வேங்கடம் முதல் குமரி வரை 4/010-032

விக்கிமூலம் இலிருந்து
10. உத்தர கோச மங்கைக்கு அரசு

ஒரு பொருளாதாரப் பேராசிரியர், அவர் ஏற்றிருக்கிற பொருளாதாரப் பகுதியில் பி.ஏ. வகுப்பில் நாற்பது பிள்ளைகள். அதில் பத்துப்பேர் பெண்கள். அவர்களில் ஒருத்தி கமலா. பேராசிரியர் சொல்லும் பொருளாதாரத் தத்துவங்கள் ஒன்றும் அவளுக்குப் புரிகிறதேயில்வை, எப்படியோ உருப்போட்டுப் பூரீக்ஷை எழுதிப் பாசாகிவிட்டாள். பேராசிரியரது பெற்றோர் அந்தச் கமலாவையே தங்கள் மருமகளாக நிச்சயித்து மகனுக்கு மணம் முடித்து வைக்கின்றனர். பேராசிரியர் போதித்த பொருளாதாரத் தத்துவங்கள் விளங்காவிட்டாலும் பேராசாரியரது குடும்பப் பொருளாதாரத்தைத் திறம்பட நிர்வகிக்கத் தெரிந்து கொள்கிறாள் கமலா. பேராசிரியரும் அடங்கி ஒடுங்கி விடுகிறார். இது நானறிந்த குடும்பம் ஒன்றில் நிகழ்ந்த செயல். இதனைத் தூக்கியடிக்கிற வகையிலே இறைவனும் குடும்பம் நடத்தியிருக்கிறார். கதை இதுதான்;

கைலாயத்தில் ஒருநாள் இறைவன் பார்வதிக்கு வேத மந்திரங்களை உபதேசிக்கிறார். அம்மையும் அத்தனை மந்திரங்களையும் ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிறாள். என்றாலும், அவளுக்கு எத்தனையோ வேலை. புருஷனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் இரண்டு பிள்ளைகளைக் கட்டி மேய்க்கும் தொல்லை, இவைதவிர எண்ணற்ற பக்தர்கள் செய்யும் பிராத்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா? அதனால் வேத மந்திரங்களை ஒழுங்காய் நெட்டுருப் போட்டு, ஞாபகத்திலே வைத்துக்கொள்ள முடியவில்லை. இதுவெல்லாம் தெரிகிறதா இறைவனுக்கு? சொல்லிக் கொடுத்த பாடத்தை ஒட்புவிக்கும்படி கேட்கிறார் ஒரு நாள். அம்மைக்குப் பாடம் எல்லாம் மறந்து விட்டது; ஆதலால் விழிக்கிறாள். உடனே கோபம் வருகிறது வாத்தியாருக்கு. கோபத்தில் சாபமே கொடுத்து விடுகிறார். சாபம் இதுதான்; அன்னை பார்வதி பூலோகத்தில் ஒரு வேதியர் மகளாய்ப் பிறக்க வேண்டியது. தந்தையிடம் வேத வேதாகமங்களை 'இம்போஸிஷன்' எழுதுவதுபோல, ஆயிரம் தடவை கேட்டுக் கேட்டு மனனம் பண்ண வேண்டியது. அதன் பின் இறைவன் வந்து வேதப்பொருள் உரைத்துத் திருதணம் செய்துகொண்டு கைலைக்கு அழைத்துச் செல்லவேண்டியது. இந்தச் சாபம், இல்லை, இந்த நல்ல 'எக்ரிமெண்ட்' நிறைவேறுகிறது. நாளாவட்டத்தில்,

ராஜமாணிக்க சதுர்வேதபுரம் என்று ஓர் ஊர் தமிழ் நாட்டில், அங்கு ஒரு வேதியர், வேதங்களை ஓதி உணர்ந்தவர். ஒழுக்கத்தால் உயர்ந்தவர்; அவருக்கு ஒரு குறை. பிள்ளைப்பேறு இல்லையே என்று. அதற்காகத் தம் ஊரின் பக்கத்திலுள்ள இலந்தை வனம் கிராமத்திலே கோயில் கொண்டிருக்கும் இறைவனைப் பிராத்திக்கிறார். அங்குள்ள கௌதம தீர்த்ததில் மூழ்கி, விரதம் இருக்கிறார். ஏன், தவமே புரிகிறார். இவருடைய தவத்துக்கு இரங்கி இறைவனும் பிரத்யக்ஷமாகி வரம் அளிக்கிறார். இப்படிப்பட்ட வர பலத்தால் அவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள். பெண்ணுக்கு ‘பூண்முலையாள்' என்று பெயரிடுகிறார். மக்கள் நால்வரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்கிறார்கள். பெண்ணும் வளர்ந்து மணப்பருவம் அடைகிறாள்.

