வேண்டும் விடுதலை/மூன்றாம் விடுதலை மாநாடு!

விக்கிமூலம் இலிருந்து

 
மூன்றாம் விடுதலை மாநாடு!
சென்னைக்கு வாருங்கள்!


சூழ்நிலைகள் நிகழ்ச்சிகளுக்கு உயிரூட்டுகின்றன! நிகழ்ச்சிகள் சூழ்நிலைகளுக்குப் பெருமை தருகின்றன!
தில்லிப் பேரரசு இந்தியக் குடிமக்களின் அடிப்படை
உரிமைகளுக்கு விலங்குகள் பூட்டியுள்ள நேரம் இது!
எங்கு - எந்தப் பொழுதில் உரிமைகள் தடுக்கப்
படுகின்றனவோ, அது அந்தப் பொழுதுதான்.
அவ்வுரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய
சரியான இடம் பொருத்தமான நேரம்!
மற்ற இடங்களில் - நேரங்களில் உரிமைகள்
கேட்கப் பெறுவதற்குச் சரியான மதிப்பும் இல்லை!
அதற்கான தேவையும் இல்லை.

உரிமைகள் தரப் பெறுவதில்லை! அப்படித் தரப்பெறும்
உரிமைகளுக்கு உயிரூட்டமும், இருப்பதில்லை!
உரிமைகள் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்ளப்
பெறவேண்டியவை! அப்பொழுதுதான் அவை
மதிக்கப்பெறும் காக்கப்பெறும் மாந்தனின் இயற்கை
வளர்ச்சிக்கேற்றத் துணையாகக் கருதப் பெறும்!
தரப்பெற்ற உரிமைகள் தாமே விளைந்த புல்லரிசிகள்!
எடுத்துக் கொள்ளப் பெற்ற உரிமைகள் வெயிலொடு,
புயலொடு போராடி விளைவித்த நெல்லரிசிகள்!

உரிமைகள் பெறுவதில் மூன்று நிலைகள்!
ஒன்று, கொடுக்கப்பெறும் உரிமைகள்!
இரண்டு, கேட்கப்பெறும் உரிமைகள்!
மூன்று, மீட்கப் பெறும் உரிமைகள்!
முன்னது, பிஞ்சு! துவர்ப்பது! - பசியற்ற ஒருவனுக்கு
இடப்பெறும் நல்விருந்து போன்றது! பருவமில்லாத
ஒருவனுக்குச் செய்து வைத்த திருமணம், அது!

அடுத்தது, காய்! புளிப்பது! - பசிக்கின்ற ஒருவனுக்குக்
கொடுக்கப் பெறும் பற்றாத பழங்கஞ்சி போன்றது!
இளைஞன் கைக்கு எட்டாமல்
நிற்கின்ற எழிலார்ந்த கன்னிப்பெண், அது,!

மூன்றாவது, பழம்! - பட்டினி கிடப்பவன் பறித்து
உண்ணும் பாலமிழ்து போன்றது: பாய்ச்சல் கொண்ட
புலியை வெற்றிகொண்டு, தன் தாயை அதன்
பிடியிலிருந்து மீட்கும் வீர விளையாட்டு, அது!

முதலது, ஆங்கிலேயர் தில்லிக்கு வழங்கிய குடியரசுரிமை!
பின்னது தில்லி, தமிழர்க்கு வழங்கிய வாழ்வுரிமை!
இறுதியது, தமிழர்கள் தமக்குள்ள தாய் நிலத்தைத் தாமே
மீட்டுக்கொள்ளப் போராடும் விடுதலை உரிமை!

ஆம்! உரிமை நாட்டியம் ஒடுக்கப்பெற்று, நெருக்கடி
நிலைகள் தாண்டவமாடும் இந்நேரத்தில்தான்,
தென்மொழி தொடங்கிய உரிமைப் போரின் மூன்றாவது
போராட்டக்களம் அமைக்கப் பெற்றுள்ளது.

