வேண்டும் விடுதலை/தமிழ்க் குமுகாயம்

விக்கிமூலம் இலிருந்து


 
தமிழ்க் குமுகாயம் என்றொரு
குமுகாயம் இன்று இருக்கிறதா?


★ பள்ளி மாணவர்களிடம் மதத்தையும் குலத்தையும் கேட்பது எதற்கு?

★ தமிழுணர்வு பரவாமல் தமிழனை முன்னேற்றிவிட முடியாது.

★ மொழி இல்லாமல் இனம் இல்லை, இனம் இல்லாமல் மொழி இல்லை.

★ பகைவர்களே எச்சரிக்கையாய் இருங்கள்; தமிழன் விழித்துக்கொண்டான்.

★ திருச்சி குமுகாய மாநாட்டில் பெருஞ்சித்திரனார் முழக்கம்!

தாய்மார்களே! பெரியோர்களே! தனித்தமிழ் அன்பர்களே

இப்போது மாநாடு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காலையிலிருந்து இந்த நகரத்தையே அலைக்கழித்த அந்த ஊர்வல ஒலிகளுக்கும் இப்போது இதுநேரம் வரை உங்கள் காதுகளிலே விழுந்துகொண்டிருந்த அந்தப் புரட்சி மொழிகளுக்கும் ஒரு விடிவான வழியை அமைத்துக்கொடுக்க இருக்கின்ற ஒரே ஒரு தீர்மானம் நிறைவேறுவதுடன் இன்றைய மாநாடு முடிவடைகிறது. அந்தத் தீர்மானத்திற்கு முன் இந்த மாநாடு, குமுகாய மாநாடு. என்றழைக்கப் பெற்றதற்கும் இங்குப் பேசியவர்கள் குமுகாய, நிலையிலே இருக்கின்ற பலவகையான சூழல்களையும் இழிவுகளையும் எடுத்து உங்கள் முன்னே வைத்ததற்கும் ஒருசில வகையிலே உங்கட்கு விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டு தீர்மானத்தை இறுதியாக நிறைவேற்ற விரும்புகின்றேன். அருள்களிைந்து மிக அமைதியாக இருந்து இந்தக் கருத்துகளைச் செவிமடுக்கக் கேட்டுக்கொள்கின்றேன்.

பெரியோர்களே! இந்தத் தமிழ்க் குமுகாயம் என்று சொல்லிக் கொள்கின்றோமே, இப்படி ஒரு குமுகாயம் இருக்கின்றதா என்ற நிலையை யாரும் ஒப்புக் கொள்ளவில்லை, தமிழர்கள் என்கிற நிலை, ஏதோ ஓர் எழுத்திலே சொல்லப் பெறுகின்ற-வரலாற்றில் பொத்தகத்தில் - குறிக்கப் பெறுகின்ற நிலையாக இருந்து வருகிறதே தவிர, நம்முடைய உள்ளங்களில் வெளிப்படுகின்ற நிலையில் இல்லை. இம்மாநாட்டுக்குப் பலர் வந்திருக்கிறோம்; பல ஆண்டுகளாக தமிழுணர்ச்சி பெற்று வந்திருக்கிறோம். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தமிழ், தமிழன் என்கின்ற உணர்வுகள் இருக்கின்றனவா என்றால், இருக்கும் என்பதில் ஐயப்பாடுதான். இங்கு வந்திருப்பவருள் யாராவது ஒருவரைத் தனியறையிலே அழைத்துச் சாதி, மதம் பற்றிக் கேட்டால் சொல்லத் தயங்குபவரும் ஏன் கேட்கின்றீர்கள் என்று எதிர்த்துக் கேட்பவரும் இருப்பர் என்று கருத முடியவில்லை. பெரியார் 50, 60 ஆண்டுக் காலமாகப் பேசிவருகிறார். அவருடன் இருந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நாய் கூட அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க நினைக்காது. அப்படிப் பேசியும். வாழ்வில்-நடைமுறையில் அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொண்டோமா?

இப்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் நாட்கள். மாணவர்களைச் சேர்க்குங்கால் சாதி என்ன என்று கேட்கின்றார்கள். 'தமிழ்நாடு' என்று நாட்டுப் பெயரை மாற்றிவிட்டோம்; ஆனால் இனப்பெயரை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. மதம் என்ன என்று கேட்கின்றார்கள்? இந்து என்று கொட்டை எழுத்துகளில் எழுதுகிறோம். இந்து என்றால் என்ன பொருள்? நமக்குத் தெரியாது. தாய் தந்தையர் சொன்னார்கள், 'இந்து' என்று குறித்து விடுகிறோம். படிக்கும் ஒரு மாணவனிடம் உன் மதம் என்ன என்று ஏன் கேட்க வேண்டும்? 'மதம் என்ன' ? என்றால் என்ன பொருள்? எந்தக் கடவுளைக் கும்பிடுகிறாய் என்று தானே பொருள்? இதை எந்த இராசாசியோ, வாரியாரோ மறுத்துக் கூறமுடியுமா? ஒரு மாணவனிடம் போய் எந்தக் கடவுளைக் கும்பிடுகிறாய் என்று ஏன் கேட்க வேண்டும்? அவன் கும்பிடுகிறான் அல்லது கும்பிடாமல் இருக்கிறான். அதைப்பற்றி என்ன? அவனிடம் உன் அகவை என்ன? படிப்பென்ன? எங்குப் படித்தாய்? யார் உன் பெற்றோர் என்று வேண்டுமானால் கேட்கலாம். மதம் என்ன? சாதி என்ன? என்று ஏன் கேட்க வேண்டும்? என்ன தேவை வந்தது?

