வேங்கடம் முதல் குமரி வரை 4/012-032

விக்கிமூலம் இலிருந்து
12. திருவாதவூர் அண்ணல்

சிலர் பெரிய மனிதர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் முயற்சியால் பெரிய மனிதர்களாகிறார்கள். சிலர் பெரிய மனிதர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்பது ஆங்கிலப் புலவர் ஒருவரது விமரிசனம். இது மனிதர்களுக்கு மட்டும் இருக்கும் சிறப்பு அல்ல. கிராமங்கள், நகரங்களுக்குமே இச்சிறப்பு உண்டு. அரியக்குடி, செம்மங்குடி, முசிரி முதலிய கிராமங்கள், சரித்திரப் பிரசித்தியோ அல்லது புராணப் பிரசித்தியோ உடையவை அல்ல. என்றாலும் இம்மூன்று ஊர்களையும் இன்று இசை உலகில் அறியாதவர் இல்லை. காரணம், அரியக்குடியில் ஒரு ராமானுஜ அய்யங்கார், செம்மங்குடியில் ஒரு ஸ்ரீனிவாச அய்யர், முசிரியில் ஒரு சுப்பிரமணிய அய்யர் தோன்றியிருக்கிறார்கள். நல்ல சங்கீத விற்பன்னர்களாக வாழ்கிறார்கள். அது காரணமாக அரியக்குடி, செம்மங்குடி, முசிரி முதலிய கிராமங்களும் பிரசித்தி அடைந்து விடுகின்றன.

அதுபோலவே மதுரை ஜில்லாவில் ஒரு சிறிய ஊர். அந்த ஊர் அவ்வளவு பிரபலமான ஊர் அல்ல, அங்கு அமாத்தியர் குலத்திலே ஒருவர் பிறக்கிறார். வளர்கிறார். அவருடைய அறிவுடைமையைக் கேட்டுப் பாண்டிய மன்னன் அரிமர்த்தனன் தன் மந்திரியாகவே ஆக்கிக்கொள்கிறான். இந்த அமைச்சரை இறைவன் ஆட்கொள்கிறான். அவர் திருவாசகம் என்னும் தெய்வப்பாக்களைப் பாடுகிறார். அதனால் இறைவனாலேயே மாணிக்க வாசகர் என்று அழைக்கப்படுகிறார். அந்த மாணிக்க வாசகரது பிறப்பால் வாதவூர் பெருமை அடைகிறது. மாணிக்கவாசகரது பிள்ளைத் திருநாமம் என்ன என்று தெரியவில்லை. அவரை வாதவூரர் என்றே அழைக்கிறார்கள். வாதவூர் அண்ணல், வாதவூர்த்தேவன் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இப்படி மாணிக்கவாசகராம் வாதவூரர் பிறந்ததினாலே பெருமையும் பிரசித்தியும் பெற்ற தலம்தான் திருவாதவூர். அந்தத் திருவாதவூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருவாதவூர் மதுரைக்கு வட கிழக்கே பதினான்கு மைல் தொலைவில் உள்ள சிறிய ஊர். மதுரையிலிருந்து ஒத்தக்கடை வரை நல்ல சிமிண்ட் ரோடு இருக்கிறது. அதன் பிறகு சாதாரணக் கப்பி ரோடு உண்டு கார் இருந்தால் காரிலேயே செல்லலாம், இல்லாவிட்டால் பஸ்ஸிலும் செல்லலாம். ஊருக்குள் நுழைந்ததும் நம்மை வரவேற்பதும் ஒரு பெரிய குளம். அதனை ஏரி, கண்மாய் என்றெல்லாம் கூறுவர் மக்கள், அதுவே! புராணப் பிரசித்தி உடைய விஷ்ணு தீர்த்தம். வேதங்களை வைத்திருந்த திருமால் அவற்றை இழந்திருக்கிறார் ஒரு சமயம். அவற்றை மீண்டும் பெற இத்தலத்துக்கு வந்து இங்கு கோயில் கொண்டிருக்கும் வேதநாயகனை வழிபட்டிருக்கிறார். அவர் வழிபட்டது நீர் உருவில் நின்று. அதனாலேதான் இந்தத் தீர்த்தம் விஷ்னு தீர்த்தம் என்கிறார்கள்.