அமைக்கப் பெற்றுள்ள இடம் சென்னை! நாள் சூலை :13
உரிமைத்தடை கோழைகளுக்கு அச்சமூட்டும் அரிமா முழக்கம்!
ஆனால், அதுவே மறவர்களுக்கு வீரமூட்டும் யானைப்பிளிறல்
விடுதலைப் போராட்ட மறவர்களின் வீர முழக்கங்கள்

சென்னைத் தெருக்களில் முழங்கும் நாள் அது!
வீறு கொண்ட வேங்கைகள் வெற்றி கொள்ளப்
புறப்படும் உரிமைப் போர் வரலாற்றின் உணர்ச்சி வரிகளைச்
சமைக்கப் போகும் நாள் அது!

விடுதலையணிகள் பல இணைந்து தலைகொடுக்கப்
புறப்பட்டுள்ளன!

முரசொலி அடியார்-
தோளோடு தோளிணைவார்!


முழங்குகின்ற பேரொலியில் அவரின்
தேரொலியும் கலந்து வரும்!
அறிக்கைகள்-சுவரொட்டிகள் தனியே அனுப்பப்பெறுகின்றன.!

காத்துக் கிடந்த பாசறை மறவர்களே!
யாத்திடப் போகும் விடுதலைப் பரணிக்குக்
கோத்திடப் போகும் கூர் மழுங்காச் சொற்களாக

வந்துச் சேருங்கள் சென்னைக்கு!
சூலை 13.
ஆம் , அன்று தமிழக விடுதலை போராட்ட நாள்!

- தென்மொழி, சுவடி : 1.2 ஓலை 8, 1975


தமிழ்நிலத்தை விடுவிப்போம் சென்னையில் 3-ஆவது தமிழகப் பிரிவினை மாநாடு
பைந்தமிழ் மறவர்களே! புறப்படுங்கள் சென்னைக்கு!

மிழன், மொழியால் ஆரியத்திற்கும், இனத்தால் ஆரியப் பார்ப்பனியத்திற்கும், ஆட்சியால் வடவர்க்கும் பொருளியலால் வடநாட்டு முதலாளியத்திற்கும், பண்பாட்டால் மேலை நாட்டினர்க்கும் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே படிப்படியாய் அடிமைப்பட்டுத் தாழ்ந்திழிந்து போனான். உலகின் முதல் மாந்தனும் மக்கள் குலத்திற்கே நாகரிகம் பரப்பியவனுமாகிய அவன், இன்று உலகின் கடை கெட்டக் கீழ்மகனாய்த் தன்மானம் இழந்து, தன்னுணர்வுகெட்டுக் கூனிக் குறுகிக் கோழையாய்க் கிடந்து புழுவாய் நெளிகின்றான். இது மறுக்க முடியாத கடந்தகால, இக்கால வரலாற்றுண்மை.

அவன் இன்று கொஞ்சங் கொஞ்சமாய் உணர்வுவயரப் பெற்றுக் கண்கள் விழிப்புற்று, எழுந்து, விரைந்தோடும் முன்னேற்ற உலகின் ஓட்ட நடையோடுளர் தளர் நடையிட்டுப் போகப் புறப்பட்டுவிட்டான் துவண்டு கிடந்த அவன் உடல்நரம்புகள் புடைக்கத் தொடங்கி விட்டன. தொய்ந்து கிடந்த அவன் தோள்கள் வீறுபெற்று வருகின்றன. புதைந்து கிடந்த அவன் அரிமா நெஞ்சு, அதர்ந்து பொருத அணியமாகி விட்டது.

இனியும் அவன் அடிமையாய் வாழ விரும்பவில்லை. இழிபிறவியாய், என்றென்றும் சூத்திரனாய் வாழ்ந்துவந்த அவன் இனிமேலும், பிராமணியத்திற்குக் கீழ்ப்பட்டவனாய், வடவராளுகையின் கீழ் வல்லடிமைப்பட்டவனாய் வாழ விரும்பவில்லை எல்லாத் தளைகளினின்றும், எல்லா அடிமைப் போக்கினின்றும். தன்னை விடுவித்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டான். எப்பாடு பட்டேனும் இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குள், உலகின் உரிமை பெற்ற ஒருவனாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டான்.

