி உயரமுள்ள கோபுரம் இருக்கிறது. இதுவே பழைய கோபுரம். தெற்கேயும் வடக்கேயும் கோபுரங்கள் கட்டப்படவில்லை. கிழக்கு வாயில்வர வேண்டுமானால் கொஞ்சம் சுற்றிக் கொண்டு வரவேணும். ஆதலால் எல்லாரும் மேலக்கோபுர வாயில் வழியாகவே கோயிலுள் நுழைவர். நாமும் அப்படியே செல்லலாம்.

மேல் பிராகாரத்தில் வட மேற்கு மூலையில் ஓர் இடம் திரைச்சீலைகளால் மறைக்கப் பட்டிருக்கும். அங்குள்ள காவலனிடம் பத்து காசு நீட்டினால் திறந்து காட்டுவான். அங்கிருக்கும் காட்சிதான் ராமலிங்கர் பிரதிஷ்டை . இந்த ராமலிங்கர் பிரதிஷ்டை ஒரு சுவையான கதையாயிற்றே. இலங்கையில் இராவண வதம் நிகழ்த்திய ராமனைப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொள்கிறது. அதன் நிவர்த்திக்கு இறைவனைப் பிரதிஷ்டை செய்து பூஜிப்பதுதான் வழி என்பதை அறிகிறான் ராமன். ராமனது ஏவல் கூவல் பணி செய்யத்தான் அனுமன் உடன் இருக்கிறானே. அவனை அனுப்பி நர்மதை நதிக்கரையிலிருந்தே லிங்கம் அமைக்கக் கல் கொண்டு வரச்சொல்கிறான்; சென்ற அனுமன் திரும்பக் காணோம். அதற்குள் பிரதிஷ்டைக்குக் குறித்த நேரம் வந்துவிடுகிறது. ராமனுடன் வந்த சீதாப்பிராட்டி அங்கு கடற்கரையிலிருந்த மணலையே சிவலிங்கமாக்கிக் கொடுக்கிறாள். ராமனும் பூஜையை முடித்துக் கொள்கிறான். பூஜை முடிந்தபின் அனுமன் லிங்கத்துடள் வந்து சேருகிறான். அவனுக்கு ஒரே கோபம், தன் முயற்சி எல்லாம்

ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

வீணாய்ப் போய் விட்டதே என்று. சீதை அமைத்த மணல் லிங்கத்தைத் தன் வாலால் கட்டி இழுத்துப் பிடுங்கி எறிந்துவிட முனைகிறான். நடக்கிற காரியமா அது? ஆதிலிங்கம் ஆயிற்றே. அனுமானைச் சமாதானம் செய்ய விரும்பிய ராமன் அவன் கொண்டுவந்த லிங்கத்தையும் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்து வைத்து அதனை அனுமத்லிங்கம் என்று அழைக்கிறார். இத்தனை நாடகமும் சுதை வடிவில் அங்கு வண்ண உருவில், காட்டப்பட்டிருக்கும். கருவறையில் இருப்பவர் ராமலிங்கர். அவர் பக்கத்தில் இடப் பக்கத்தில் இருப்பவர் அனுமன் கொண்டு வந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட விசுவநாதர், இருவரையும் கருவறையில் சென்று கண்டு வணங்கலாம். இந்த ராமலிங்கரே உலகில் உள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்களில் ஒன்றாக விளங்குகிறார். இவர் மேனியிலே அனுமனது வால் தழும்பு இன்னும் இருக்கிறது.

ராமலிங்கர் நல்ல அபிஷேகப் பிரியர், அதிலும் கங்கா ஸ்நானத்தை விரும்புகிறவர். ஆதலால் வடநாட்டிலிருந்து வரும் யாத்திரிகர்கள் எல்லாம் கங்கா ஜலம் கொண்டுவந்து அபிஷேகம் செய்கிறார்கள். இந்த கங்காபிஷேகத்துக்கு நிபந்தனைகள் அதிகம். அதற்கெல்லாம் உட்பட்டே அபிஷேகத்துக்குச் சேவார்த்திகள் ஏற்பாடு செய்ய வேணும். இந்த ராமலிங்கர் சந்நிதி காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை எப்போதும் திறந்தே இருக்கும். இந்த நல்ல வசதி எல்லாக் கோயில்களிலும் கிடைப்பதில்லை யாத்திரிகர்களுக்கு. கருவறை செல்லுமுன் பிராகாரங்களை ஒரு சுற்றுச் சுற்றலாம். ராமேசுவர பிராகாரங்கள் {Corridors) பிரபலமானவை ஆயிற்றே. இந்தப் பிராகாரங்கள் ஒவ்வொன்றும் சுமார் நானூறு அடி நீளமும், இருபதிலிருந்து முப்பதடி அகலமும், அறுபது அடி உயரமும் உடையன. பிரும்மாண்டமான தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவ்வளவு பெரிய பிராகாரங்களை வேறு இடங்களில் காண முடியாது: கல் கிடையாது. ஒரு சிறு தீவுக்கு, இவ்வளவு பெரிய கற்களை எப்படிக் கொண்டு வந்தனர். எப்படி இந்தப் பிராகாரங்களை அமைத்தனர் என்பது பலருக்கும் லியப்பானதொன்றே.