இந்தத் தீர்த்தக் கரையில் நின்று பார்த்தால் குளத்தினுள்ளே இரண்டு கற்கம்புகங்கள் தெரியும். அவகளின் மீது ஒரு கல் விட்டமும் அதன் மேல் ஒரு பிம்பமும் இருக்கும். இதனையே, புருஷா மிருகம் என்பர். உடல் எல்லாம் மிருகத்தின் உடலாகவும் முகம் மாத்திரம் முனிவரது முகம் போலவும் இருக்கும். புருஷா மிருகத்தைப் பற்றிப் பாரதத்தில் விரிவான விளக்கம் இருக்கிறது. பாண்டவர் தலைவனான தருமர் ராஜசூய யாகம் செய்ய முனைந்தபோது, யாக பூமியை தேர்ந்தெடுத்து அதைச் சுத்தமாக்கப் புருஷா மிருகத்தையே வேண்டியிருக்கிறார். அப்படியே புருஷா மிருகம் வேள்வி நடக்க இருக்கும் இடத்துக்கு வந்து அதனைத் தூய தாக்கியிருக்கிறது. இதோடு மாத்திரம் இதன் வரலாறு முடிந்து விடவில்லை. இது விஷ்ணு தீர்த்தத்தின் மத்தியில் இருந்து தீர்த்தத்தையே புளிதமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வட்டாரத்தில் மழை இல்லாமலிருந்தால் நூறு தேங்காய்களையம், வேறு பொருள்களையும் கருக்கி இந்தச் சிலையின் மேல் பூசுவார்களாம். அப்படிப் பூசிய இரண்டு மூன்று நாட்களுக்குள் நல்ல மழை பெய்கிறதாம். இப்படி ஓர் அனுபவம் இந்தப் புருஷா மிருக வழிபாட்டிலே. ஆகவே நாம் விஷ்னு தீர்த்தம், அங்குள்ள புருஷா மிருகம் இவைகளை வணங்கிய பின்னரே கோயிலில் நுழைய வேணும். கோயில் வாயிலில் ஒரு குளம், அதனை அக்கினி தீர்த்தம் என்பர்.

கோயில் வாயிலை ஐந்து மாடங்கள் கொண்ட ராஜகோபுரம் அணி செய்கிறது. கோயில் வாயிலைக் கடந்து உட்சென்றால் வெளிப் பிராகாரத்துக்கு வருவோம். அங்கு தல விருட்சமான மகிழ மரம் விரிந்து பரந்திருக்கிறது. அங்கேயே பைரவ தீர்த்தமும் இருக்கிறது. இந்தப் பிராகாரத்தின் வட பக்கத்திலே ஒரு நூற்றுக் கால் மண்டபம் இருந்திருக்க வேணும். அது இடிந்து சிதைந்து கிடக்கிறது என்றாலும் இன்னும் இருக்கும் கொடுங்கைள் அழகு வாய்ந்தவையாக இருக்கின்றன. இந்த மண்டடத்தை மாணிக்கவாசகரே கட்டினார் என்பது கர்ண பரம்பரை. இந்த மண்டபத்தில்தான் நடராஜர் மணிவாசகருக்குத் தம் பாதச் சிலம்பொலி கேட்க நடனம் ஆடியிருக்கிறார். அதை மாணிக்க வாசகரே,

வாதவூரில் வந்து இனிது அருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்

என்றும் பாடி மகிழ்ந்திருக்கிறாரே. இந்தப் பிராகாரத்தையும் சுடந்தே அடுத்த பிராகாரத்துக்கு வரவேணும். பிரதான கோயில் நேரேயே இருக்கும். அங்கு சென்று வாதபுரி ஈசுவரராம் வேதநாயகரைத் தொழுது வணங்கலாம். வாயு பூஜித்த தலம் ஆதலால் வாதபுரி ஈசுவரர் என்று பெயர் பெற்றிருக்கிறார். வேதங்களையெல்லாம் காத்தருளிய காரணத்தால் வேதநாயகர் என்றும் பெயர் பெற்றிருக்கிறார். அம்மையின் பெயரும் வேதநாயகி., ஆரணவல்வி என்பதுதானே. வேதநாயகர் கோயில் உள்ளேயே ஒரு கிணறு, கபிலதீர்த்தம் என்ற பெயரோடு. சகரர்களைத் தம் பார்வையால் எரித்த கபில் முனிவர் இங்கே வந்து வேதநாயகனைப் பூஜித்து இத் தீர்த்தம் அமைத்தார் என்பது புராண வரலாறு. இந்தக்
திருவாதவூர்

