வேண்டும் விடுதலை/மக்களை அச்சுறுத்தியோ, துன்புறுத்தியோ

விக்கிமூலம் இலிருந்து

 
மக்களை அச்சுறுத்தியோ, துன்புறுத்தியோ
இந்திய ஒருமைப்பாட்டை
உருவாக்கிவிட முடியாது!

ந்தியா பல்வேறு தேசிய இன மக்களைக் கொண்ட நாடு என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அத்தனைத் தேசிய இன மக்களுக்கும் தனித்தனியான மாநிலங்கள் அமைக்கப் பெறவில்லை. முகாமையான சில தனி மொழிகளையும், அவற்றைப் பேசும் இனங்களுக்குமே, அவற்றின் தனித்தனியான கலை, பண்பாடு நாகரிகங்கள் ஆகியவற்றின் பின்புலங்களைக் கொண்டு, தனித்தனி மொழி மாநிலங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இவையும் ஆட்சி எளிமையைக் கருத்தில் கொண்டே, அரசியல் முறையில் பிரிக்கப் பெற்றுள்ளனவே தவிர, அந்தந்த மொழியின மக்களின் தனித்தன்மையான நலன்களைக் கருதி அமைக்கப் பெற்றனவல்ல. இந்த நாட்டுக்கு விடுதலை வழங்கியபொழுது, இதனை முன்னாள் ஆண்ட வெள்ளையர்கள், தெரிந்தோ தெரியாமலோ, இந்நாட்டை ஆரியப் பார்ப்பன முதலாளியர்களிடம் ஒப்படைத்துச் சென்றனர். அவர்களே தங்கள் விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் சுரண்டலுக்கும் மேலாளுமைக்கும் பொருத்தமாக இந்த மொழி மாநிலங்களைப் பிரித்தமைத்தார்கள். எனவே இவை இந்தியத் தேசிய இனங்களுக்கான முழுமை மாநிலங்கள் அல்ல. இந்தியத் தேசிய இனச் சிக்கல் படிநிலை வளர்ச்சியுற்று தேசிய மாநிலங்கள் பிரிக்கப் பெறும்பொழுது அவை சரியான மொழி, இன, வரலாற்றோடும், கலை, பண்பாட்டு நிலைகளோடும் பொருந்தும்படியாக அமைக்கப் பெறும்.

அடுத்து, இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் அனைத்துமே இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து போகும் நோக்கத்தை இக்கால் கொண்டிருக்கவில்லை. ஒரு சில மாநிலங்களே அந்நோக்கத்தைக் கொண்டுள்ளனவாக அவற்றின் அரசியல், பொருளியல், இனவியல் செயற்பாடுகளிலிருந்து தெரிய வருகிறது. அதற்குத் தலையாய காரணம், இந்திய மாநிலங்கள் பலவும், இந்தியாவினின்று பிரிந்து தனியே முழு இறைமை பொருந்திய தனியரசை அமைத்துக் கொண்டு முன்னேற்றம் காணும் அளவிற்கு, மொழி, இனம், கலை, பண்பாடு, வரலாறு, பொருளியல் ஆகிய நிலைகளில் தனித்தன்மைகளும் வலிவும் கொண்டன அல்ல. எனவே, அவை இந்தியாவுடன் தங்களை இணைவித்துக் கொண்டு ஒன்றாயிருக்க விரும்புவதில் வியப்பில்லை. இன்னும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் பச்சையாகவும் சொல்வதானால், இந்திய ஒன்றியத்திலிருந்து, இக்கால் முழு இறைமையுடன் பிரிந்துபோய்த் தனி நாடாக இயங்குவதற்குரிய முழுத் தகுதியும் முழு விருப்பமும் கொண்ட ஒரே நாடு தமிழ் நாடேயாகும். ஏனெனில் இஃது ஒன்றுதான் தனித்தேசிய இன ஆளுமைக்குப் பொருத்தமானதாக உள்ளது. அதற்கு முழுமையான அடிப்படைக் காரணம், தமிழ்நாடு ஒன்றுதான், இந்தியத் தேசிய இனங்களுக்குள்ளேயே, மொழி, இன, நிலம், கலை, பண்பாடு, அரசியல், பொருளியல், வரலாற்று நிலைகளில் முழுத் தனித்தன்மையும், முழு வலிமையும் கொண்ட ஒரு நாடாக உள்ளது. இதை ஒப்பவைத்துப் பார்க்கும் பொழுது இங்குள்ள வேறு எந்தத் தேசிய இனத்திற்கும் இத்தகுதிகள் குறைவாகவே உள்ளதை ஆய்ந்து உணரலாம். பின்னர் ஏன் அவற்றுள் ஒரு சில இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்துபோய்த் தனித்தேசிய இன நாட்டை உருவாக்க விரும்புகின்றன என்றால், அது, இன்று இந்தியாவை ஆட்சி செய்யும் பார்ப்பணிய வணிக முதலாளிகளின் ஓரினச் சார்பான கொடுங்கோலான ஆட்சித் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாததால்தான் என்க.

