வேங்கடம் முதல் குமரி வரை 4/020-032

விக்கிமூலம் இலிருந்து
20. தென்காசி விசுவநாதர்

தென் பாண்டி மண்டலத்திலிருந்து அரசாண்ட பாண்டிய மன்னர்களில் பராக்கிரம பாண்டியன் என்று ஒரு மன்னன். இவன் தன் மனைவியுடன் காசி சென்று விசுவநாதரைத் தரிசிக்கிறான். தரிசித்து விட்டுத் திரும்பும் வழியில் மதுரை சொக்கலிங்கப் பெருமானையும் வணங்கி வழிபடுகிறாான். அன்றிரவு கனவில் சொக்கர் 'உன் ஊர்ப் பக்கத்திலும் ஒரு காசி கான்' என்று அருளுகிறார். அரசன் நினைக்கிறான், காசியில் இறக்க முத்தி என்கிறார்களே என்று. எத்தனை வயோதிகர்கள் தமிழ் நாட்டிலிருந்து அந்தத் தொலை தூரத்திலுள்ள காசிக்குச் செல்கிறார்கள். அப்படிப் போக இயலாதவர்களுக்கெல்லாம் முத்திப் பேறு வாய்ப்பதாக இல்லையே. காசி விசுவநாதான் எவ்வளவோ கருணை உடையவன் ஆயிற்றே, தன்னிடம் வர இயலாதவர்களைத் தேடி அவன் வருதல் கூடாதோ என்று எண்ணியிருக்கிறான். அந்த எண்ணம் காரணமாகவே தென் காசி ஒன்றை நிர்மானிக்கத் திருவுளங் கொள்கிறான். ஓர் எறும்பொழுக்கு வழிகாட்ட அந்த வழியிலே சென்றவன் சிற்றாற்றின் கரையிலே ஒரு சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் காண்கிறான். தான் விரும்பியபடியே காசி லிசுவநாதர்தான் அங்கு எழுந்தருளியிருக்கிறார் என்று உளம் பூரித்து அந்த விகவநாதருக்கு ஒரு கோயில், அந்தக் கோயிலைச் சுற்றி ஒரு நகரம் என்றெல்லாம் அமைக்கிறான். அந்தக் கோயில் கட்டி முடிய ஆறு வருஷங்கள் ஆகியிருக்கின்றன. தன் கஜானாலில் உள்ள பொன்ளையும் பொருளையும் கொட்டிக் குலித்துக் கோயிலைக் கட்டுகிறான். மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, கோபுரம், விமானம். மதில் எல்லாவற்றையும் அமைக்கிறான், காசி விசுவநாதரையும் அங்கு எழுந்தருளப் பண்ணுகிறான். கும்பாபிஷேகத்துக்கு என்று ஒரு நாளையும் குறிப்பிடுகிறான். அன்று கோயிலில் ஜே ஜே' என்று மக்கள் எல்லாம் சூழுமியிருந்தனர். பராக்கிரம பாண்டியன், மந்திரி பிரதானிகள் புடைசூழக் கோயிலுக்கு வருகிறான். வந்தவன் விசுவநாதர் சந்நிதிக்கு எதிரே தரையில் விழுந்து வணங்குகிறான். அவன் அப்போது யாரை வணங்குகிறான் என்பது கேள்வி. அந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் விசுவநாதரையா? இல்லை, கோயில் கட்டத் தனக்குத் துணை புரிந்த தன் குடி மக்களையா? இத்தனை கேள்விக்கும் பதில் சொல்வதுபோல, அரசனுடன் வந்த புலவர் ஒரு பாட்டுப் பாடுகின்றார்.. அவர் பாடிய பாட்டு இதுதான்.