இந்த நிலையில் ஒரு கிழ வேதியர் உருவில் இறைவனே வருகிறான். யாருக்கு அவன் வரம் கொடுத்துப் புத்திர சந்தானத்தை அருளினானோ அந்த வேதியரிடமே தானும் ஒரு வரம் கேட்கிறான்; இரப்போர்க்கு இல்லை என்னாத பெருமையுடைய வேதியரும் கேட்ட வரம் தருவதாக வாக்களிக்கிறார். வந்த கிழவேதியர் கேட்ட வரம். பூண்முலையாளைத் தமக்கு மணம் செய்து தரவேண்டும் என்பதுதான். வரம் கொடுத்த வேதியரும், கிழ வேதியருக்குத் தம் அருமை மகளைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்துத் திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறார். மிக்க சிறப்பாகத் திருமணம் . நடக்கிறது. மணமக்களை ஊஞ்சலில் வைத்து லாலி பாடுகிறார்கள்
உத்தரகோச மங்கை-நடராஜர்
பெண்கள். அவ்வளவுதான், மணமகனும், மணமகளும் அப்படியே மறைந்துவிடுகிறார்கள். எல்லோரும் திகைத்து நின்றபோது ரிஷப வாகனரூடராய் இறைவனும், இறைவியும் காட்சி கொடுக்கிறார்கள் இறைவன் வேதியரைப் பார்த்து, 'மாசற்ற மறையவனே, உன் தவத்துக்கு மெச்சியே பார்வதியை நின் மகளாக அவதரிக்கச் செய்து உன்னிடம் வளரச் செய்தோம். அவளைத் திரும்பவும் திருமணம் முடித்து என்னிடம் அழைத்துக் கொண்டோம்” என்று கூறுகிறான். “இனி இந்த ஊரிலேயே இந்தக் கல்யானசுந்தரியுடன் கல்யாண ஈசுவரனாகக் கோயில் கொள்வோம். இந்த ஊருக்கும் கல்யாணபுரம் என்றே பெயர் வழங்கட்டும்.” என்று சொல்கிறான்.

இத்தனையும் கேட்ட பின்பும் வேதியருக்கு ஓர் ஆசை. “இறைவனே! திருமணம் நடந்தது சரிதான். சப்தபதி, சேஷ ஹோமம் எல்லாம் நடக்கவில்லையே? அந்தச் சடங்கெல்லாம் நடக்காவிட்டால் எங்கள் மறையவர் மணமுறைப்படி திருமணம் பூர்த்தியான தாகாதே“ என்று அங்கலாய்க்கிறார். “சரி, நடக்கட்டும் உங்கள் சடங்குகள்” என்கிறார் இறைவன். சடங்குகள்” நடந்து இறைவன் இறைவி திருமணமும் பூர்த்தியாகிறது.