சாதி, மதம் வேண்டாம் என்று பெரியார் பேசுகிறார்; எழுதுகிறார். ஆனால் அவற்றை உடனே எடுக்க வேண்டாம் என்கிறார். நம்மவனெல்லாம் படித்து வரட்டும்; அப்புறம் எடுக்கலாம். இல்லையென்றால் பார்ப்பானே படித்து வந்து கொண்டிருப்பான் என்கிறார். இவனெல்லாம் எப்போது படித்து முடிப்பது? இவற்றை எப்போது எடுப்பது? ‘சாதி’யை ஏன் குறிக்க வேண்டும்? ‘தமிழன்’ என்று ஏன் குறிக்கச் சொல்லக்கூடாது? அப்படிக் குறித்தால் பார்ப்பானும் ‘தமிழன்’ என்று போட்டுக் கொண்டு படிக்க வந்து விடுவான் என்கிறீர்களா? பார்ப்பான் ஒரு போதும் தன்னைத் தமிழன் என்று குறிப்பிட முன்வரமாட்டான். அப்படியே குறிக்கிறான் என்று தெரிந்தால், அந்த மாணவன் பூணூல் போட்டிருக்கிறானா? என்று சட்டையைக் கழற்றச் சொல்லிப் பார்ப்பது? இல்லையென்றால் அவனுடைய வீட்டுக்குச் சென்று அவனுடைய பெற்றோர் பூணூல் போட்டிருக்கின்றனரா என்று ஆய்வு செய்தால் என்ன கெட்டுப் போய்விடும்? பள்ளிக்கூடச் சுவடியில் மாணவனின் சாதியையும், மதத்தையும் குறிப்பிடும் வரை இவ்விரண்டையும் ஒழிக்கவே முடியாது. பள்ளிக் கூடச் சுவடியிலிருந்து நீக்கிவிடுவரென்றும் முடியாததன்று; முடியக் கூடியதே. அப்படிச் செய்தால் சாதி மதம் தன்னாலேயே ஒழிந்து விடும்; அதை விட்டுக் கோயில் குளங்களைப் போய், இடிக்க வேண்டியதில்லை. எல்லாம் அடிப்படையில் தாம் செய்ய வேண்டும் நாம் 'விளம்பரப் பலகையைத் தமிழில் எழுதுங்கள்’ என்று கத்திக்கொண்டு ஒரு மாநாடே கூட்டியிருக்கிறோம். என்ன பயன்? 'ராயல் சில்க் ஹவுஸ்' என்று விளம்பரம் எழுதியிருக்கிறான். அதை மாற்ற முடிந்ததா? முடியவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கடைக்கு உரிமம் வழங்கும் போது, அந்த வேண்டுகோள் படிவத்தில் ‘பெயரைத் தனித் தமிழில் எழுத வேண்டும்’ என்ற சிறு குறிப்பு போட்டால் போதும். எல்லாம் தமிழிரேயே எழுதி விடுவார்கள் இதைப்போல் அடிப்படையில் மாற்றம் செய்தல் வேண்டும்.

சாதி, மதம் ஒழிய வேண்டும் என்று பேசுகிறோம் . ஆனால் அவை ஒழிய வேண்டும் என்று எவருக்கும் விருப்பம் இல்லை. இங்கு வந்திருக்கும். தி.க. வினரைக் கேட்கிறேன்; பள்ளியில் உங்களுடைய பிள்ளைகளைச் சேர்க்குங்கால் சாதி , என்ன என்று கேட்கும், இடத்தில் எப்படிக் குறிக்கின்றீர்கள்? நான் 'தமிழன்’ என்று குறிக்கிறேன். அப்படிக் குறித்தால் பள்ளியில் சேர்க்க முடியாது என்று சொன்னால், எந்தெந்த வகையில் போராடுவேன் என்று எச்சரித்திருக்கிறேன். 'தமிழன்’ என்று குறிப்பதால் இடம் இல்லை என்று சொல்லி விடுவானா? மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காரரிடமும் ‘தமிழன்’ என்றுதான் குறிக்கச் சொல்லுகிறேன். “அப்படியொரு சாதி பட்டியலில் இல்லையே” என்றால் "இருக்கிறது”; இங்கே இருக்கிறோம்; போய்க் குறித்துக் கொண்டு வந்து எழுதிவிட்டுப்போ” என்று சொல்லுவேன். சாதி, மதங்களை ஒழிக்க நாம் உள்ளத்தால் விரும்பவில்லை; எனவே இதுநாள்வரை அழிக்க முடியவில்லை. பார்ப்பான் அவை உள்ளன என்று எங்கே சொல்கிறான். அவனுடைய வேத, பஞ்சாங்க, புராணங்களைச் சுட்டிக் காட்டிச் சொல்கின்றீர்களா? நம்மில் எத்தனைப்பேர் அவற்றைப் படித்தும் பின்பற்றுகிறோம்? இன்று வேதத்தையும், மநு தருமத்தையும் யாரும் படிக்கவில்லை. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

பார்ப்பான் கோயில்களைக் கட்டவில்லை. அங்கே வழிபாடு செய்தவனும், மநுதர்மம் எழுதியவனும், பரப்பியவனும் தமிழனே! அவற்றை நீங்கள் தான் பரப்புகின்றீர்கள். ஒரு தி.க, தலைவர் மிகப் படித்தவர்: மிகஉயர்ந்தவர். அவருடைய வீட்டுத் திருமணம் ஒன்று நடந்தது. அதுவும் பெரியார் தலைமையிலேயே நடந்தது. பெரியார் வந்தார்; தாலியைத் தொட்டுக் கொடுத்தார்; மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர்; தாலி கட்டத் திருமணம் முடிந்தது ஆனால் உண்மையென்ன வென்றால் பெரியார் வரும் முன்பே அன்று காலை 4.5 மணிக்கே ஏற்கெனவே பழைய சடங்கு முறையில் திருமணம் முடிந்து விட்டது. இஃது இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது. நாம் கொள்கையைப் பேசுகிறோம். செய்வதில்லை. பார்ப்பான் மேல் பழியைப் போட்டுவிடுகிறோம். இப்படி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு நாட்களைக் கடத்துவதற்கு நாணவேண்டும்.

