வேண்டும் விடுதலை/வரலாறு படைத்தது திருச்சி!

விக்கிமூலம் இலிருந்து


 
வரலாறு படைத்தது திருச்சி
கொள்கைச் சிறப்புடைய முதல் விடுதலை மாநாடு.


வீறு கொண்ட ஊர்வலம்! காவலர்கள் வெகுண்டு பார்த்தனர்! விழித்து, வேடிக்கை பார்த்தனர்!

செய்தித்தாள்களின் ஒருமித்த இருட்டடிப்பு! மாநாட்டைப் புறக்கணிக்க ஆட்சியாளர் செய்த சூழ்ச்சி! இருநாள்களிலும் உறுப்பினர்களின் நெருப்புரைகள்! தொடங்கிற்று தமிழக விடுதலை இயக்கம்!

தூங்குகின்ற தமிழர்களும், தொடை நடுங்கிக் கோழைகளும், காட்டிக் கொடுக்கும் நரிகளும், பொறாமைப் பிண்டங்களும், தான் தோன்றித் தம்பிரான்களுமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்! தென்மொழி மறவர்கள் அத்தனைப் பேரும் தவறாது வந்திருந்தனர்!

மாநில அரசு, நடுவணரசு, மறைமுக நடவடிக்கைகள்!
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு
(நிகழ்ச்சிச் சுருக்கம்)

கடந்த விடைத் திங்கள் 28,29 (சூன் 10,11-1972) காரி, ஞாயிறு நடைபெற்ற தமிழக விடுதலை மாநாட்டிற்கு அஃதாவது தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டிற்கு என சூன் 9ஆம் பக்கலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், வெங்காளுர், காளிக் கோட்டம்(கல்கத்தா) முதலிய அயல் மாநிலங்களிலிருந்தும் தென்மொழியன்பர்களும் வீறு குறையாத விடுதலை மறவர்களும் திருச்சியில் வந்து கூடத் தொடங்கி விட்டனர். மாநாட்டு அமைப்பாளர் திரு. பெருஞ்சித்திரனாரும் மாநாட்டுச் செயலர் திரு. இறைக்குருவனாரும் 7-11-72 அன்று இரவே புறப்பட்டு 8-11-72 காலையிலிருந்து திருச்சியில் தங்கி, மாநாட்டு முன்னணிச் செயற்குழு உறுப்பினர்களாகிய திரு. வெற்றிக்கூத்தன், திரு. மகிழ்நன், திரு சின்னத்துரை, திரு தமிழநம்பி, திரு மு. வ. பரமசிவம், திரு. அருட்குவை, முதலியோருடன் மாநாட்டுத் தொடர்பான அனைத்து வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டனர். திரு. வெற்றிக்கூத்தன், திரு. மகிழ்நன் இருவரின் ஒத்துழைப்பையும் சொல்லில் வடிக்க முடியாது. இரவு பகலென்று பாராமல் இருவரும் ஓடி ஓடிச் செய்த பணிகள் எண்ணிலடங்கா தொண்டுகளின் அழுத்தத்தால் இருவரும் நான்கைந்து நாட்கள் சரிவர உணவுண்ணவோ உறங்கவோ முடியவில்லை. அவர்களுடன் அமைப்பாளர், செயலர் ஆகியோரும் அவர்களுடன் இருந்த பிற அன்பர்களும் வினைகளைப் பகிர்ந்து கொண்டு செய்த இணைவு முறையாலேயே மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்த முடிந்தது. இறுதிவரை மாநாடு நடைபெற விருந்த தேவர் மன்ற இசைவும், ஊர்வலத்துக்கான பிற இசைவுகளும் தரப்பபடாமலேயே இருந்து அன்பர்களின் இடைவிடாத முயற்சிகளால் மாநாட்டிற்கு ஓரிரு நாட்களின் முன்னமேயே பெறப் பெற்றன. அப்பொழுதும் இயங்கி வழியாக ஒலிபரப்பும் இசைவுக்கு இறுதிவரை அரசினர் இசைவு தரவே இல்லை. குமுகாய மாநாடு நடக்க விருந்த 10-6-72 காரியன்று காலை தேவர் மன்றச் சுவர்களில் விடுதலை முழக்கங்கள் கொட்டை கொட்டையான எழுத்துகளில் சிவப்பு மையில் தாள்களில் எழுதி ஒட்டப்பெற்றிருந்தன. அவை போவோர் வருவோரைச் சற்று இடை நிறுத்திப் படிக்கத் தூண்டும் படி அவ்வளவு எடுப்பாக அமைந்திருந்தன. தேவர் மன்ற நுழைவாயிலில் வாழை மரங்கள் கட்டப் பெற்று அழகுடன் காட்சியளித்தன.

ஊர்வலம் காலை 7 மணியளவில் தொடங்கும் என்று குறிக்கப் பெற்றிருந்தாலும், அன்பர்கள் நகர்ப்புறத்தின் பல பகுதிகளிலும் வந்து தங்கியிருந்ததனால் அவர்கள் வந்து கூடி ஊர்வலம் தொடங்க 8மணி ஆனது ஊர்வலத்தில் மறவர்கள் இருவர் இருவராக நின்றனர். ஊர்வலத்தின் இறுதியில் பெண்களும் அவர்களை யடுத்துத் தொண்டர்கள் சிலரும் கூடினர். மொத்தத்தில் ஊர்வலம் தொடங்குகையில் அதிலிருந்தவர் 150 பேர், ஊர்லம் பல வீதிகளிலும் சென்று கொண்டிருக்கையில் இடையிடையே பலர் வந்து கலந்து கொண்டனர். பெரும்பாலும் மாநாட்டுக்கு அழைக்கப் பெற்றிருந்த தலைவர்களுள் தமிழ்மறவர் திரு. வை. பொன்னம்பலனார் ஒருவரே ஊர்லத்தில் கலந்து கொண்டார். ஆனால் அன்றைய மாநாட்டில் கோவை மாவட்ட தி. க தலைவரும் வழக்கறிஞருமாகிய திரு. கசுத்தூரி அவர்களும் கலந்து கொண்டு சொற்பொழி வாற்றினார்.

உர்வலத்தில் கலந்து கொண்டவர் ஏறத்தாழ 200 பேராக இருந்தாலும், பலவகையான நடவடிக்கைகளும் இருக்கும் என்று தெரிந்தும், சட்டத்திற்கும் சிறைக்கும் அஞ்சாமல் என்ன நேர்ந்தாலும் எந்தமிழ் நாட்டிற்கென ஏற்றுக்கொள்வோம் எனத் துணிந்தும் வந்தவர்களாகவே அவர்களைக் கருதிக் கொள்ள வேண்டும். இதுபற்றி வேறு முன்பே தென்மொழியில் எச்சரிக்கை தரப் பெற்றுள்ளது. எனவே ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் ஒருவர் பதின்மருக்கு இன்னுஞ்சொன்னால் நூற்றுவருக்குக் கூடச் சமமாவர். அப்படிக் கணக்கிட்டால் ஊர்வலம் மிகுந்த அளவில் வெற்றி பெற்றது என்றே சொல்லுதல் வேண்டும்.

‘தமிழர் நாடு தமிழருக்கே 'தனித்தமிழ் நாட்டை அடைந்தே திருவோம்’ தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்” , அடிமைத் தமிழரே விடிந்தது எழுங்கள், பார்ப்பனப்புரட்டு பயனளிக்காது, விளம்பரப் பலகையைத் தமிழில் எழுதுங்கள் போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்கவும், தென்மொழியில் வெளிவந்த முழக்கங்கள் எழுதப்பெற்ற தட்டிகளையும் படங்களையும் ஏந்திக்கொண்டும் ஊர்வலம் திருச்சித் தேவர் மன்றத்திலிருந்து வடக்கு நோக்கிச் சரியாகக் காலை எட்டரை மணிக்குப் புறப்பட்டது. ஊர்வலத்தினர் அணி அணியாகப் பிரிந்து, தமிழ் குமுகாய, தமிழக விடுதலை முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்பிய வண்ணம் சென்றனர். மறவர் இருவர் ஊர்வலத்தின் முன் ‘தமிழக விடுதலை மாநாடு’ என்று செம் மையில் எழுதப் பெற்ற பதாகையைப் பிடித்துச் சென்றனர். ஊர்வலத்தின் வலப்பக்கத்தில் மாநாட்டு அமைப்பாளரும் தென்மொழி ஆசிரியருமாகிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும், மாநாட்டுச் செயலரும் வலம்புரி ஆசிரியருமாகிய புலவர் இறைக்குருவனார் அவர்களும் அன்பர் சிலரும் அவ்வப்பொழுது வரிசையை ஒழுங்கு படுத்திக் கொண்டும், வேறு சில விரும்பத்தக்காத வன்முறைச் செயல்கள் நிகழ்ந்து விடாதவாறு கண்காணித்துக் கொண்டும் நடந்து வந்தனர். உரத்த குரலுடைய மறவர்கள் சிலர் முன் முழக்கமிட, அவர்களைத் தொடர்ந்து அன்பர்கள் வீறுபட கொள்கைகளை முழங்கியது. தெருக்களில் போவார் வருவாரையும் சந்து பொந்துகளில் நின்றாரையும் கடை கண்ணிகளில் வாணிகம் செய்து கொண்டிருந்தாரையும் நிலைகுத்தி நிற்கச் செய்து வியப்புடனும், வேடிக்கையுடனும் ஊர்வலத்தைப் பார்க்கவும் முழக்கங்களைக் கேட்கவும் செய்தது. முழக்கமிட்டவர்களில் திரு. அரணமுறுவல் அவர்களின் குரலும் திரு. நெடுஞ்சேரலாதன் அவர்களின் குரலும் இன்னுங்கூட திருச்சியிலுள்ள பொதுமக்களின் காதுகளில் சிலையோடிக்கொண்டிருக்கும்.