இக்கோயிலில் மூன்று பிராகாரங்கள். மூன்றாம் பிராகாரமான வெளிப் பிராகாரத்திலேதான் பெரிய நடராஜரது வடிவம் ஒன்றும் இருக்கிறது. உள் பிராகாரத்தில் தான் ராமலிங்கர் கோயில் கொண்டிருக்கிறார். அங்குள்ள நவசக்தி மண்டபம் நல்ல வேலைப்படுடையது. அந்த பிராகாரத்திலேதான் பர்வதவர்த்தினி அம்பிகையின் சந்நிதி. இவளையே தாயுமானவர் மலைவளர் காதலிப் பெண் உமை என்று அழகொழுக அழைக்கிறார்.

ஆரணி சடைக் கடவுளர்
அணியெனப் புகழ் அகிலாண்ட
கோடியீன்ற
அன்ளையே! பின்னையும் கன்னியென
மறைபேசும் ஆனந்த
ரூப மயிலே!
வார் அணியும் கொங்கை மாதர்
மகிழ் கங்கைபுகழ் வளமருவு
தேவ அரசே
வரை ராஜனுக்கு இரு கண்மணி
யாய் உதித்த மலை வளர்
காதலிப் பெண் உமையே!

என்று பாடிப் பாடிப் பரவசம் அடையலாமல்லவா?

இங்குள்ள நந்தி சுதையால் உருவானவர்தான். நல்ல பெரிய நந்தி, நீளம் பன்னிரண்டு அடி, உயரம் ஒன்பது அடி. கீழ்க் கோபுர வாயிலில் பெரிய அனுமார் இருக்கிறார். பிரதம லிங்கரைப் பிரதிஷ்டை செய்யும் பாக்கியத்தை இழந்தவர் என்று அவர் பார்வையிலுள்ள ஏக்கத்திலிருந்தே தெரியும். ராமேசுவரத்தில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தம்தான் விசேஷமானது. இக்கோயில், கோயில் பிராகாரங்களைச் சுற்றியே இருபத்திரண்டு புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. இந்தத் தீர்த்தங்களில் எல்லாம் ரசாயன சத்துக்கள் இருப்பதால் புண்ணியத்தோடு தேக ஆரோக்கியமும் உண்டாக்கும். எல்லாத் தீர்த்தங்களும் புராண மகத்துவமும் பெற்றவை. கோயிலுக்கு நேர் கிழக்கேயுள்ள கடல்துறைதான் முக்கியமானது. அதுவே அக்கினித் தீர்த்தம். இங்கேதான் தீர்த்தாடனம் தொடங்கவேண்டும். கடைசியில் கோயிலுள் உள்ள கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யவேண்டும். கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் ஆடிய பிறகு ஊரிலே தங்கக்கூடாது என்பது ஐதீகம். கட்டிய புண்ணியம் எல்லாம் நம் வீடு வரையாவது நம்முடன் கொண்டுசெல்ல வேண்டும்.

ராமேசுவரத்தை விட்டு கிளம்புமுன் பார்க்க வேண்டியவை கந்தமாதன பர்வதம்; ஏகாந்த ராமர் கோயில், நம்பி நாயகி அம்மன் கோயில் முதலியன. கந்தமாதன பர்வதம் வடமேற்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு அனுமார் தாவினார் என்று கூறப்படுகிறது. ஏகாந்த ராமர் கோயில் ராமேசுவரத்துக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் தங்கச்சி மடம் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கிறது. இங்கு ராமர் சீதையுடன் பேசிக் கொண்டிருக்கும் பாவனையில் சிலைகள் அமைத்திருக்கிறார்கள். ராமர் இங்குதான் தமது மந்திராலோசனையை நடத்தினார் என்பர், ராமேசுவரத்துக்குத் தெற்கே இரண்டுமைல் தூரத்திலுள்ள நம்பி நாயகி அம்மன் நம்பிக்கையுடன் ஆராதிப்பவர்களுக்கெல்லாம் அருளுபவள் என்பது நம்பிக்கை, இன்னும் சீதா குண்டம், வில்லூரணி தீர்த்தம், கோதண்டராமசுவாமி கோயில் எல்லாம் சென்று வாங்கித் திரும்பலாம்.

இந்தத் தலத்துக்கு ஞானசம்பந்தரும், அப்பரும் வந்திருக்கிறார்கள்; பதிகங்கள் பாடியிருக்கிறார்கள்.

