வேங்கடம் முதல் குமரி வரை 4/009-032

விக்கிமூலம் இலிருந்து
9. புல்லாணி எம்பெருமான்

கொல்லணை வேல் வரிநெடுங்கண்
கௌசலைதன் குலமதலாய்!
குனிவில் ஏந்தும்
மல்லணைந்த வரைத் தோளா!
வல்வினையேன் மனமுருக்கும்
வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய்!
இன்று இனிப்போய்
வியன் கானமரத்தின்நீழல்
கல்லணைமேல் கண்துயிலக்
கற்றனையோ காகுத்தா!
கரிய கோலே!

என்று குலசேகரர் பாடுகிறார். தனயனான ராமன் காட்டுக்குப் புறப்பட்டான் என்றவுடனே, தந்தை தசரதன் புலம்புவதாகப் பாட்டு. அரண்மனையில் பிறந்து, அரண்மனையில் வளர்ந்து ஹம்ஸதூளிகா மஞசத்தில் உறங்கிய பிள்ளை இனி காட்டிலே கல்லையே அணையாகக் கொண்டல்லவா உறங்கப்போகிறான் என்ற உடனே உள்ளத்தில் எழும் தாபம் வெளிப்படுகிறது. ஆனால் இந்தப் பிள்ளை, கல்லை மாத்திரம்தானா அனையாகக் கொள்கிறான்? புல்லையுமேதான் அனையாகக் கொள்கிறான். கதை நமக்குத் தெரியும். சீதையை எடுத்துச் சென்று இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்து விடுகிறான் இராவணன். அவள் இருக்கும் இடத்தை அறிந்து வந்து சொல்கிறான் அனுமன். உடனே ராமன் சுக்ரீவனது வானரப் படையின் துணையுடன் இலங்கை மீது படை எடுக்கிறான். இடையிலே இருக்கிறது கடல். கடல் கடந்துதான் இலங்கை செல்ல வேணும். லிபீஷணன் ஆலோசனைப்படி வருணனை வழிபட முனைகிறான். அதற்காகத் தருப்பையையே சயனமாக்கி அதிலிருந்து வருணனை வேண்டுகிறான். இதைக் கம்பன் சொல்கிறான்.

தருண மங்கையை மீட்பது
ஓர் நெறி தருக என்னும்
பொருள் நயந்து நல்
நூல்நெறி அடுக்கிய புல்லிவ்
கருணை அம் கடல் கிடந்தது.
கருங்கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி

என்று. இப்படிப் புல்லணைமேல் கிடந்து வருணனை வேண்டிய தலம்தான் திருப்புல்லணை. அதனையே திருப்புல்லாணி என்கிறார்கள், அந்தத் திருப்புல்லாணிக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருப்புல்லாணி ராமநாதபுரத்துக்குத் தெற்கே கீழக்கரை செல்லும் பாதையில், ராமநாதபுரத்திலிருந்து ஆறு ஏழு மைல் தொலைவில் இருக்கிறது. ராமநாதபுரம் ஸ்டேஷனில் இறங்கி, வண்டி வைத்துக்கொண்டு போகலாம். சொந்தக் கார் இருந்தால் 'ஜாமி ஜாம்' என்று காரிலேயே போய் இறங்கலாம். ஊர் மிகச் சிறிய ஊர். கோயில் பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல. 'கள்ளவிழும் மலர்க்காவியும், தூமடல் கைதையும் புள்ளும் அள்ளற் பழனங்களும், சூழந்த புல்லாணி' என்று அன்று மங்கை மன்னன் பாடியிருக்கிறான், இன்று அள்ளற் பழனங்களையோ மலர்க் காவிகளையோ பார்த்தல் அரிது. கடற்கரையை ஒட்டிய கிராமம் ஆனதால் மணல் குன்றுகளுக்குக் குறைவில்லை என்றாலும் கோயில் வாயில் சென்று சேரும்வரை நல்ல ரோடு இருக்கிறது. இங்குதான் புல்லர், கண்ணுவர், காலவர் முதலிய முனிபுங்கவர்கள் தவம் புரிந்து முத்தி பெற்றிருக்கிறார்கள். முனிவராம் புல்லர் விரும்பியபடியே ஜனார்த்தனன். தேவியர் மூவரோடும் சதுர்புஜத்தோடும், பஞ்சாயுதங்களோடும், ஸ்ரீவத்சம், கௌஸ்துபம் முதலிய மாலைகள் விளங்க, பீதாம்பரமும் அனிந்து திவ்வியாபரணங்களும் தரித்து எழுந்தருளியிருக்கின்றார். இன்னும் இத்தலத்திலே தேவலர் என்னும் முனிவர் தவம் செய்யும்போது சப்த கன்னியரும் அங்குள்ள திருக்குளத்தில் ஜலக்கிரீடை செய்திருக்கிறார்கள். அவர்கள், தம் தவத்தைக் கலைத்ததற்காக அவர்களை யக்ஷர்களாகப் போகும்படி சபித்திருக்கிறார். அவர்கள் சாப விமோசனம்வேண்டிய பொழுது அவர்களைப் புல்லாரண்யத்தில் புல்லர் வழிபட்ட பெருமானை வழிபட்டுச் சாப விமோசனம் பெற அருளியிருக்கிறார்.