தேவர் மன்றத்தில் இருந்துபுறப்பட்ட ஊர்வலம் மேலரண் சாலை வழியே வடக்கு நோக்கிச் சென்ற பின், பிசப்சாலைக்குத் திரும்பி உறையூர் சென்று புத்தூர்ச்சாலை, மருத்துவமனைச்சாலை வழியே படையிருப்புப் பகுதியை அடைந்தது, வெயில் கடுமையாகக் கொளுத்தியதாலும், ஏறத்தாழ இரண்டு மணிநேரம் உரத்த குரலில் தொடர்ந்து முழக்கங்களிட்டதாலும் அனைவரும் தண்ணீர் அருந்தினர். பின் உடனே தொடர்ந்து சென்ற ஊர்வலம் பேருந்து நிலையம் சென்று மதுரைச் சாலையில்க் கிழக்கு நோக்கித் திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. ஊர்வலத்தோடு ஏற்கெனவே வந்து கொண்டிருந்த காவலர் சிலருடன் புதிதாகச் சிலரும் வந்து சேர்ந்தனர். சற்றுத் தொலைவில் பின்னால் காவலர் வண்டி ஒன்று ஊர்வலத்தைத் தொடர்ந்து முதலில் வந்தது போல் வந்து கொண்டிருந்தது தீடீரென்று ஊர்வலம் இடும் முழக்கங்களைத் தலைமைக்காவலர் ஒருவர் விரைந்து விரைந்து எழுதிக் கொள்ள முயன்றார். அவரால் முடியவில்லை. அவருக்கு 25 முழக்கங்களும் அச்சிட்ட படி ஒன்று கொடுக்கப் பெற்றது. அப்போது காவல் துறைப் பொது இயங்கி(jeep) ஒன்று ஊர்வலத்தைத் தாண்டிச் சென்று பின் மதுரைச்சாலை வழியே பாலக்கரைக்கடைத் தெருவினுள் நுழையும் போது காவல் துறைத் தலைமை அதிகாரிகள் ஏறிய இன்னியங்கி ஒன்று ஊர்வலத்தை முந்திச் சென்றது. சற்று நேரங்கழித்து ஊர்வலம் காந்தி அங்காடியை அடைந்ததும், காவல்துறை அதிகாரிகள் ஊர்வலத்தை மறித்தனர். காவலர் பலர் ஊர்வலத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். அப்போது ஊர்வலம் நின்ற போதிலும் விடுதலை முழக்கங்கள் முன்னிலும் பன்மடங்கு உரத்த குரலில் முழக்கப்பெற்றன. மக்கள் கூட்டங் கூட்டமாய் ஆங்காங்கு நின்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஊர்வலத்தை மறித்த அதிகாரிகள் மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் ஏதோ பேசினர். அப்போது அவர்கள் பக்கத்தில் திருவாளன்மார் மகிழ்நனும், தமிழ்நம்பியும் போய் நின்று கொண்டனர். (காவல் துறை அதிகாரிகளுடன் பேசிய பேச்சைப் பாவலரேறு அவர்கள் மாநாட்டில் பின்னர் வெளியிட்டார்கள். காவல் துறை அதிகாரிகள் (மாநிலத் துணைப் பொது ஆய்வாளர் D.I.G. மேலாண்மை அதிகாரி - Supeerintendent) ஊர்வலத்தை அத்துடன் முடித்துக்கொண்டு கலைந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாகச் சொன்னார்கள். அதற்குப் பாவலரேறு அவர்கள் அதிகாரிகள் ஊர்வலத்தை நிறுத்தி யிராவிட்டால் அதுவரை வந்தது போல் ஊர்வலம் அமைதியாக நெடுந்தொலைவைக் கடந்திருக்கும் என்றும்; ஊர்வலத்தினர் படித்துப் பட்டம் பெற்ற பண்புடையர் என்றும் எந்த வன்முறையிலும் ஈடுபடார் என்றும்; எப்படியும் ஊர்வலம் திட்டமிட்டபடி செல்லும் என்றும்; ஆனால் அதிகாரிகள் சட்டப்படி தம் கடமையைச் செய்யலாம் என்றும் தெளிவாகச் சொன்னார்கள். இறுதியில் அதிகாரிகள் விடுதலை முழக்கங்கள் எழுதிய சில தட்டிகளைக் கொடுத்துவிட்டுப் போகுமாறு கேட்டார்கள். அதற்கு அமைப்பாளர் அவர்கள் ஊர்வலத்தினர் தட்டிகளைக் கொடுக்கார் என்றும் வேண்டுமானால் அதிகாரிகள் பிடுங்கிக் கொள்ளலாம் என்றும்; அவ்வாறு செய்யின் அதை ஊர்வலத்தினர் தடுக்கார் என்றும் சொன்னார்கள். அதற்கு அதிகாரிகள் கொடுப்பதும் பிடுங்குவதும் ஒன்றெனக் கூறியதற்கு அமைப்பாளர் அவர்கள் கொடுத்தால் இருவர் (ஊர்வலத்தினர் - அதிகாரிகள்) கடமையும் நிறைவேறா என்று கூறி மேலும் விளக்கினார்கள்) உணர்வழுத்தம் மிகுந்த குரலில் திரு. மு. மகிழரசன் விடுதலை முழக்கங்களை எழுப்பியது போல் ஊர்வலத்தினரும் முழக்க மிட்டுக்கொண்டிருந்தனர். அவ் விடுதலை மறவர்களின் உணர் வெழுச்சி முழக்கங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திரு. மகிழ்நன் முழங்குவதைச் சற்று நிறுத்தவேண்டும். என்பதும் அதிகாரிகள் எந்தெந்தத் தட்டிகளை எடுத்துக் கொண்டாலும் வாளாவிருக்க வேண்டும் என்பதும் அமைப்பாளர் கட்டளை என்றும் சொன்னார். பின் அதிகாரிகள் விடுதலை முழக்கத் தட்டிகள் சிலவற்றை எடுத்துக்கொண்டனர். ஊர்வலம் தொடர்ந்தது.

புதிய உணர்வுடன் புறப்பட்ட ஊர்வலம் காந்தி அங்காடியினின்று பெரிய கடைத்தெரு, தெப்பக்குளம் ,கீழைச் சிந்தாமணி வழியே மீண்டும் மேலரண் சாலையை அடைந்து ஏறத்தாழப் பகல் 1230 மணிக்குத் தேவர் மன்றத்தை அடைந்தது ஊர்வலம் கடந்த மொத்தத் தொலைவு ஏறத்தாழ 12 கல்! தேவர் மன்றத்தின் வாயிலை அடைந்ததும் "தாய்மொழித் தமிழைத் தவறின்றிப் பேசுங்கள்” முதல் “தமிழப்பெரு நிலத்தை விடுவிக்க வாரீர்!” ஈறாகவுள்ள இருபத்தைந்து முழக்கங்களும் வரிசையாய் ஒவ்வொன்றாய் முழக்கப்பெற்றன. பின் அனைவரும் நன்பகல் உணவுக்காகக் கலைந்து சென்றனர்.

பிற்பகல் 2 மணியளவில் செல்வி மா. தேன்மொழியின் தமிழ் வணக்கப் பாடலுடன் குமுகாய மாநாடு தொடங்கியது. மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் செயலர் புலவர் இறைக்குருவனார், தமிழ்மறவர் புலவர் வை. பொன்னம்பலனார், கோவை மாவட்ட தி. க. தலைவர் கசுத்துளரி, ‘கைகாட்டி' ஆசிரியர், திரு. தமிழ்க்குடிமகனார் முதலியோர் மேடையிலும் , அதற்கண்மையிலும் அமர்ந்திருந்தனர். மாநாட்டிற்கு வருவதாகத் தெரிவித்திருந்த பர். சி. இலக்குவனாரும், புலவர் குழந்தையும் என்ன கரணியத்தாலோ வரவில்லை. முதலில் மாநாட்டரங்கில் ஏறத்தாழ இருநூற்றுவர் கூடியிருந்தனர். பின் அன்பர்களும் பொதுமக்களும் வரத் தொடங்கினர். மாநாட்டினுள் தென்மொழி , தமிழ்ச்சிட்டுப் பழைய இதழ்களும் தென்மொழி வெளியீட்டு நூல்களும், புன்செய்ப்புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றத்தார் வழிப் பாவாணர் நூல்களும், திருவாரூர் இயற்றமிழ் பயிற்றகத்தாரின் நூளும் விற்பனைக்குக் வேண்டுவரப் பெற்றிருந்தன.

