வேண்டும் விடுதலை/தமிழ்நிலத்தை விடுவிப்போம்!

விக்கிமூலம் இலிருந்து


 
தமிழ்நிலத்தை விடுவிப்போம்!
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு!
(தமிழக விடுதலை மாநாடு)

பேரன்புடையீர்!

வணக்கம், ஆண்டுகொண்டிருந்த நிலைமாறி மாற்றானின் அடிமைச் சகதியில் சிக்கிக் கடந்த மூவாயிரமாண்டுகளாகப் பல்லாற்றானும் அல்லலுறும் தமிழ்ப் பேரினத்தை விடுவிக்கும் முயற்சியின் இறுதிக் கட்டமாக வருகிற 10,11-6-1972 (விடைத் திங்கள் 28,29) காரி, ஞாயிறு இருநாட்களிலும் முறையே தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டுக் குமுகாய, அரசியல் மாநாடுகள் திருச்சிராப்பள்ளி தேவர் மன்றத்தில் நடைபெற விருக்கின்றன.

தமிழ், தமிழக, தமிழின விடுதலைப் புரட்சிக்கு வித்திடும் தீர்மானங்களை நிறைவேற்றவும், தொடர்ந்து வினையாற்றவும் தமிழின் எழுச்சியில் நாட்டங் கொண்ட முன்னணித் தலைவர்களும் புலவர் பெருமக்களும், இளந்தலை முறையினரும், ஒருமித்து முனைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாநாட்டில் தாங்களும் வந்து கலந்து கொண்டு ஊக்குவிக்க வேண்டுகின்றோம்.

முதல் நாள் இரவில் வெங்காளுர்த் தன்னுரிமை நாடக மன்றத்தாரின் 'எந்நானோ?' என்னும் கொள்கை முழக்க நாடகம் நடைபெறும்.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத் தனிப்பட்ட முறையில் எவரும் அழைக்கப் பெறவில்லை. இஃது ஒவ்வொருவருக்கும் அழைப்பு விட்டுச் செய்யப் பெற வேண்டிய செயல் அன்று. தமிழ் மொழி, இன, நாட்டு நலன்களில் உண்மையாகவே அக்கரை? கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கீழ்க்காணும் தலைவர்களும் எல்லாரைப் போலவே இதழ் வழியும் அறிக்கைவழியும் அழைக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் வருவார்களோ, வரமாட்டார்களோ நமக்குத் தெரியாது. மாநாட்டுத் தொடக்கத்தில் அங்கு வந்திருக்கும் நல்லுணர்வுள்ள அன்பர்களில் ஒருவர் (அவர் எத்தனைச் சிறிய அகவையினராக இருப்பினும்) தலைமை தாங்கி நடத்துவிக்கக் கேட்டுக் கொள்ளப் பெறுவார்.

எனவே அன்பர் மாநாட்டிற்கு எவரெவர் வருவர் எவரெவர் பேசுவர் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிராமல் தன்மானத் தமிழினத்தின் இவ்விறுதிப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தவறாமல் போய் கலந்து கொள்ள வேண்டும்; கருத்தறிவிக்க வேண்டும். எதிர்காலத் தமிழினப் புத்துணர்வுக் குமுகாயம் அமைக்கின்ற பணியில் ஒவ்வொருவரும் பங்கு கொள்ள வேண்டும் - தன்னலம் மறந்த உயரிய நோக்குடன் திருச்சி மாநாட்டிற்கு வருதல் வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இன்னும் அங்கு வரவிருக்கும் அன்பர்களில் திருமணமான அன்பர்களாயிருப்பின் கட்டாயம் தம் மனைவி மக்களுடனும் திருமணமாகாத அன்பர்களாயிருப்பின் தம் உடன்பிறப்புகளுடனும் நண்பர்களுடனும் வந்து கலந்து கொள்ளுதல் வேண்டும்.

மாநாட்டின் முதல் நாள் காலை 7 மணிக்கு மாநாட்டு அரங்கினின்று பெரிய ஊர்வலம் தொடங்கி நகரத்தின் முகாமையான தெருக்களில் வீர நடையிட்டு மீண்டும் மாநாட்டு அரங்கிற்கே மீளும்.

மாநாட்டில் தொண்டர்களாக உழைக்க விரும்பும் அன்பர்கள் முன்கூட்டியே தென்மொழிக்குத் தங்கள் விழைவை எழுதி ஒப்புதல் பெறவேண்டும்.