ஒரு கருத்தைச் சொன்னால், நம்மால் அதை நிறைவேற்ற முடியுமா என்பதை முதலில் எண்ணிக் கொள்ள வேண்டும். எல்லாம் நம் அமைச்சர்கள்; நம் கட்சி தான் ஆள்கிறது என்று பெரியார் சொல்கிறார். ஆம்; என் கட்சிதான் ஆள்கிறது என்று நான் கூடப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். சொன்னால் போதாது. செயலுக்கு வரவேண்டும்; பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். கோவை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் ககத்துரி அவர்கள் பேசுகையில் தனித்தமிழ் மட்டும் வந்துவிட்டால் போதுமா என்று கேட்டார்கள். அவர்கட்குச் சொல்வேன்; சான்றாகத் தினமணியில் 'கல்வி வசதிகளை விஸ்தரிக்க முடிவு’ என்று போடுகின்றான். பார்ப்பான் எழுதுகிறான். இப்படி 'விடுதலை' ஏன் அப்படி எழுத வேண்டும்’?. தினமணி அலுவலகத்திலிருந்தே தனித்தமிழ்க் கொள்கையைப் பற்றித் தெரிந்து போக 4 பேர் வந்தனர். அவர்கள் படித்துப் பட்டம் பெற்றவர்கள். அவர்களுடன் 2 மணிநேரம் பேசியிருப்பேன். அவர்கள் போகும் போது "இதைச் சொல்லுங்கள்” என்று சிவராமனுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தனுப்பினேன். இன்னும் கொஞ்ச நாட்களில் தன் போக்கைத் தினமணி மாற்றிக் கொள்ளவில்லையானால் அலுவலகம் இருந்த இடம் தெரியாமல் போகும். என்று! இன்று சொன்னால் தினமணி அலுவலகம் நாளை இல்லாமல் போய்விடும். ஒற்றர்கள் குறித்துக் கொள்ளலாம். தினமணி மட்டுமன்று வேறு எந்த அலுவலகமும் இருக்காது. நாளை புரட்சியான ஒரு தீர்மானம் வருகிறது. செயல் திட்டம் சொல்லட்டும் என்று ஐயா சொன்னார்கள்; நாளை சொல்லப் போகிறேன். கசுத்துரி அவர்கள் தனித்தமிழ்ப் போராட்டத்திற்குச் செயல் திட்டம் அறிவித்தால் தம் பிள்ளையை அனுப்ப அணியமாக இருப்பதாகச் சொன்னார்கள். இது எப்படி? இதிலிருந்து தாம் அணியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்தக் காலத்துப்பிள்ளை தந்தை சொல்வதைக் கேட்கும் படியாகவா உள்ளான்? தனித்தமிழ்ப் போராட்டமா? உங்களைத்தானே வரச்சொன்னார்; என்னை எதற்குக் கூப்பிடுகின்றீர்கள் என்றல்லவா கேட்பான். செயல் திட்டமென்றால் பெரியார், அண்ணா அறிவிக்காத திட்டமா? அவர்கள் செய்யாத போராட்டமா? இன்று இராமனைப் பெரியார்தான் காப்பாற்றுகிறார். இராமாயணத்தில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. எவனும் இன்று இராமாயணம் படிக்கவில்லை. இராமாயணத்தில் ஒன்றுமில்லாததால் தான் கம்பன் அதைப் பாவிய உணர்ச்சியோடு எழுதினான். இராமாயணப் பெயர்கள் தனித்தமிழில் இல்லை. தனித்தமிழில் அவற்றை விளக்கிவிட்டால் எவனும் அதைப் படிக்கமாட்டான். பெரியார்தான் இன்று இராமாயண ஆராய்ச்சி, இந்த ஆராய்ச்சி என்று புத்தகம் போட்டுப் பரப்புகிறார். இராமாயணத்திற்கும் தமிழனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. இராமாயணம் விந்திய மலையைத் தாண்டிவரவில்லை இராவணன் இலங்கையில் இருக்கவுமில்லை; அநுமன் சீதையைப் போய்ப் பார்க்கவும் இல்லை இது வரலாறு. இதை எந்த வாரியாரும் மறுக்க முடியாது.

'காஞ்சி காமகோடிப் பெரியவாள் 3 நாட்களுக்கு முன் மதுரைச் சென்றார். மதுரையில் தெய்வீக மணம் கமழ்ந்தது’ என்று எழுதுகிறான். அப்போது மட்டும் ஏன் கமழ்ந்தது? அங்கு மதுரை மீனாட்சி இருக்கிறாள். அப்போது கமழவில்லையா? இவன் மணம் கொண்டு போய்த் தடவினானா? எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்குச் சொல்லுங்கள், 'கல்வி விரிவாக்க முடிவு' என்று தமிழில் எழுதினால் நாக்கு கீழே அற்று விழுந்து விடுகிறதா? மொழியில் தான் ஓர் இனத்தின் பெருமையே இருக்கிறது. இதைப் பலர் உணர்வதில்லை. தலைவர்களும் அப்படியே. ஆகவே முதலில் நம்முடைய இழிவுகளை நாமே போக்கிக் கொள்ள வேண்டும். பார்ப்பான்மேல் பழியைத் தூக்கிப் போட்டுவிடக்கூடாது. இதையெல்லாம் விளக்கிப் 'பார்ப்பானையே குறை கூறிப்பயனில்லை' என்று தென்மொழியில் எழுதியிருக்கிறேன். 100-க்கு 97. பேராகக் இருக்கும் நம்மை 3 பேராக இருக்கும் பார்ப்பான் எப்படிப் பொடிபோட்டு மயக்க முடியும்? தொண்ணூற்றேழு பேர்களில் ஒருவன் கூடவா விழித்துக் கொள்ளவில்லை? அதுவும் கடந்த 3000 ஆண்டுக்காலமாக! அப்படித்தான் என்றால் இப்படிப்பட்டவன் என்றும் முன்னேறப் போவதில்லை. பேசாமல் முன்னேற்றும் முயற்சியை விட்டு விடலாம்.

