வேண்டும் விடுதலை/மூன்றாம் விடுதலை மாநாட்டுக்கு முன்னும் பின்னும்

விக்கிமூலம் இலிருந்து

 
மூன்றாவது விடுதலை மாநாட்டுக்கு
முன்னும், பின்னும்.


ன் சிங்கைச் செலவால் மூன்றாவது தமிழக விடுதலை மாநாடு ஓராண்டுத் தள்ளிப் போனதேனும், கோவையில் நடைபெறுவதாக இருந்த மாநாடு தமிழகத்தின் தலைநகராகிய சென்னையிலேயே நடந்தது, அக் காலத்தாழ்த்தத்தை ஈடு செய்தது. வெறும் மாநாடுகள் போடுவதும், கூட்டங்கள் நடத்துவதுமே நம் நோக்கமன்று, ஆனால், மக்கள் மனத்துள் நம் நோக்கம் பற்றிய கருத்துகளை மலர்த்துவிப்பதற்கு அவற்றைவிட வேறு வழியில்லை. மேலும், நெடுங்கால வல்லடிமைத் துய்ப்பாலும் மடித்துயிலாலும், ஈக மனப்பாங்கின்மையாலும், நம் இனத்துக்கே உரிய உள்ளரிப்பாலும், இந்நாட்டில் மக்கள் புரட்சி அத்துணை எளிய முயற்சியன்று. ஏனோ தானோ என்று கொள்கைகளை விளங்கிக் கொண்ட உள்ளங்களும், சிறைக்கஞ்சும் போக்கும் எந்த வினைப் பாட்டுக்கும் அத்துணை எளிதில் வளைந்து கொடுப்பதில்லை. இதனாலேயே இங்குக் கொளுத்தப்பெற்ற எல்லாவகை உணர்வுகளும் பயனற்றுப் போகின்ற ஒரு புன்மை நிலையை நாம் நன்கு உணர முடிகின்றது.

எனவே வழக்கம்போல் கூட்டிய இந்த விடுதலை மாநாடும் எதிர் பார்த்த பயனை நல்கவில்லை. கடந்த ஆண்டுகளில் திருச்சியிலும், மதுரையிலும் நடந்த மாநாடுகளை விட இந்த மாநாட்டில் ஒரு திருப்பம் இருந்தது. பிரிவினைக் கொள்கையைத் தன் உயிர் மூச்சாகக்கொண்ட திராவிடர் முன்னேற்றக் கழகம் அக் கொள்கையை வெளிப்படையாகக் கைவிட்ட பின்னரும், அக்கழகத்தின் முன்னிணிக் கொள்கை பரப்பாளராக விருந்த திரு, முரசொலி அடியார் நம் இயக்கத்தின் கொள்கையால் ஈர்க்கப்பெற்றுத் தம் கழகக் கொள்கையில் நிறைவு பெறாத அந்நிலையைச் சுட்டிக்காட்டி ஓர் அறிக்கை விட்டு, நம் வினைப்பாடுகளுக்குத் துணையாக வந்தார். அவரின் மாய்ந்து போகாத கொள்கைப் பற்றையும் வெளிப்படையான உள்ள உணர்வையும் மதித்துப் பாராட்டி அவரையும் நம்முடன் இணைத்துக் கொண்டோம்.

ஆனால், வழக்கம்போல் நம் மாநாட்டு முயற்சிகள் அனைத்தும் அரசால் முன் கூட்டியே தடைசெய்யப் பெற்றன. அதன் முதல் நடவடிக்கையாக நானும் அடியாரும், எங்களுடன் மாநாட்டு செயற்குழுவினர் அறுவரும் மாநாட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சிறைப்பிடிக்கப்பெற்றுக் காவலில் வைக்கப்பெற்றோம். எங்களைத் தொடர்ந்து அடுத்து இரண்டு நாட்களிலும் மேலும் பதினான்கு பேர் சிறைப் பிடிக்கப்பெற்று, எங்களைப் போலவே, காவலில் வைக்கப்பெற்றனர். முதலணியினரான எங்கள் எண்மருக்குப் பின் சிறை வந்தவர்கள் ஊர்வலம் போனதாகவும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் மாநாடு நடத்தியதாகவும் சிறைப்பட்டவர்களாவார்கள். ஆனாலும் மொத்தம் இருபத்திரண்டு பேர்களே சிறைப்பட்டுக் காவலில் வைக்கப் பெற்றோம். நம் இத்தொகை நம் கொள்கையை நோக்கவும், அதன் வெற்றி முறைகளை நோக்கவும் மிகமிகச் சிறிய தொகையானாலும், நாட்டின் நெருக்கடிகளையும், கடுபிடிகளையும் நோக்க மிகவும் பெரியதும் ஒரளவு பாராட்டக் கூடியதும் ஆகும். இருப்பினும் ஓர் ஆயிரம் பேரோ, ஈராயிரம் பேரோ சிறைப்படாத எந்தக் கொள்கையும் முயற்சியும் அரசினர் கவனத்துக்கும் மதிப்புக்கும் உட்படுவதில்லை.

