வேண்டும் விடுதலை/இந்தியாவில், பார்ப்பனீய

விக்கிமூலம் இலிருந்து

 
இந்தியாவில், பார்ப்பனிய, முதலாளியங்களின் இன,
அரசியல் தாக்குதல்கள் இருக்கும்வரை இந்திய
ஒருமைப்பாடு, ஒற்றுமை உணர்வுகள் வெற்றிபெறா!

பிரிவினை உணர்வும் வளர்ந்தே தீரும்!


ந்தியாவைப் பொறுத்த அளவில், வேறு எந்த நாட்டையும் விட, ஆளுகின்ற இனம், ஆளப்படுகின்ற இனங்களை விட மிகக் கொடுமையானதும், சூழ்ச்சி மிக்கதும், மக்கள் மேல் அன்பில்லாததும், மக்களை விலங்குகளுக்கும் கீழான தன்மையில் மதிப்பதும், பிறவியிலேயே வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கற்பிப்பதும் ஆன ஓர் இனமாக இருப்பது, இங்குள்ள மக்கள் அனைவருமே என்றென்றைக்கும் கவலைப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கிறது.

ஆம்! இங்குதான் ஆரியப் பார்ப்பனர்கள் அரசியலில் ஆளும் இனத்தவராகவும், பொருளியலில் கொழுத்த முதலாளிகளாகவும், குமுகாய அளவில் உயர்ந்த மேலாண்மை(மேலாதிக்கம்) உள்ள இனமாகவும், மத நிலையில் அதிகாரத் தலைமைப் பிரிவாகவும், சாதி நிலையில் தலைமைச் சாதிக் குலமாகவும் தங்களை மேலேற்றி நிறுத்திக் கொண்டு, இந்த நாட்டு மக்களை மிகக் கீழாகப் போட்டு, அவர்களை முன்னேற விடாமல் அழுத்தி மிதித்துக் கொண்டு உள்ளனர். இது வேண்டுமென்றோ, வெறுப்பாலோ, மிகைப் படுத்தியோ சொல்லப் பெறுவதன்று, முழு உண்மையாகக் கூறப்பெறுவது.

ஐரோப்பிய ஆரியர்களாகிய வெள்ளைக்காரர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறும் பொழுது, ஆசிய ஆரியர்களான இந் நாட்டுப் பார்ப்பனர்கள், அவர்கள் விட்டுச் சென்ற ஆட்சியதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டதுடன், அவர்களின் வருகைக்கு முன்பிருந்தே தாங்கள் கைப்பற்றி மேலோங்கியிருந்த இன, மத, குமுகாய, கலை, பண்பாட்டு வல்லாண்மைகளை அழுத்தமாக நிலைப்படுத்திக் கொண்டனர்.

அதன் பின்னர் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகப் பார்ப்பன வணிக வல்லதிகார ஆட்சியாக ஒரு காசுமீரப் பார்ப்பன நேரு குடும்ப ஆட்சியாகவே - இந்திய ஆட்சி நடந்து வந்தது. நேரு, இந்திரா, இராசீவ் - என்னும் முப்பார்ப்பனக் கொடுந்தலைமை முழு வல்லாண்மை ஆட்சியில், இந்தியாவில் வேறு எந்தத் தேசிய இனமும் அதிகாரத்திற்கு வரவொட்டாமல் அடக்கி ஒடுக்கப் பெற்றது. தமிழினத்தின் நிலைகளையோ சொல்லவே வேண்டுவதில்லை. இந்தியத் தமிழ்நிலத்தில் தமிழர்கள் எத்துணையளவு துன்பமும் துயரமும் பட்டார்களோ, உரிமைகளை இழந்தார்களோ, அதைவிட இலங்கைத் தமிழ்நிலத்தில் அங்குள்ள தமிழர்கள் அங்கும் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த அதே ஆரியப் பார்ப்பனர்களான சிங்கள ஆட்சியினரால் அடக்கி யொடுக்கிக் கொடுமைப்படுத்தப்பட்டுக் குற்றுயிராயும் கொலையுயிராயும் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைக்காக, அங்குள்ள தமிழ் இளைஞர்கள் பல்வேறு குழுவினராகப் பிரிந்திருந்தாலும், கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகக் கருவிப் போர் நடத்திப் போராடி வருவதை உலகமே வியந்து கவனித்துக் கொண்டுள்ளது. அவ்வாறு போராடி வருகின்ற அனைத்துக் குழுக்களிலும், மிகவும் வலுப்பெற்ற, குழுவாக, இறுதி வரை தம் ஒரே கொள்கை 'தமிழீழ விடுதலைக் கொள்கையே' என்னும் இலக்குடன் போராடி, இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள தமிழிழத்தை இன்றைக்கு முழுவதும் தன் கையகப்படுத்தியுள்ள, பெருமாவீரன் பிரபாகரன் தலைமையிலுள்ள விடுதலைப் புலிகள் குழு இருந்து வருவது, உலகத் தமிழினத்தை மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமிதத்திற்கும் உள்ளாக்குகிற ஒரு சிறப்புச் செய்தியாகும்.