தமிழ் வணக்கப் பாடல் முடிந்ததும் மாநாட்டு அமைப்பாளர் எழுந்து காலையில் நடந்த ஊர்வலச் சிறப்புப் பற்றிச் சொன்னார்கள் எந்த நடவடிக்கைக்கும் அஞ்சாமல் துணிந்து மாநாட்டிற்கு வந்த அன்பர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள். பின் மாநாட்டிற்குத் தலைமை தாங்க அங்கு வந்திருந்தவருள் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முற்பட்டார்கள். எவருடைய துணையுமின்றி, எவரையும் எதிர்பாராமல், தம் ஊரினின்று தனியராய்த் தாம் ஒருவரே வந்த அன்பர்களை மேடைக்கு அழைத்தார்கள். நான்கைந்து பேர் வந்தனர். அவருள் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து ‘தென்மொழி’ படித்துவரும் அன்பரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஒவ்வொரு வரையும் வினவினார்கள். அவர்கள் விடையிறுக்கையில் மதுரையினின்று வந்த திரு. இராச சேகரன் என்னும் கல்லூரி இறுதியாண்டு அறிவியல் மாணவர் தாம் ஒரே ஒரு தென்மொழியை அஃதாவது மாநாடு நடைபெறப் போகும் செய்தி வெளிவந்த தென்மொழி சுவடி 10 ஓலை 1- ஐத்தான் முதலில் படித்ததாகவும் அதையும், மதுரைச் சுப்பிரமணியபுரம் கிளை நூலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பார்த்ததாகவும், அத் தென்மொழியில் வந்த தமிழக விடுதலை மாநாட்டுச் செய்தியே தம்மை மிகவும் கவர்ந்ததாகவும்; தாம் தென்மொழி படிக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் நூலகம் மூடவிருந்ததாலும் தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு இரண்டொரு நாளில் நடக்கவிருந்ததை அறிந்ததாலும் அவ்விதழை நூலகத் தினின்று திருடிச்சென்று முழுவதையும் படித்து விட்டு மாநாட்டிற்கு ஓடிவந்திருப்பதாகவும் கூறினார். அவர்தம் அறிவுணர்ச்சித் திருட்டையும், அஞ்சாமை யையும், திறமையையும். தமிழுணர்வையும் பாராட்டி அவரைத் தலைவராக அமர்த்தினார்கள். திரு. இராசசேகரன் தாம் தலைவராக அமர்த்தப் பெற்றமைக்கு நன்றி தெரிவித்து மாநாட்டைத் தொடங்கினார். திருவாளன்மார் எழிற்கண்ணன், பெ.வெற்றிக் கூத்தன், இரா. பாவாணன், புலவர் சா. அடல் எழிலன், த. அரிமா வளங்கோ, ந. அரணமுறுவல், தரங்கை- பன்னிர்ச்செல்வன், புலவர். சரவணத் தமிழன் முதலியோர் உரையாற்றினர், இன்றைய நிலையில் தமிழ்க்குமுகாயம் அடைந்துள்ள சீர்கேடு, சீர்கேட்டுக்குக் கரணியம் அவற்றை நீக்குவது எப்படி என்பன பற்றி விளக்கமாகச் சொல்லி இறுதியில் தமிழகம் நாவலந்தீவினின்று விடுதலை பெற்றால் தான் தமிழ்க்குமுகாயம் சீர்கேடுகளினின்று விடுதலை பெறும் என்பதை வலியுறுத்திப் பேசினார்கள்.

கோவை மாவட்ட தி.க. தலைவர் வழக்குரைஞர் கசுத்தூரி அவர்கள் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை விளக்கியும் தமிழகம் விடுதலை பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் உரையாற்றினார்கள்.

'கைகாட்டி' ஆசிரியர் பேரா. தமிழ்க்குடிமகனார் பேசுகையில் மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க தெனறும் பிரிவினை கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கச் சட்டமும் அரசியல் சூழலும் உள்ள நேரத்தில் தமிழக விடுதலை கேட்டு மாநாடு நடத்தும் அமைப்பாளரின் திறம் பாராட்டிற்குரியதென்றும், மற்று பிரஞ்சுப் புரட்சியில் பயன் பெற்ற 'கில்லட்டின்' கருவி போன்று தமிழக விடுதலைக்கும் ஒன்று தேவையென்றும்; நாட்டிலே சொல்லித்திருத்துவதற்கு ஒரு கூட்டமும் உதைத்துத் திருத்துவதற்கு ஒரு கூட்டமும் தேவையென்றும்; மதுரையிலிருந்து வெளிவரும் 'தினமணி' இதழில் தியாகராயர் கல்லூரி மாணவர்கள் போராடியதாலேயே ஆட்பெயருக்கு முன் 'ஸ்ரீ' யை நீக்கி , 'திரு' வைப் பயன்படுத்துவதாகவும் தியாகராயர் கல்லூரி மாணவர் செய்தது போல் சென்னை மாணவர் செய்யாததால் சென்னையினின்று வெளிவரும் 'ஸ்ரீ தினமணியில்' என்று வட மொழி அடையையே தொடர்ந்து அதன் ஆசிரியர் பயன்படுத்துவதாகவும் பேசினார். மேலும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒரு தனி அரசியற் கட்சி தொடங்கினால் தேர்தலில் போட்டியிட்டுச் சட்ட மன்றம் வழியேயும் தமிழக விடுதலைக்குக் குரல் எழுப்பலாம் என்றும் அவ்வாறு கட்சி தொடங்கினால் தாம் துணை நிற்பதாகவும் சொன்னார்.

தமிழ் மறவர் புலவர். வை. பொன்னம்பலனார் பேசுகையில் இன்று தமிழகத்தில் தமிழர்களுக்காக எந்த நேரமும் எண்ணிக்கொண்டு செயலாற்றும் பொதுத் தொண்டர் ஒருவர் பெரியாரென்றும் மற்றவர் பெருஞ்சித்திரனாரென்றும், அவர் தம் மாணவராக இருந்தமைக்குத் தம் உள்ளம்மிகப் பூரிப் படைவதாகவும் சொன்னார். இம்மாநாட்டிற்குப் பெரியார் வந்திருந்தால் நன்றாயிருந்திக்குமென்றும், ஆனால் மாநாட்டில் முடிவெடுக்கும் தீர்மானத்தைப் பெரியாரிடம் காட்டி அவருடைய துணையைப் பெறத் தாம் முயற்சி செய்யப்போவதாகவும், பெருஞ்சித்திரனார் தமக்கென்று ஒரு வழியை ஏற்படுத்திக்கொண்டு புரட்சியுடன் செயலாற்றுவதாகவும் சொன்னார். சில் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் ஆரியப் பார்ப்பனர்களால் எவ்வாறு இழிவு படுத்தப் பெற்றனர் என்பதையும். எவ்வாறு பெரியாரின் தொண்டு மக்களின் இழிவைத் துடைக்கப் பயன் பெற்றது என்றும், தமிழர்கள் முழுமையாக மேம்படவேண்டுமென்றால் கோயில்களையும் கடவுள்களையும் அறவே ஒழித்தாக வேண்டும் என்றும் ‘பெருஞ்சித்திரனார்’ ஏனோ இறைவனிடம் சிக்கிக் கொண்டாரென்றும் பேசினார். மேலும் பேசுகையில் தனித்தமிழ் இயக்கம் எப்பொதெல்லாம் முளைவிட்டதென்றும், தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கை எப்பொதெல்லாம் கிளப்பப்பெற்ற தென்றும் பல நிகழ்ச்சிகளை விளக்கிக் காட்டிப் பெரியாரின் தொண்டுகளை எடுத்துக் கூறினார்.

அதன்பின் மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ் சித்திரனார் உணர்வெழுச்சி மிக்க ஓர் உரையாற்றிக் குமுகாய மாநாட்டுத் தீர்மானத்தைப் படித்து விளக்கினார். (சொற்பொழிவு மற்றொரு பக்கத்தில் வெளியிடப் பெற்றுள்ளது) மொழியும் இனமும் பிரிக்கப்பட முடியாதவை என்றும்; எனவே தமிழ்மொழி, குமுகாய விடுதலை மாநாடு என்று இணைத்துப் போட்டதாகவும் இவ்வுண்மையை உணராத திராவிடர் கழகத்தினர் இனத்திற்காக மட்டுமே பாடுபடமுயல்கின்றனர்; மொழியை அறவே விட்டு விடுகின்றனர்; மொழி நிலையில் ஏற்படும் தாழ்வால் இனம் எப்படித் தாழ்கிறது என்பதை அவர்கள் உணராமல் இருக்கின்றனர். என்றும்; தனித்தமிழ் இயக்கம் எப்படி எப்படிக் குமுகாய விடுதலைக்கு அடிப்படையாய் இருக்கிறதென்றும் விளக்கினார்கள். குமுகாய மாநாட்டுத் தீர்மானத்தை (வேறொருபக்கத்தில் வெளியிடப் பெற்றுள்ளது.) விளக்கும்முன்னர் மற்ற மாநாடுகளில் போலன்றித் தீர்மானத்தில் குறிக்கோளுடன் செயல் திட்டமும் கொடுக்கப் பெறும் சிறப்பைச் சொன்னார்கள். செயல் திட்ட முழு விளக்கத்தை அரசியல் மாநாட்டின் முடிவில் அறிவிப்பதாகச் சொன்னார்கள் மொழி குலமத விடுதலைக்குத் தடையாக இருக்கும் ஆரியப்பார் பனரைத் தீர்மானத்தில் குறிக்கப் பெற்ற வேண்டுகோள் காலத்திற்குள் திருந்தி விடுமாறு எச்சரிதும், அதே போல் இந்திய அரசை எவ்வத்துறையில் விடுதலை இயக்க மறவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூறித் தமிழகத்தை விடுதலை நாடாக அறிவிக்குமாறு கடுமையாக எச்சரித்ததும் வீறுரை ஆற்றினார்கள். எல்லாப் பேச்சுகளையும் நடுவணரசு ஒற்றர்கள் எழுதிக் கொண்டனர். மாநாட்டரங்கினுள்ளும், வெளியேயும் நின்றுக் கொண்டிருந்த காவலர்களும், பாவலரேற்றின் உணர்வழுத்த உரையால் கட்டப்பெற்றிருக்காமல் இருந்திரார் என்றே சொல்லல் வேண்டும். மாநாட்டு வாயிலில் கொட்டை எழுத்துகளில் ஒட்டப்பெற்றிருந்த விடுதலை முழக்கச் சுவரொட்டிகளைக் கண்டும், சொற்பொழிவைக் கேட்டும் மாநாட்டில் பார்வையாளர் வரிசையில் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. பாவலரேறு பேசி முடித்தபோது இரவு மணி 8-00. அப்போது இரவு உணவுக்காக அனைவரும் கலைந்து சென்றனர்.