மேலும், அடியார் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கையில் அறிமுகப் பட்டவராக இருந்தமையாலும், அவர் நம் மாநாட்டுச் செயற்குழுவினர்க்கு தாமே தம் பெயரை முன் வைத்தும், உதயசூரியன் இலச்சினையுடனும், கறுப்பு சிவப்பு ஆகிய இரு வண்ணத்திலும் மிகப்பெரிய அளவில் அடித்துக் கொண்ட சுவரொட்டியாலும், நம் மாநாட்டைத் தி.மு.க. சார்பில் நடந்த மாநாடாகவே ஒரு சில இதழ்கள் அறிமுகப்படுத்தியிருந்தன. இதற்கு, நேர் எதிர் நடவடிக்கையாக, நீல, சிவப்பு வண்ணத்தில் என் பெயரை முன் வைத்து அடித்துச் சிறு அளவில் ஒட்டப் பெற்றிருந்த சுவரொட்டி, அவ்விதழ்களின் கருத்தை மாற்ற அத்துணையளவு பயன் படவில்லை. அடியாரின் இந்த நடவடிக்கையால் மாநாட்டு முயற்சிகளில் முன் கூட்டியே தொய்வு விழுந்துவிட்டது. அவரின் அந்த நடவடிக்கையும், அடுத்தடுத்துச் சிறைக்கு வெளியிலும், சிறைக்குள்ளும் அவர் நடந்து கொண்ட நடவடிக்கைகளும், ஏற்கனவே திட்டமிட்டுச் செய்யப் பெற்றனபோல் எனக்குப்பட்டன. மேலும், அக்கட்சித் தொடர்பற்ற நம்பகமான நடுநிலையாளர் சிலரிடமிருந்தும், அவர் நம் இயக்கத்தைப் பிளவுப்படுத்த வேண்டியே விடுக்கப்பெற்றவராக நமக்குக்கிடைத்த செய்திகளை உறுதிப் படுத்துவது போல் அவர் நடவடிக்கைகள் இருந்தன.

சிறைக்குப் போகுமுன்பே கிடைத்த தொடக்கச் செய்திகளை நான் பொருட்படுத்தாமற் போனதற்கு அவர் என்பால் வைத்த பேரன்பும், பெருமதிப்புமே கரணியங்களாக விருந்தன. அவற்றை யடியொட்டி அவர் தம் நீட்டோலை நாளிதழில், நெஞ்சந் திறந்து, நெஞ்சோடு பேசியதாக வெளியிட்ட கருத்துரையை நான் பெரிதும் மதித்தேன்; நம்பினேன். ஒருவேளை அவ்வுரை உண்மையாகவே இருந்திருந்தாலும், அவர் நம் கொள்கையையும், நம் விடுதலை மறவர்களின் உள்ளங்களையும், பதமும் ஆழமும் பார்ப்பதுபோல் அவர் சிறைக்குள் நடந்துகொண்ட முறைகளும் கொள்கைக் கட்டுப்பாடுகளுக்கு மாறாகச் செயல்பட்ட தன்மைகளும் அவரின் தாய்க்கட்சியின் மேல் அவர் கொண்ட பற்றையும், பாசத்தையுமே காட்டின. அத்தகைய அவர் உணர்வில் கூட நான் களங்கம் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால், அவர் சிறையில் வெளிப்படையாக தம் கட்சிக் கொள்கைகளையும் இளமையுள்ளங்களுக்கு இனிப்பான சில செய்திகளையும் பேசி, நம்முடன் சிறைப்பட்டிருந்த சில இளந்தை நெஞ்சங்களைத் திசை திருப்பியது தான் எனக்குப் பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்தன.

