வேண்டும் விடுதலை/தமிழரசன் தம்பிகளுக்கு!

விக்கிமூலம் இலிருந்து

 
தமிழரசன் தம்பிகளுக்கு!


மிழகத்தின் இன எழுச்சிக்கும், பார்ப்பனிய எதிர்ப்புக்கும் இந்துமதத் தாக்கத்திற்கும் வித்திட்ட தந்தை பெரியார் அவர்கள் தாம், தனித்தமிழ் நாட்டுக் கொள்கையினையும் முன்னெடுத்தார். தொடக்கத்தில் திராவிட நாட்டுப் பிரிவினையை வலியுறுத்திய அவர், பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்னும் தமிழ்த் தேசிய இன விடுதலைக் கொள்கையை முன் வைத்தார். ஆனால் அக்கொள்கை, திராவிட இயக்கக் கொள்கையின் அரசியல் பிரிவினராகிய அறிஞர் அண்ணா அவர்களின் கட்சியினராலேயே, பெரியார் காலத்திலேயே, பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. எனவே பெரியார் அவர்கள் தம் இறுதிக் காலம் வரை, தன்னந்தனியராகவே இருந்து, தமிழ்நாட்டுக் கோரிக்கைப் போராட்டதையும் கூட நடத்தாமல் தறைந்து போனார்.

ஆனால் அவரின் இறுதிக்கால முதலே. நம் தென்மொழி தொடங்கப் பெற்ற நாளிலிருந்தே, நீர்த்துப் போன, அத்தனித்தமிழ் நாட்டுக் கொள்கையினை மறைந்து போகாமலும், தமிழ் மக்கள் மறந்து போகாமலும் நாம் காத்து வந்தததுமன்றி, சிறிது சிறிதாக அதற்கு வலிவூட்டியும் வந்திருக்கிறோம். என்று இங்குக் குறிப்பிட வேண்டியிருப்பதற்குப் பெருமைகொள்கிறோம். இதெற்கெனப் பல படிநிலைகளையும் வேறான அணுகுமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டியிருந்தது.

தமிழின மக்களுக்குப் பெரியார் காலத்திலேயே இருந்த தலையாய மன மயக்கங்கள் மூன்று. ஒன்று மொழிபற்றியது. ஆரியப் பார்ப்பனீயம் எவ்வாறு இனநிலையில் தமிழர்களிடம் சாதிக்குழப்பங்களை வலிவூன்றச் செய்திருந்த, அவர்களை ஒன்றுபடாமல் செய்திருந்ததோ, அவ்வாறே மொழிநிலையிலும் ஆரிய மொழியாகிய சமசுக்கிருதக் கலப்பால், தமிழ் மொழியின் தூய்மையையும், உண்மை வடிவினையும் சிதைத்து, வலுக்குன்றச் செய்து தனித்தியங்க இயலாமல் அதனைத் தாழ்த்தி வைத்திருந்தது. இதனால் தமிழர், உண்மையான தாய்மொழி உணர்வு கொள்ள முடியாத வர்களாகவும் இன உணர்வால் எழுச்சியுற்று ஒன்றுபட முடியாதவர்களாகவும் இருந்தனர். அத்துடன் அவர்கள் தங்கள் தாய் மொழியின் பெயரால் தமிழினத்தவர்கள் அல்லது தமிழர் என்று கூறிக்கொள்ளவும் கூட இயலாதவர்களாக இருந்தனர். மேலும், தமிழர், ஆரியத்தை எதிர்த்துத் தனித்துப் போராட முடியாதவாறு, மதத்தாலும், சாதியாலும் சிதறிச் சிறுபான்மையினராகவும் இருந்தனர்.