பின் வெங்காளூர் திரு. அறவாழி எழுதி, இயக்கி, நடத்திய 'எந்நாளோ?’ என்னும்நாடகம் (தமிழக விடுதலைக்) கொள்கை நடிக்கப்பெற்றது. அந்நாடகத்தில் ஒன்றிரண்டு அயற் சொற்கள் கலந்து உரையாடல் எழுதப்பெற்றிருப்பினும் தமிழுணர்வும் , தமிழக விடுதலைக் கருத்துகளுமே மிகுதியும் புகுத்தப்பெற்றிருந்தன. நாடகத்தில் வீர உணர்வு இழையோடிற்று. அவ்வுணர்வுக்குத் தக்க அனைவரும் சிறப்பாக நடித்திருந்ததோடு அன்றி வெங்காளூம் அன்பர் இசைத்த 'கிதார்’ப் பின்னிசை இசை உணர்வுக்கு உணர்வு ஊட்டுவதாக சிறப்பாக அமைந்திருந்தது. நாடகத்தில் திருவாளன்மார் மணிவேங்கை விட்டுணு, பன்னீர்ச்செல்வன். இரா. மன்னன், பீர்முகம்மது, சிவநேசன், நடராசன், செல்வி. பிரேம்குமாரி ஆகியோர் நடித்தனர். மாநாட்டுக்கு வந்திருந்த அன்பர்களும் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களும் நாடகத்தைப் பாரட்டிப் பேசிக் கொண்டனர். இரவு 12 மணியளவில் நாடகமும் குமுகாய மாநாடும் முடிவுற்றன.

அரசியல் மாநாடு

ஞாயிற்றுக்கிழமை (11-6 -1972) காலை 9. 30 மணியளவில் அரசியல் மாநாடு தொடடங்ற்று. மாநாட்டின் முதல் கட்டமாக மாணவர் அரங்கமும் இரண்டாவதாக மகளிர் அரங்கமும் நிகழ்ந்தன. இவ்விரு அரங்குகளுக்கும் மாநாட்டு செயலாளர் புலவர் . இறைக்குருவனார் தலைமை தாங்கினார், செல்வி மா. தேன்மொழி தமிழ் வணக்கப் பாடல் பாடினார். மாணவர் அரங்கத்தில் திருவாளன்மார் வே. மு. பொதிய வெற்பன், கோ. திருநாவுக்கரசு, அரிமா மகிழ்கோ, ஆ. மதியழகன், ஆடலரசு, அன்பழகன், பாமகன், கரிகாலன், சிவந்த பெருமாள் ஆகியோர் பேசினர். இவர்கள் பேசுங்கால், மாணவர்கள் தமிழில் ஆழமான அறிவைப் பெற வேண்டும் என்றும்; அயல் நாடு செல்ல நேரின் அவ்வறிவால் தமிழின் மேன்மையைப் பரப்ப வேண்டும் என்றும் அவ்வத் துறையில் உள்ள மாணவர்கள் அவ்வத் துறையில் முதிர்ச்சியடைய வேண்டும் என்றும்; மாணவரிடையே தமிழக விடுதலை உணர்வு நன்றாகப் பரவி வருகிறதென்றும்; எனவே ஆட்சியாளர்கள் கேட்பதைக் கொடுக்க அணியமாக இருக்க வேண்டுமென்று எச்சரித்தும்; வடமொழிக்கும் இந்திக்கும் நடுவணரசினர் செலவிடுவதைக் கண்டித்தும் உரையாற்றினர்.

மகளிர் அரங்கில் திருவாட்டிமார் இறை. பொற்கொடி. உலகமுதல்வி, தாமரைபெருஞ்சித்திரன் ஆகியோர் பேசினர். அவர்கள் பேசுகையில் தமிழகத் தாய்மார் ஒவ்வொருவரும் தம் பிள்ளைகட்கு நல்லுணர்வு ஊட்டி வளர்ப்பதுடன் தம் பிள்ளைகளைத் தமிழக விடுதலைக்கு உழைக்க அணியமாக்கி நாட்டுக்குக் கொடுக்க முன்வரவேண்டுமென்றும்; அத்துடன் தாமும் எந்தெந்த நிலைகளில் பாடுபட முடியுமோ அந்தந்த நிலைகளில் பாடுபட்டுத் தாமும் தம் குடும்பமும் பெருமையுற வழிவகை செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டனர். நண்பகல் இடை நேரத்தில் பெகும்ப கல்லா திரு. நா. இளமாறன் தமிழியக்கப் பாடல்கள் சில பாடினார்.

இறுதியாக அரசியல் அரங்கம் தொடங்கியது. அதற்குத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு மாநாட்டு அமைப்பாளர் சார்பில் திரு. க. வெ. நெடுஞ்சேரலாதன் நான்காண்டுகள் தொடர்ந்து திரைப்படம் பார்க்காத அன்பர் யாரேனும் உளரா என்று கேட்டார் யாரும் வரவில்லை. சிலர் வந்து ஆறாண்டு ஏழாண்டுகள் பார்க்காமல் இருந்து அண்மையில் ஒரு படம் பார்த்ததாகக் கூறினர். இறுதியில் இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்து திரைப்படம் பார்க்காத திருவாரூர் அன்பர் திரு. வை. தமிழ்க்குமரன் தலைவராக அமர்த்தப் பெற்றார். திருவாளன்மார் இரா. மெய்யறிவன், கந்த. கண்ணன், தமிழநம்பி, மு. மகிழரசன், இரும்பொறை திருக்குறள் பெருமாள், இரா. அருட்குவை, க.வெ. நெடுஞ்சேரலாதன், மறை. நித்தலின்பனார் ஆகியோர் தத்தம் பாணியில் தமிழக விடுதலைபற்றி வலியுறுத்தித் தம் உணர்வு கனலும் உள்ளங்களை வெளிக்காட்டினர். திருவாட்டி கோன். பாப்பா அரசியலில் மகளிர் பங்குபற்றி உரையாற்றினார்.

கடைசியாக மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குமுகாய மாநாட்டில் பேசியது போல் உணர்வு கொளுத்தும் உரையாற்றித் தமிழக விடுதலைத் தீர்மானத்தையும் செயன்முறையையும் படித்துக்காட்டிச் செயல் திட்டத்தை விளக்கினார்கள்.

“நேற்றைய மாநாட்டு ஊர்வல, நிகழ்ச்சிகள் பற்றி எந்தத் தமிழ்த் தாளிலும் ('இந்தியன் எக்சுபிரசு' ஏட்டில் சுருக்கமாகச் செய்தி வந்திருந்தது) செய்தி வெளிவராதது பற்றி அன்பர்கள் குறைபட்டுக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன்; அவர்கள் தனித்தமிழ்நாடு கேட்ட ஆதித்தனாரின், 'தினத்தந்தி’யிலும் செய்தி வராதது பற்றிச் சொன்னார்கள்” என்று கூறி யாரும் எதற்கும் குறைப்படவோ, கவலைப்படவோ வேண்டியதில்லை என்றும் தினத்தந்தி ஒரு செய்தித்தாளே அன்று என்றும் கூறினார்கள். இதை விளக்கும் பொருட்டு 11.6.1972 ஞாயிறன்று வந்த தாளைக் கையில் எடுத்து முதல் பக்கத்திலிருந்து கடைசிவரை உள்ள செய்திகளைப் படித்துக் காட்டியும், திரைப்படச் செய்திகளையும் நடிக நடிகையர் படங்களையும், ஓரைப்பயன் (இராசிபலன்)களையும் விளம்பரங்களையும் சுட்டிக் காட்டியும்; அது மக்களுக்குப் பயன்பெறும் செய்தித்தாளே அன்றென்றும்; காசு சேர்க்கும் ஒரு வணிக நிறுவனம் என்றும் விளக்கினார்கள்.