ஆராயினும் இத்தென்காசி
மேவு பொன் ஆலயத்து
வராததோர் குற்றம் வந்தால்
அப்போது அங்கு வந்து அதனை
நேராகவே திருத்திப் புரப்பார்
தமை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன்
பராக்கிரம பாண்டியனே

அரசனது உள்ளத்தை நன்குணர்ந்த கவிஞன் பாடி விட்டான், பாட்டும், பாட்டில் உள்ள கருத்தும் பராக்கிரம பாண்டியன் உள்ளத்தில் உள்ளதையே சொல்லியிருக்கிறது என்ற காரணத்தால் அரசன் அதனை அங்கீகாரம் செய்து அந்தப் பாடலைக் கோபுர வாயிலில் கல்லில் பொறித்து வைக்கிறான். உண்மைதானே? கோயில் கட்டுவது எளிது. அதைச் சரியாகப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? அதிலும் அந்தக் கோயிலுக்குத் தீங்கு ஒன்று நேர்ந்து அந்தத் தீங்கை நிவர்த்தி செய்து திருத்தி அமைப்பது என்பது எவ்வளவு பெரிய சேவை. அப்படி எதிர்காலத்தில் சேவை செய்பவர்களையே நினைத்து விழுந்து வணங்கியிருக்கிறான் பராக்கிரமன். ஐயகோ! விசுவநாதர் ஆலயத்துக்கு, ஆலயத்தை அணி செய்யும் ராஜகோபுரத்துக்கு, வராத் -தீங்கொன்று வந்து, இடிந்திருக்கிறது. ஆனால் அத்தீங்கை நிவர்த்தி பண்ணித் திரும்பவும் கோயில் கட்டுவோர் ஒருவர்தான் இன்னும் தோன்றக் காணோம். (இப்போது அந்தக் குறை நிவிர்த்தி செய்யப்பட்டிருக்கிறது) பராக்கிரம பாண்டியனது நம்பிக்கையை நிலைநிறுத்த ஆள் இல்லாதே போய் விட்டது பெருங்குறைதான். அது காரணமாகவே சிதைந்த கோபுரத்துடன் நிற்கிறது காசி விசுவநாதர் கோயில், தென்காசியில்

பழுதற்ற கோபுரம்-தென்காசி

உள்ள அந்த காசி விசுவநாதர் ஆலயத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

தென்காசி தென் பிராந்திய ரயில்வேயில் ஒரு ஜங்ஷன். வடக்கேயிருந்து ரயிலில் வருபவர் விருதுநகர் தென்காசி லயனில் தென்காசி வந்து சேரலாம். இல்லை காரில் செல்பவர்கள் திருநெல்வேலியிவிருந்து மேற்கே முப்பது மைல் சென்றால் தென்காசி வரலாம். ஊருக்கு நடுவே கோயில், கோயிலை இனம் கண்டு பிடிப்பதுதான் எளிதாயிற்றே, சிதைந்த கோபுரம் எங்கிருக்கிறது என்று கண்டு பிடித்து விடலாமே. கோயில் பெரிய கோயில், நல்ல சுற்று மதில்களுடன் கூடியது. கிழமேல் 554 அடி நீளமும் தென்வடல் 318 அடி அகலமும் உள்ளது. கோபுர் வாயிலைக் கடந்து உள் சென்றதும் முகப்பு மண்டபம் இருக்கிறது. இம்மண்டபம் ஓர் அரிய கலைக் கூடம் அங்குள்ள எட்டுத் தூண்களிலும் எட்டுச் சிற்ப வடிவங்கள், அகோர வீரபத்திரன், மான் மதன், வேணுகோபாலன், காளி நால்வரும் தென் பக்கத்துத் தூண்களில், வீரபத்திரர், ரதி, மாதாண்டவர், ஊர்த்துவ தாண்டவர் நால்வரும் வடக்கு வரிசையில், இவை தவிர கோவிலைப் பார்க்க மேற்கு முகமாக உள்ள துண்களில் இரண்டு பெண் வடிவங்கள். ஒருத்தி பொட்டிட்டு கொண்டிருக்கும் நிலை. சிற்பக்கலை வல்லுநர்கள் பல மணி நேரம் நின்று பார்க்க வேண்டிய சிலா வடிவங்கள். இம்முகப்பு மண்டபத்தைகக் கடந்து, மகா மண்டபம், மணி மண்டடம் அர்த்த மண்டபம் எல்லாம் செல்ல வேண்டும். அதற்கடுத்த சுருவறையில் தான் காசி விசுவநாதர் இருக்கிறார். இவருக்கு எத்தனை எத்தனையோ பெயர்கள்.