எனவேதான், பெரியார் அவர்கள் குமுகாய, அரசியல் பொருளியல் நிலைகளில் மிகவும் வல்லாண்மை யுற்றிருந்த ஆரியத்தை எதிர்த்துப் போராடுவதற்காகத் தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் ஆகிய தென்திராவிட மொழியின மக்களை ஒன்று கூட்டக்கருதினார். இவ்விக்கட்டான தவிர்க்க முடியாத நிலையில் தான் திராவிடத்தின் பெயரால் இயக்கம் காண வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது போலும், மேலும் பெரியார் அவர்களே பிறப்பால் கன்னடியர். ஆகையால் தமிழுக்கென்று மட்டும் தனித்து ஓர் இயக்கத்தைக் கூட்டவும் தமிழர்கள் அவர்மேல் நம்பிக்கை வைக்கவுமான ஒரு சூழல் அன்று உருவாகியிருக்கவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். காலப்போக்கில் மொழிவழி மாறியவர்கள் பிரிக்கப் பெற்றுத் திராவிட இனங்கள் இனி ஒன்றாக முடியாத நிலை ஏற்பட்ட பின்னர் பெரியார் திராவிட நாட்டுணர்வைத் தவிர்த்துத் தனித்தமிழ் நாட்டுணர்வு கொண்டாரேனும் அவரால் முன்னர் தொடங்கப் பெற்ற திராவிட இயக்கத்தைக் கைவிடவோ, அதைத் தமிழின உணர்வாக வேறுபடுத்திக் காட்டவோ இயலாமற் போனது. எனவே திராவிட இனமயக்கத்தையும் இரண்டாவதாக நாம் பிரித்துக்காட்டித் தவிர்க்க வேண்டுவதாயிருந்தது. இவ்விடத்தில் நாம் ஓர் உண்மையைத் தெளிவாக அறிந்து கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். அது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம் எவ்வாறு ஆரியர் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறே, தமிழம் (தமிழ் மொழி) அவர்களால் 'திராவிடம்’ என்று குறிக்கப் பெற்றது. பின்னர் அது. தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது. இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதிய அத்திராவிட மொழியாசிரியர்களும், புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும் மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன. அல்ல, இந்து மதம் ஓர் இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று, தமிழே ஆரிய வழக்கில் திராவிடம் ஆயிற்று, எனவே தமிழரே திராவிடர் என்று அவர்களால் குறிக்கப்பட் வேண்டியவராகவும் ஆயினர் - இங்கு கவனிக்க;

தமிழ் வழக்கு ஆரியவழக்கு
தமிழ் தமிழம்,திரமிளம், திராவிடம்,
தமிழர் திராவிடர்
சிவனியம் சைவம்
மாலியம் வைணவம்


தமிழ் என்னும் மொழியை இன்றைய மலையாளிகளும், கன்னடியரும் தெலுங்கரும் தங்கள் மொழிகளுக்கு மூல மொழி என்று ஏற்றுக் கொள்ள விரும்பாதது போலவே, தாங்கள் திராவிட இனத்தவர் என்பதையும் ஒப்புக் கொள்ள விரும்பாததையும் கவனிக்கவும்.