'தினமணி'த் தாளிகையில் தேவையான செய்திகளை ஒருவாறு தொகுத்து எழுதினாலும் தன் (ஆரியப் பார்ப்பன) இனப்பற்றால் 'விஸ்தரிப்பு' 'ஜரூர்’ என்று வடசொற்கலந்து எழுதுவதையும், புராணப் புரட்டுகளைப் பரப்பியும், "காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சாரியார் மதுரையில் காலடி எடுத்துவைத்தார்; தெய்வீக மனம் கமழ்ந்தது" என்பது போன்று செய்தி எழுதியும் தன் இனத்தைக் காத்துத் தமிழினத்தைத் தாழ்த்தியே வைத்திருக்க நினைப்பதையும் கண்டித்தார்கள். இதேபோல் தமிழினத்தின் விடுதலைக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும 'விடுதலை’ நாளேட்டிலேயே "பகிஷ்கரிப்பு, இங்கிலீஷ் மீடியம்" என்பன போன்று மொழிக்கலப்பு செய்வதையும் சாடினார்கள். பெரியாரிடம் உள்ளவர்களே தமிழில் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டும்; தம் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளியில் பயிலச்செய்து கொண்டும்; “டாடி, மம்மி” என்று கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருப்பதாகச் சொல்லி அதை வன்மையாகக் கண்டித்தார்கள். தனித்தமிழில் ஒரு நல்ல செய்தித்தாள் நடத்திக் காட்டத் தாம் முன்பே திட்டமிட்டதாகவும் ஆனால் திட்டம் நிறைவேறாமற் போனதென்றும்; இருப்பினும் இன்னும் முயன்று கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

தமிழை மதிக்காத திராவிடர் கழகத்தினர் திருக்குறளைப் 'பெண்ணடிமை செய்கிறது: கண்முடி வழக்கங்களைக் கற்பிக்கிறது' என்று சொல்லி வருவதற்கு மறுத்தார்கள். அவர்களுடன் திருக்குறளில் பெண்ணடிமை சொல்லப் பெறவில்லை யென்றும்; திருக்குறளில் அறிவுக்குப் பொருத்தமானவையே சொல்லப் பெறுகிறதென்றும் தாம் தருக்கமிட அணியமென்றும் சூளுரைத்தார்கள்.

“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்”

என்னும் திருக்குறட் பொருளை அரைமணி நேரம் விளக்கியிருப்பார்கள். இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - மனத்தில் தேய்த்துத் தேய்த்து உரசி உரசி - சரியா தவறா என்று இழைத்து - அஃதாவது மொத்தமாக இல்லாமல் மெல்லியதாக ஆகும் வரை இழைத்து அதைச் சரி என்று மனத்திலே உணர்கின்ற - போய்ப் போய்த் தேடி அறிவைத் தேடுகின்ற அறிவினார்.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் பிழையாகத் தம் மனத்துள்ளே உணர்ந்தாலும் அந்தப் பிழையானவற்றை வெளியே வாய்திறந்து சொல்லமாட்டார்கள் - என்று பற்பல கூறி விளக்கித் திருக்குறள் அறிவுக்குப் பொருத்தமானவற்றை எந்த அறிஞனும் இருந்து சொல்லாத உயர்நிலையில் இருந்து அறிவைக் கூறுவதாகக் கூறினார்கள்.

பலர் இன்று பொதுவுடைமை பேசிக்கொண்டு தொழிலாளர்க்குத் தலைவராய் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள்; அவர்கள் வெறும் போலித்தலைவர்களே; தொழிலுக்குத் தலைவராக இருந்து தொழிலாளர்க்குத் தலைவராய் அமர வேண்டிய உண்மையன தலைவர் ஒருவரும் இலர் என்று போலித் தலைவர்களைக் கண்டித் தார்கள்.

தமிழக விடுதலைக்குப் பெரியாரையே இனியும் நம்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றும்; அவர் ஆற்ற வேண்டிய பணிகளை இதுநாள் வரை ஆற்றிவிட்டாரென்றும்; அவர் காட்டிய வழியில் நாம் மேலே ஒருபடி சென்று அவர் செய்யாதவற்றைச் செய்ய வேண்டும் என்றும்; கலைஞர் மாநிலத் தன்னாட்சிகோரினாலும் அவர் உள்மனத்தில் தமிழக விடுதலை உணர்வுதான் இருக்கிறதென்றும் கூறினார்கள்.

விடுதலையடைந்த பல நாடுகளின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டு பலர் பலவாறு சொல்லிக்கொண்டு நம் மக்கள் ஒத்துழைப்பார்களா என்று தயங்குகின்றார்கள்; மயங்குகின்றார்கள். பிரெஞ்சுப்புரட்சி ஏறத்தாழ 400 பேர்களால் தான் முன்னின்று நடத்தப் பெற்றது. மக்கள் தக்க நேரத்தில் அவர்களாகவேவந்து சேர்ந்து கொண்டார்கள். எனவே மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களை எந்தநேரத்திலும் இழுத்துக் கொள்ளலாம். வங்காளத்தில் நடந்த விடுதலைப் புரட்சியில் இலக்கக் கணக்கில் மடிந்துள்ளார்களே என்கிறார்கள் அங்கு மடிந்தால் இங்கும் மடிய வேண்டுமா என்ன? அப்படியே செத்தாலும்தான் என்ன கெட்டுப் போகிறது. இப்போதுள்ள நிலை வாழ்ந்து கொண்டா இருக்கிறது? இந்திரா அம்மையாருக்கு அவ்வளவு துணிச்சல் வராது. வரலாறு புரட்சியைப் படைக்காது, புரட்சிதான் வரலாற்றைப் படைக்கும் ஒவ்வொரு நாட்டு விடுதலைப் புரட்சியும் ஒவ்வாரு வரலாற்றைப் படைக்கும், நம் நாட்டில் ஐந்தே ஐந்து பேர் செத்தால் போதும் நமக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று விடுதலை கேட்டு எழத் தயங்கும் தமிழர்களைத் தூக்கி நிறுத்துமாறு பேசினார்கள். மேலும் பேசுகையில் காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் இப்போது தம்தம் கடமைகளைச் செய்யலாம். ஆனால் ஒருகாலம் வரும். அப்போது நீங்கள் உடனே மாறிக் கொண்டு எங்களுடன் சேர்த்து ஒத்துழைக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்கள்.

தம் கை பாட்டு மட்டும் எழுதாது; கருவியும் செய்யும் - அஃதாவது கருவி ஏந்தும் என்று சொல்லவில்லை; கருவி செய்யும் என்று கூறித் தாம் எல்லாவற்றிற்கும் அணியமாக இருப்பதாகவும் அவ்வாறே பலர் அணியமாக இருப்பதாகவும் கூறி நடுவணரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.

பின் பாவலரேறு அவர்கள் தமிழக விடுதலைத் தீர்மானக் குறிக்கோளையும், செயற்பாட்டையும் (பிறிதொரு பக்கத்தில் உள்ளன) படித்துக்காட்டிக் குமுகாய மாநாட்டுத் தீர்மானத்தையும் நிறைவேற்றுவதற்கான பொதுச்செயல் திட்ட அமைப்பை விளக்கினார்கள். அதை விளக்கும் முன் தமிழக விடுதலை இயக்கம் சூன் 1, 1972 முதல் இயங்கத் தொடங்கிவிட்டதென்று அறிவித்தார்கள். செயல் திட்ட அமைப்பில் 'வேந்தம்' தலைமையானதென்றும் அதில் பொதுச் செயலர் உள்ளிட்ட ஐவர் இருப்பர் என்றும், பொதுச் செயலரை மாற்றும் உரிமை வேந்த உறுப்பினர்க்கு உண்டென்றும், தலைவர் இல்லை என்றும் கூறினார்கள். தலைமைப் பொறுப்பின் சுமையை விளக்க முற்பட்டுத் தாம் கலைஞர் மு. கருணாநிதியைச் சிலகால் கண்டித்துப் பேசினாலும், பல எதிர்ப்புகளுக்கிடையில் அவருடைய தலைமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கும் திறம் கண்டு எல்லாம் அவர்க்குத் தகும் என்று கருதுவது உண்டென்றும் கூறினார்கள்.

வேந்த அமைப்புக்குக் கீழ் கொற்றம், வாரியம், ஆயம் என்னும் மூன்று கீழ்ப் படிநிலை அமைப்புகள் இருக்குமென்றும் ஆயத்தில் உறுப்பினராக எவரும் இராரென்றும். பத்துப் பேர் ஆர்வலராகச் சேர்க்கப் பெறுவர் என்றும், ஆர்வலர்க்குக் கட்டணம் இராதென்றும், ஓர் ஆர்வலர் ஆபயத்தில் சேரப் பதின்மர் பரிந்துரைக்க வேண்டுமென்றும், பதின்மர் கொண்ட இவ்வாய அமைப்பு 9 க்கு மேற்படின் இரு வாரியங்களாகப் பிரியும் என்றும் இதே போல் கொற்ற அமைப்பும் அமைக்கப்பெறும் என்றும், இக்கொற்ற, வாரிய, ஆய அமைப்புகள் வேந்தத்தின் கட்டளைப்படி நடக்குமென்றும் கூறினார்கள்.