இலங்கை செல்லும் இராமர் இங்கு தர்ப்ப சயனத்தில் கிடந்து வருணனை வேண்டியிருக்கிறார். பின்னர் இங்குள்ள எம்பெருமானையும் வணங்கியிருக்கிறார் அவரும் ராமனுக்கு வில் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அது காரணமாக, புல்லணி எம்பெருமானுக்குத் திவ்ய சரபன், தெய்வச் சிலைமன் என்ற பெயர் நிலைத்திருக்கிறது. பின்னர்தான் வருணன், ராமர் முன்வந்து கடலைச்சுவற அடிப்பதை விட, சேது கட்டுதலே சிறந்தது என்று கூற அதன்படியே நளன் தலைமையில் சேது கட்டி முடிக்கப்படுகிறது. இங்கு தான் சேது கட்டத் தீர்மானம் ஆனதால் இதனை ஆதிசேது என்றும் அழைக்கின்றனர். புல்லர் முதலான ரிஷிகள் ஜகந்நாதனைச் சரண் அடைந்து பரமபதம் பெற்றது. இங்கேதான். கடற்கடவுளும் தசரத புத்திரனைச் சரணடைய அவனுடைய கிருபைக்குப் பாத்திரனானதும் இங்கேதான். ஆதலால் இத்தலத்தில் சரணாகதி தருமத்தை அனுஷ்டிக்கிறவர்கள் இகபர சுகங்கள் எல்லாம் பெறுவர் என்பது நம்பிக்கை

இத்தலத்தில் கல்யாண ஜகந்நாதன் என்ற பெயரோடு பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். தாயார் திருநாமம் கல்யாணவல்லி. கோயில் விமானம் கல்யான விமானம். கோயில் பிராகாரத்தில் ராமன் தர்ப்பசயனனாகச் சேவை சாதிக்கிறான் பட்டாபிராமன் சந்நிதி வேறு இருக்கிறது. இங்குள்ள ஹேமதீர்த்தம் சக்கர தீர்த்தம் பிரசிசத்தமானவை. சகல பாவங்களையும் போக்கவல்லவை. இக்கோயிலில் சிலா வடிவங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. என்றாலும், கோயிலில் செப்புப் படிமங்கள் பல பூசையில் இல்லாமல் இருக்கின்றன. ராமர், லஷ்மணர், பரதர் சத்துருக்னர் படிமங்கள் எல்லாம் இருக்கின்றன. எல்லாம் கவனிப்பார் அற்றுக் கிடக்கின்றன.

இங்குள்ள தல விருட்சம் அசுவத்த விருட்சம் என்னும் அரசமரம். அதன் நிழலில் நாகப்பிரதிஷ்டை செய்வோருக்கு மக்கட்பேறு உண்டாகும் என்று நம்பிக்கை. இத்தலத்தில் இவ்விருட்சம் அமைந்ததற்கு ஒரு புராணக் கதை வழங்கி வருகிறது.

ஆதியில் படைப்புத் தொழில் பராந்தாமனிடத்திலேயே இருந்திருக்கிறது. முதலில் பிரம்மாவையும் பின்னர் நவப்பிரஜாபதிகள், இந்திரன் முதலியோரையும் படைத்துப் பின்னரே பிரம்மாவைத் தொடர்ந்து சிருஷ்டி செய்யுமாறு பணித்திருக்கிறார். படைத்தல் தொழிலைச் செய்வதற்குத் தெற்கு நோக்கிப் பிரம்மா வந்தபோது கோடி சூரியப் பிரகாசத்தோடு ஒரு ஜோதி தோன்றி மறைந்திருக்கிறது. அந்த ஜோதியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது, பரந்தாமன், 'அதுவே போத ஸ்வரூபமான போதி மரம், அந்த மரத்தடியிலேதான் ஜகந்நாதன் தங்குகிறான்' என்று அருளியிருக்கிறான் அது காரணமாகவே போதி என்னும் அரச மரம் ஜகந்நாதனுக்கு நிழல் தரும் தருவாய் அங்கு அமைந்திருக்கிறது (போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரையும் விஷ்ணுவினது அவதாரம் என்று கொள்வது இதனால் தான் போலும்).