எனவே, ஆரியத்தை ஒழிக்க வேண்டும் என்னும் பெரியார் கொள்கையில் நாம் சில திருத்தங்களையும் மாறுதல்களையும் செய்து அதன் பின் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் முதலாவது, சமசுக்கிருதம் தவிர்த்த தூய தமிழ் வழக்கு (தூய தமிழைப் பெரியார் தொடக்கத்தில்- மறைமலையடிகளாரின் தொடர்புப் பயனால் ஏற்றிருந்தாலும், பின்னர் படிப் படியாய்த் தமிழ் மேல் கொண்டிருந்த கொள்கைகளைத் தவிர்த்து- இறுதியில் தமிழையே ஒரு காட்டு மிராண்டி மொழி என்று சாடவும் செய்தார். இதையும் தென்மொழியின் தொடக்கக் காலத்தில் நாம் விளக்கவும் சிக்கறுக்கவும் வேண்டியிருந்தது) இரண்டாவது, திராவிடம் என்னும் சொல்லைத் தவிர்த்துத் தமிழர் அல்லது தமிழினம் என்னும் இனநிலை விளக்கக் குறிப்பு. இவையிரண்டையும் ஏற்கனவே பெரியாரைப் பின்பற்றி வந்த தமிழினத்தவர்கள் எதிர்த்தனர். முகஞ்சுழித்தனர். ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். ஏனெனில், முன்னரே , திராவிடம் என்னும் பெயரால். தங்கள் இயக்கங்களில் ஒன்றி நிற்கும் தெலுங்கரையும். கன்னடியரையும் இந் நிலை வேறு பிரித்து, அகற்றி விடுமோ என்று அஞ்சினர். நல்ல வேளை இத்திராவிட இயக்கங்களில் மலையாளியர் மிகுதியாகச் சேர விரும்பவில்லை. ஏனெனில் மலையாளியா பழஞ் சேர நாட்டினராகலின், அவர்கள் பழந்தமிழ் மரபின் உணர்வினராக இருந்ததால், வேறு திரிபுத் தமிழராகிய திராவிட இனத்தவருடனும், இற்றைத் தமிழர் எனப்பெறும் கலப்பு இனத்தவருடனும் தொடர்பு கொள்ள விரும்புவதில்லை. (முன்னாள் முதல்வர் ம.கோ. இரா. வின் செய்தி வேறு வகையானது; வேறானது) ஆனால் , பெரியாரின் தலையாய கொள்கை தனித்தமிழ் நாட்டுக் கொள்கையே ஆதலால், அதை நாம் கைவிட முடியாததாகப் போனது. எனவேதான் பெரியாரின் நேரடியான கொள்கை வழியினர்க்கும் நமக்கும், பெரியார் காலத்திலிருந்தே ஒரு பொருந்தாமை உணர்வும் புலத்தல் நடைமுறையும் இருந்து வந்தன, இருந்தும் வருகின்றன.

இனி, பெரியாரின் தனித்தமிழ் நாட்டுக் கொள்கையை அவரினும் வலிவாகவும் பொலிவாகவும் மெய்ம்மையாகவும் நாம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததால், மூன்றாவதாக அவரின் இன்னொரு கொள்கையினையும் நாம் கைநெகிழ்க்க வேண்டியிருந்தது. இது அவரின் இறைமறுப்புக் கொள்கை.

இறைமை மறுப்பு என்பது கொள்கையாக இருக்கலாம். ஆனால் இறைமை என்பது உண்மை. உண்மையை எப்பொழுதும் கொள்கை அளவில் சுருக்கிப் பொருள் கொள்ளக் கூடாது. தமிழர்தாம் இறைமையை உலகுக்கு உணர்த்தியவர். ஆரியர் அல்லர். ஆரியர்க்கு இறைக் கொள்கை கிடையாது. பூதவியல் கொள்கையே அவர்களுடையது. இக்கொள்கை ஆரியர்கள் பரப்பியது என்பதாகத் தவறாக விளங்கிக் கொண்டுதான் பெரியார் இதை எதிர்த்ததாகக் கொள்ள இடமுண்டு. இன்னும் உலக இனங்களில் இன்றுள்ள தெய்வக் கொள்கைகள் அனைத்தும் தமிழரின் பழைய இறையியல் கோட்பாடே ஆகும். தமிழரின் மொழி எப்படிப் பழைமையோ, அவ்வாறே அவரின் இறைமையும் பழைமையே! தமிழ்மொழிதான் உலக மொழிகள் அனைத்துக்கும் எவ்வாறு மூலமும் முதலும் ஆனதோ, அவ்வாறே அதன் இறைமை உண்மையும் அனைத்து இனங்கட்கும் மூலமும் முதலுமாக இருக்கிறது.

