வேண்டும் விடுதலை/தமிழ்நாட்டு விடுதலையே உரிமை அரசியலை மீட்டெடுக்கும்!

விக்கிமூலம் இலிருந்து

 
தமிழ்நாட்டு விடுதலையே உரிமை
அரசியலை மீட்டெடுக்கும்!


இந்திராவையும் இராசீவையும் நாம் அன்றைக்கே தமிழினப் பகைவர்கள் என அடையாளம் காட்டினோம்

இன்றைக்குத்தான் தமிழினத் தலைவர்கள் உணர் கிறார்கள்!

இப்பொழுதும் சொல்கிறோம். எல்லாருமே ஒன்றிணைந்து ஒரே குரலில் தமிழக விடுதலைக்குரல் எழுப்ப வில்லையானால், தமிழினத்தை அழித்துவிட்டுத்தான் இராசீவ் வேறு வேலை பார்ப்பார்!

அரசியலைத் தூக்கி எறியுங்கள்! வேற்றுமையை அகற்றுங்கள்! தில்லி அரசியல் நம்மை அடிமையாகவே வைத்திருக்கும்! தமிழ்நாட்டு விடுதலையே உரிமை அரசியலை மீட்டுக் கொடுக்கும்!

இனமான உணர்வைக் கலைஞர், வீரமணி, நெடுமாறன், கலிவரதன், நெடுஞ்செழியன், சானகி, செயலலிதா, வீரப்பன், காளிமுத்து, இரா. செழியன், சோமசுந்தரம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் எழுப்ப வேண்டும்!

அன்று, தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்த பொழுது, இந்திராவை, வலிவுபடுத்தி ஆதரித்துக் கை கொடுத்ததை, கலைஞர் இன்றைய நிலையில் மறந்திருந்தாலும், தமிழக வரலாறு என்றென்றும் மறவாது மன்னிக்கவும் செய்யாது. தாம் எதையுமே சரியாக எண்ணிச் செய்வதாகவே நினைத்துக் கொண்டு செய்யும் கலைஞரின் வரலாற்றுப் பிழைகளுள் இதுவும் ஒன்றாகும். அன்று காமராசரைப் புறந்தள்ளினார். இந்திராவை எடுத்துப்போற்றினார். இப்பிழையை, இந்திரா ம.கோ. இராவை ஆதரித்தபொழுதுதான் உணர்ந்து விழித்துக் கொண்டார். இந்திராவுக்குக் கலைஞரும் ஒருவர்தாம் ம.கோ.இராவும் ஒருவர்தாம். எவரிடம் தமிழக மக்களைத் தமக்குச் சார்பாகத் திரட்டி ஆற்றுப்படுத்தும் ஆற்றல் மிகுதியாக உள்ளதோ, அவரையே இந்திரா, தன் நிலைமையை வலுப்படுத்திக் கொள்ள ஆதரிப்பார் என்னும் உண்மை கலைஞருக்கு மிகவும் பிந்திக் காலத்திலேயே விளங்கியது.

அதேபோல், காமராசரும், இந்திரா தலைமையமைச்சுப் பதவி ஏற்கவும், தன்னைப் பெருவலிவுபடுத்திக் கொள்ளவும் தொடக்கத்தில் தம் முழுத் துணையையும் தந்து விட்டுப், பின்னர் அவரால் தாம் அனைத்திந்திய அளவில் புறக்கணிக்கப்பட்டபொழுது. தாம் செய்த பெரும் பிழையை உணர்ந்து வருந்தித் தாம் அரசியலில் மீண்டும் ஈடேறாமலேயே மறைந்தார்.

இதே பிழையைக் கலைஞருக்குப் பின்னர் தமிழக ஆட்சிக் கட்டிலேறிய ம.கோ.இரா.வும் தம் இறுதிக்காலம் வரை தொடர்ந்து செய்து வந்து, இந்திராவோ அவருக்குப் பின்வந்தஇராசீவோ, தம்மைப் புறக்கணிப்பதற்குமுன் தம் பிழையை உணராமலேயே மறைந்து போனார். ஆனால், அப்பிழையை அவருக்குப் பின்வந்த திருவாட்டி, சானகி ம.கோ. இராவும் அவரின் உள்முகச் சாணக்கியர் வீரப்பனும் பின்னர் உணர்ந்து வருந்த வேண்டியவர்களானார்கள்.

இவ்வகையில்தான், தமிழகத்திலுள்ள பிற சிறிய அரசியல் கட்சியினரும் கூட, இந்திரா அளவிலோ, இந்திராப் பேராய அளவிலோ முன்னர் செய்து விட்ட பிழைகளுக்காககப் பின்னர் இத்தமிழக மக்களை எண்ணி மிகவும் வருந்தி உணர்ந்திருக்கின்றனர். நெடுமாறனும் அப்படித்தான். இனி சேழியனும் அவ்வாறுதான் கலிவரதனும் அன்னவர்தாம் இந்திராவையும், இந்திராப் பேராயத்தையும், இராசீவையும் நம்பித், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒருவகை வெற்றியைப் பெற்றுவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகானும், பிற போராளிக் குழுக்கள் தலைவர்களும் கூடத் தத்தம் பிழைகளைப் பின்னர் உணரத் தொடங்கினர்.