மாநாட்டில் கலந்து கொள்ள விருக்கும் தமிழ் வளர்ச்சி மன்றங்கள், கழகங்கள் முதலியவை தங்கள் தங்கள் பெயர் பொறித்த துணிப்படாங்களை ஏந்தி வரலாம். அத்துடன் தனித் தமிழ் மொழி முழக்கங்களையும் நாட்டு விடுதலைக் கருத்துகளையும் அட்டைகளில் எழுதிப் பிடித்துக் கொண்டு வரலாம். அத்தகைய மன்றங்கள் தங்கள் பெயர்களையும் தாம் ஊர்வலத்தில் கலந்து கொள்ள விருக்கும் வகையையும் முன் கூட்டியே தென்மொழிக்கு எழுதித் தெரிவிக்க வேண்டும்.

மாநாட்டின் பொழுதோ, ஊர்வலத்தின் பொழுதோ அன்பர்கள் தாங்களாகவோ, பிறர் தூண்டுதலாகவோ எவ்வகைப் பரபரப்பான நிகழ்ச்சிகளிலோ, போராட்டப் பூசல்களிலோ ஈடுபட வேண்டா என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநாட்டின் திட்டவட்டமான செயல் முறைகள் தீர்மானமாக மாநாட்டின் முடிவில் அறிவிக்கப்பெறும். அன்பர்கள் அவ்வறிவிப்பு வரை அமைதியைக் கடைப் பிடிக்கக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

அடுத்த தென்மொழி இதழில் மேலும் சில விளக்கங்கள் அறிவிக்கப்பெறும், மறவாதீர்கள்! ஒன்றை மட்டும் தவறாமல் நினைவில் வையுங்கள்! மாநாட்டிற்கு மட்டும் எல்லோரும் தவறாமல் வந்துவிட வேண்டும்.

- தென்மொழி, சுவடி :9, ஓலை 12. 1972


தென்மொழிக்கொள்கைச் செயற்பாட்டு மாநாடு அறிக்கை
திருச்சிராப்பள்ளித் தேவர் மன்றத்தில் (10-6-72, 11-6-72) ஆகிய நாட்களில் புறப்படுங்கள் திருச்சிக்கு!

'தென்மொழி' எனும் இதழ்க்கு இரண்டு கொள்கைகள் உண்டு. 1. தமிழன் தன் மொழியாலும் இனத்தாலும் விடுதலை பெற வேண்டும் என்பது 2. தமிழன் தன் நிலத்தாலும் விடுதலை பெற வேண்டும் என்பது.

மொழி விடுதலையும் இன விடுதலையும்:

உலகிலேயே முதன்மையானதும், ஆரியம், இலத்தீன் கிரேக்கம் சாக்சானியம் முதலிய உலகப் பழம்பெரும் மொழிகளுக்கெல்லாம் தாயானதும், பழம் இலெமுரியாக் கண்டத்து. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் (50,000) ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றியதும். முழு வளம் பெற்றதும் இன்றைய அறிவியலுக்கும் இனி வரப்போகும் அறிவியல் வளர்ச்சிக்கும் முழுதும் ஈடு கொடுப்பதுமாகிய நம் தமிழ் மொழி, கடந்த மூவாயிரமாண்டுகளாக ஆரியத்தாலும் பல வேற்று இன மொழிகளாலும் சிதைக்கப்பெற்றுத் தன் உருவிழந்து ஒலியிழந்ததாலும் அடிமைப்பட்டுத் தன் இனத்தையும் அடிமைப்படுத்தித் தட்டுக்கெட்டுத் தடுமாறி இன்று ஏதோ ஒரு வகையில் உருமாறி உயிர்வாழ்ந்து வருகின்றது. உலகில் வேறெம் மொழிக்கும் இல்லாத மூவகைப் பாகுபாடும். ஐவகை இலக்கணமும். எண்வகைச் சிறப்பியல்புகளும் கொண்ட நம் தமிழ்மொழியை ஆரியத் தளையினின்றும் பிறமொழிச் சிதைவினின்றும் மீட்டுக் காத்து வருவது தமிழர்களாகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இன்றோ, நம் தாய்மொழி ‘தமிழ்’ என்று கூறவும் வெட்கப்பட்டு நிற்கின்றோம். “தமிழில் என்ன இருக்கின்றது” என்று நமக்குள் நாமே ஒரு முழு மூடத்தனமான கேள்வியை எழுப்பிக் கொண்டு, ஆங்கில மொழிக்கும். பிற வட நாட்டு மொழிகளுக்கும் வால் பிடித்துக் கிடக்கின்றோம். நம் மொழியைத் தமிழ் என்று பெருமிதத்துடன் கூறிக் கொள்ள முடியாத நாம், நம்மைத் தமிழரென்றும் கூறிக்கொள்ளத் தயங்குகின்றோம். நமக்குள் பல குலப்பிரிவுகளையும் கிளைப் பிரிவுகளையும் உண்டாக்கிக் கொண்டு, நம்மை நாமே அடையாளங் கண்டு கொள்ள முடியாதவர்களாக-நமக்குள் நாமே அடையாளங் கண்டு கொள்ள முடியாதவர்களாக- நமக்குள் நாமே பகைமை பாராட்டிக் குத்திக்கொண்டும் வெட்டிக் கொண்டும் சாகுமாறு பலவகைப் பூசல்களை உருவாக்கி வருகின்றோம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல். மொழியாலும் அதன் வழி இனத்தாலும் வேறுபட்டுக் கிடக்கும் நம்மை, மொழியாலும் இனத்தாலும் தென்னாட்டு ஆரியம் பார்ப்பானும் பொருளாலும் அரசியலாலும் வடநாட்டு ஆரியப் பார்ப்பானும் ஏமாற்றி, அடிமைப்படுத்திக் காலங்காலமாய்ச் சுரண்டி வருகின்றனர்.

