வேண்டும் விடுதலை/தனித்தமிழ் நாடு உருவாவதை எவராலும் தடுக்கமுடியாது
எவராலும் தடுக்க இயலாது!
அண்மையில் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு அதன் அமைப்பிலும், செயற்பாடுகளிலும், அது நடத்திய பேரணியிலும், இறுதியில் அது நிறைவேற்றிய தீர்மானங்களிலும், தமிழகப் பார்ப்பனீயத் தலைமை யரசும், தில்லியின் பார்ப்பனீய முதலாளிய அடக்குமுறை அனைத்ததிகார அரசும் மிகவும் அச்சம் கண்டு ஆடிப்போய் இருக்கின்றன.
குறிப்பாக, தமிழக முதல்வர் செயலலிதா இப்படியொரு மாநாடும், அதன் செயற்பாடுகளும் நடைபெறும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. அதே பொழுது தில்லி உள்துறை அமைச்சர் சவானும், தலைமையமைச்சர் நரசிம்மராவும் இந்த மாநாட்டால் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ஆனால் அதை உடனடியாகக் கண்டு கொள்ளாதது போல் நடந்துகொண்டனர்; கொள்கின்றனர். இனி, போகப் போகத்தான் அவர்களின் மறைமுக நேர்முகத் தாக்கங்கள் தெரிய வரும்.
அரும்பாடுபட்டு நடத்தி முடிந்த இம்மாநாட்டினாலும், அது நடத்திக் காட்டிய பேரணியாலும், இறுதியில் அது நிறைவேற்றிய தீர்மானத்தினாலும், பாட்டாளி மக்கள் கட்சியும், அமைப்பும், தலைமையும், உறுப்புகளும் மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளன. என்பதை எவருமே மறுக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. இஃதொரு தமிழின வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி மட்டுமன்று; தமிழர்களின் இன, நாட்டு, அரசியல் முன்னேற்றத்தில் ஒரு சிறந்த திருப்பு முனையுமாகும். இதனால் தமிழரின் தேசிய இனத் தன்னுரிமைக் கோரிக்கைக்கு ஒரு வலிவும், தமிழ்நாட்டின் தனியாட்சிக் கொள்கைக்கு ஒரு பொலிவும் உண்டாக்கியிருக்கின்றன என்பதை எவரும் மிகையென்று கூறமுடியாது. பாட்டாளி மக்கள் கட்சியை, அதன் அமைப்பாளராகிய பெருமை மிகு மருத்துவர் இராமதாசு தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய கட்சியாகவும் தலைமையாகவும் இதன்வழி அடையாளம் காட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். வெறும் 'சாதிக் கட்சி' என்றும், 'பிரிவினை'வாதக் கட்சி என்றும், வன்முறைக் கட்சி என்றும், அதில் உள்ளவர்களும், அதை ஆதரிப்பவர்களும், தீய சக்திகள் என்றும், 'தேசத் துரோகிகள்' என்றும், பார்ப்பனர்களோ, அவர்களின் இதழ்களோ, வடநாட்டு வல்லதிகாரக் காரர்களோ — இனிமேலும் அதையும் அதைச் சார்ந்தவர்களையும் எளிதாகக் குறைகூறி அல்லது குற்றஞ் சாட்டி, அதன் வளர்ச்சியைத் தடுதது நிறுத்திவிட முடியாது. இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழர்களுக்கென்று இலங்கையிலும், ஏன் இந்தியாவிலும் கூட ஒரு தனித்தமிழீழமும், தனித்தமிழ்நாடும் உருவாவதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஒரு தேசிய இனம் புதிதாக உருவாவதையே எந்த ஆற்றலாலும் தடுத்துவிட முடியாதபொழுது, ஏற்கனவே பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி, அதற்கான மொழி, வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவற்றைத் தனித்தன்மையுடன் படைத்துக் கொண்டு ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகள் அரசு, ஆட்சி வரலாறுகளையும் பெற்றிருக்கின்ற தமிழினம், இன்றைய வடநாட்டுப் பார்ப்பனீய, முதலாளிய இந்தி வெறியர்களிடம் தன்னுரிமையும், தனியாட்சியும் கேட்கக் கூடாது. என்பது, முட்டாள்தனமும், முரட்டுத்தனமும் ஆகும் என்பதை அனைவருமே உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இந்த ஆட்சி வெறியர்களுக்கு, இங்குள்ள பொதுவுடைமைக்காரர்களும் துணையாக நிற்பதுதான் நமக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவர்கள் நடத்தும் வகுப்பு(வர்க்க)ப் போராட்டம், தேசிய இனம் விடுதலை பெறாத நிலையில் பொருளற்றது; விணானது. இதுபற்றி மார்க்சு தெளிவாகத் தெரிவிக்கிறார்.