இந்நான்கு அமைப்புகளும் வேண்டுகோள் காலமான மே 1975 வரை தொடர்புடைய அனைவர்க்கும் மாதந்தோறும் நேரிலும், மடல்வழியும் (மொழி , இனவிடுதலை ஆவதற்குத் தாம் சொல்வது போல் செய்யுமாறும், தமிழக விடுதலை தருமாறும்) கோரிக்கைகள் விடுத்தவண்ணமிருக்கும். பயனளிக்காவிடத்துப் போராட்டக் காலமான மே 1978 வரைப் பல்வகையான போராட்டங்களை அமைதியாக நடத்தும் அஃதும் பயனளிக்காவிடத்து சூன் 1978 முதல் எல்லா அமைப்புகளும் வன்முறையில் ஈடுபடும். கோரிக்கைக்கிணங்காத பொது அமைப்புகளும் நடுவணரசு நில , நீர், வான் அலுவலகங்களும் தீவைத்துக் கொளுத்தவும் தக்கன கொண்டு தகர்க்கவும் பெறும் என்பதைப் பாவலரேறு அவர்கள் மிகவும் அழுத்தந்திருத்தமாக முழு உணர்வோடு வெளியில் நிற்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் கேட்குமாறு சொன்னார்கள். ஒலிபெருக்கியில் இறுதியாக விடுதலை முழக்கங்களை மறவர்கள் எழுப்ப மாநாடு இனிதே முடிவுற்றது. எனினும் மறுநாள் பாவலரேறு அவர்கள் திருச்சியினின்று வெளியேறும் வரையிலும் நடுவணரசு ஒற்றர்களின் தொடரும் பணி முடிவுறவில்லை.

தீர்மானங்கள்

திருச்சிராப்பள்ளித் தேவர் மன்றத்தில் 10.6.72, 11.6.72 ஆம் நாட்களில் கூடிய தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டில் நிறைவேற்றுப் பெற்ற தீர்மானங்கள்;

தீர்மானம் -1

(10-5-72 அன்று பிற்பகல் நடைபெற்ற குமுகாய மாநாட்டின் (Social conference) இறுதியில் நிறைவேற்றப் பெற்றது.)

குறிக்கோள் : தமிழ்மொழி, குமுகாய விடுதலை.

இக் குறிக்கோளின் அடிப்படையில் தமிழகத்தின் அரசுச்சார்பில் உள்ள ஆட்சி, அலுவல், கல்வி, தொழில் எனும் நான்கு துறைகளிலும்; தனியார் சார்பிலுள்ள பொது வாழ்வியல், வாணிகம், செய்தித்தாள், வானொலி, பிற பொழுது போக்குகள் எனும் ஐந்து துறைகளிலும் தூய தமிழ் மொழியையும் உலகத் தொடர்புக்கு ஆங்கில மொழியையுமே கையாள வேண்டும் என்றும், அவ்வகையில் அவ்வத் துறையினர் இதுவரை கையாண்டு வரும் பிறமொழிக் கலவை நிலையைக் கைவிட வேண்டுமென்றும்.

மேற்காட்டிய இரு சார்பின் ஒன்பான் துறைகளிலும் ஏதாவதொரு சமயமோ, குலமோ, (சாதியோ) பெயரளவிலும் செயலளலும் கையாளப் பெறுதல் கூடாதென்றும், அவ்வகையில் அவ்வத்துறையிலும் இதுவரை கையாளப்பெற்று வரும் சமய குலப் பெயர்கள், அவை தழுவிய நடை முறைகள் ஆகியவற்றை அறவே கைவிட வேண்டுமென்றும் இம்மாநாடு தொடர்புடைய எல்லாரையும்கேட்டுக்கொள்கின்றது.

செயற்பாடு:

இக்குறிக்கோளின்படி இம் மாநாட்டில் அமைக்கப் பெற்ற தமிழக விடுதலை இயக்கம் இன்றிலிருந்து 1975 மே மாதம் வரை உள்ள காலத்தை வேண்டகோள் காலம் (Period of entreaty or period of Suppalication) ஆகக் கொண்டு, இவ்வியக்கம் வகுக்கும் திட்ட முறைப்படி செயலாற்று மென்றும் அச்செயல் முறைகளால் பயன்காணாவிடத்து, 1975 சூன் முதல் 1978 மேவரை உள்ள காலத்தைப் போராட்டக் காலம் (Period of Agitation ஆக அறிவித்து இயக்க முறைகளுக்குக் கேற்ப போராடுமென்றும் அப்போராட்டத்தாலும் பயன்கானா விடத்து, 1978 சூன் முதல் தொடங்கும் காலத்தைப் புரட்சிக் காலம் (period of Revaolution ஆக அறிவித்து இக்கொள்கை வெற்றி பெறும் வரை பலவகையாலும் நேரடிச் செயல்களிலும் வன்முறையிலும் ஈடுபடுமென்றும் உறுதிச் செய்வதுடன் தொடர்புடையவர்களையும் எச்சரிக்கின்றது.

தீர்மானம் -2

(11-6-72 அன்று நடைபெற்ற அரசியல் மாநாட்டின் (poiltical conference) இறுதியில் நிறைவேற்றப் பெற்றது.)

குறிக்கோள் : தமிழக விடுதலை.

இக்குறிக்கோளின் அடிப்படையில் இப்பொழுது உள்ள தமிழ் நாட்டையும், புதுவை, காரைக்கால் ஆகிய தமிழ் நிலப் பகுதிகளையும் தன்னுள் அடக்கி முழு ஆட்சி செய்து வரும் நடுவணரசு தன் ஆளுமை, சட்ட , அதிகாரத் தொடர்பினின்று விடுவித்து, நிலக்காவல் இணைப்பு வாணிகத் தொடர்பு ஆகியவற்றில் ஓர் அரசியல் ஒப்பந்தம் (poli tcal cointract) செய்து கொண்ட தன்னுரிமை பெற்ற தனி நாடாகத் தமிழகத்தை ஏற்றுக்கொண்டு அறிவிக்குமாறு இந்திய அரசை இம்மாநாடுடு கேட்டுக்கொள்கின்றது.

செயற்பாடு :

இதன்படி, இம்மாநாட்டில் அமைக்கப் பெற்ற தமிழக விடுதலை இயக்கம் இன்றிலிருந்து 1975 மே மாதம் வரை உள்ள காலத்தை வேண்டுகோள் காலம் (Period of entreatl

or period of supplication) ஆகக் கொண்டு இவ்வியக்கம் வகுக்கும் திட்ட முறைப்படி செயலாற்றுமென்றும், அச்செயல் முறைகளால் பயன் காணாவிடத்து, 1975 சூன் மாதம் 1978 மே வரை உள்ள காலத்தைப் போராட்டக் காலம் (period of Agitation) ஆக அறிவித்து இயக்க முறைகளுக் கேற்பப் பேராடுமென்றும், அப்போராட்டத்தாலும் பயன்காணா விடத்து 1978 சூன் முதல் தொடங்கும் காலத்தைப் புரட்சிக்காலம் (period of Revolution) ஆக அறிவித்து இக்கொள்கை வெற்றி பெறும் வரை பலவகையாலும் நேரடிச் செயல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடுமென்றும் உறுதி செய்வதுடன் இந்திய அரசையும் எச்சரிக்கின்றது.

செயல்திட்டம்:

திருச்சிராப்பள்ளித் தேவர் மன்றத்தில் 10-6-72, 11-6-72 ஆம் நாட்களில் கூடிய தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டில் நிறைவேற்றப் பெற்ற இரண்டு தீர்மானங்களின் அடிப்படையில் வகுக்கப் பெற்ற செயல் திட்டம்.

1. ஆளுமை

1. செயற்குழு, ஆர்வலர், வகுமுறைகள் தொடர்பானவை:

1. தமிழகப் பிரிவினைக் கொள்கையை வலியுறுத்துவதற்கும் செயற்படுத்துவதற்கும் தமிழக விடுதலை இயக்கம் எனுமோர் இயக்கத்தை அமைப்பது.

2. அத்தமிழக விடுதலை இயக்கம் ஒரு கட்சியைப் போன்றதன்று, அதற்கு உறுப்பினர்கள் இல்லை. ஆர்வலர்கள் தாம் உண்டு. தலைவர் இல்லை. பொதுச்செயலர் ஒருவரும், அவரடங்கிய ஐவர் குழுவும் இயக்கச் செயற்பாடுகளை வகுத்துச் செயலமைப்புகளைக் கவனிப்பர். இக்குழுவுக்கு வேந்தம் என்று பெயர். இவ்வைவர் குழு உறுப்பினர்களும் ஆர்வலர்களே இவ்வைவரில் பொதுச்செயலர் உள்ளிட்ட ஒருவர் தாமே விலகினால் அன்றி, அனைவரும் வாணாள் உழைப்பாளர்களே! நீக்கப்பெற்ற அல்லது நீங்கிய ஒரு மாதத்திற்குள் வேறு ஒருவரை அமர்த்திக்கொள்ளலாம்.

3. இதுபற்றிய அமைப்பு முறைகளைக் குழு அமைக்கப்பெற்ற மூன்று மாதங்களுக்குள், தமக்குத்தாமே வகுத்துக்கொண்டு அவ்வகு முறைகளுக்கேற்பத் தம்மையும் இயக்கத்தையும் செயற்படுத்த வேண்டும்.

4. பொதுச் செயலரை வேந்தத்தின் பிற நால்வரும் அப்போதுள்ள ஆர்வலரில் நான்கில் மூன்று பங்கினரும் குழுவினின்று நீக்கலாம்.