ஆனால், தமிழர்களிடம் ஏற்கனவே வலிவாக வேரூன்றிப் போன இறைமை உண்மையை ஆரியம் மதமாகக் கீழிறக்கம் செய்து இந்து மதமாக்கி இழிவு படுத்தியது. எனவே, இந்து மதத்தைத் தாக்குவதற்கு இறைமையையும் தாக்க வேண்டிய தேவை பெரியாருக்கு ஏற்பட்டிருக்கலாம். என்று நாம் கருத வேண்டி உள்ளது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் நாம் அதிகமாகக் கவலைப்பட்டுக் கொள்ளத் தேவை அன்றும் இல்லை; இன்றும் இல்லை. ஆனால் தமிழின முன்னேற்ற முயற்சியாளர்களுக்கு இவை பற்றிய தெளிவுகள் தேவை! இல்லெனில் அம் முயற்சிகள் இறுதி வரை உறுதியாகவும் சரியாகவும் இருக்க இயலாது.

இனி, இத்துணையளவில், ஆரியக் கேடுகளை அழித்தொழிக்க வேண்டியிருந்த வலிமை தேவையாக இருந்ததால் தான் பெரியாரைத் தவிர வேறு எவரும் ஒரு போருணர்வு கொண்டு அதனொடு முடுக்கமாகப் பொருத முன்வராது பின் வாங்கிப் போயினர். இந்த நிலையில் பெரியாரேனும் இதைச் செய்தாரே என்று எண்ணித்தான். சிறிது மாறுபாடான அவரின் கருத்து நிலைகளையும் நேரடியாக நாம் எடுத்துக் கூறி முரண்பட்டுக் கொள்ளாமல், நமக்குகந்த முறையில் - தமிழருக்குத் தேவையான தனித்தமிழ்நாட்டுக் கொள்கையை நாம் அனைத்துக்கும் மேலாக உயர்த்திப் பிடித்துக் கொண்டு உரக்க முழக்கிவந்தோம்; வருகிறோம்; வருவோம்!

இத்தனித்தமிழ் நாட்டுக் கொள்கையும் கூட தமிழின உணர்வுள்ளவர்களிடம் தான் தோன்றி வலுப்பெற முடியும் இனி, தமிழின உணர்வு தோன்ற வேண்டுமாயின் தமிழ் மொழியுணர்வு மிக மிகத் தேவை. தாய்மொழியுணர்வின்றி இனவுணர்வு தோன்றவே தோன்றாது; அவ்வாறு ஒரு வேளை தோன்றினாலும் அது நிலைபெறாது உறுதியாயிராது; என்றோ ஒரு நாளில் அது நீர்த்துப் போய்விடும். இனி இனவுணர்வு வலுப்பெறாமல் நாட்டுணர்வு வலுப்பெறவே பெறாது. நாட்டுணர்வு வலுப் பெறாமல் தனிநாட்டுப் போராட்டம், விடுதலை முயற்சிகள் எப்படி வெற்றிபெற முடியும்?

ஆகவே, தனிநாட்டு விடுதலை முயற்சியில் ஈடுபட்டு உழைக்கவும் போராடவும் முன்வரும் இளைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் உண்மையான தூய தமிழ் உணர்வு கால் கொள்ளுதல் மிக மிக வேறு எவற்றையும் விட - இன்றியமையாதது என்பதை நாம் முதற்கண் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்க. இவ்வுணர்வின்றி, ஈடுபடும் எந்த இளைஞரும் அறிஞரும் தலைவரும் தமிழினத்தை முன்னேற்றவும், தமிழ்நாட்டை விடுதலை செய்யவும் இயலவே இயலாதென்க, அவ்வாறு ஒரு வேளை இற்றை நாள் விளைவேறி, வெளியேறிவரும் கருவிகளைக் கொண்டு, போராடி வெற்றி பெற்றுத் தனித் தமிழ் நாட்டைப் பெற்றாலும், அது மீண்டும் ஆரியத்திற்கே அடிமைப்பட்டுக் கிடக்கும் என்பதைக் கடந்த மூவாயிரம் ஆண்டுக்காலத் தமிழ், தமிழின தமிழ்நாட்டு வரலாறுகளையும், உலக நாடுகளில் விடுதலை வரலாறுகளையும் உணர்ந்தவர்கள் தவிரப் பிறர் எவரும் மாறுபட்டும் வேறுபட்டுமே இயங்குவர். இறுதியில் மீண்டும் ஆரியத்துக்கும் அடிமைப்பட்டே கிடப்பர் என்பதை உறுதியாய் நெஞ்சில் நிறுத்துக.