கோயிலின் வடபக்கத்திலேயே ஒரு சிறு சந்நிதி, அங்கு சிலா விக்கிரகமாக நடராஜரும் சிவகாமியும் இருக்கின்றனர். நல்ல வடிவங்கள். நூற்றுக்கால் மண்டபம் நல்ல நிலையில் இருந்தபோது அங்கிருந்தவர்கள் போலும், பின்னர் மூலக்கோயிலிலேயே வந்து இடம் பிடித்திருக்கின்றனர். இந்தச் சந்நிதிக்கு நேரேயுள்ள தெற்கு லாயிலைத்தான் ஆறுகால் பீடம் என்கிறார்கள். நல்ல வேலைப்பாடமைந்த ஆறு தூண்கள் அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன, அந்த வாயில் வழியாக வெளியே வந்து மேற்குப் பிராகாரத்துக்குப் போனால் அங்கு தான் மணிவாசகருக்கு ஒரு சந்நிதி அமைத்திருக்கிறார்கள். அங்கு ஏடேந்திய! கையராய்ச் சிலை வடிவில் மாணிக்க வாசகர் இருக்கிறார். அவரது உத்சவ விக்காகங்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று பழைய வடிவம். மற்றொன்று சமீபகாலத்தில் செய்யப்பட்டது. பழைய வடிவிலே முழங்காலுக்கு மேலே துண்டு அணிந்த நிலையில் இருப்பவரை, இப்போது கோவணத்துடன் நிற்பதாக அமைத்திருக்கிறார்கள். மாணிக்கவாசகாது துறவைப் பூரணமாகக் காட்டக் கோவணத்துடன்தான் நிற்க வேண்டுமென்று நினைத்தார்கள் போலும். பழைய வடிவிலே உள்ள அழகு புதியவடிவில் இல்லைதான்.

இந்தப் பிராகாரத்தின் தென்பக்கத்து வாயில் வழியாகத்தான் வேதநாயகியின் தனிக்கோயிலுக்குச் செல்லவேணும். எல்லாச் சிவன் கோயில்களும் அம்பிகை இறைவனின் இடப்புறம் இருக்க, இங்கு வலப்புறத்தில் இருக்கிறாள். மதுரையிலும் அப்படியே, அவிநாசி கருணாம்பிகையும் அப்படியே. இப்படி இடம் மாறிய காரணத்தால், இச்சந்நிதியில், சக்தியின் ஆதிக்கம் அதிகம் என்றும் தெரிகிறோம், நின்ற கோலத்தில் கம்பீரமாக நிற்கும் ஆரணவல்லியை வணங்கி வெளியில் வரலாம்.

இத்தலம் மாணிக்கவாசகர் பிறந்ததால் உயர்ந்தது என்று முன்னமேயே சொன்னேன். வாதவூரர் மன்னவன் விருப்பப்படியே அமைச்சர் பதவியேற்று, அவன் வேண்டிக் கொண்ட வண்ணமே கீழ்க்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றதும், அங்கு திருப்பெருந்துறையில் இறைவானால் ஆட்கொள்ளப்பட்டதும், பின்னர் மன்னன் வாதவுரை அழைத்துக்கேட்க, அவருக்காக இறைவனே நரிகளைப் பரிகளாக்கிக் கொள்வதும், பின்னர் அந்தப் பரிகளே நரிகளாகி ஓடிப்போய் விடுவதும் இதற்கெல்லாம் காரணம் வாதவூரரே என்று அவரைச் சிறையில் அடைப்பதும், அங்கு வைகையில் வெள்ளம் பெருகிவர அதை அடைக்க ஊரையே திரட்டுவதும், அங்கு வந்தியின் பங்குக்காக இறைவனே கூலியாளாக வந்து பாண்டிய மன்னனிடம் அடிபடுவதும், பின்னர் வாதவூரர் பெருமையை அறிவதும் இறைவனே நடத்திய திருவிளையாடல். இந்தத் திருவிளையாடல் விழா சிறப்பாக மதுரையில் நடைபெறுகிறது. வருஷந்தோறும் அவ்விழாவுக்கு, வாதவூரிலுள்ள மாணிக்கவாசகர் எழுந்தருளி நான்கு நாட்கள் அங்கு தங்கி அதன் பின்பே ஊர் திரும்புகிறார். வாதவூரராம் மாணிக்க வாசகருக்கு மற்ற மாணிக்கவாசகருக்கு இல்லாத சிறப்பு இருந்தாக வேண்டுமே. மார்கழி மாதம் முதல் பத்து நாட்கள், வாதவூரில் திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது. பத்து நாட்களும் மாணிக்கவாசகர் உலாவருவார்.