5. எப்பொழுதும் ஆர்வலரில் பத்தில் ஒன்பதின்மர் கூடிப் பொதுக்குழுவின் முன்னிலையில் வேந்தத்தின் மேல் குற்றஞ்சாட்ட அதைக் கலைக்கலாம் புது வேந்தத்தையும் தெரிந்தெடுக்கலாம் எப்படியும் வேந்தம் கலைக்கப்பெற்ற இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் மறு வேந்தம் தெரிந்தெடுக்கப் பெறல் வேண்டும்

6. இயக்கத்தில் உள்ள ஆர்வலரைச் செயற்குழு நாலில் மூவர் வலிவுடன் எப்பொழுதும் விலக்கலாம்.

7. இயக்கத்தில் ஆர்வலராகச் சேர ஏற்கெனவே உள்ள ஆர்வலரில் பதின்மர் ஒப்புதலளிக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப் பெறும் ஆர்வலரின் குற்றங்குறைகட்கு அப்பதின்மரும் இறுதிவரை பொறுப்பாவர்

8. தொடக்கத்தில் வேந்தம் தேர்ந்தெடுக்கும் ஆர்வலர் ஒவ்வோர் ஊருக்கும் பதின்மரே.

9. அவர்க்குப்பின் தேர்தெடுக்கப் பெறும் ஆர்வலர் ஒவ்வொருவர்க்கும் முன்னுள்ள ஆர்வலர் பதின்மர் ஒப்புதலளிக்க வேண்டும்.

10. தேறப்பெறும் ஒவ்வோர் ஆர்வலரையும் ஒப்பிய பதின்மர் ஒரே ஊரினராக இருத்தல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

11. இவ் வகுமுறைகளை மேலும் விரிவுபடுத்தவோ, இவை தொடர்பான வகுமுறைகளைப் புதிதாக அமைக்கவோ முதல் மூன்று மாதத்திற்குள் கூடும் முதல் வேந்தத்திற்கு முழுவதிகாரம் உண்டு.

12. அடுத்தடுத்துத் திருத்தப்பெறும் அல்லது நீக்கப்பெறும் வகுமுறைகளுக்கு வேந்தத்தின் முழு ஒப்புதலும் அப்போதுள்ள ஆர்வலரில் நான்கில் முப்பங்கினரின் ஒப்புதலும் வேண்டும்.

13. வேந்தத்தின் கட்டளைகளை ஓர் ஆட்சிக்குழு செயற்படுத்தும். ஆட்சிக் குழுவில் அமைச்சர் ஒருவரும், பொருளர் ஒருவரும், எழுத்தர் ஒருவரோ அவர்க்கு மிகுதியானவரோ இருப்பர். இம்முத்துறையினர்க்கு ஊதியம் உண்டு. அவர்களும் இயக்க ஆர்வலரினின்று பொறுக்கப் பெற்றவர்களே. அவர்கள் வேந்தத்தால் அமர்த்தப் பெறுபவர்கள்.

14. பொதுச் செயலாளர், தாமோ, அவரில் நால்வரில் மூவரோ விரும்பும் நாளிலும் நேரத்திலும் ஐவர் குழுவைக் கூட்டலாம்.

15. ஆர்வலரின் இருபதிற் பதினைவர் விரும்பின், பொதுச் செயலாளர், அவர் விரும்பந் தெரிவித்த ஏழுநாட்களுக்குள் பொதுக் குழுவைக் கூட்டியாகல் ப்வண்டும்.

16. இயக்கத்தின் எல்லாவகைச் சிக்கல்கட்கும் இறுதித் தீர்ப்பாளார் பொதுச் செயலாளரே,

2. மாவட்டத் துணைக்குழு, வட்டக் கிளைக்குழு, ஊர்க்
குழு - தொடர்பானவை :

1. பதின்மூன்று ஆர்வலர் சேரும் ஒவ்வொர் ஊரிலும் ஊர்க்குழு அமைக்கப்பெறும். ஊர்க்குழு ஆயம் எனப்பெயர் பெறும்.

2. ஆயக்குழுவினர் மூவர்: ஆயத்தலைவர் ஆயச்செயலர், ஆயப்பொருளர்.

3. எப்பொழுதும் ஆயத்தாரைத் தவிர்த்த பதின்மர் ஆயத்து ஆர்வலராக இருத்தல் வேண்டும். பதின்மாருக்குக் கீழுள்ள ஆர்வலருடன் உள்ள ஆயம் மூன்று மாதத்திற்குள், தன்னை நிறைவு செய்து கொள்ளவில்லையானால், ஆயம் தானே கலைந்ததாகக் கொள்ளப் பெற்று, அதிலுள்ள ஆர்வலர்கள், அண்மையிலுள்ள ஆயத்துடன் இணைக்கப் பெறுவர்.

4. ஒரு வட்டத்திலுள்ள ஒவ்வோர் ஐந்துக்கு மேலும் ஒன்பதுக்குக் கீழும் உள்ள ஆயங்கட்கும் ஒவ்வொரு வட்டக் கிளைக்குழு அமைக்கப்பெறும். வட்டக் கிளைக்குழு வாரியம் எனப் பெறும்.

5. வாரியத்தார் மூவர்: வாரியத் தலைவர், வாரியச்செயலர், வாரியப் பொருளர்.

6. பத்து ஆயங்கள் தோன்றின் அவை இரண்டு வாரியங்களாகப் பிரிக்கப்பெறும்.

7. ஆயங்கட்கு வாரியமே நேரடி அதிகாரக்குழு.

8. ஒரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மூன்றுக்கு மேலும் ஐந்துக்குக் கீழும் உள்ள வாரியங்களை ஆள, ஒவ்வொரு மாவட்டத்தும் துணைக்குழு ஒன்று அமைக்கப் பெறும் மாவட்டத் துணைக்குழு கொற்றம் எனப் பெயர் பெறும்.

9. ஆறு வாரியங்கள் உருவாகின் இரண்டு கொற்றங்கள் அமைக்கப்பெறும். அக்கால் அவற்றின் திசைகளுக் கேற்ப கீழைக் கொற்றம், மேலைக் கொற்றம் குணக்கொற்றம் குடக்கொற்றம் எனப்பெயர் பெறும்.

10. கொற்றக் குழுவினர். கொற்றத் தலைவர், கொற்றச் செயலர் கொற்றத் துணைச் செயலர், கொற்றப் பொருளர்-என நால்வர்

11. வாரியங்கட்குக் கொற்றமே நேரடி அதிகாரக் குழு

12. எல்லாக் கொற்றங்கட்கும் வேந்தமே நேரடி அதிகாரக்குழு. வேந்த இயக்கம் கொற்றம், வாரியம், ஆயம் எனப் படிப்படிக் கீழும், ஆய இயக்கம், வாரியம் கொற்றம் வேந்தம் எனப்படிப்படி மேலும் அமையும் . வேந்தம் விரும்பின் படிதாண்டி இறங்கும். ஆயம்படி தாண்டி ஏறாது.

2. செயன்மை

1. வேண்டுகோள் காலம் :-(Period of entreaty or Period of supplication}

க) மொழி :

அ) தமிழ் நிலத்துள்ள, தனிமர், வீடு, தெரு, ஊர், நகர், மலை, குன்று, ஆறு, ஏரி கால்வாய், ஓடை, குளம், குண்டு, குழி, துறை முதலிய அனைத்துப் பெயர்களும், கருவியால் எனைப் பொருளும், மொழியால் தமிழ்ப்பெயரும் தாங்குமாறு ஒவ்வோர் ஆயமும், வாரியமும் கொற்றமும் வேந்தமும் அவற்றின் ஆர்வலரும், தனித்தோ இணைந்தோ சொல்லாலோ எழுத்தாலோ ஒவ்வொரு மாதத் தொடக்கத்தும் வேண்டுகோள் காலம் முடிவுறும் வரை தொடர்புடையார்க்கு வேண்டுகோள் விடுத்த வண்ணமே இருப்பர்.

ஆ) தமிழ் நிலத்திலுள்ள, தனித்துறை, அரசுத்துறை, வெளியீடுகள் நூல்கள், தாள்கள், ஒலிபரப்புகள், வழிபாடுகள், விளையாட்டுகள், உணவுப்பண்டங்கள், இறக்குமதி ஏற்றுமதிப் பொருள்கள், படைத்துறைக்கருவிகள் முதலியவற்றிலும், ஆட்சி, அலுவல், கல்வி, தொழில் ஆகியவற்றிலும் தூய தமிழையே பேணுமாறு ஒவ்வோர் ஆயமும், வாரியமும் கொற்றமும், வேந்தமும் அவற்றின் ஆர்வலரும், தனித்தோ இணைந்தோ சொல்லாலோ எழுத்தாலோ ஒவ்வொரு மாதத் தொடக்கத்தும் வேண்டுகோள் காலம் முடிவுறும் வரை தொடர்புடையார்க்கு வேண்டுகோள் விடுத்த வண்ணமே இருப்பர்.

இ) முன்னிரு நிலையினும் வேண்டுகோட் பயன் பாராட்டப் பெறும் பயனின்மை அடுத்தபோராட்டக் காலத்திலும் செயன்மையைத் தொடரச் செய்யும்.