இப்படிப் பார்வதியை இரண்டாம் தடவை திருமணம் முடித்த பின்னும் இறைவன் தம்முடைய வாத்தியார் தொழிலை விடவில்லை. 'என்ன வேதம் ஓதுதல் கூடுமா?' என்கிறார். அம்மையும் சளைக்கவில்லை. ராஜமானரிக்க சதுர்வேதபுரத்தில்தான் தந்தையான வேதியரிடம் ஆயிரம் தடவைக்கு மேலாக வேதங்களை ஓதி ஓதி உணர்ந்தவள் ஆயிற்றே. ஆதலால் 'கட கட' என்று பாடம் ஒப்புவிக்கிறாள். 'சரி ஒப்புவித்த பாடத்துக்கெல்லாம் பொருள் சொல்லு' என்கிறார் உபாத்தியாயர். அம்மை ‘திரு திரு' என்று விழிக்கிறாள் பள்ளிப் பிள்ளையைப் போல. உடனே இறைவன் வேதம். வேதப் பொருளையெல்லாம் திரும்பவும் அவளுக்குப் போதிக்கிறார். இப்படி வேதத்தில் திரும்பவும் உபதேசம் பெற்ற மங்கை, பூண்முலையாளாக, கல்யாண சுந்தரியாகக் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் உத்தரகோச மங்கை (உத்தரம் என்றால் திரும்பப் பெறும் விடை; கோசம் என்றால் வேதம் என்று கொருள்). அந்த உத்தரகோச மங்கைக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்த உத்தரகோச மங்கை ராமநாதபுரம் மாவட்டத்திலே, ராமநாதபுரத்துக்கு நேர் மேற்கே ஐந்தாறு மைல் தூரத்தில் இருக்கிறது. வாகன வசதி உள்ளவர்கள் எல்லாம் ராமநாதபுரத்திலிருந்த மதுரை செல்லும் ரோட்டில் ஐந்து மைல் சென்று பின்னர் தெற்கே திரும்பி மண் ரஸ்தாவில் மூன்று மைல் போக வேண்டும். உத்தரகோச மங்கை (Uthrakosa mangai Train halt) என்னும் ஸ்டேஷனில் இறங்கி மூன்று மைல் நடந்து சென்றாலும் இந்த ஊர் போய்ச் சேரலாம். ஊர் சின்னஞ்சிறிய ஊர். ஊருக்கு மூன்று மைல் தொலைவிலேயே கோயில் கோபுரம் வானளாவ உயர்ந்து நிற்பது தெரியும். வடக்கு வீதி வழியாகச் சென்று கோயில் முன்பு வந்த நின்றோமானால் அங்கு பெரிய கோபுரத்துக்குத் தென் பக்கத்தில் ஒரு கோபுரம் இடிந்து கிடப்பது தெரியும். ஜெய்ப்பூர் ஹவாய் மஹல் போல் இந்த இடிந்த கோபுரம் காட்சி தரும். இடிந்து கிடப்பதே இத்தனை பெரிது என்றால்-இடியாத நிலையில் அது எத்தனை பெரிதாயிருந்திருக்கும் என்று கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டியதுதான்.

இந்த ஊரின் பெருமை எல்லாம் இங்கே மாங்கள் நாயகரும் பூண்முலை அம்மையும் கோயில் கொண்டிருக்கிறார்கள் என்பதனால் மட்டும் அல்ல. இந்தத் தலத்திலே மாணிக்கவாசகர் வந்து தங்கியிருந்து, உத்திரகோச மங்கைக்கு அரசே என்று கூலி அழைத்து நீத்தல் விண்ணப்பத்தைப் பாடிய காரணத்தால் சமய உலகிலும், இலக்கிய உலகிலும், இவ்வூர் பிரபலம் அடைந்திருக்கிறது. அரிமர்த்தன பாண்டிய மன்னன் குதிரை வாங்க அளித்த பொருளையெல்லாம் எடுத்துச் சென்று திருப்பெருந் துறையில் ஆலயப் பணிக்குச் செலவு செய்கிறார் வாதவூரர், பின்னர் இந்த வாதவூரரைக் காப்பதற்காகவே, திருப்பெருந்துறை சிவபெருமான் நரிகளையெல்லாம் பரிகளாக்கிக் கொண்டு வருகிறார் மதுரைக்கு. வந்த பரிகளோ திரும்பவும் நரிகளாகிக் குதிரைக் கொட்டாரத்தில் இருந்த மற்றக் குதிரைகளையும் அழித்துவிட்டு மறைகின்றன. இதற்காக மன்னன் வாதவூரரைத் தண்டிக்க முனைகிறான், வாதவூரன் தமது அன்பன் என்பதை, இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படிபட்டுக் காட்டுகிறான் பாண்டியனுக்கு. அதன்பின் வாதவூரர் அரன் அடிக்கே தொண்டு செய்யும் அடியவராகத் திருப்பெருந்துறை, திரு உத்தரகோசமங்கை, திருவாரூர், திருவிடைமருதூர் முதலிய தலங்களில் இறைவனை வணங்கிப் பதிகங்களைப்பாடி, தில்லை சென்று இறைவனோடு இரண்டறக் கலந்தார் என்பது வரலாறு. இந்த வாதவூர் என்னும் மாணிக்கவாசகர் மனத்துக்கு உகந்த இடம். திருப்பெருந்துறைக்கு அடுத்தபடி உத்தர கோசமங்கைதான்.