நாம் கொஞ்சம் சொன்னாலும் செய்ய வேண்டும். பெரியார் சொல்கிறார் யாருமே திருமணம் செய்து கொள்ள வேண்டாமென்று! எப்படிப் பலகாரம் சாப்பிடுகிறோமோ, அப்படியே உடற்சுவையையும் நுகரலாம் என்கிறார். அதற்குத் தனி விடுதிவைத்துக் கொள்ள வேண்டுமென்கிறார். திருவள்ளுவர்தான் பெண்ணடிமையை மிகுதியும் சொல்கிறார் என்கிறார். திருக்குறளில் பெண்ணடிமை சொல்லப் பெற்றுள்ளளதா? தருக்கம் எப்போது வைத்துக் கொள்ளலாம்? ஆய்ந்து பார்ப்போம? வாய்புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என்று நாமே நம்மைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது. “தமிழ் காட்டு மிராண்டி மொழி” என்று உன் தலைவரே சொல்கிறார் என்று அவன் தாழ்த்துவானே, பெரியார் பக்கத்தில் இருப்பவர் பெரியாரை 'டாடி'என்றும், தம் மனைவியை 'மம்மி' (அம்மி) என்றும் அழைக்குமாறு தம் பிள்ளைகளிடம் சொல்கிறாராம். தம் மீதே நம்பிக்கை இல்லை. அம்மா என்று சொன்னால் என்ன கெட்டுப் போய்விடும்? இப்படி ஒரு தமிழன் இருப்பானா? வெளியில் இருக்கும் சொல்லெல்லாம் நம் சொல்லென்று ஆராய்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இப்படியா?

மொழியில் என்ன இருக்கிறது என்று அதைப் புறக்கணிக்கக் கூடாது."பூவராகவன்’ என்றால் நிலப்பன்றி என்று பொருள் தெரிந்த எந்தத் தந்தையும் அப்பெயரைத் தம் மகனுக்கு ஆசையுடன் வைப்பாரா? பேராசிரியை ஒருவர் தம்பெயரை மண்டோதரி என்று வைத்துக்கொண்டிருக்கின்றார். அதன் பொருள் தெரிந்தால் அப்படி வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆரியன் அவனுடைய வடமொழியைக் கருவியாகக் கொண்டு நம்மை, அடிமைப்படுத்தினான். அவன்தான் 'கல்வி விஸ்தரிப்பு’ என்று எழுதுகிறான் என்றால், 'விடுதலை'யிலும் அப்படித்தானே எழுதுகிறார்கள். அவன் எவனாவது தப்பித்தவறித் தலைப்புகளில் ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்களைக் கையாண்டாலும், 'விடுதலை' யில் அதுகூட வருவதில்லையே! 'நாத்திக”த்தில் எழுதுகிறான், ‘மந்ரி’ என்று! ஆங்கிலத்தில் ஓர் எழுத்துப் போனால் ஒத்துக்கொள்வானா? தமிழன் தான் 'சூத்திர' னென்றால், தமிழுமா அப்படி? குமுகாய இழிவைப் பேசுவதென்றால் எவ்வளவோ இருக்கின்றன. அதற்குத் தனிக் கூட்டங்கள், மாநாடுகள் போட வேண்டும்.”

'பார்ப்பான் வேண்டாம்' என்று சொல்லிவிங்டடுத் தினமணியை விடத் தாழ்வாக விடுதலையில் 'வடசொற்' கலந்து எழுதுகிறார்கள். மிகவும் வருந்துகிறேன். (இப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து "தீர்மானத்தைச் சொல்லவில்லையா? என்றார். அதற்குப் பாவலரேறு அவர்கள், தீர்மானம் சொல்லுவேன். மாநாட்டுக்கு வந்திருக்கிறீர்கள் முதலில் பேசுவதை முழுவதும் கேளுங்கள் : தீர்மானம் அப்புறம் சொல்வேன்’ என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து பேசினார்கள்)’ மன்னார்குடியில் 'கிசான் ஊர்வலம்' என்று கிசான் என்பது இந்திச் சொல் என்று நினைத்துக்கொண்டு எழுதுகின்றனர். மன்னார்குடியில் கிசான் என்னும் சாதி இருக்கிறதா? கிழான் என்றால் உழவன், கிழான் என்பதையே அவன் கிசான் என்று சொல்லிக் கொண்டு அது இந்தி என்று பெருமைப்படுகிறான். ‘உழவர்கள் போராட்டம்’ என்று ஏன் போடக்கூடாது? வேண்டுமென்றே இந்தி, வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதுகின்றனர். அவர்களுடைய இன உணர்வு அப்படி அந்நிலை நம்மிடம் இருக்கலாமா?

பெரியாரை நாம் எதிர்க்கவில்லை. பெரியாரின் பகுத்தறிவில் திருத்தம் செய்கிறோம்; அவ்வளவே, பெரியாரைத் தி.க. வினர் கொண்டாடுவதைவிட 100 மடங்கு நாங்கள் கொண்டாடுகின்றோம். பெரியார் இல்லை என்றால் இன்று இந்தக் கூட்டம் இல்லை. அவர் இல்லையென்றால் இந்த (ஒலிபெருக்கி முதலிய) க் கருவிகள் இங்கு வந்திரா. எல்லாம் வடநாட்டோடு நின்று போயிருக்கும். அவரைப், பெருமைப் படுத்தவே நினைக்கிறோம். நாமெல்லாம் பெரியாரை விட ஒருபடி மேலே உயர வேண்டும். மொழி இல்லாமல் இனம் இல்லை இனமில்லாமல் மொழியில்லை. இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாதவை. நம் மொழி அழிந்திருப்பின் இனமும் அழித்திருக்கும், தமிழ்மொழி சிறந்தது. எனவே அதை அழிக்க முடியவில்லை.