அடுத்து, தமிழக அரசியல் களத்தில் , எத்தனையோ தப்பு விளையாட்டுகளை விளையாடி, இறுதியில் செயலலிதாவின் பணநிழலைப் பற்றியிருக்கும் திரு. சோமசுந்தரம் கூட, அண்மையில் ஓர் அறிக்கையில் இராசீவின் தமிழின இரண்டகச் செயலை ஆய்ந்து கண்டுபிடித்துக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

ஆனால், இந்நிலைகளை யெல்லாம் முன்னரே வரலாற்றடிப் படையில் கணித்துக் கூறி, இந்திராவையும் இராசீவையும் தமிழினத்தின் பகைவர்கள் என அடையாளங் காட்டிய பெருமை தென்மொழிக்கும் தமிழ்நிலத்துக்குமே உண்டு என்பதை, அவ்விதழ்களின் வாசகர்களும் அறிவார்கள்; நடுநிலையாக எண்ணிப் பார்ப்பின் முன் சுட்டிய தலைவர்களும் உணர்வார்கள். கலைஞரோ தம் விருப்பு வெறுப்புகளை அகற்றிக் கொண்டு, யார் பெரியவர் யார் சிறியவர் என்று எடையிட்டுப்பார்க்கும் மயக்க வுணர்வயுைம் தவிர்த்து விட்டு, எண்ணிப் பார்ப்பாரானால், அவருக்கும் புலப்படாமல் போகவே போகாது.

இனி, அன்றைக்கு மட்டுமன்று, இன்றைக்கும் இப்பொழுதும் சொல்கிறோம், தமிழினத்திற்கு இரண்டகம் மட்டுமன்று, இதையே அழிக்கின்ற தன்மையில், இந்திராவை விடவும் இராசீவ் பல மடங்கு கொடுமை மிக்கவராகவே விளங்குகிறார். தமிழகத்தலைவர்கள் எல்லாருமே ஒன்றிணைந்து ஒரே குரலில் தமிழக விடுதலைக்குரல் எழுப்பவிலையானால் தமிழினத்தை அழித்து விட்டுத்தான் இராசீவ் வேறு வேலை பார்ப்பார்!

இன்னொன்றையும் இங்கு நினைவூட்டுகிறோம். காமராசர் காமராசர் என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக் கொண்டு, தம் திரண்ட சொத்து நலன்களை, எவ்வாறேனும் காத்துக் கொள்வதற்காக அரசியல் பேச்சுப் பேசித் திரியும் மூப்பனார் இறுதிக் காலத்தில் தம் குருவானவர்க்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும் இழிவுகளையும் எண்ணிப் பார்த்துக் கொள்ள இப்பொழுதே சொல்லி வைக்கிறோம். அரசியல் சூறாவளியில் அடி மேலாகவும், மேல்கீழாகவும் புரட்டப்பட்ட பெருந்தலைவர்கள் ஏராளம்! ஏராளம்! அதற்கு மூப்பனாரும், சிதம்பரமும் மட்டும் நெறிவிலக்கானவர்களாக இருந்துவிட முடியாது. அவதூறு சட்டத்தைத் தம் ஆண்டை இராசீவின் தூண்டுதலால் தாம் சட்டாம் பிள்ளையாக இருந்து அறிவித்து விட்டு, இராசீவுக்கு வந்த அளவற்ற கடுமையான எதிர்ப்புகளால், எய்தவனின் அம்பாக ‘அம்போ’ என்று வீழ்ந்து கிடக்கும் அவரின் அவல நிலையை அவர் உணர்ந்து கொள்ளாத’ அறிவற்றவர் என்று கீழ்மையாக நாம் நினைத்து விடவில்லை ஆனாலும் வடவாரியர்களை நம்பிய எவனும் இத்தமிழினத்தில் தலையெடுத்ததும் இல்லை; தலை தப்பியதும் இல்லை. மிக மிகத் தூய்மையான அரசியல் காரர்களான வ.உ.சி., திரு.வி.க. போன்றவர்களும் கூட இந்நிலையைத் தங்கள் இறுதிக் காலத்தில் உண்ர்ந்து நெஞ்சு நோகவே செய்தார்கள் என்றால் இப்பொழுதுள்ளவர்கள் எம்மாத்திரம்?

அடுத்து வரும் தேர்தலில் இந்திராப் பேராயம் ஆயிரங்கோடி உருபா முதலீடு (செலவு செய்ய விருக்கிறதாக அனைவரும் கூறி வருகின்றனர். சில காலத்திற்கு முன் அரசியலோடு அறவியல் கைகோத்திருந்தது. ஆனால், இக்கால் உலக முழுவதும், அறிவியலும் கைபிணைந்து மக்களை ஆட்டக் களமாக்கி வருகின்றன. இனி அறம் செல்லாது; பேச்சு எடுபடாது; கருத்துகள் வெல்ல முடியாது நேர்மை, நயன்மை, உண்மை எதுவுமே முன்வர இயலாது. போலித்தனமும், பொய்ம்மையும் ஆரவாரமும், அடாவடித் தனமும், அரம்பச் செயல்களும், பணமும், படையுமே வெற்றி பெற நன்றாக எண்ணிப் பாருங்கள்!