இனி, தனித்தமிழ் நாட்டு விடுதலை என்பதை வெறும் அரசியல் விடுதலையாக மட்டுமே இளைஞர்கள் கருதிக்கொள்ளக் கூடாது. இது வெறும் அரசியல் விடுதலை மட்டுந்தான் என்றால், இப்பொழுதுள்ள இந்திய அரசியல் சட்டதிட்டங்களுக்குட்பட்டே தமிழக ஆட்சியை மட்டுமே நாம் அடைந்து விட்டால் போதும்; நம் இனத்தையும் நாட்டையும் மொழியையும் நாம் முன்னேற்றி விடலாம் என்று கருதுகிற அளவில் நம் கொள்கை நிறைவு பெற்று விட முடியும் முழுவதுமாக இல்லையேனும் ஓரளவாவது தொடக்கத்திலும், பின்னர் படிப்படியாக முழுமையும் நம் இலக்கை அடைந்து விடலாம் என்று நம் அரசியல்காரர்கள் சிலர் கருதி முயன்று வருவதை நாம் அறிவோம், அவ்வளவில், அவர்கள் அரசியல் வழிப் போராட்டமே முயற்சியே - போதும் என்று கருதி, அதற்குத் தேர்தலே வழி, என்றும் கூறி வருகிறார்கள்.

தேர்தல் என்பது ஒரு நல்ல அரசியல் அதிகார மாற்றுக் கருவிதான். அக்கருவி கையாளப் பெறுபவர்களின் கைகளுக் கேற்ப பெருமை பெறுகிறது; அல்லது இழிவடைகிறது. இந் நாட்டைப் பொறுத்த வரையில் அது பட்டிருக்கிற இழிவுக்கு- அல்லது தாழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனினும், அதன் வழியாகத்தான் அதிகராங்கள் கை மாற வேண்டி உள்ளது. என்ன செய்வது? எனவே, அரசியல் அதிகார மாற்றத்தை இதன் வழியாகச் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்கள். இத்தேர்தலை நம்ப வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். இப்படி இருப்பவர்கள். இக் கருவி எந்த அளவுக்கு இழிவுபடுத்தப்பட்டுக் கிடக்கிறதோ, அந்த அளவுக்குத் தாங்களும் கீழிறங்கி விடுகிறார்கள். அவர்களில் மிக மிகக் கீழிறங்கி நடப்பவர்களே வெற்றியும் பெறுகிறார்கள், எனவே இந்த வகையான அரசியல் விடுதலையால், இத்தமிழையும் தமிழ் நாட்டையும், தமிழினத்தையும் எவராலும் முன்னேறச் செய்து விட முடியாது. அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் பேதைகள்! வேண்டுமானால் அறிவறிந்த பேதைகளாக இருக்கலாம்! அதே போல் அவ்வாறு பேசிக் கொண்டிருப்பவர்கள் மக்களை ஏமாற்றும் எத்தர்கள்! வேண்டுமானால் படித்த எத்தர்கள் என்று சொல்லலாம். எனவே இப்படிப்பட்ட நிலைகளிலேயே ஈடுபட்டு ஈடுபட்டுக் காலக்கழிவு செய்பவர்களால் உண்மையான அரசியல் விடுதலையைப் பெற்றுத்தர முடியாது. அவ்வாறு பெற்றுத் தந்தாலும் அஃது அரசியல் விடுதலை, ஆகாது. இந்தியாவுக்குக் கிடைத்த விடுதலையும் இதை அல்லது இதைவிடக் கீழான ஒரு நிலையைப் போன்றதே என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