மாணிக்கவாசகருக்கும் இத்தலத்துக்கும் ஏற்பட்ட தொடர்பு பற்றியும் ஒரு கதை இருக்கிறது. இந்த உத்தரகோசமங்கைத் தல புராணத்தில் கைலை மலையிலிருந்த கண்ணுதல், தம் சீடர் ஆயிரம் பேரோடு உத்தரகோச மங்கை வந்து அங்குள்ள பொய்கை ஒன்றின் பக்கத்தில் தங்குகிறார். அந்தச் சீடர்களையெல்லாம் அங்கே இருத்தி விட்டுத் தம்முடைய பக்தை அழகமர் மண்டோதரிக்குத் தரிசனம் கொடுக்க இலங்கைக்கே செல்கிறார். அப்படிச் செல்லும் போது தம்முடன் கொண்டு வந்த திருமுறைகளையெல்லாம் தம் சீடரிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறார். தான் இலங்கை சென்று சேர்ந்ததைக் குறிக்க அந்தப் பொய்கை நடுவிலே ஒரு சுடர் தோன்றும் என்றும், அந்த சமயத்தில் பொய்கையில் மூழ்குவார் முத்தி பெறுவர் என்றும் கூறுகிறார். சீடர்கள் எல்லாம் பொய்கைக் கரையிலே காத்துக் கிடக்கின்றனர். சில நாட்கள் கழித்து, இறைவன் கூறியபடியே பொய்கையின் நடுவில் கொழுந்து விட்டுச் சுடர் எழுகின்றது. உடனே சீடர் எல்லோரும் பொய்கையில் மூழ்கி முத்தி பெற விரைகின்றனர், சீடரில் ஒரேயொருவர் மட்டும் இறைவன் கொடுத்துச் சென்ற திருமுறைகளைக் காப்பதே முத்தி பெறுவதைவிட. முக்கியம் என நினைத்து, பொய்கையில் மூழ்காமல் தனித்து நின்று திருமுறைகளைக் காப்பாற்றுகிறார். அந்தச் சீடரையே, இறைவன் வாதவூரராக அவதரிக்கச் செய்கிறார். பின்னர் அவருக்கு மட்டுமல்ல, அவரைச் சேர்ந்த பாண்டியன், பிட்டு வாணிச்சி முதலிய எல்லோருக்குமே முத்தியளிக்கிறார். இந்த மணிவாசகர் பாடிய பாடல்களே திருவாசகம். திருவாசகம் பன்னிரு திருமுறைகளிலே ஒன்றாக இடம் பெறுகிறது.

காருறு கண்ணியர் ஐம்புலன்
ஆற்றங்கரை மரமாய்
வேருறு வேனை விடுதிகண்டாய்
விளங்கும் திருவார்
ஊருறைவாய், மன்னும் உத்தர
கோச மங்கைக் கரசே!
வாருறு பூண் முலையாள் பங்க!
என்னை வளர்ப்பவனே,

என்றுதானே இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார்.

மணிவாசகர், திருவாசகம் என்றெல்லாம் எண்ணம் தோன்ற ஆரம்பித்தால், அவர் பாடிய தில்லைக் கூத்தனின் அற்புத நடனம் எல்லாம் நம் கண்முன் வருமே. தில்லை மூதூர் ஆடிய திருவடியை நினைந்து நினைந்து அவர் பாடிய பாடல்கள் எல்லாம் நம் உள்ளத்தை உருக்குமே. ஆம், இந்த உத்தரகோச மங்கையிலும் பெரிய திருவிழா மார்கழி மாதத்துத் திருவாதிரை உத்சவம்தானே, இந்த எண்ணத்தில் திளைத்துக் கொண்டேதான் உத்தரகோச மங்கைக்குச் சென்றேன் சில வருஷங்களுக்கு முன்பு. உத்தரகோச மங்கையில் மாணிக்கவாசகருக்குக் காட்டிய வித்தக வேடடத்தைக் கண்டு தொழ ஆசைப்பட்டேன். கோயில் நிர்வாகிகள் அழைத்துச் சென்றார்கள், கோயிலின் வடக்குப்பிராகாரத்துக்கு. அங்கு ஒரு சிறிய கோயில். அதுதான் நடராஜர் சந்நிதி என்றார்கள். . அங்குள்ள நடராஜர் நிரந்தரமாகச் சந்தனக் காப்புக்குள் மறைந்து நிற்கிறார். 'காரணம் வினவினேன். சொன்னார்கள் உடன் வந்தவர்கள். அந்த நடராஜத் திருவுருவம் மரகதத்தினால் ஆயது. அதனுடைய பிரகாசம் கோடி சூரிய ஒளி பொருந்தியது. அதை யாரும் ஊனக் கண்ணால் பார்த்தல் இயலாது. ஆண்டுக்கொரு முறை மார்கழித் திருவாதிரை அன்றுதான் பழைய சந்தனக் காப்பு கழற்றட்பட்டுப் புதிய காப்பிடப்படும். அப்படிக் காப்பிடும் அர்ச்சகரும் தம் கண்களை நன்றாக மூடி, துணியால் கட்டிக் கொண்டே காப்பிடுவார். அப்படிக் காப்பிட்ட பின் தான் அந்த மூர்த்தி மற்றவர்களுக்குத் தரிசனம் கொடுப்பார். ஆம்! இறைவனை நோக்கி எவ்வளவோ காலம் தவம் கிடக்கலாம். ஆனால் அவன் நேரே நம் முன் திடீரென்று பிரத்தியட்சமாகத் தோன்றிவிட்டால் அவனுடைய திவ்ய தேஜோமயத்தை நம் கண் கொண்டு காணுவது எளிதானதா?