'சமசுக்கிருதம் இல்லாமல் தமிழ் இல்லை', 'சமசுக்கிருதமே இந்திய மொழிகளுக்குத் தாய்; அதுவே இந்திய ஒற்றுமைக்கு வழியமைத்துக் கொடுக்கும்' - என்றபடி இந்தியக் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அனைத்து ஆரியத் தலைவர்களும் நாளுக்கு நாள் ஊருக்கு “ஊர் உரத்த குரலில் முழங்கி வருகின்றனர். ஆளைக் கண்டு' ஏமாறி வரும்” நம் அடிமைத் தமிழர்களும் நம் பெறுதலரிதாம் தமிழ் மொழியைப் புறக்கணித்துத் தம்மைத் தாழ்த்தியும் நம் இனத்தை வீழ்த்தியும் வருகின்றனர்.

இவ் வீழ்ச்சி நிலைகளினின்று தமிழன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் அவன் தன் தாய்மொழியாகிய தமிழைத் தூய்மையாகவும், பிறசொல் கலப்பின்றியும் பேசிவருவதுடன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல் குல, சமய, வேற்றுமைகள் இன்றி ஒரே குமுகாயமாக வாழவும் முயற்சி செய்ய வேண்டும்.

தமிழனின் நிலவிடுதலை:

உலக அடிமை வரலாற்றில் தமிழனின் வரலாறு மிகவும் இரங்கத் தக்கதான ஓர் இழிந்த வரலாறாகும். பிற நாட்டு இன அடிமைகள் அனைவரும் அரசியல் அடிமைகள் அல்லர், இனத்தால் அடிமைப்பட்டு அரசியலால் உரிமை பெற்ற மக்களும் உள்ள தமிழன் இனத்தாலும் அரசியலாலும் அடிமை பட்டுக் கிடக்கின்றான்.

பிற அடிமை இனங்கள் ஏதோ ஓர் இனத்தால் மட்டுமே அடிமிைப்படுத்தப்பட்டுக் கிடக்கின்ற வேளையில், தமிழினம் பல்வேறு இனங்களால் அடிமைப் படுத்தப்பட்டுக் கிடக்கின்றது.

பிற இனங்கள் ஏதோ ஒரு குறுகிய கால எல்லைக்கு அடிமையுற்றுக் கிடப்பதும். பிறகு எழுச்சியுற்றுப் போராடி உரிமை பெறுவதும் வரலாறு, தமிழினமோ கடந்த மூவாயிரமாண்டுகளாக ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து அடிமையுற்றே கிடக்கின்றது. அதன் வரலாறே அடிமை வரலாறாகும்.

ஆரியரிடத்தும், மொகலாயரிடத்தும், பல்லவரிடத்தும், ஆங்கிலரிடத்தும் போர்த்துக்கீசியரிடத்தும் பிரஞ்சுகாரரிடத்தும் அடிமைப்பட்டுச் சிதைந்த தமிழினம் இன்று வடநாட்டாரின் கிடுக்கிப் பிடியில் சிக்கித் தவிக்கின்றது. வடநாட்டானுக்குக் கண்காணியாரகளாக இருந்து பொறுக்கித்தின்னும் அடிமைத் தமிழர் ஒரு சிலரையும், மொழி, இன நலமற்றுத் தந்நல நெஞ்சினராக வாழும் கல்ருளித் தமிழர் ஒரு சிலரையும் தவிர மிகப் பெரும்பான்மைத் தமிழர் தாங்கள் தங்கள் அடிமைத் தளையினின்று மீள வகை தெரியாதவராக அல்லற்பட்டே கிடக்கின்றனர்.