இனி, இது போன்றதொரு விடுதலையல்லாமல், உண்மையான தேர்தல் வழி, முறையான செயல்முறைகளுடன் நேர்மையான வகையிலேயே, நம் தமிழ்நாட்டுக்கு அரசியல் விடுதலையே கிடைத்தாலும் அதால் இந்த மொழியும், இனமும், நாடும் முன்னேறி விட முடியாது. ஏனெனில், தில்லி ஆண்டை தமிழக அரசியல் விடுதலையை எப்பொழுதுமே தன் கையசைவுக்குள்தான் அடக்கி வைத்திருக்க முடியும். அப்படித்தான் இந்நாட்டு அரசியல் அமைப்பியல் சட்டம் உருவாக்கம் செய்யப் பெற்று இருக்கிறது. (ஒரு வேளை தில்லி, தமிழகத்திற்கென்று தனி இறைமையும் தன்னதிகாரமும் உள்ள விடுதலையையே கொடுத்துத் தனித் தமிழ்நாடு ஆக்கினாலும், இப்பொழுதைய நிலையில் மூப்பனும், சிதம்பரமும், பழனியாண்டியும் போன்றவர்கள்தாம் இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவார்கள். அதால் மக்களுக்கு எந்த விடிவோ முன்னேற்றமோ வந்து விடாது.) எனவே, தில்லி யாட்சியிலிருந்து, அறவே விலகி, மக்களாக அமைக்கும் ஒன்றைத்தான். நாம் இப்பொழுதைக்கு அரசியல் விடுதலை என்று சொல்ல முடியும். இதை மேலும் தீவிரமான இலக்கண முறையோடு ஆராய்ந்து, இலக்கிய விளைவோடு ஒத்திட்டுப் பார்க்க வேண்டிய நிலை இப்பொழுது தேவையில்லை என்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொண்டு, இவ் வரசியல் விடுதலைக்கு அப்பால் முதலில் எவ்வெவ் வகையில் நாம் விடுதலை பெற வேண்டியவர்களாக இருக்கிறோம். என்பது பற்றி இனிச் சிந்திப்போம்.

தமிழினத்தைப் பொறுத்த வரையில் உலகிலுள்ள பிற தேசிய இனங்களைப் போல் வெறும் அரசியல் விடுதலை மட்டுமே இதற்குப் போதுமான தேவையன்று. அரசியல் விடுதலையுடன் கூடிய இன விடுதலையும் இதற்குக் கட்டாயம் தேவை என்பதையும் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

சிலர் இதன் பரு விளக்கத்தைத் தவறாக விளங்கிக் கொண்டு, அரசியல் விடுதலை பெறுவதுதான் நம் முதல் தொண்டு; அதைப் பெற்று விட்டால், இன விடுதலையையும் பிற விடுதலைகளையும் நமக்கு நாமே வழங்கிக் கொள்ள முடியும்’ என்று கருதுகின்றனர். அவர்கள் நிலமிருந்தால் நாமே விளைவித்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை உடையவர்கள். நிலமிருந்து விட்டால் மட்டும் போதும், நாமே விளைவித்துக் கொள்ள முடியும் என்பது ஒரு பொது உண்மையே! ஆனால் அது சிறப்பு உண்மையாக முடியாது. நிலத்திற்கு மேலும் எத்தனையோ உடைமைகளையும் உரிமைகளையும் நாம் பெற வேண்டிப் பாடுபடவேண்டியிருக்கும்.

அரசியல், விடுதலை பெற்று இனவிடுதலை பெறாத பொழுது, இற்றை இந்தியா தன்னுரிமை பெற்ற வரலாறாகத்தான். அது முடியும். இந்தியாவில் நாற்பதாண்டுக்காலத் தன்னுரிமை வரலாற்றில் மக்கள் படுந்துயரையும், இழந்த உரிமைகளையும் எவரே எடுத்து முழுமையாக இயம்பி விட முடியும்? இதைவிட தமிழ் நாடு இன விடுதலை பெறாமல் அரசியல் விடுதலை மட்டும் பெற்று இயங்குவது கொடுமையிலும் கொடுமையாக இருக்குமன்றோ?