இத்தலத்தில் சங்கப்புலவர் கபிலரும் வாழ்ந்திருக்கிறார். முன்னரே நாம் திருக்கோவிலூர் போயிருந்த போது. அவர் பாரியின் சிறந்த நண்பர் என்றும், பாரி மக்களுக்கு மணம் முடித்து வைத்தபின் எரிமூழ்கி இறந்தனர் என்று அங்குள்ள கபிலக் கல் கூறும் கதை மூலம் தெரிந்திருக்கிறோம். மணிவாசகரைப் போலவே, கபிலரும் இவ்வாதவூரில் பிறந்தவர்தாம். இவர் சின்னப் பிள்ளையாக இருந்தபோதே ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார். பாட்டு இதுதான்.

நெட்டிலை இருப்பை வட்ட வான்பூ வட்டாதாயின்
பீடுடைப் பிடியின் கோடு ஏய்க்கும்மே! வாடினோ பைத்தலைப் பரதர் மனைதொறும் உணங்கும்
செத்தனை இரவின் சீர் ஏய்க்கும்மே!

நெடிய இலைகளையுடைய இலுப்பைப்பூ வாடாமல் இருந்தால் பெண் யானை பின் கொம்பை ஒத்திருக்கும், வாடிவிட்டாலோ வலையர் வீடுகளில் காய்ந்து கிடக்கும். இறா மீன்போல் சுருண்டு கிடக்கும் என்பது பாட்டின் பொருள். இந்தப் பாட்டினையும் நினைவுபடுத்தி இந்தப் பாடல் பாடி!! கபிலனார் பிறந்த ஊர் திருவாதவூர் என்று திருவிளையாடல் புராதனம் கூறும்.

நீதிமா மதுரக நீழல்
'நெட்டிலை இருப்பை' என்றோர்
காதல்கூர் பனுவல் யாக்கும்
கபிலனார் பிறந்த மூதூர்
வேதநாயகனூர் வாழ் திருவாதவூர்

என்பது பாடல். ஆகவே இந்த ஊர் சிறந்த இலக்கியப் பிரசித்தி உடைய ஊராகவும் இருந்திருக்கிறது.

எல்லாம் சரிதான். மணிவாசகர் பிறந்த இடம், வீடு ஒன்றும் இந்தத் தலத்தில் இல்லையா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது வேதநாயகர் கோயிலில் இருந்து தெற்கே இரண்டு பர்லாங்கு தூரத்தில் ஒரு சிறு கோயில் கட்டியிருக்கிறார்கள், அங்குதான் மனிவாசகர் வீடு இருந்ததாம். அதனால் ஊர் மக்கள் கொஞ்சம் பணம் திரட்டி அங்கு மணி வாசகருக்கு ஒரு கோயில் எழுப்பியிருக்கிறார்கள்.

வாதவூரராம் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பற்றி எவ்வளவோ விவாதம், அவர் மூவர் முதலிகளுக்கு முற்பட்டவரா? இல்லை. பிற்பட்டவரா? இந்த வாதங்களுக்கெல்லாம் முடிவு காண்பது எளிதான காரியம் இல்லை. ஆனால் அவர் பிறந்த ஊர் வாதவூர் என்பதில் வாதம் ஒன்றுமே இல்லை. மானமங்கலத்திலிருந்து இங்கு வந்து குடியேறி அமாத்தியப் பிராமணர் குலத்தில் தோன்றியவர் என்பதிலும் விவாதம் இல்லை. இவற்றையெல்லாம் விட, இந்த வாதவூர்த்தேவு என்று உலக புகழ் மாமணியின் மணிவாசகம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் என்பதிலும் வாதமே இல்லை . திருவாசகத்தைக் கசிந்து பாடிய ராமலிங்க அடிகள்.

வான் கலந்த மாணிக்கவாசக!
நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்
நற் கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து
செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து
உவட்டமாய் இனிப்பதுவே.

என்று கூறினார். திருவாசகத்தேனை, அமுதைப் படித்து அனுபவித்தவர்களுக்குள்ளே இதைப் பற்றியும் யாதொரு விவாதமுமில்லை. ஏதோ வாதவூர் என்ற தலத்தில் பிறந்தாலும், வாதங்கள் இல்லாத பல உண்மைகளை அல்லவா எவ்லோரும் உணரும்படி செய்திருக்கிறார். அது போதும் நமக்கு.