இத்தலத்துக்கு திருமங்கை மன்னன் வந்திருக்கிறார்; இருபது பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார். அவர் பாடிய பாடல்கள் பல நாயக நாயகிபாவத்தில் அழகொழுகும் வண்ணம் இருக்கின்றன.

வில்லால் இலங்கை
மலங்கச் சரந்துரந்த
வல்லாளன் பின்போன்
நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்தன்னை
ஏசிடினும் பேசிடினும்
புல்லாணி எம்பெருமான்
பொய் கேட்டிருந்தேனே

என்ற பாசுரம் பிரபலமான ஒன்றாயிற்றே. அனைவரும் கேட்டுக் கேட்டு ரசித்ததாயிற்றே.

இந்த ஆதி சேதுவின் காவலரே ராமநாதபுரம் ராஜாக்கள். சேதுக் கரையையும் உள்ளடக்கிய பிரதேசத்தின் மன்னர்களாக இருக்கிற காரனத்தால் அவர்களைச் சேதுபதி என்று அழைத்தார்கள். திருப்புல்லாணிக் கோயில் எப்பொழுது கட்டப்பட்டது என்று தெரியவில்லை. பரராஜசேகர் ராஜா காலத்தில்தான் கோயில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இருபத்தேழு கிராமங்கள் இக்கோயில் பராமரிப்புக்காகச் சேது சமஸ்தானத்தாரால் விட்டுக் கொடுக்கபட்டிருக்கின்றன. அதற்குத் தாமிர சாஸனங்களும் ஓலைச் சாஸனங்களும் உண்டு, கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேதுபதியாக இருந்த கிழவன் சேதுபதி என்னும் ரகுநாத சேதுபதி அவர்கள் பதினோரு கிராமங்களை இந்தக் கோயிலுக்குத் தானம் வழங்கியிருக்கிறார். இவருக்குப் பின் வந்த விஜய ரெகுநாத சேதுபதி, முத்து ராமலிங்க சேதுபதி முதலியவர்களும் பல நிபந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமாக நிறைய உப்பளங்கள் உண்டு. மன்னார் குடாக் கடலில் நடைபெறும் முத்துக் குளிப்பிலும் இந்தக் கோயிலுக்கு ஒரு பங்கு உண்டு என்று தெரிகிறது. எல்லாம் சொல்லி ஒன்று சொல்ல மறந்து விட்டேனே, இந்தத் தலத்தில் இரவில் நைவேத்தியமாகும் திருக்கண்ணமுது {பால்பாயாஸம்) மிக்க சுவையுடையது. பகலில் போகிறவர்களும் ஞாபகயாகக் கேட்டால் அர்ச்சகர் எடுத்து வைத்திருக்கும் திருக்கண்ணமுது கிடைக்கலாம். இரவில் போனால் தான் கட்டாயம் கிடைக்குமே.

இத்தலத்துக்கு வந்த நாம் ராமநாதபுரத்துக்கு வட்டகிழக் ஏழு மைல் தூரத்தில் உள்ள தேவி பட்டம் வரையில் சென்று அங்குள்ள பட்டாபி ராமனையும் வாங்கலாம். இங்குதான் ராமன் வருணனுக்கு அபயம் அளித்தார் என்று வரலாறு. இங்கு பிரதான தேவதை மற்ரிஷாசுரமர்த்தினி. அதனால்தான் தேவிபட்டணம் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்தத் தேவி பட்டணத்தை அடுத்து நவபாஷாணம் என்னும் சமுத்திர தீர்த்தம் வேறே இருக்கிறது இங்குதான் ராமர் நவக்கிரஹ பூஜை செய்திருக்கிறார். ஒன்பது குத்துக் கல்கள் கடலில் இருக் கின்றன. அந்த இடத்தில் அலை அடிப்ப தில்லை. இந்தத் தீர்த்தத்தில் நீராடிப் பக்கத்தில் உள்ள கோயிலில் மங்கள நாதர் மங்க ளேகவரி யையும் வணங் கினால் எல்லா நல்ல பலன் களும் சித்திக்கும் என்று நம்பிக்கை. அவகாசம் உள்ள வர்களெல்லாம் தேவிபட்டணம், நவபாஷாணம் எல்லாம் சென்றே திரும்பலாம் நல்ல பலன்கள் கிடைக்குமென்றால் தயக்கமில்லாமல் செல்வதற்கு மக்கள் முன்வருவதில் வியப்பென்ன.