நாம் இன விடுதலை என்று குறிப்பது தமிழினத்தில் ஏற்கனவே இரண்டறக் கலக்கப் பட்டுள்ள மதப்பூசல்களையும் சாதி வேறுபாடுகளையும் அறவே விட்டு விலகி இன ஒருமை எய்துவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதுதான். நாடு அரசியல் விடுதலை பெற்றுத் தன்னுரிமை உற்று இருக்கையில், மக்கள் பிறவியின் அடிப்படையில் வேறுபட்டுக் கிடப்பாரானால், அவ்வுரிமையை நாம் எப்படிச் சரி சமமாகப் பகிர்ந்து கொள்ள இயலும்? உரிமை சரிசமமாக மக்களால் நுகரப் பெறாத பொழுது, நாட்டின் அரசியல் விடுதலையால் யாருக்கு பயன் விளையும் என்று எண்ணிப் பார்க்கவும்

தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள மக்கள் அனைவருமே பல்வேறு மதவுணர்வுகளாலும், பல நூற்றுக் கணக்கான சாதி உணர்வுகளாலும் ஆண்டாண்டுக் காலமாகப் பிளவுண்டு, பிரித்து வைக்கப் பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிவோம். இங்கு ஆளும் சாதியென்று ஒன்றுண்டு; ஆளப்படுகிற பல்வேறு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் எனப் பற்பலவுண்டு. இவையெல்லாம் அப்படி அப்படியே இருக்க, அரசியலில் மட்டும் விடுதலை பெற்றுவிட்டதாகவும், உரிமை எய்தி விட்டதாகவும் கருதிக் கொண்டு, செயல்களில் மட்டும் அவரவர் சாதி மதங்களுக் கேற்பப் போராடிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் வேறுபாடுகளைக் கற்பித்துக் கொண்டும், அதற்கேற்ப வளங்களை ஒருசார்பாகவே பங்குபோட்டுக் கொண்டும் இருப்பதால் யாருக்கு என்ன பொதுப் பயன் விளைந்து விட்டது, இந்த இந்தியாவில்? எனவே, நாளை தமிழ்நாடும் அரசியல் உரிமை பெற்றால், இதே நிலைதான் தொடர்ந்து இருக்க முடியும்? இராதென்பது எப்படி? அதற்கென்ன உறுதி?

ஆனாலும், அரசியல் விடுதலை பெற்று விட்டால்தான் நாம் இன வேறுபாடுகளைக் களைந்து கொள்ள முடியும் என்பதும், இன விடுதலை பெற்ற பின்னரே அரசியல் விடுதலை பெற்றுக் கொள்ளலாம் என்பது இயலவே இயலாது என்பதும் நாம் அறிந்தனவே! ஆனால், இன வேறுபாடுகளையும், மற்ற பொருள் நிலை வேறுபாடுகளையும், களைந்து கொள்ள விரும்புகின்ற அளவில் மக்கள் பெரும்பாலாரின் மனம் பக்குவப் பட்டு வருகின்ற அல்லது பக்குவப்பட்டு விட்ட அந்த நிலையில் தான் அரசியல் விடுதலைக்கு நாம் முயற்சி செய்தல் வேண்டும்.