தொடக்கத்தில் பெருமாவீரன் பிரபாகரனை குருவிக் குஞ்சைப் போல் நசுக்கிக் கசக்கிப் பிழிந்துவிடலாம் என இங்குள்ள பார்ப்பனிய அரசு கனவு கண்டது; அதற்காகச் சில சூழ்ச்சிக் கோணங்கள்(வியூகங்கள்) அமைத்து, இங்குள்ள படையைத் தந்திரக் கரவாக அங்கு அனுப்பி, முற்றிலும் தமிழர்களையும் தமிழின வரலாற்று நாயகன் பிரபாகரனையும் அழித்தொழிக்கத் திட்டமிட்டது; ஏறத்தாழ இரண்டாண்டுகளாகியும் இரண்டாயிரங் கோடி உருபா செலவிட்டும், அவ் விமயமலை வீரனை இம்மியும் அசைக்கவும் முடியாமல், எதிர்த்து நிற்கவும் இயலாமல், தோல்வி வெட்கத்துடன் இந்தியா திரும்பியது. அதற்குள் இராசீவின் கொடுங்கோலாட்சிக் கதையும் முடிந்து போனது அதுவுமின்றித் தமிழகத்திலும் தி.மு.க. ஆட்சி வந்தது. தில்லியிலும் தேசிய முன்னணி, ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனாலும், இலங்கையில் பிரபாகரன் வலிமை பெற்றிருப்பது பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை.

தமிழகத்திலுள்ள கலைஞராட்சிக்கும், தமிழீழத்தில் வலிமை பெற்றுள்ள விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புபடுத்தி அவ்வப்பொழுது எதையேனும் தேசிய முன்னணி அரசுத் தலைமைக்கு எரிச்சல் வரும்படி சொல்லிக் கொண்டு வருகின்றனர். அத்துடன் தமிழகத்திலும் வன்முறை, பிரிவினை உணர்வு, அவற்றுக்குக் கலைஞர் ஆதரவு என்றெல்லாம் கூறி, நடுவணரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துண்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பார்ப்பனர்களுக்கு நாம் வெளிப்படையாக ஒன்றைச் சொல்லிக் கொள்ளுகிறோம். "இந்தியாவில், பார்ப்பனீய, முதலாளியங்களின், இன, அரசியல் தாக்குதல்கள் இருக்கும்வரை இந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்னும் போலியுணர்வுகள் வெற்றி பெறப் போவதில்லை. மாறாக அவற்றுக்கு இனி என்றுமே தோல்விதான்! அது மட்டுமன்று, அவ்வினம் அஞ்சிக் கொண்டிருக்கும் பிரிவினை உணர்வும் வளர்ந்தே தீரும்" – என்பதைப் பார்ப்பனர்கள் ஆழமாகத் தங்கள் உள்ளங்களில் பதித்துக் கொள்வார்களாக

— தமிழ்நிலம், இதழ் எண். 137 ஏப்பிரல், 1990