ஓரளவுக்காவது துணிந்து சொல்வது என்று வந்து விட்டோம். இன்னும் நிலை எப்படிப் போகுமோ? யாரும் சொல்ல முடியாது நாளைய திட்டத்திலே 6 ஆண்டுக்கால எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. திரு. கோ. து. (நாயுடு) 5 ஆண்டுகள் கேட்டார். ஆனால் இங்கு ஆறாண்டுகள் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆறாண்டுகளை மூன்று தகுதியாகப் பிரித்திருக்கிறோம். மூன்றாந் தகுதியில் தான் புரட்சி விளையும். அப்போது தான் நீங்கள் சொல்லுகிறபடி தினமணி கொளுத்தப் பெறும் (கைதட்டல்) எந்தெந்தக் கட்டடங்கள் வங்காளத்தில் வீழ்ந்தனவோ, அதே போலக் கட்டடங்கள் இங்கும் பார்த்தழிக்கப்படும் (உரத்த கைத்தட்டல்) எங்கெங்கு அரத்த ஆறு ஓடியதோ, அதேபோல் இங்கும் ஓடும். (தொடர்ந்த கைதட்டல்) இங்கு யாரும் சளைத்தவர்கள் இல்லை. வேண்டுமானால், உங்களுடைய உள்ளங்களிலே எப்படி இருக்கிறதோ, தெரியவில்லை. எங்கள் உள்ளங்களிலே இதுதான் இருக்கிறது நாளைக்குச் சில நிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்; அவ்வளவே. கருவிகளைச் செய்து கொண்டிருக்கும்போதே சண்டைக்கு வா என்று கூப்பிடுகிறாய்; கருவியைக் கொஞ்சம் தீட்டிக்கொண்டு வருகிறோம் என்று சொல்கிறோம். நாங்கள். வேறொன்றும் இல்லை ? எண்ணம், செயல் எல்லாம் நடக்கும். நீங்கள் வங்காளத்தை என்ன பார்க்கிறீர்கள்? இங்கே பாருங்கள். பெரியார் குடுமியை அறுக்கச் சொல்லுவேன். என்று சொன்னார். திருவரங்கத்தில் 2 பார்ப்பான் குடுமியை அறுக்கவே அறுத்தார்கள். இது 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, ‘விடுதலை' யில் வந்தது; குளித்துக் கொண்டிருந்த 2 பார்ப்பனர் குடுமிகள் காணாமற் போயின. ஆனால் பெரியார் மறுநாளே அறிக்கை விட்டு விட்டார் யாரும் அப்படிச் செய்யக் கூடாதென்று இங்கு நாங்கள் அறுங்கள் என்று சொல்லவும் மாட்டோம்; நிறுத்துங்கள் என்று சொல்லவும் மாட்டோம், தாமே குடுமிகளெல்லாம் காணாமற் போகிற நிலை ஒன்று வரும். நான் இருந்தாலும் சரி, இல்லாமற் போனாலும் சரி; சுட்டுப் பொசுக்கினாலும் சரி; வருகிறது! எச்சரிக்கையாய் இருங்கள். தமிழர்களுக்கும் சொல்கிறேன். இனி எப்பொழுதும் தமிழன் தூங்கிக் கொண்டே இருக்க மாட்டான்; நீங்களும் அவன் தொடையில் கயிறு திரித்துக் கொண்டே இருக்க முடியாது. என்றைக்காவது தூங்கிக் கொண்டிருப்பவன் விழிப்பான்; நீங்கள் திரித்துக் கொண்டிருக்கிற கயிற்றையே உங்கள் கழுத்தில் போட்டு இறுக்குவான்; தூக்கில் தொங்கவிடுவான். அப்படி ஒரு நிலை வரத்தான் போகிறது. எச்சரிக்கையாய் இருங்கள். நாளைக்கு நீங்கள் போய்ச் சொல்லுங்கள் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

நாளைக்கு நடக்க இருக்கிற மாநாட்டிலே தீர்மானத்தைக் கொண்டுவரப் போகிறேன். செயல் திட்டத்தையும் அறிவிக்கப் போகிறேன். வேடிக்கையாவது பார்த்துவிட்டுப் போங்கள். நாங்கள் ஐந்தாறு பேர் இருக்கிறோம். ஐந்தாறே பேர்தாம்! எந்த இயக்கமும், எந்த இந்திராவும் எங்களை அசைக்க முடியாது. பதவிக்கோ பட்டத்திற்கோ நாங்கள் விரும்பியவர்கள் அல்லர். கனவில்கூடக் கண்டவர்கள் அல்லர்.

எனவே , மொழிதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. மொழி கொஞ்சங் கொஞ்சமாக அழிந்தது; இனவுணர்ச்சியும் கொஞ்சங் கொஞ்சமாகச் சிதைக்கப் பெற்றது. நம்முடைய பொருளியல், அரசியல் அமைப்புகள் கொஞ்சங் கொஞ்சமாகச் சிதைக்கப் பெற்றன. கோயில்கள் கட்டியவன் பார்ப்பானில்லை; தமிழன்தான். களப்பிரர் காலத்தில்தான் வழிபாட்டு முறை வந்தது. வடமொழி மந்திரங்களைச் சொல்லச் சொன்னார்கள். அதற்குச் சட்டமும் செய்யப் பெற்றது. தமிழன் தான் முன்னோடி பார்ப்பான் இடையூறாக இல்லை. நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும். ஒருமுறை கோ.து. (நாயுடு) அவர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கையில் நாம் அடிமை நாட்டிலே தானே இருக்கிறோம். என்றார்கள், ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’ என்றேன் இல்லை அப்படித்தானே பார்ப்பனர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்’ என்றார்கள். ‘நீங்கள் வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம்; நாங்கள் அடிமைகள் அல்லர். நாங்கள். அவன் எழுதி வைத்ததை நம்பவில்லை’ என்றேன் அவரிடமிருக்கும் செல்வத்திற்குக் கொஞ்சம் இப்படிக் காட்டினாரென்றால் என்னென்ன வேலை நடக்கும் தெரியுமா? தமிழ் நாட்டிலிருக்கும் செல்வர்களில் ஒரு சிலர் நேரடியாகக் கூட வேண்டாம்; மறைமுகமாகக் கொஞ்சம் உதவினாலே போதும், அவர்கள் வியக்கும்படிச் செயல்கள் நடக்கும்.

