வேங்கடம் முதல் குமரி வரை 4/017-032

விக்கிமூலம் இலிருந்து
17. ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள்

பக்தி பண்ணுவதற்குப் பாவனை அவசியம், அந்தப் பாவனை எத்தனை எத்தனையோ வகையில் அமைதல் கூடும். அப்படிப் பாவனை செய்வதில் நான்கு பாவனைகள் முக்கியமானவை. இறைவனைத் தனயனாகப் பாவனை பண்ணிப் பக்தி செலுத்துவது ஒருமுறை. அதுவே வாத்சல்ய பக்தி எனப்படும் இறைவனை ஆண்டானாகப் பாவனை பண்ணி அவனது தாஸனாக மாறிச் சேவை செய்வது ஒரு முறை. அதுவே தாஸ்ய பக்தி. இறைவனை அருமைத் தோழனாகவே கொண்டு அவனோடு நெருங்கி உறவாடிப் பக்திப் பண்ணுவது ஒரு முறை. இதனையே ஸக்ய பக்தி என்பர். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனையே காதலனாகப் பாவனை பண்ணி அவனிடத்தில் காதலைச் செலுத்தி வழிபடுவது, இதனையே மதுர பக்தி என்பர். இந்த மதுர பக்தியிலே பல மாதர்கள் தமிழ்நாட்டில் திளைத்திருக்கிறார்கள். பாடல்கள் பாடித் தங்களது பக்தி அனுபவத்தை எல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள். என்றாலும் வெறும் பாவனையோடு நிற்காமல், இறைவனாம் பரந்தாமனையே காதலனாக வரித்து அவனையே மணாளனாகப் பெற்றுப் பெருமையுற்றவள் ஆண்டாள். அந்த ஆண்டாள் பிறந்து வளர்ந்த இடம்தான் ஸ்ரீ வில்லிப்புத்தூர். அந்த ஸ்ரீ வில்லிப்புத்தூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

ஸ்ரீ வில்லிப்புத்தூர் தென்காசி-விருதுநகர் ரயில் பாதையில் உள்ள ஊர். ஆதலால் ரயிலில் செல்வோர் எளிதாக அவ்வூர் சென்று சேரலாம், மோட்டாரில் மதுரையிலிருந்து திருமங்கலம் வந்து அங்கிருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் சென்றாலும் சென்று சேரலாம். அந்தத் தலத்துக்கு நான்கு பக்கங்களிலிருந்தும் நல்ல ரோடும் பஸ் வசதியும் உண்டு. ஊர் சென்று சேர்ந்ததும், கோயிலுக்குச் செல்லுமுன் இந்த ஊருக்கு வில்லிப்புத்தூர் என்று பெயர் வருவானேன் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே.

ஒரு காலத்தில் இந்த வட்டாரம் முழுதும் செண்பக வனமாக இருந்திருக்கிறது. அங்கு இரண்டு முனிவர்கள், இறைவனது சாபத்தால் வேடர்களாகப் பிறந்து வாழ்கிறார்கள். இவர்களில் ஒருவன் பெயர் லில்லி, இன்னொருவன் பெயர் கண்டன். இளையவனான கண்டன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒரு புலியால் கொல்லப்படுகிறான். இதனால் வில்லி மனம் உடைந்து வாழும் போது, பரந்தாமன் வில்லியினது கனவில் தோன்றி, 'நீ இந்தக் காட்டை அழித்து இதனை ஒரு நகரம் ஆக்கு. பாண்டீ, சோழ நாடுகளிலுள்ள அந்தணர்களைக் கொண்டு வந்து குடியேற்று' என்று சொல்கிறார். அதன்படியே வில்லி காடு திருத்தி நாடாக்கிய நகரம்தான் வில்லிப்புத்தூர்.