தமிழ் நாட்டுச் சிற்பக்கலை அழகில் ஈடுபட்ட எனக்கு, இந்த நடராஜன் ஏமாற்றத்தையே அளித்தார், சந்தனக் காப்பை ஊடுருவி அவர் உண்மை உருவை, மூர்த்தியை அவர் இருக்கும் எண்ணத்திலேயே காண முடியாத காரணத்தால். ஆனால் இந்த மாற்றத்தோடு நான் வீடு திரும்பவில்லை. இந்தச் சந்நிதியை விட்டு, பிரதான கோயிலுக்குள் நுழைந்தபோது, அங்கு நின்று ஆடிக்கொண்டிருந்த நடராஜரைக் காணும் பேறு பெற்றேன். அற்புதமான செப்பு விக்கிரகம். 'அழகமர் திரு உரு' என்று மணிவாசகர் பாடுகிறாரே, அது இந்தத் திருவுருவைக் கண்டுதானோ என்னவோ,- அத்தனை அழகு.

இந்த நடராஜரது திருவுருவத்தைக் கண்டதோடு திருப்தி அடைகிறவனில்லையே நான். உத்தரகோச மங்கை என்ற பெயருக்கே காரணமாயிமந்த அந்த மங்கை, பூண்முலையாள், மங்களேசுவரி; கல்யாண சுந்தரியையும் காண வேண்டுமே என்று துடித்தேன். அவளும் காட்சி கொடுத்தாள்.

காரேறு கருங்குழலும், திருநுதலும்
சுடரிலை வேல் கண்ணும், கஞ்சத்
தாரேறு திருமார்பும், கரும்புருவத்
தடந்தோளும், கருணை காட்டி

நீரேறு சுடர்மலிவுப் பெருமான்றன்
ஒரு பாகம் நீங்கா தோங்கும்
வாரேறு பூண்முலையாள் மலர்ப்பதமும்
எந்நாளும் வழுத்தல் செய்வோம்

என்று பாடி வணங்கிவிட்டுத் திரும்பினேன்.

இங்கு ஒரு சௌகரியம். கோயிலில் உள்ள மூர்த்திகளையெல்லாம் தேடிப்பல இடங்கள் சுற்ற வேண்டாம். எல்லா மூர்த்திகளையும் (சிலா உருவங்களைச் சொல்கிறேன்) அவரவர் இருப்பிடத்திலிருந்து பெயர்த்து எடுத்து வந்து இறைவன் சந்நிதியிலேயே ஒழுங்காய் அடுக்கி வைத்திருக்கிறார்கள். காரணம் வினவினேன். கோயில் பழுது பட்டிருக்கிறது. திருப்பணி செய்யவேண்டும். அதற்கென்று ஒதுக்கிய பணமும் இருக்கிறது என்றாலும் வேலைதான் நடக்கக் காணோம் என்றார்கள். சரி, திருப்பணி சிறப்புற நடக்காவிட்டாலும் எல்லா மூர்த்திகளையும் ஒரே இடத்திலேயே பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்ததே என்று எண்ணிக் கொண்டே திரும்பினேன்.