மொழி விடுதலைதான் அடிப்படையானது என்று சொன்னேன். அதில் நாம் வெற்றி பெறவில்லை. எனவே நம் இயக்கமும் வெற்றி பெறவில்லை. இவ்வாண்டு 5-ஆம் வகுப்பு வரை பாடத் திட்டத்தை அரசினர் மாற்றியிருக்கின்றனர். நன்றாகப் படம் போட்டுச் சில பழைய பாடங்களை எடுத்து விட்டுப் புதிய பாடங்களைச் சேர்த்திருக்கின்றனர். அதில் சில தூய தமிழ்ச் சொற்களைப் புகுத்தியிருக்கின்றனர். அவ்வளவுதான். உடனே பார்ப்பன ஆசிரியரெல்லாரும் கூடித் 'தலைமையாசிரியர் கருத்தரங்கு' என்று மாநாடு கூட்டித் தமிழக அரசு மாணவர் நிலைக்குப் புரியாத சொற்களைக் கொண்டு வந்திருக்கிறது; சிறுவர்கட்கு அறிவு விளங்காது என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர். இவன் 'பூ' என்றிருந்ததைப் புஷ்பம்’ என்று போட்டது எப்படிப் புரிந்தது? நீர் என்றும் தண்ணீரென்றும் இரண்டு நிலைகளில் குறிக்கப் பெற்றதை 'ஜலம்' என்று போட்டாயே அப்போது எப்படிப் புரிந்தது? மூத்த மகன் ஜேஷ்டகுமாரனாகவும், இளையமகன் கனிஷ்ட குமாரனாகவும், திருமணம் 'விவாஹ சுப முகூர்த்த' மாகவும் மாற்றப்பட்ட போது மட்டும் எப்படிப் புரிந்தது? மொழியில் விழிப்புறின், இனம் விழிப்புறும். மொழி இன்றி, இனமில்லை. எனவேதான் மொழி, இன, நாட்டு விடுதலை என்று முக்கொள்கையாகச் சொல்ல வேண்டியதை மொழி-இன விடுதலை, நாட்டு விடுதலை என்று இருகொள்கையாகச் சொன்னேன்.

இப்போது இன்றையக் குமுகாய மாநாட்டில் நிறைவேற இருக்கும் ஒரே ஒரு தீர்மானத்தைப் படிக்கப் போகிறேன். இதுமிகச் சிறந்த தீர்மானம். இது நன்றாக எண்ணி எழுதப் பெற்றிருக்கிறது. நம் கருத்துகள் முழுக்க முழுக்க எழுத்து வடிவில் அடக்கப் பெற்றிருக்கின்றன. சொற்கள் நமக்குப்புரியும் அவர்களுக்குப் புரியாது. இந்த மாநாடு நடத்துவதற்குத் 'தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டு’ என்று பெரிய எழுத்தில் போட்டுத் 'தமிழக விடுதலை மாநாடு’ என்பதைச் சிறிய எழுத்தில் போட்டேன். இல்லையென்றால் மாநாட்டிற்கு இசைவு மறுக்கப்பட்டிருக்கும். நம் அதிகாரிகளிடம் இசைவு வாங்கவே இந்த ஏமாற்றுதல்! நூற்றுக்கு 3 பேராக இருக்கும் பார்ப்பனர் 97 பேரை ஏமாற்றுகிறார்களே, நாமும் கொஞ்சம் ஏமாற்றிப் பார்ப்போமே என்று ஏமாற்றினேன். எல்லாம் எப்படியாவது ஒரு மாநாடு நடத்த வேண்டும்; நம் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்!