அடுத்து, இங்குள்ள பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும் கூட நாம் இரண்டாவதாகக் குறிப்பிட்ட மதச்சேற்றுடனும் சாதிக் குப்பைகளுடனும் இரண்டறக் கலந்து ஆழமாகப் பதிந்து கிடக்கின்றதை நாம் உணர முடியும். இவற்றிலிருந்து நாம் விரும்பும் பொருளியல் விடுதலையை மீட்டெடுக்க வேண்டுமானாலும் அம்மத இழிவு நிலைகளையும் மூட நம்பிக்கைகளையும் சாதிச்சேற்றையும் நாம் கழுவித்துப்புரவு செய்தே ஆக வேண்டும். அப்பொழுது தான். நாம் விரும்பும் பொருளியல் விடுதலையையும் உரிமைகளையும் மக்கள் சமமாகத் துய்க்க முடியும். பிறவியால் சிதறுண்டு கிடக்கும் இன வேறுபாடுகளையும் மத மூட நம்பிக்கைகளையும் அகற்றாமல் அரசியல் உரிமைகளைத் துய்க்கக்கொடுப்பது ஈயம் பூசாத பித்தளை யேனத்தில் பெய்யப் பெற்ற களிம்பு உணவை உண்ண வைப்பது போன்றது. அதில் களிம்பு போன்ற நச்சுணர்வுகள் ஊறிக் கொண்டே இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. புண்ணின் உள்ளே ஊறிக் கொண்டிருக்கும் சீழ் அப்படியே இருக்கும் பொழுது வெறுமனே மேல் மருந்து பூசி உடலை நலப்படுத்துவது யாங்கன் இயலும்?

எனவே, மக்களுக்கு ஓரளவேனும் பொதுமை உணர்வையும் பொதுவுடைமைச் சமநிலை வேட்கையையும் ஊட்டி, உணர்த்தி, விளக்கப் படுத்தாமல், அரசியல் உரிமையை மீட்டுக் கொடுக்க முயற்சி செய்வது, என்றோ எங்கோ எப்பொழுதோ செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் விருந்துக்கென இப்பொழுதே இங்கேயே இலை விரித்து வைக்கும் பொருத்தமற்ற செயலாகவே போய்விடும் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

எனவே, தமிழ் நாட்டு விடுதலைக்கெனத் தங்களை ஈகப்படுத்திக் கொள்ள விரும்பும் இளைஞர்கள், முதலில் தாங்கள் மீட்டெக்க விரும்பும் விடுதலை எந்த இன மக்களுக்காக என்பதையும், அவர்களின் இப்பொழுதைய அரசியல், இனவியல், பொருளியல் விழிப்புணர்ச்சி எத்தகையது, எந்த அளவினது என்பதையும் அடியூன்ற எண்ணிப் பார்த்து, அதற்குத்தக தம் விடுதலை முயற்சிகளைப் பல்வேறு கட்டங்களாகப் பகுத்து அளவிட்டுக் கொண்டு, முதல் கட்டம், இரண்டாவது கட்டம், மூன்றாவது நான்காவது கட்டங்கள் என்று வரையறை செய்து கொண்டு, அவற்றுக்குத் தகுந்தாற் போல், தங்கள் இயக்க ஆற்றல், துணையாற்றல், பொருள் நிலை ஆற்றல், கருவிநிலையாற்றல் ஆகியவற்றை எடையிட்டுப் பார்த்து அதைச் செயல்படுத்துவதே திட்டமிட்ட கட்டுக்கோப்பான, வரைமுறையான விடுதலை முயற்சியாகும் என்று நாம் கருதுகின்றோம்.

இனி, விடுதலை முயற்சி அதன் செயல் கட்டங்களுக்கு ஏற்ப எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதைப் பற்றியும், எதன் அடிப்படையில் வெளிப்படல் வேண்டும் என்பதையும், அம் முயற்சிகளுக்கு, நம் நாட்டைப் பொறுத்த அளவில், நம் மக்களைப் பொறுத்த அளவில் நாம் செய்யவிருக்கும் உரிமைப் போராட்டம் மக்கள் புரட்சியாக இருக்குமா, அல்லது கருவிப் போராட்டமாக இருக்க வேண்டுமா, எது சரி என்பன பற்றியும் அடுத்து வரும் கட்டுரையில் விளக்கமாகப் பேசுவோம்.

- தென்மொழி, சுவடி :24, ஓலை 5, 1988