இந்நிலையில் தமிழீழத்தில் தமிழின மக்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆளுநர் ஆட்சியினால் அவர்கள் பாடு வெகு திண்டாட்டமாக இருந்து வருகிறது. அனைத்து நிலையிலும் இங்குள்ள தமிழ் மக்கள் அரசியல், பொருளியல், குமுகவியல், கலை, பண்பாட்டு உரிமைகளை இழந்து, ஏற்கனவே அடிமைப்பட்டுக் கிடப்பதுடன், இன்றும் பேரவலத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எதிர்காலம் இவர்களின் நிலையில் எப்படியிருக்குமோ என்று உய்த்துணர இயலாது.

இங்குள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த அழிவு நிலைகளை முற்றும் உணர்ந்திருக்கிறார்கள் எனினும், தங்களுக்குள் அனைத்து நிலைகளிலும் வேறுபட்டும், மாறுபட்டும் ஒருவரை ஒருவர் அமுக்கிக் கொண்டும் அழித்துக் கொண்டுமே கிடக்கின்றனர். ஆனால் அனைவரும் வடிவாரிய வணிகக் கூட்டு அரசியலின் கீழ்மைத் தனங்களையும், வஞ்சகங்களையும், தமிழின அழிப்பையும் உணர்ந்தே உள்ளனர். எனினும் அவர்கள் ஒன்றுபட்டு, அவர்களை எதிர்க்கும் ஆற்றலை இழந்தே உள்ளனர் இவ்வழங்கல் நிலையில் அவர்களுக்கு நாம் மிகவும் வருத்தத்துடனும் அன்புடனும், வேண்டுதலாகம் கூறுவது இதுதான்.

நீங்கள் அனைவரும் இக்கால் உள்ள இழிவான அரசியல் நலன்கனைத் தூக்கி எறியுங்கள். வேற்றுமையை அகற்றுங்கள்! தில்லி ஆட்சி எனறென்றும் நன்மையும் நம் பிறங்கடைகளையும் மீளாத கொத்தடிமையாகவே வைத்திருக்கும் நம்மில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவர், அவர்களுக்கு முழு அடிமையாக இருக்கிற வரையிலேயே அவர்கள் உங்களைப் பாராட்டி ஏற்றுக் கொள்வார்கள். உரிமை நிலையிலோ, ஒத்துழைப்பு நிலையிலோ நீங்கள் அவர்களில் யாரேனும் ஒருவர்க்கு மாறுபட்டாலோ, வேறுபட்டாலோ, உங்களை உடனே கீழிறக்கி விட்டுவிட்டுச் சட்டத்திற்குப் புறம்பாக அவர்களே நேரடியாக ஆட்சி நடத்தத் தயங்கமாட்டார்கள். இது இமயமலை போன்ற வரலாற்று உண்மையாகும். எனவே, தமிழ்நாட்டுத் தேசிய இன விடுதலையே தமிழினத்தின் ஒட்டுமொத்தமான உரிமை அரசியலை உங்களுக்கு மீட்டுக் கொடுக்க முடியும்.

ஆகவே, நீங்கள் அனைவரும் நமக்குள் என்றென்றும் நிலையாக இருந்துவரும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து விட்டு, முழுமையான இனவுணர்வுடனும், நம் தாய்மொழி உணர்வுடனும், தமிழ் நாட்டு விடுதலை உணர்வை நம் மக்களிடையே ஊட்டுதல் ஒன்றே இந்நூற்றாண்டுக்கு உரிய தலையாய கடமையாகக் கொள்ளுதல் வேண்டும்.

இந்தக் கொள்கை நோக்கை அடிப்படையாகக் கொண்டே நம் கலைஞர் கருணாநிதி, மானமிகு வீரமணி, மாவீரன் நெடுமாறன். மக்கள் நலன் கருதும் கலிவரதன் நெடுஞ்செழியன், சானகி, இராமச்சந்திரன், சோமசுந்தரம், காளிமுத்து, இரா. செழியன் இந்திராப் பேராயத்திற்கு முற்றிலும் தம்மை கொத்தடிமையாக் கொண்டவர்கள் போக எஞ்சியுள்ள தமிழின முன்னோடிகள் முதலிய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் தமிழக விடுதலைக்குக் குரல் கொடுக்குமாறு, இன்றுவரையிலும் இனியும் கூட எந்த வகையிலும் அரசியல் நலனோ பிற எவ்வகை வாழ்வியல் நலனோ கருதாத, ஒரு தமிழின நலத் தொண்டன் என்ற முறையில் மிகவும் பணிவன்புடனும் அறிவார்ந்த உள்ளுணர்வுடனும் வேண்டிக் கொள்கின்றேன்.

-தமிழ் நிலம், இதழ் எண். 12 நவம்பர், 1988