கா) குமுகாயம்:-

அ) தமிழ் நிலத்துள்ள அல்லது அந்நிலத் தொடர்புள்ள இனங்கள் தாய்மொழி வழி தமிழர், திரவிடர், ஆரியர், ஆங்கிலர், வங்காளியர், குசராத்தியர் முதலியவாறே அழைக்கப் பெறுவர், மாறாகச் சமய வழி இந்து, கிறித்துவர், இசுலாமியர், பெளத்தர் சமணர் எனச் சமயநிலைப் பெயர்வழியோ பள்ளர், பறையர், பாணர், குறவர், மறவர், அகம்படியர், கைக்கோளர், கவுண்டர், வேளாளர் முதலியபடி தொழில்வழிக் குலப்பெயராலோ கொடிவழிக் குலப் பெயராலே தம்மை அழைத்துக்கொள்ளவோ, குறித்துக்கொள்ளவோ அல்லது குறிக்கப்பெறவோ கூடார்.

விளக்கம்:

இவ்வகையில் குலப்பாகுபாடு, இன, நிற, தொழில் வேற்றுமைப்பட்டதோர் அமைப்பாகலானும், சமயப்பாகுபாடு கட்சி வேற்றுமைப் போல்வதொரு பாகுபாடாகலானும் விலக்கற்பாலன. புதிதாகப் பிறந்த ஒருவர்க்கு அவர் விரும்பாமலேயே சமயமும் குலமும் அவர் மேல் புகட்டப் பெறுவது கொடுங் குமுகாயக் குற்றமாகும். பொதுவறத்திற்கும் இந்நிலை மாறுபட்டது. தொழிலான் உழுவோன் மகன் உழத்தான் வேண்டுமென்பதும், கட்சியான் பொதுவுடைமையோன் மகன் பொதுவுடைமைக் கட்சியிலேயே உறுப்பினன் என்பதும், எவ்வளவு பிழையோ, குற்றமோ, அவ்வளவு பிழையும் குற்றமுமாம் சமயத்தான் ஓர் இந்துவின் மகன் இந்து என்பதும், குலத்தான் ஒரு பாண மகன் பாணனே என்பதும்.

எனவே, மொழிவழிப் பெயர் சுட்டா அனைத்துப் பிரிவுகளும் தம்தம் மரபுகளையும் பழக்கங்களையும் அறவே விட்டுவிடுதல் வேண்டுமென ஒவ்வோர் ஆயமும், வாரியமும், கொற்றமும், வேந்தமும், அவற்றின் ஆர்வலரும் தனித்தோ இணைந்தோ, சொல்லாலோ செயலாலோ ஒவ்வொரு மாதத் தொடக்கத்தும் வேண்டுகோள் காலம் முற்றுப்பெறும் வரை தொடர்புடைய தனியார்க்கும் குழுவுக்கும் வேண்டுகோள் விடுத்தவண்ணமே இருப்பர்.

ஆ) இந்நிலையில் வேண்டுகோட் பயன் பாராட்டப்பெறும். பயனின்மை அடுத்த போராட்டக் காலத்தினும் செயன்மையைத் தொடரச் செய்யும். -

கி) அரசியல்:

அ) இயக்கத் தொடக்கக் காலத்து நடைமுறையுள்ள தமிழ்நிலத்துள் அடங்கிய நாட்டையும், புதுவை, காரைக்கால் பகுதிகளையும் தன்னுள் அடக்கி முழுவாட்சி செய்துவரும் நடுவணரசு தன் ஆளுமை, சட்ட அதிகாரத் தொடர்பினின்று விடுவித்து, நிலக்காவல் இணைப்பு, வாணிகத் தொடர்பு ஆகியவற்றில் ஓர் அரசியல் ஒப்பந்தம் (Political Contract) செய்து கொண்ட தன்னுரிமை பெற்ற தனி நாடாகத் தமிழகத்தை ஏற்றுக்கொண்டு அறிவிக்குமாறு ஒவ்வோர் ஆயமும் வாரியமும், கொற்றமும் வேந்தமும் அவற்றின் ஆர்வலரும் தனித்தோ இணைந்தோ சொல்லாலோ செயலாலோ ஒவ்வொரு மாதத் தொடக்கத்தும் வேண்டுகோள் காலம் முற்றுப்பெறும் வரை தொடர்புடைய அரசின் உட்கரும, புறக்கரும ஆட்சியாளரும் அனைவர்க்கும் வேண்டுகோள்விடுத்தவண்ணமே இருப்பர் . இவ்வேண்டுகோள் விளக்கம் அவ்வக்கால் அறிக்கை வழியும், கூட்ட வழியும் மக்கட்கும் எடுத்து விளக்கப் பெறும்.

ஆ) இந்நிலையில் வேண்டுகோட்பயன் பாராட்டப் பெறும் பயனின்மை அடுத்தப் போராட்டக் காலத்திலும் செயன்மையைத் தொடரச் செய்யும்.

II. போராட்டக்காலம் (Period of Agitation):-

க. மொழி:-

அ) வேண்டுகோள் காலத்து நடைமுறைகள் ஐவரைவராக இணைந்த குழுக்குழுவாக வேண்டப் பெற்றார். முன் நின்று நேரடியாய் மறித்தும் சூழ்ந்தும் எச்சரித்தும் விட்டுவிட்டோ தொடர்ந்தோ போராடிப் பயன் கிடைக்குமாறு செய்யப்பெறும்.

ஆ) போராட்டப் பயன் பாராட்டப் பெறும் பயனின்மை அடுத்த புரட்சிக் காலத்திலும் செயன்மையைத் தொடரச் செய்யும்.

கா. குமுகாயம்:-

அ) இதற்கும் மொழிநிலைப் போராட்ட முறையே பின்பற்றப் பெறும்.

ஆ) இத்துறையினும் போராட்டப் பயன் பாராட்டப்பெறும். பயனின்மை அடுத்த புரட்சிக்காலத்தினும் செயன்மையைத் தொடரச் செய்யும்.

கி. அரசியல்:

அ) கொள்கை முழக்குடன் இயக்கத்தின் அவ்வப்பொழுதைய வகுபாட்டுக் கிணங்கவும் ஐவர் ஐவராகவோ கூட்டங் கூட்டமாகவோ நடுவணரசு ஆட்சி அலுவலகங்கள் முன் நேரடியாகப் பணி செய்ய வருவாரை மறித்தும், சூழ்ந்தும், எச்சரித்தும் விட்டுவிட்டோ தொடர்ந்தோ, போராடியோர் சிறைப்பட்ட வழியும், சிதைக்கப்பட்ட வழியும் அடுத்தடுத்தோ போராட்டம் நிகழ்த்தப் பெறும். நடுவணரசுத் தொடர்புடைய நிலத்துறை, வான்துறை, ஆகிய இயக்கங்கள் போக்கு வரத்துகள் தடை செய்யப் பெறுவதும் போராட்டத்தின் ஒரு பகுதி.

ஆ) போராட்டப் பயன் பாராட்ட பெறும்ப் பயனின்மை அடுத்த புரட்சிக் காலத்தினும் செயன்மையைத் தொடரச் செய்யும்

ஈ) இப்போராட்டக் காலத்து வேந்தம் தன் அகவியக்கத்தை நிறுத்திப் புறவியக்கத்துப் பெரிதும் செயல்படும்.

III. புரட்சிக்காலம் (Period of Revolution)

அ) மொழியுட் குமுகாயமும், குமுகாயத்துள் அரசியலும் அடக்கப் பெற்று முத்துறைப் புரட்சியும் ஒரு துறைப் புரட்சியாக வெடிக்கும்.

ஆ) சமய. குல நிறுவனங்கள் தகர்க்கப்பெறும், நடுவணரசு அலுவலகங்கள், வாணிக நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் பட்டாளப் பாசறைகள் முதலியன தீ வைத்துக் கொளுத்தப் பெறும் மொத்தத்தில் வன்முறை நிலையில் முன்னண்மையில் வங்காளத்து நடந்தவாறும் இக்கால் வியட்நாமில் நடக்கின்றவாறும் போர் முறைகள் பின்பற்றப் பெறும்.

இ) மொத்தத்தில் ஒரு புதுக் குமுகாயமும், ஒரு புது நாடும் தோற்றுவிக்கப்பெறும்.

3. கொளுவுரை:-

அ) இவ்வுலகத்து முந்தித் தோன்றியதும், உலகெலாம் பரவியதும், பண்பாட்டிற் சிறந்ததும் ஒண்மையும் திண்மையும் சான்றதும், முதன்மொழி தோற்றியதும், இன்றும் அழியாது நின்றிலங்குவ துமாகிய தமிழினப் பெருங் குமுகாயத்தின் கடந்த மூவாயிரமாண்டுக் கால அடிமை வரலாற்றுக்கு ஒரு முடிவுக் காலமும் தமிழ்ப் பேரினத்திற்கொரு விடிவுக் காலமும் தொடங்கி விட்டது. வரலாற்றில் இனப்புரட்சி என்றும் தோற்றதில்லை.

இதனை நன்றாக உள்ளத்தில் ஏற்றிக்கொண்டு கனன்று வரும் பெரும் புரட்சித் தீயினுக்குக் காற்றாயிராமல் உளத்தால் நீர்மையாகவும் அறிவால் முன்மையராகவும் நடந்து கொள்ள வேண்டி மொழி, குமுகாய அரசியல் தொடர்புடை அனைவரும் வேண்டிக் கொள்ளப்பெறுகின்றனர்.

- தென்மொழி, சுவடி :10, ஓலை :1-5, 1972