அந்த வில்லிப்புத்தூரில் கோயில் கொண்டிருப்பவர்தான் வடபத்திரசாயி, ஆண்டாள் முதலியோர். கோயில் அமைப்பிலே முன் நிற்பது வடபத்திரசயனர் கோயில்தான். பெரிய கோபுரம் இருப்பதும் அந்தக் கோயிலுக்குத்தான் என்றாலும் இத்தலத்தில் முக்கியத்துவம் எல்லாம் ஆண்டாள் திருக்கோயிலுக்குத்தான். ஆதலால் நாமும் முதலில் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று ஆண்டாளை வணங்கிவிட்டு அதன்பின் வடபத்திர சயனரை வணங்கலாம். ஆண்டாள் கோயில் ரோட்டை விட்டுக் கொஞ்சம் உ.ள்ளடங்கியே இருக்கும். அந்தக் கோயில் வாயிலில் முதன் முதல் இருப்பது பந்தல் மண்டபம். இதனைக் கடந்து உள்ளே சென்றால் இடது கைப்பக்கம் கல்யாண மண்டபம். இதற்கு அடுத்தாற்போல் இடைநிலைக் கோபுரம், இதனைக் கடந்துதான் ஒரு வெளிப் பிராகாரம் இருக்கும். இங்குதான். ராமனுக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன, வேறு முக்கியமாகப் பார்க்க வேண்டியவை ஒன்றும் இல்னல, ஆதலால் இடைநிலைக் கோபுரத்தை அடுத்த துவஜ ஸ்தம்பத்தின் வழியாகவே கோயில் உட்பிராகாரத்தக்குச் செல்லலாம். இந்தத் துவஜ ஸ்தம்ப மண்டபத்திலேதான் பல சிற்ப வடிவங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். உள் பிரகாரம் சென்றதும் நம்முன் இருப்பது மாதவிப் பந்தல், அந்தப் பிராகாரத்தைச் சுற்றிலும் அங்கு நூற்றெட்டுத் திருப்பதிகளில் உள்ள பெருமாள் நமக்குக் காட்சி கொடுப்பார். ஆம்! சுவரில் உள்ள சித்திர வடிவில்தான், 'இரண்டு வருஷங்களுக்கு முன் அந்தச் சித்திரங்களைப் புதுப்பித்து எழுதத் திட்டமிட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. பூர்த்தியாகி விட்டதோ என்னவோ?

மாதவிப் பந்தல், மணி மண்டபம், ஆண்டாள் சுக்கிரவாரக் குறடு எல்லாம் கடந்துதான் அர்த்த மண்டடம் வரவேண்டும். அதற்கு அடுத்ததே கருவறை. அந்தக் கருவறையினுள்ளேதான் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய திருவடி மூவரும் சேவை சாதிக்கிறார்கள். நடுவில் ரங்கமன்னார். அவரது வலப்பக்கத்தில் ஆண்டாள். இடப்பக்கத்தில் பெரிய திருவடியாம் கருடாழ்வார் எழுந்தருளியிருக்கிறார்கள். ரங்கநாதர் திருமணக் கோலத்தோடு கூடிய ராஜ கோலத்தில் ராஜகோபாலனாகக் கையில் செங்கோல் ஏந்தி நிற்கிறார். ஆண்டாளோ சர்வாலங்கார பூஷிதையாய் அவர் பக்கலில் நிற்கிறாள். மற்றக் கோயில்களில் எல்லாம் பெருமாளுக்கு எதிரே நின்று சேவை சாதிக்கிற கருடாழ்வார் இங்கு மட்டும் ரங்கநாதர் பக்கத்திலேயே ஏகாங்கியாய் எழுந்தருளியிருப்பானேன் என்று கேட்கத் தோன்றும் நமக்கு. ஆண்டாளை மணம் புரிய வந்த ரங்கநாதரை அவசரம் அவசரமாகக் காற்றினும் கடுகிக் கொண்டு வந்து சேர்த்தவர் அல்லவா அவர்! அதற்காகவே இந்த நிலை வாய்த்திருக்கிறது அவருக்கும். மூல விக்கிரகங்களுக்கு முன்னாலே தங்க ஸ்தாபன கோபால மஞ்சத்தில் உற்சவ மூர்த்திகளாகவும் மூவரும் எழுந்தருளியிருக்கிறார்கள், இந்த மூர்த்திகளைத் தரிசிக்கும்போதே, ஆண்டாள் பிரபாவத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் நாம்.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார் திருத்துழாய் கைங்கரியம் செய்து வந்திருக்கிறார். ஒரு நாள் அவர் நந்தவனத்தில் திருத்துழாய் மரத்தடியில் ஒரு பெண் குழந்தை கிடப்பதைக் கண்டு எடுத்து வந்து அவரது மனைவியான

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள்

விரலஜயிடம் கொடுக்கிறார். குழந்தைக்குக் கோதை என்ன பெயரிட்டு அன்போடு வளர்க்கின்றனர். கோதையும் தன் தோழியருடன் எல்லாம் களிப்புடன் லிளையாடி மகிழ்கிறாள். ஒருநாள் லிஷ்ணுசித்தர் பெருமாளுக்கு என்று தொடுத்திருந்த பூமாலையைத் தன் கூந்தலிலே சூட்டி அழகு பார்க்கிறாள். பின்னர் மாலையை களைந்து வைத்து விடுகிறாள். அவள் சூடிக் களைந்த மாலை பின்னர் பெருமாளுக்கு அணியப் பட்டிருக்கிறது. இப்படியே நடக்கிறது பல நாட்களும்.

ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதை மாலை சூடி அழகு பார்க்கும்போது கண்டு விடுகிறார். இதற்காக மகளைக் கோபித்துவிட்டு அன்று பெருமாளுக்கு மாலை சாத்தாமலேயே இருந்து விடுகிறார். ஆனால் பெருமாளோ இரவில் அவரது கனவில் தோன்றி, கோதை சூடிக் கொடுத்த மாலைகளே எனக்கு உகந்த மாலைகள், அவளே என் ஆண்டாள் என்று சொல்கிறார். விஷ்ணுசித்தராம் பெரியாழ் வாருக்கோ ஒரே மகிழ்ச்சி. அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளையே பெருமாளுக்கு அணிவிக்கிறார். இப்படி பூமாலை சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பாமாலைகள் சாத்தவும் முற்படுகிறாள். வளர்ந்து பருவமங்கையானதும் தன் காதலனாக பெருமாளையே வரிக்கிறாள். 'மாலிருஞ்சோலை எம்மாயற்கு அல்லால் மற்றொருவர்க்கு என்னைப் பேச ஒட்டேன்' என்று சாதிக்கிறாள், 'மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் முறை தாழ்ந்த பந்தற்கீழ், மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து கைத்தலம் பற்றி' மணமாலை சூட்டக் கனாக் காண்கிறாள்.

இப்படி இவள் சொல்லிக் கொண்டிருக்கிறாளே என்று பெரியாழ்வார் கவலையடைய, ஆழ்வாரது கனவிலே திருவரங்கச் செல்வனே வந்து கோதையைத் திருவரங்கம் அழைத்து வரவேண்டும் என்றும், அங்கு தாமே அவளைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கொல்கிறார். ஆண்டாளை மணிப்பல்லக்கிலே ஏற்றி வாத்திய கோஷங்களுடன் திருவரங்கத்துக்கு அழைத்துச் செல்கிறார் பெரியாழ்வார். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள். சுரும்பார் குழல் கோதை வந்தாள், திருப்பாவை பாடிய செல்வி வந்தாள், தென்னரங்கம் தொழுதேசியள் வந்தாள் என்று அவளை எதிர்கொண்டு அழைக்கின்றனர். சூடிக்கொடுத்த நாச்சியாரும் எல்லோரும் காணும்படி அழகிய மணவாளன் திருமுன்பு சென்று அவன் திருவடி வருடி அவனுடன் ஒன்றறக் கலக்கிறாள். இதைப்பார்த்த பெரியாழ்வார், 'ஒருமகள் தன்னை உடையேன். உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்' அவளைச் செங்கண்மால் தான் கொண்டு போனான் என்று துக்கித்துப் பெருமாளிடம், கோதையைப் பலர் அறிய ஸ்ரீ வில்லிப்புத்தூரிலேயே திருமணம் செய்தருள வேண்டும் என்று வேண்ட, அழகிய மணவாளனும் அப்படியே செய்கிறேன் என்று பங்குனி உத்திரத்தன்று கருடாழ்வாரின் மீது கோதையுடன் வந்து திருமணம் செய்து கொள்கிறார்.

அன்று முதல் ரங்கமன்னார் கோதையுடனும் பெரிய திருவடியுடனும் ஸ்ரீ வில்லிபுத்தூரிலேயே கோயில் கொண்டு விடுகிறார். பெரியாழ்வாரும், ஆண்டாளும் பாடிய பாசுரங்களே நாலாயிரப் பிரபந்தத்தில் முதலிடம் பெறுவன. ஆண்டாள் கோயில் விமானம் தங்கத் தகடு போர்த்தப் பெற்றது. இதில் ஆண்டாள் திருப்பாவைப் பாடல்களை விளக்கவல்ல திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டாளைத் தரிசித்து விட்டுத் திரும்பும்போது துவஜ ஸ்தம்ப மண்டபத்திலும், அதை அடுத்த மண்டபத்திலும் உள்ள தூண்களில் ரதி மன்மதன், ராமன் லக்ஷமணன், சரஸ்வதி முதலியோரது சிலா வடிவங்களைக் காணலாம், நல்ல நாயக்கர் காலத்து சிற்ப வடிவங்கள்.

ஆண்டாள் கோயிலை விட்டு வெளியே வந்து வடகிழக்கு நோக்கி நடந்தே வடபத்திர சயனர் கோயிலுக்கு வரவேணும். அங்கு போகும் வழியில் ஆண்டாள் பிறந்த நந்தவனம் இருக்கிறது. அங்குள்ள கோயிலில் ஆண்டாளது திருவுருவம் சிலைவடிவில் தளியே இருக்கிறது. இங்குள்ள ஆண்டானையும் தரிசித்து விட்டு வடக்கே நோக்கி நடந்தால் வடபத்திர சயனர் கோயில் வருவோம். கோயில் வாயிலைப் பெரியதொரு கோபுரம் அணி செய்கிறது. இந்தக் கோபுர வாயிலை அடுத்து வடபுறம் தெற்கே பார்க்கப் பெரியாழ்வார் சந்நிதி இருக்கிறது. பெரியாழ்வார் அவதரித்த இடம் ஆதலால் சாத்துமுறை சிறப்பாக நடக்கிறது.