தேவியை வவ்விய தென்னிலங்கை
யரையன்
ஏவியல் வெஞ்சிலையண்ணல் செய்த
இராமேச்சுரத்தாரை
நாவியல் ஞானசம்பந்தன்
நல்லமொழியால் நவின்றேத்தும்
பாவியல் மாலை வல்லார்
அவர் தம் வினையாயின பற்றறுமே

என்று சம்பந்தர் பாடினால்,

கடலிடை மலைகள் தம்மால்
அடைத்து மால் கருமம் முற்றி
திடலிடைச் செய்த கோயில்
திரு இராமேச்சுரம்

என்று அப்பர் பாடுகிறார். இத் திருப்பதிகங்களையெல்லாம் பாடி ராமேச்சுரம் மேவிய இறைவனை வாங்கிவிட்டு, தனுஷ்கோடிக்குச் சேது ஸ்நானத்துக்குச் செல்லலாம். ராமேச்சுரத்திலிருந்து 24 மைல் தூரத்தில் தனுஷ்கோடி இருக்கிறது. இங்குதான் வங்காளக் குடாக் கடல், இந்துமா சமுத்திரம் இரண்டும் கூடுகின்றன. மகோததி, ரத்னாகரம் என்னும் கடல்கள் கலப்பதாகப் புராணங்கள் கூறும். ராமேசுவரத்திலிருந்து கடற்கரை வழியாகத் தோனியில் ஏறிக் கொண்டும் சேதுக்கரை செல்லலாம். இது எல்லாம்
கோயில்

காற்று வசதியாக அடிக்கும்போதுதான் சௌகரியமாக இருக்கும். இல்லா விட்டால் பேசாமல். சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் தனுஷ்கோடி செல்லுதலே சரியானது. மணற்பரப்பில் நாலு பர்லாங்கு நடந்துதான் சேது ஸ்நான கட்டத்துக்கு வரவேணும், தனுஷ் கோடி என்றால், ஒரு கோடி வில் என்று அர்த்தம். இங்கு தீர்த்தம் ஆடினால் ஒரு கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். இங்கிருந்துதான் இலங்கை செல்ல ராமன் அணை கட்டியிருக்கிறான், அதனாலேயே சேது என்று அழைக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 36 ஸ்நானம் செய்ய வேண்டுமென்பது விதி அதற்கு ஒரு மாதம் தங்க வேண்டும், அது எல்லாம் நம்மால் முடிகிற காரியமா என்ன? ஆதலால் ஒரே நாளிலேயே முப்பத்தாக முழுக்குகள் போட்டு மேலே சொல்லிய ஸ்தான பலன்களையெல்லாம் ஒரேயடியாகப் பெற்றுவிட வேண்டியதுதான், தனுஷ்கோடியிலே தீர்த்தமாடிய பின்னரே ராமலிங்கரைத் தரிசிக்க வேண்டும் என்றும் கூறுவர். எது வசதியோ அப்படிச் செய்து கொள்ளலாம். நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைபவராயிற்றே இறைவன் ராமலிங்கர் அகில இந்தியப் பிரசித்தியுடையவர். இமசேது பரியந்தம் அவர் புகழ் பரவிக் கிடக்கிறது. இங்கு வரும் வடநாட்டு யாத்திரிகர்களின் எண்ணிக்கை சொல்லில் அடங்காது. வடக்கையும் தெற்கையும் இணைப்பதில் வெற்றி கண்டவர் இந்த ராமலிங்கர். அதுவே அவருக்குப் பெரிய புகழைத் தேடித் தந்திருக்கிறது.

தனுஷ்கோடியிலும் ராமேசுவரத்திலும் ஸ்நானம் பிராத்தனை எல்லாம் முடித்துக் கொண்டே இராமநாதபுரம் போய் அங்கிருந்த தர்ப்ப சயனம் (திருப்புல்லாணி) சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பர். புண்ணிய சேதுவை நினைக்கும் போதெல்லாம் சேது காவலர்களான சேதுபதிகளும் நம் நினைவுக்கு வருவார்கள், அவர்கள் குகனுடைய பரம்பரை என்று வழக்கு. முதல் சேதுபதியாகிய குகனுக்கு ராமர் பட்டம் கட்டியதைக் குறிப்பிடும் கல் ஒன்று இராமநாதபுரம் அரண்மனையில் இராமலிங்க விலாஸ் என்ற இடத்தில் இருக்கிறது. சேது காவலர்கள் ராமேச்சுரம் கோயிலில் செய்த திருப்பணிகள் அனந்தம். சடைக்கத் தேவர் உடையார் சேதுபதி முதல் பரம்பரையாக வந்த சேதுபதிகள் எல்லாம் பல நிபந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் கடைசியில் இருந்த பாஸ்கர சேதுபதியின் தான தருமம் உலகப் பிரசித்தம்.