அவனின் அத்தகைய முருகிய முனைப்பால் பல கட்டுகள் ஒவ்வொன்றாய்த் தெறிக்கத் தொடங்கிவிட்டன. அவன் கை விலங்குகளும், கால் விலங்குகளும் ஒவ்வொன்றாய் உடைபடத் தொடங்கி விட்டன. இனி அவனை உலகின் எந்த ஆற்றலாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது; எந்த வல்லரசாலும் அவனை மீண்டும் அடிமைக் கூட்டுக்குள் தள்ளிவிட முடியாது. அவன் இனி அரசரால் தனியன் உறவால் இனியன்; தண்டமிழ் நாடு அவனுடையது. உரிமைக் கொடி அவன் ஆளுமைக் கோட்டத்தில் பறக்கத் தொடங்கிவிட்டது.

கடந்த காலத்தில் அவன் தன் உரிமை முழக்கத்தைத் தில்லியின் இரும்புக் கதவுகளும் பிளக்கும் வண்ணம் வானதிர முழக்கிக்காட்டினான்; 1972-இல் திருச்சியில் முதல் விடுதலை மாநாடு தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு) நடந்தது. 1973இல் மதுரையில் தன்னுரிமைத் தந்தை பெரியார் துணையுடன் 2ஆவது மாநாடு நடந்தத் திட்டமிடப்பெற்று முயற்சிகள் நடந்தன. ஆனால் அரசின் அதிகார வல்லாண்மையால் மாநாட்டு முன்னணியாளர்கள் பதினொருவர் நடந்துகொண்டிருந்த ஊர்வலத்திலேயே வளைத்துச் சிறைப்பிடிக்கப் பெற்று முயற்சிகள் முறியடிக்கப் பெற்றுன. வகுக்கப்பெற்ற வரலாற்று விடுதலைப்போராட்டக் கொள்கைத் திட்டப்படி, அம்முயற்விகளின் தொடர்ச்சியாக, இக்கால் அதன் 3ஆவது தமிழகப் பிரிவினை மாநாடு வரும் சூலை 13 ஆம் நாள் தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் நடத்தத் திட்டமிடப் பெற்றள.

மாநாடு அன்று மாலை 6 மணியளவில் சென்னைக் கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் அடக்க மேடைக்கும் பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கும் இடையில் உள்ள மணல் வெளியில் நடத்தப்பெறும் அதற்கு முன் அன்று காலை 6 மணியிலிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல விடுதலை அணிகள் புறப்பட்டு வீறு தெறிக்கும் இடி முழக்கங்களுடன், ஆரவாரமிக்க சாலைகளின் வழியாகப் பகல் 12 மணியளவில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை வழியாகப் பெரியார் சிலைக் கருகில் ஒன்று கூடிக் கொள்கை முழக்கத்துடன் மாநாட்டு மணல் திடல் நோக்கிச் சென்று முடிவெடுத்துக் கலையும்.

அன்று மாலை நடைபெறும் மாநாட்டுக் கூட்டத்தில் மாநாட்டு அமைப்பாளர் பெருஞ்சித்திரனாரும், முரசொலி அடியாரும் வேறு சில அரசியல் கட்சி விடுதலை வேங்கைகளும் கொள்கைகள் முழக்குவர். இறுதியில் மாநாட்டின் ஒரே தீர்மானத்துடனும், அடுத்து திட்ட அறிவிப்புடனும் மாநாடு முடிவுறும்.

எனவே,

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அவ் விடுதலை மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் அரிமா மறவர்களும், விடுதலைக் களிறுகளும், கொள்கைக்கோளரிகளும், வல்லுணர்வு வேங்கைகளும், இன்றே தலைநகரை நோக்கிப் புறப்பட அணியமாகட்டும்!

அடுத்த தலைமுறைக்கு உரிமைப் பட்டயம் தீட்டட்டும்! எழுச்சி பெறும் எரி முழக்க நாள் சூலை 13, இடம், சென்னை கடற்கரை! மாநாட்டை மறவாதீர்கள்! பிற தொடர்புகளை மறவுங்கள்! புறப்படுங்கள் தலைநகரை நோக்கி!!

- தென்மொழி, சுவடி 12 ஓலை 8. 1975