இத்தகைய ஆட்சிக் கொடுமை நிலை, இப்பொழுதுள்ள ஆட்சியமைப்பில் என்றுமே மாறாத மாற்றமுற விரும்பாத தன்மையில் என்றென்றுமே நிலைத்திருக்கும் வலிமைபெற்றதாகும். அவ்வாறு வலிமை குன்றுகிற நேரம் ஒருவேளை எதிர்காலத்தில் வந்தாலும், இவ்வாட்சி இப்பொழுதுள்ளதைப் போல் உருசியாவையோ, அல்லது அமெரிக்காவையோ சார்ந்து, தன் நிலையை வலுப்படுத்திக் கொள்ள முடிந்ததாக இருக்கும்.

ஆனால் எத்தகைய சூழ்நிலையிலும், தமிழகம் இந்திய ஆட்சியாளருடன், அவர் எத்தகைய உயரிய நோக்கமும் நடுநிலை உணர்வும் கொண்டிருப்பவர்களாக அமைந்தாலும் கூட அவர்களுடன் ஒத்துப்போய் தனித் தமிழ்நாட்டை அமைக்காமல் இருப்பது அனைத்து வகையிலும், தமிழினத்திற்கே கேடு தருவதாகவே முடியும். அதனால்தான் தமிழ்நாடு, தனி நாடாக ஆக வேண்டும் என்று நாம் கரடியாய்க் கத்தி வருகிறோம். அது முடிகிறதோ இல்லையோ இறுதி வரை இந்தக் குறிக்கோளில் தாழ்ச்சி ஏற்பட ஓர் இம்மியளவும் இடமில்லை. இவற்றையெல்லாம் நன்கு விளங்கிக் கொள்ள அறிவில்லாமலும், அல்லது விளங்கிக் கொண்டாலும் விட்டுக் கொடுக்க மனமில்லாமலுமே நம்மில் சிலர் இதனைச் சரியென்று ஒப்புக் கொள்வதில்லை.

அண்மையில் இந்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங் அவர்கள் தேசிய ஒருமைப் பாட்டுக்கெதிராகச் சிலர் பிரிவினைக் கருத்துக் கொண்டிருப்பதாக மிகுதியும் கண்டித்துப் பேசினார். அவரின் அதிகாரச் செருக்கான வரட்டு மிரட்டல் என்றுமே பயன் தராது என்பதைக் காலம் உணர்த்தும். மக்களை அச்சுறுத்தியோ, துன்புறுத்தியோ இந்திய ஒருமைப்பாட்டையோ ஒற்றுமையையோ பெயருக்குக் கூட பூட்டாசிங் போன்றவர்களால் உருவாக்கிவிட முடியாது. தமிழகத்தின் விடுதலை முயற்சிகள் ஒருவேளை காலந் தள்ளிப் போனாலும், என்றுமே தவிர்ந்துவிடப் போவதில்லை என்பதை உறுதியாக நினைவில் வைத்துக் கொண்டு, இப்பொழுதைய நிலைமைக்கு ஏற்றபடி, ஓர் இடைக்கால ஏற்பாடாகவேனும், பிரிந்துபோகும் உரிமை கொண்ட தேசிய இனங்களின் கூட்டாட்சியையேனும் இந்திய அரசு உருவாக்குவது நல்லது. இந் நாணயமான நடுநிலையான முடிவை எண்ணிப் பார்க்க வேண்டும் அது!

– தமிழ்நிலம் இதழ் எண். 119, ஏப்பிரல் 1989