இந்தச் சந்நிதியை அடுத்து மேற்கேயுள்ளது பெரிய பெருமாள் சந்நிதி, இக்கோயிலில் இரண்டு தட்டுகள். கீழே நரசிங்கப் பெருமாள் சந்நிதி, இச்சந்நிதிக்குக் கிழக்கே வடபுறம் பன்னிரு ஆழ்வார்களும் தசாவதார மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கிறார்கள். தென்பக்கமாக மேல் மாடிக்குப் போகப் படிகள் இருக்கின்றன. அவைகளில் ஏறிச்சென்றால் முதலில் நாம் சேர்வது கோபால விலாசம். அதனை அடுத்து விமல ஆகிருதி விமானத்தின் கீழே உள்ள கருவறையில் வட ஆல விருட்சத்துக்கு அடியில், ஆதிசேஷன்மீது பூதேவியும் சீதேவியும் அடிவருட வடபத்திரசயனர் சயனித்திருக்கிறார். அருணன், பிருகு, மார்க்கண்டேயன் எல்லாம் அங்கே இருக்கிறார்கள், இங்குள்ள அர்த்த மண்டபத்தில் சக்கரத்தாழ்வார், கண்ணன் வீதியுளா வருவார், வில்லிப்புத்தூர் உறைவார், அல்லல் தவிர்த்த பிரான் முதலியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த வடபத்திரசயனர் கோயில்தான் ஆதிக்கோயில், ஆண்டாள் கோயில் பின்னால் எழுந்ததே.

பெரியாழ்வாரும் ஆண்டாளும் பலப்பல பாசுரங்கள் பாடியிருந்தாலும் வில்லிப்புத்துரைப் பற்றிப் பாடிய பாடல்கள் இரன்டே இரண்டுதான்.

மந்றைய ஆழ்வார்கள் இந்த வடபத்திரசயனலன மங்களாசாஸனம் செய்ததாகத் தெரியவில்லை.

ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர உற்சவமே பெரிய திருவிழா. அதில்தான் தேரோட்டம் எல்லாம், பங்குனியில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும் சிறப்பானதே. இந்த நாச்சியார் கோயிலைச் சேர்ந்த சுற்றுக் கோயில்கள் ஒன்பது.

பெரியாழ்வாரும் ஆண்டாளும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆண்டாள் கோயில் கருப்பக்கிரஹம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் முதலியவைகளைச் சுந்தரத்தோளுடைய மாவலி வாணாதிராயர் கட்டினார் என்று கோயிலின் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. இவரே சுந்தரத்தோள நல்லூர் என்ற சொக்கனேந்தல் கிராமத்தை நாச்சியாருக்கு மானியமாக விட்டிருக்கிறார். இரண்டு கோயில்களும் பாண்டிய மன்னர்களால் பரிபலிக்கப்பட்டு வந்திருக்கின்றன. வடபத்திர சயனர் கோயில் ஜடாவர்மன் என்ற திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் குலசேகரன் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

இராமானுஜருக்கும் இந்தக் கோயிலுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. இராமானுஜர் இத்தலத்துக்கு எழுந்தருளியபோது, நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலை மாலிருஞ்சோலை சுந்தரராஜனுக்குப் படைக்கச் சொன்னபடி படைத்த தன் அண்ணா வருகின்றார் என்று ஏழடி முன் நடந்து எதிர்கொண்டு அழைத்திருக்கிறாள் ஆண்டாள். அது முதல் இராமானுஜரைக் 'கோயில் அண்ணன்' என்றே அழைத்திருக்கிறார்கள். கம்பர் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். ஆண்டாளுக்குச் சூடகம் என்ற தலைக்கணியை வழங்கியிருக்கிறார். திருமலை நாயக்கரும் இக்கோயில் திருப்பணியில் பங்கு பெற்றிருக்கிறார். அவரது சிலை ஆண்டாள் கோயிலில் சுக்கிரவாரக் குறட்டில் ஒரு கம்பத்தில் இருக்கிறது.

கோதையையும் பெரியாழ்வாரையும் பற்றிப் பின் வந்தவர்கள் பாடிய பாடல்கள் அனந்தம். அவைகளில் கோதையைப் பற்றி உய்யக் கொண்டார் பாடிய பாடல் பிரசித்தம்.

அன்னவயல் புதுவை
ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை
பல்பதியம்,-இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்
நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

என்பது பாடல். நாமும் பெருமாளுக்குப் பூமாலையும், நமக்குப் பாமாலையும் பாடிக் கொடுத்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை வாழ்த்தி வணங்கி ஊர் திரும்பலாம்.