அடுத்த நாள் மாநாட்டைத் தடுத்தாலும்சரி; ஒன்றும் செய்ய இயலாது. தீர்மானமெல்லாம் அச்சுப் போட்டுக்கொண்டு வந்து விட்டேன். தடுக்கப் பெற்றால் எல்லாம் சுவரொட்டிகளாக ஒட்டப்பெறும்; அஃதாவது எப்படியும் நிலையைத் தவிர்க்க முடியாது. இஃது அரசினர்க்கு எச்சரிக்கை, தமிழர்க்கன்று. அன்பர்களே! இந்தத் தீர்மானத்தைச் சற்றுக் காது கொடுத்துக் கேட்கக் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு தீர்மானத்திற்கு இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று குறிக்கோள். மற்றொன்று செயற்பாடு. இதுவரை யாரும் இப்படித் தீர்மானம் போடவில்லை. ஐயா (புலவர் வை. பொன்னம்பலனார்) அவர்கள் குறிப்பிட்டது போல் ஒரு புதிய முறையில் போடப் பெற்றிருக்கிறது. தீர்மானம் போட்டால் அதை நிறைவேற்ற வழி இருக்க வேண்டும். (தீர்மானத்தைப் படிக்கத் தொடங்குகிறார்கள்) 'குறிக்கோள்' தமிழ்மொழி, குமுகாய விடுதலை, இக்குறிக்கோளின் அடிப்படையில், தமிழகத்தின் அரசுச் சார்பில் உள்ள ஆட்சி, அலுவல், கல்வி, தொழில் எனும் நான்கு துறைகளிலும்; தனியார் சார்பிலுள்ள பொதுவாழ்வியல், (பொது வாழ்வியல், தனிவாழ்வியல் என்றால் என்ன என்று பின்னர் விளக்குவேன்) வாணிகம், செய்தித்தாள், பிற பொழுது போக்குகள் எனும் ஐந்து துறைகளிலும். (இப்போது 'பொழுபோக்குகள்’ என்பதை விளக்கத் தொடங்கித் திரைப்படத்தின் இழிவை எடுத்துரைக்கின்றார்கள்) என் அருமை நண்பர் திரு. சரவணத் தமிழன் அவர்கள் திரைப்படத்தின் இழிவுகளை உங்கள் முன்னே நன்றாக விளக்கினார்கள் ஆனால் அவர் சொன்னது மிகக் குறைவே. நீங்கள் சென்னைப் பக்கம் போய்ப் பார்த்தால் எல்லாம் தெரியும் அதுவும் வேறெங்கும் போக வேண்டாம் விடுமுறை நாட்களிலே கல்லூரிப் பகுதிகளுக்குச் சென்றால் போதும் அங்குப் பாலியல் உணர்வுப் படங்கள் மாணவர்களுக்குக் காட்டப் பெறுகின்றன. நாம் இங்கே குமுகாய மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம்; அங்கே ஒரு பெரிய இனத்திற்கே குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? பார்ப்பான் ஒரு நாளில் 23 மணி நேரமும் திரைப்படம் முதலானவற்றில் ஈடுபட்டு ஒரு மணி நேரம் படிப்பில் கவனம் செலுத்தினாலும் தேறிவிடுவான். ஆனால் நம் பையனோ 23 மணி நேரமும் படித்து, ஒரு மணிநேரமும் வீணடித்தாலும் தேறமாட்டான். இது உண்மை, என்னுடைய வாயில் அறிவுத் தொடர்போ, உளத்தொடர்போ இல்லாமல் சொற்களில் வருவதில்லை. நான் பெரிய இவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை உண்மை இன்று புரியாதிருக்கலாம். நாளை புரியும். அப்போது எண்ணி வருந்துவீர்கள். அந்த நிலைக்கு உங்களை ஆளாக்கிக் கொள்ளாதீர்கள். அதனால் தான் வன்முறையைக் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறேன். அப்போது வாயால் சொல்ல மாட்டோம்: முதலிலேயே சொன்னேன். பாட்டெழுதுகின்ற கை மட்டுமன்று கருவியும் செய்யும் என்று சொன்னேன். அதிலே பல குறிப்புகள் இருக்கின்றன.

வானொலி இன்று பெயருக்கே அரசுச் சார்பில் இருக்கிறது. ஆனால் உண்மையில் தனியார் (பார்ப்பனர்) சார்பிலேயே இருக்கிறது. இப்போது உங்கட்கு இன்னோர் எடுத்துக் காட்டைச் சொல்ல விரும்புகிறேன். கோவை மாவட்டத்தில் அமராவதியில் ஒரே ஒரு படைத்துறைப் பள்ளி (sainick school) இருக்கிறது. அந்தப் பள்ளிக்கு ஒவ்வோராண்டும் தமிழக அரசுச் சார்பிலே உரு. 30.000 செலவிடப்படுகிறது. ஆனால் அங்கே நடுவணரசு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் தாம் கற்பிக்கப்பெறுகின்றன. அங்குத் தமிழுக்குக் கிழமைக்கு ஒரே ஒரு பாடவேளை (Period) மட்டும் தான். 10 ஆம் வகுப்புக்கு ஒரே ஒரு நூல்தான் பிற எல்லாம் இந்தி, ஆங்கிலப் பாடங்கள். இன்னும் சொன்னால், உங்கட்கு வியப்பாக இருக்கும். அந்த ஒரே ஒரு நூலும் என்ன தெரியுமா? 'கோவலன்' என்னும் நூல்! இங்கு, அஃதாவது தமிழக அரசுப் பள்ளிகளிலே 6 ஆம் வகுப்புக்கு வைத்திருக்கும் தமிழ்ப் பாடம் அங்கு 9 ஆம் வகுப்புக்கு வைக்கப் பெற்றிருக்கிறது. இவ்வளவு போதுமா? இவ்வளவு படித்தால் அவன் தமிழைப் படித்துக் கொள்வானா? அடிப்படையிலேயே கை வைக்கிறீர்கள்! தமிழில் என்ன இருக்கிறது? ஏதாவது கண்டு பிடித்திருக்கிறீர்களா?” என்று அவன் கேட்டால் "ஆமாம்" (ஒன்றும் இல்லை) என்கிறார்கள் நம் தலைவர்.

இப்போது தீர்மானத்தின் குறிக்கோளைப் படித்தேன்; செயற்பாட்டையும் இப்போது சொல்லிவிடலாம். ஆனால் செயல் திட்டம் நாளை அறிவிக்கப் பெறும். என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய தமிழ்க்குடிமகன் அவர்கள் என்னை ஓர் அரசியல் இயக்கம் தொடங்க வேண்டும் என்று சொன்னார். அவர் வேண்டுமானால் தொடங்கட்டும். நான் துணைநிற்பேன். தனித்தமிழ் அன்பர்களை யெல்லாம் கூட்டி அவரையும் இன்னும் பலரையும் சட்டமன்றத்தில் கொண்டுபோய்வைக்க முடியும். ஆனால் அரசியல் கட்சி தொடங்கினால் என்னென்ன ஆகும் என்று எனக்குத் தெரியும் சட்ட மன்றத்திற்குப் போகும் அந்த நிலை மட்டுமே சரி என்று எனக்குப் படவில்லை. எனக்கு வேறு வேலை இருக்கிறது.