ஆட்சி அதிகாரங்கள் முழுவதும் வடவனின் கைப்பிடியுள் சிக்கிக் கிடக்கின்றன. இங்குள்ள மாநில அரசினர் வெறும் குழுத் தலைவர்களே! அரசியல் செயலாளர்களே!

இங்குள்ள பெருந்தொழில்கள் யாவும் வடவரின் கையுள்! நிறைந்த வருமானங்கள் தரும் துறைகள் அவர்களுக்குச் சொந்தம். ஊர்க்குப் பெயர் வைப்பதானாலும் அவர்களைக் கேட்க வேண்டும்; உரிமைக்கு வாழ்த்துப் பாடுவதானாலும் அவர்கள் இசைவு தரவேண்டும்.

இங்குள்ள செல்வங்கள் ஏராளம்! நிலவளமும் மலைவளமும் கடல் வளமும், தமிழகத்துள் கொஞ்ச நஞ்ச மல்ல! இருப்பினும் இங்குள்ள தமிழன் வடநாட்டுச் சோம்பேறிகளுக்காகத் தன் வயிற்றைக் கட்டித் தீரவேண்டியிருக்கின்றது. அவர்கள் கொட்டிக் கொள்ள இவன் உழைத்துச் சாகவேண்டியிருக்கின்றது.

இப்படி அரசியலாலும் பொருளியலாலும் அடிமைப்பட்டுக் தன் திலையினில் என்றென்றும் ஏழையாகவே இருக்கும் தென்னாட்டுத் தமிழன்- திரவிடன் தன் இனத்தாலும் மொழி யாலும் ஒன்று பட்டு எழுச்சி கொள்ளாதவாறு பிரித்தாளப்பட்டும், அதிகாரத்தால் மடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடக்கின்றான்.

தென்மொழிப் போராட்டம்!

இவ்வாறான அடிமை நிலைகளை மாற்றத் தென்மொழி இதழ் தூய பொதுவுணர்வுடன் கடந்த பதின்னான்கு ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றது.

'தென்மொழி என்பது ஒர் இதழன்று ஓர் இயக்கம்' என்னுமாறு அதன் கொள்கைகள் வளர்ச்சியுற்றுச் செம்மாந்து. நிற்கின்றன. அதற்கென ஒரு கூட்டம்! அதற்கென ஓர் எழுச்சி! அதற்கென ஒரு பாசறை! அதன் செயலாண்மைத் திறம் தனி! அதன் படை மறவர்களின் போராட்டம் தனி! அக முகமாக அவர்கள் செய்துவரும் நூற்றுக்கணக்கான முயற்சிகளின் இறுதிப் பயனாக அவர்களின் புறமுக முயற்சி இப்பொழுது முகிழ்ந்துள்ளது!

ஆம்; அதுதான் வரும் மாதம் 10,11-ஆம் நாட்களில் திருச்சித் தேவர் மன்றத்தில் நடைபெற விருக்கும் மாநாடு.

(10-6-72 காலை 7 மணி முதல் 12வரை ஊர்வலம். ஊர்வலம் திருச்சித் தேவர் மன்றத்திலிருந்து புறப்படும்) அன்று மாலை 2 மணிக்குக் குமுகாய மாநாடு தொடங்கும். இரவு 'எந்நாளோ?' - கொள்கை நாடகம்.

11-6-72 காலை 8 மணி அரசியல் மாநாடு.

இரண்டு நாள் முடிவிலும் வரலாற்றுச் சிறப்புடைய இரண்டு சிறந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எனவே அம்மாநாடு ஒரு செயல் அறிவிப்பு மாநாடு: அஃது ஓர் உரிமைப் போராட்ட மாநாடு அஃது ஓர் விடுதலை மாநாடு!

அது தாழ்வுற்ற தமிழர்களுக்கு விடிவு காணப் புறப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடித் தங்கள் செயல் திட்டங்கள் பற்றி ஆராயும் மாநாடு!

அதில் நீங்கள். தன்மானமுள்ள தமிழராகிய நீங்கள் கலந்து கொள்ள வேண்டாவா? உடனே குடும்பத்துடன் அணியமாகுங்கள்!

திருச்சியிலே ஒன்றிணைவோம்!
நினைவிருக்கட்டும் சூன் 10-11.
வாழ்க தமிழர்! வாழ்க தமிழ்நாடு !

தமிழகம் பிரிய வேண்டுவதற்கான பத்துக் கரணியங்கள்

தமிழகம் இந்தியவரசினின்று பிரியாமலிருக்குமானால்...