விசுவனே விசுவநாதன்
விசுவேசன், உலகநாதன்,
பசுபதி, சிவன், மயோன்,
பராபரன், முக்கட் பெம்மான்
சிசுவரம் தருவோன், நம்பன்
சிவைமனாளன், ஏற்றோன்
அசுதையார் நீலகண்டன்
அநாதி தென்காசி நாதன்

என்பது தல புராணப் பாடல். இந்த விசுவநாதனைத் தரிசித்து வெளியே வந்துதான், தென்பக்கத்தில் உள்ள விசாலாக்ஷி சந்நிதிக்குச் செல்லவேண்டும். இரண்டு கோவில்களுக்கும் இடையே ஒரு சிறு கோயில், அதன் முகப்பு மண்டபத்திலும் சிற்ப வடிவங்கள், இவை சிறப்பு வாய்ந்தவை அல்ல.

இங்குள்ள மூலக்கோயில் இன்று நெல்சேராக இருக்கிறது. இது ஆதியில் பெருமாள் கோயிலாக இருந்திருக்கிறது. இங்குள்ள பெருமாளையே ஆற்றங்கரைப் பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பெரிய கோயில் கட்டியபின் விஜயநகர மன்னன் அச்சுதன் இப்பக்கம் வந்திருக்கிறான். அவன் தான் இப்பெருமாள் கோயிலை இடையிலே கட்டி வைத்தான் என்று வரலாறு கூறுகிறது. இதற்கும் தென்பக்கத்தில் தான் அம்மையின் சந்நிதி. அம்மை செண்பக மலர்க்கீழ் இருந்து அருளாட்சி புரிந்திருக்கிறாள். இங்குள்ள தல மரம் செண்பகமே. 'செண்பக மலர்க்கீழ் மேவும் சிவக்குறி' என்று இறைவனும் 'நீழல் நல்கும் பவள மல்லிகை' என்று இறைவியும் பாராட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஆதியில் இந்தத் தென்காசி செண்பக வனமாக இருந்திருக்கிறது. மாறன் மங்கலத்திலிருந்து அரசாண்ட குலசேகர பாண்டியனே முதன் முதலில் விசுவநாதரை வழிபட்டு உலகநாதன் என்ற பிள்ளையைப் பெற்றிருக்கிறான். உலகநாதனுக்கு உலகம்மையே மகளாகப் பிறந்து குழல்வாய் மொழி என்ற பெயரோடு வளர்ந்து வந்திருக்கிறாள், அக் குழல்வாய் மொழியை விசுவநாதரே வந்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அப்படித் திருமணம் நடந்த இடமே குலசேகரநாத சாமி கோயில், இந்தக் கோயில் தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில் பெரிய கோயிலிலிருந்து ஆறு பர்லாங்கு தூரத்தில் இருக்கிறது. உலகநாத பாண்டியருக்குப் பின் பல பாண்டியர்கள் மாறன் மங்கலத்திலிருந்து ஆண்டிருக்கிறார்கள். விந்த பாண்டியன் காலத்திலே மாறன் மங்கலம் விந்தன் நல்லூர் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்த விந்தனுடைய பேரனே அரிகேசரி, பராக்கிரம பாண்டியன், செண்பக மாறன் என்ற பெயர்களோடு வாழ்ந்திருக்கிறான். இவரது காலம் வரை விசுவநாதர் செண்பக மரத்தடியிலும், உலகம்மை பவள மல்லிகை நிழலிலும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்குக் காசிகண்ட பராக்கிரமன் கோயில் கட்டி நகரமும் அமைத்திருக்கிறான். இந்தக் கோயில் கட்டப்பட்ட காலம் சாலிவாகன சகாப்தம் 1368. அதாவது கி.பி.1445ல் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இதனை,

ஊன்று சாலிவாகன
சகம் ஆயிரத்தொரு
மூன்று நூற்று அறுபானெட்டில்
முது மதிக்குலத்துத்

தோன்று மகள் அரி
கேசரி தேவனாத்துலங்கி
சான்று காண் பராக்கிரமன்
நன்று எடுத்தது இத்தலமே

என்று தல புராணம் கூறுகிறது. இந்தப் பராக்கிரம பாண்டியன் இறைவன் திருவடி நிழல் எய்திய போது இவனது சிவபக்தியை உணர்ந்த ஒரு கவிஞர்.