இந்தத் தீர்மானத்தின் படிகள் வழக்குரைஞர் கட்கெல்லாம் அனுப்பப்பெறும். நமக்கென்று எல்லாத் தீர்ப்பு மன்றங்களிலும் வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். இன்னும் வெளிப்படையாகச் சொல்கிறேன். ஒற்றர்கள் குறித்துக் கொள்ளுங்கள். நான் கொஞ்சம் துணிவானவன். நாட்டிற்குக் கொஞ்சம் கேடுகாலம் வந்து கொண்டிருக்கிறது, என்று நினைத்துக் கொள்ளுங்கள். படைத்துறையில் கூட நான் சொன்னால் திருப்பு நிலை வரும் (கை தட்டல்). ஏதோ சும்மா கத்திக் கொண்டிருக்கிறான் என்று நினைக்காதீர்கள் நான் இவ்வளவு துணிவாகப் பேச் முடியாது. என்னவோ செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். வங்காளத்தில் நடந்ததில் நூற்றில் ஒரு பங்கு தான் வெளிவந்தது. அங்கு நடந்தது வேறு: செய்தித்தாளில் வந்தது வேறு. நாம் இவ்வளவு பெரிய மாநாடு நடத்துகிறோமே, எவ்வளவு செய்தி வரும்? ஒரு காமகோடி பீடாதிபதி மதுரை மண்ணில் கால் வைத்தும் மதுரையெல்லாம் மணந்தது என்று எழுதுகிறான் அதையும் நாம் படித்துக்கொண்டு மூடர்களாக இருக்கிறோம்.

ஆரியர்களுக்கு உண்மையாகவே கேடுகாலம் வந்துவிட்டது. ஆரியர்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன், என்னென்ன நடக்கும் என்று சொல்ல முடியாது, ஒழுங்காக அவனுடைய பூணூலை இன்றைக்கே கீழே கழற்றி வைத்துவிட வேண்டும். அவனுடைய குடுமி தப்பித் தவறி 'இப்பி' க்குடுமியாக இருந்தாலும் நான் அவனுடையது என்றுதான் நினைத்துக் கொள்வேன் (கைத்தட்டல்) ஏன் தெரியுமா? அவன்தான் பெரும்பாலும் 'இப்பி' யாக இருக்கிறான் அவர்களெல்லாம் அடுத்த கப்பலிலேயே போகப் போகிறார்கள். அது தான் அமெரிக்கப் பழக்கங்களை யெல்லாம் பழகுகிறார்கள். இராசாசி முன்பே சொல்லிவிட்டார். நாங்கள் இந்த நாட்டை விட்டு விரைவில் போகிறோம் என்று விளையாட்டில்லை.; உண்மையாகவே போகத்தான் போகிறார்கள். உங்களுக்கு அவனைப் பற்றிக் கவலை வேண்டா, நம்மைப்பற்றிக் கவலைப்படுவோம். போதிய காலம் அமைந்து விட்டது. அதனால்தான். இவ்வளவு நாள் அமைந்திருந்தேன். இதை நேற்றே செயற்குழுக் கூட்டத்தில் சொன்னேன்.

பெரியார்தான் விரைவில் செயல்படக் காரணமாக இருந்தார். பிரிவினையைத் தள்ளிப் போட்டிருக்கிறேன் என்று இதே திருச்சியில் பேசுகையில் சொன்னார். நம்மவர்கள் ஆள்கிறார்கள் இந்திராவிடமிருந்து அதிகாரம் கேட்டுச் சில நிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார். இப்படிப் பட்ட ஒருவர் இனி நமக்குச் செய்யப் போகிறார் என்று நினைத்தால் நம்மைப்போல் ஒரு குருட்டுத் தனமான கொள்கையை உடையவர் வேறு எங்கும் இருக்க முடியாது. இளைஞர்கள் நாம் உடலில் சூடு ஆறிப்போகும் முன் சிலவற்றைச் செய்ய வேண்டும். இப்பொழுதே சிலநிலைகளில் தளர்ந்து போய் இருக்கிறோம். இன்னும் தளர விரும்பவில்லை. இப்போது மாணவர்கள் பேசினார்கள். எந்தெந்தக் கல்லூரியில் எப்படியெப்படி மாணவர்கள் இருக்கின்றார்கள் என்று. எனக்குத் தெரியாது. என்னைத் தொட்டுப் பார்த்தால் என்னென்ன நடக்கும் என்பதை அவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தப்படியான நிலை வருகிறபடி சூழலை வருவித்துக் கொள்ள யாரும் விரும்ப வேண்டாம். இதையெல்லாம் சொல்லுவது தவறு. இருந்தாலும் சிலவற்றைச் சொல்லியும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த மாநாட்டிற்கு வராதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஊர்வலத்திற்கு 100 பேர் வந்திருப்பார்கள். இந்த ஊர்வலத்தால் உணர்வு பெற்றோர் சிலரேனும் இருப்பர். நாளை செயல்திட்டத்தை அறிவித்தபின் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது, செயல்திட்டம், செயல்திட்டம்தான். நம்மை இந்த மாநாடு மேலும் உறுதியான உள்ளங்களாக்கிக் கொடுத்தது. இம் மாநாட்டை நான் நினைத்ததற்கு மேலாக, மிகச்சிறப்பாக நடத்திக் கொடுத்த உங்களுக்கு என் பணிவான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநாடு இத்துடன் முடிவடைகிறது. ஆனால் ஓர் அருமையான நாடகம் ஏறத்தாழ 9.30 மணியளவில் நடக்க இருக்கிறது. எல்லாரும் உணவருந்தி விட்டுத் தவறாது வந்து பார்த்துச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். நாடகத்தைத் தனித்தமிழ் வேங்கை, வெங்காலூர் அறவாழி அவர்கள் மிகவும் சிறப்பாக எழுதி யிருக்கிறார்கள். நாடகத்தில் வேறொன்றுமில்லை; நம் கொள்கை நன்றாக விளக்கப் பெற்றிருக்கிறது. நாடகத்திற்கு நாமெல்லாம் வத்திருந்து நம் உணர்வு அவிந்து போகாமல் மேலும் மேலும் சூடேற்றிக் கொண்டிருப்போமாக! (ஒலிபெருக்கியில் விடுதலை முழக்கங்கள் எழுப்பப் பெறுகின்றன)

- தென்மொழி, சுவடி :10, ஓலை-2-4, 1972