1. தமிழ்மொழி உயர்வடைய வழியில்லை. (பலவகை களிலும் முட்டுக் கட்டைகள் இருந்து கொண்டே இருக்கும்)
2. இந்தியை விலக்கவே முடியாது.(என்றைக்கேனும் ஒரு நாள் ஏற்க வேண்டியே தீரும்)
3. குல, சமயப் புரட்டுகள் என்றைக்கும் அகலா.
4. ஆரியப் பார்ப்பன நச்சுத் தன்மை இருந்துகொண்டே இருக்கும்.
5. தமிழ்ப் பண்பு படிப்படியாகக் கெடும்.
6. தமிழ் மொழியின் இலக்கண இலக்கியம் அழியும்.
7. சமசுக்கிருதம் தலையெடுக்கும்.
8. தமிழினம் மேலும் சிதறுண்டு போகும்.
9. பொதுவுடைமை யரசமைப்புக்கு வழியே இல்லை.
10. அரசியல் அதிகாரங்கள் தன்னிறைவு பெறா.

திருச்சி மாநாட்டு ஊர்வத்திற்கென
தென்மொழியில் வெளியிடப்பெற்ற முழக்கங்கள்

1. தாய்மொழித் தமிழைத் தவறின்றிப் பேசுங்கள்
2. தனித்தமிழ்ப் பெயரையே தாங்கிக்கொள்ளுங்கள்.
3. கலப்புத் தமிழைக் கடிந்து ஒதுக்குங்கள்.
4. விளம்பரப் பலகையைத் தமிழில் எழுதுங்கள்
5. 'சாதிப் பெயர்களைத் தூக்கி எறியுங்கள்.
6. குலப்பட்டங்களைக் குப்பையில் போடுங்கள்.
7. தமிழர்கள் யாவரும் ஓரினம், ஒரு குலம்!
8. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
9. கோயில் வழிபாடு தமிழில் செய்க.
10. சாதியும் மதமும் வேதியர் புரட்டு.
11. இந்தி மொழிக்கு என்றும் இடங் கொடோம்.
12. தனித்தமிழ் நாட்டை அடைந்தே திருவோம்.
13. தமிழர் நாடு தமிழருக்கே!
14. வடக்குக் காற்று தமிழர்க் காகாது
15. ஆரியப் பூசல் அறவே ஒழிக!
16. பார்ப்பனப் புரட்டு பயனளிக்காது.
17. அடிமைத் தமிழரே விடிந்தது எழுங்கள்!
18. அரசியல் விடுதலை அடைந்தே திருவோம்!
19. விடுதலை பெற்ற தமிழகம் வேண்டும்!
20. தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்.
21. பார்ப்பன ஆட்சிக்குப் பாடை கட்டுவோம்.
22. ஏற்றத் தாழ்வுகள் மாற்றி அமைப்போம்.
23. ஏழை பணக்காரன் இல்லாது ஒழிப்போம்.
24. உலகத் தமிழரே ஒன்று சேருவோம்!
25. தமிழ்ப்பெரு நிலத்தை விடுவிக்க வாரீர்!

தமிழகப் பிரிவினைக் கொள்கை

1. இப்பொழுதுள்ள தமிழ்நாட்டையும் புதுவை, காரைக்கால் பகுதிகளையும் நடுவணரசுத் தொடர்பினின்று விடுவித்துத் தன்னுரிமை பெற்றதும் சட்டம். ஆளுமை இவற்றில் புதிய முறை வகுத்துத் தனியாட்சி செய்வதும் இந்திய அரசோடு நிலக்காவல் இணைப்பும் வாணிகத் தொடர்பும் கொண்டதுமாகிய தனித்தமிழ் நாடாக இயங்கச் செய்தல்.

2. தன்னுரிமைத் தமிழ்நாடு அமைக்கப் பெற்றபின் அண்டை அயல் மாநிலங்களை நட்பு நாடாகக் கருதி, இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு, முன் இழந்து போன திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு முதலிய பகுதிகளை மீட்டுத் தமிழகத்துடன் இணைப்பது.

3. உரிமை பெற்ற தமிழகத்தில் குல, மத வேறுபாடற்ற பொதுமைக் குமுகாய அமைப்பும், நிகரமைப் பொதுவுடைமை சார்ந்த பொருளியல் அமைப்பும் குடிவழிக் குழுவாட்சி அரசிய லமைப்பும் ஏற்படுத்தப்பெறும். இவற்றின் விரிவான விளக்கங்கள் பின்னர் வெணியிடப் பெறும்.

- தென்மொழி, சுவடி :10, ஓலை : 1. 1972