கோதற்ற பத்தி அறுபத்து
மூவர்தம் கூட்டத்திலோ
தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ
செம்பொன் அம்பலத்தோ
வேதத்திலோ, சிவலோகத்திலோ
விசுவநாதன் இரு
பாதத்திலோ சென்று புக்கான்
பராக்கிரம பாண்டியனே

என்று பாடியிருக்கிறார். இதுவும் கோபுரத்துச் சுவரிலேயே பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது.

இத்தனையும் தெரிந்து கொண்டு வெளியில் வரும் போது முப்பது வருஷங்களுக்கு மேலாகத் தமிழ்ப் பணிபுரிந்துவரும் திருவள்ளுவர் கழக மண்டபத்தையும் பார்க்கலாம். இதன்பின் அவகாசம் இருந்தால் இத்தலத்தில் மற்ற சுற்றுக் கோயில்களையும் மடங்களையும் போய்ப் பார்க்கலாம். ஊரின் பல பாகங்களிலே வரகுணநாதர் கோயில், குலசேகரநாதர் கோயில், விண்ணவரப் பெருமாள் கோயில், நவநீத கிருட்டிணன் கோயில், பொருந்தி நின்ற பெருமாள் கோயில்கள் எல்லாம் இருக்கின்றன. இத்தலத்தில் செண்பகப் பாண்டியனால் எட்டுத் திருமடங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. எல்லா இடத்தும் சிவாகமங்கள் ஓதி உணர்வதற்கு நிபந்தாங்களும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்தக் கோயிலில் நிறையக் கல்வெட்டுக்கள் எல்லாம் நல்ல பாடல்களாகவே இருப்பது ஒரு பெருஞ்சிறப்பு, அவற்றில் இரண்டு பாடல்களை முன்னரே பார்த்தோம். அவையே போதும், இங்குள்ள கல்வெட்டுப் பாடல்கள் சிறப்பைக் கூற.

கோயிலை விட்டு வெளியே வரும்போது சிதைந்த கோபுரத்தைக் கண்டதும் இந்தக் கோபுரம் எப்படிச் சிதைந்தது என்று வினவத் தோன்றும். இக்கோபுரம் மிகவும் அவசரம் அவசரமாகக் கட்டப்பட்டது என்றும், அதனால் இதனில் வெடிப்புக் கண்டு நொறுங்கிவிட்டது என்றும், இல்லை, இடி விழுந்து நொறுங்கி விட்டது என்றும் கூறுவர். ஆனால் சௌக்கீ பாதிரியார் 1792ல் எழுதி வைத்த குறிப்பிலிருந்து இக்கோயில் கோபுரமும் அக்கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த நாழிகைக் கடிகாரமும் பழுதடையாதிருந்திருக்கிறது என்று தெரிகிறது. ஆதலால் 1792- க்குட்ட பின்பே-அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தான் இக்கோபுரம் பழுதுற்றிருக்கவேனும், தென்னிந்தியாவில் நவாபுகள் ராஜ்யம் நடந்தபொழுது அவர்கள் தங்கள் ரிகார்டுகளையெல்லாம் இக்கோபுரத்தில் பதனப்படுத்தி வைத்திருந்திருக்கிறார்கள். அந்த ரிகார்டுகளில் எப்படியோ தீப்பிடித்து அது பரவிக் கோபுரத்தின் மேல் தட்டுகள் எல்லாம் அழிந்திருக்கிறது என்பது ஒரு வரலாறு. எது எப்படியிருந்தாலும், யார் வைத்த தீயோ வீடு வெந்து போயிற்று. ஓங்கு நிலை ஒன்பதோடு உற்ற திருக்கோபுரம் சிதைந்து விட்டது. இதனை நேராகவே திருத்திப் புரப்பார்தமை எதிர் நோக்கித்தான் பராக்கிரம பாண்டியன் அன்றே விழுந்து வணங்கியிருக்கிறான். அப்படி அவன் எதிர்நோக்கிய பெருமகன் எந்த வடிவில் என்று வரப்போகிறானோ என்பதைத் தானே தமிழ் உலகம் எதிர்நோக்கி நிற்கிறது!