"தேசிய இன விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்து விட்டு, வகுப்புச் சிக்கலை (வர்க்கப் பிரச்சினையை - அஃதாவது ஏழை, பணக்காரன் சிக்கலை) முன்னிலைப்படுத்துதல், வகுப்பு(வர்க்க)ப் புரட்சியையே இழிவுபடுத்துவதாகும்".
பக்.39, Class and Nations.)
"பிரிந்து போகும் உரிமையுள்ள முழக்கமே தேசிய இன விடுதலைக்கான முழக்கம். அஃதில்லாமல் பிரிந்துபோகும் உரிமையற்ற தன்னாட்சி முழக்கம் தேசிய இன நசுக்கலுக்கான முழக்கமே. இது பொய்யான கோரிக்கையும் ஆகும். இது நிகரமைக்கு(சோசலிசத்திற்கு)ச் செய்யும் இரண்டகமுமாகும்" என்பது இலெனின் தரும் விளக்கமாகும்.
nation to self-determination)
“அரசு என்பது ஒரு வகுப்பு(வர்க்கம்) (இந்தியாவைப் பொறுத்த அளவில் இன நிலையில் பார்ப்பனீயமும், பொருள் நிலையில் முதலாளியமும்) இன்னொரு வகுப்பின் (வர்க்கத்தின்) ஆட்சியை நிலைப்படுத்தும் கருவி. தனி உடைமை இருக்கின்ற வரை மக்கள் நாயகக் குடியரசு (Democratic Republic) என்று அழைக்கப்படும் அரசு என்ற கருவியும், முதலாளிகள் பாட்டாளிகளை நசுக்கப் பயன்படுத்தும் கருவிதான்” என்றும் இலெனின் கருத்தறிவிக்கிறார். மேலும் அவர் இன்னோர் இடத்தில்,
“தன்னுரிமையை அஃதாவது பிரிந்து செல்லும் உரிமையை ஆதரிப்பவர்களைப் பிரிவினைவாதிகள் -பிரிவினைக்கு ஊக்குவிப்பவர்கள் என்று குற்றம் சாட்டுவது முட்டாள்தனமானது; நயவஞ்சகமானது. மணவிலக்கு உரிமையை ஆதரிப்பதால் குடும்பத்தைக் குலைக்க ஊக்குவிப்பதற்குச் சமம் என்னும் முட்டாள்தனமான — பாசாங்குத்தனமான குற்றச்சாட்டு போன்றதாகும்”
and J.V. Stalin on National Colonial Question — ” பக் 22
மேலும் கூட்டுச் சேரா நாடுகளின் இரண்டாவது மாநாடு 1964ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்றபோது, "தங்கள் அரசியல் உரிமையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுரிமை உண்டு” என்ற தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானத்தை இந்தியாவும் ஏற்றுக் கொண்டு உள்ளது.
தேசிய இன விடுதலை என்பது இயற்கையின் ஒரு கோட்பாடு. வெறும் அரசியல் சூப்பான்களாக இருப்பவர்களுக்கு மொழி, இனம், நாடு பற்றி எந்தக் கவலையும் இருக்க முடியாது! அவர்கள் வெறும் பொறுக்கித் தின்னிகளே! மக்கள் உரிமைகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.
எனவே, பாட்டாளி மக்கள் கட்சி செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழர் பேராதரவு தரவேண்டுவது அவர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.