அரசியல் கட்சி ஈடுபாடுடையவர் எப்படி இயங்குவார் என்பதை தான் நன்கு உணர்வேன். அதிலும் தி.மு.க உணர்வுடைய பலரை உள்முகமாகவும், வெளிமுகமாகவும் நான் நன்றாக அறிவேன். இருப்பினும் தி.மு.க. மேல் எனக்கு வெறுப்பில்லாமலிருந்ததால் எதற்கும் நான் மனம் சோர்ந்து போகவில்லை. ஆனால் கடந்த பதினாறாண்டுகளாக நூற்றுக்கணக்கான தமிழுணர்வுப் பாடல்களையும், தமிழக விடுதலைப் பாடல்களையும் கருத்துக ளையும் ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் எழுதியும் பல நூற்றுக் கணக்கான கூட்டங்களில் பேசியும் வந்த என்னையே நாங்கள் சிறையிலிருந்த ஒரு சிலநாட்களுக்குள் அங்கிருந்த மறவர்களில் சிலர் ஐயுற்றுப் புறக்கணிக்கும்படியாக, அவர் நடந்துகொண்டது எனக்குப் பெரிதும் வியப்பளித்தது. ஆயினும், இருபது ஆண்டுகள் ஒரு கட்சியுடன் பழகி வளர்ந்து ஒருசில நாட்களில் நம்மைத் தெரிந்துகொண்டது போல் வந்து நம்முடன் இணைந்து ஓரிரு வினைப்பாடுகளில் பங்கு கொண்ட அவரின் உணர்ச்சி நிலையை விட நம் மறவர்கள் சிலரின் பதினாறாண்டுப் பழக்கத்தின் முடிவு எனக்குப் பெரிதும் அதிர்ச்சியுறும்படி செய்யவில்லை. அரசியல் நாடகக் காட்சிகளுக்கு முன் என் மெய்யுணர்வு சான்ற உண்மை நடைமுறைகள் பயனற்றுப் போனது. எனக்கு மேலும் சில படிப்பினைகளையும், உறுதிப்பாடுகளையும் தந்தது. (அடியாரின் சிறை நடவடிக்கைகளையும், அவற்றுக்குரிய உள்முக நோக்கங்களையும் இங்கு விளக்குவதால் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை. தேவையானவிடத்து, அவற்றையும் விளக்க வேண்டிய அழுத்தம் வரும்பொழுது விளக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் ஒரு தீக்கனவுப் போல் மறந்துபோகவே முயற்சி செய்கின்றேன்.

மொத்தத்தில் சிறையிலிருந்த நாற்பத்தொன்பது நாட்களில் இறுதிப் பதினோரு நாட்களாக என் நடவடிக்கைகளில் நிறைவுறாதவர்களாகவும், அடியார்பாலும் அவர் இருந்த கட்சியின் பாலும் ஏற்கனவே ஓரளவு ஈடுபாடும், இக்கால் இணக்கமும் எற்படுத்திக் கொண்டவர்களாக மாறியுள்ள ஒரு சிலர். இனிமேல் திரு. அடியார் அவர்கள் அவர்க்களுக்காகிலும் நம்பிக்கையுடையவர்களாகவும், நன்றியுடையவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் எந்த ஒரு இயக்கமும் வலுப்பெற வேண்டுமானால் அதன் கொள்கைகளில் முதற்கண், ஐயமற்ற தெளிவுவேண்டும். அடுத்து, அவ்வியக்க அமைப்பாளர்களிடம் நம்பிக்கையுடனும் நன்றியுணர்ச்சியுடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் இயக்கத்தின் மேனிலை நடைமுறைகளுக்குக் கீழ்ப்படியும் கொள்கைக் கடைப்பிடியும் வேண்டும். ஒருவரைத் தலைவராகவோ, பொதுச்செயலாளராகவோ ஏற்றுக்கொண்டுவிட்ட பின்னர், அவரின் கொள்கை நடவடிக்கைக நடவடிக்கைகளில் ஐயப்பாடு கொள்வதும், அவரைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுவதும், இயக்கத்தின் ஒருமைப்பாட்டையே சிதைத்து விடக்கூடிய செயல்களாகும் என்பதை இனியேனும் புதுக்குடி புகுந்த அன்பர்கள் உணர்ந்துகொள்ளக் கேட்டுக் கொள்கின்றோம்.

‘அனைத்துப் போகாத தன்மை’ என்பால் இருப்பதாக அவ்வன்பர்களில் ஒரு சிலர் நெகிழ்ச்சித் தன்மைகளுக்குத் தாமே கரணியம் காட்டிப் பேசி வருவதை அறிகிறேன். இஃது என்மேல் உள்ள மிகப் பழகிய குற்றச்சாட்டு. இவர்கள் எனக்குப் புதியவர்களும் அல்லர்; அவர்களுக்கு நான் புதியவனுமல்லன். நேற்று இன்று தொடங்கியனவல்ல என் நடவடிக்கைகள். கடந்த இருபது ஆண்டுகளாக என் இயக்கம் வெளிப்படையானது. மக்களின் மனத் தொடர்பும், அறிவுத் தொடர்பும், வினைத் தொடர்பும் எவ்வெவ் வடிப்படையில் நிகழ்கின்றன; வளர்கின்றன; முடிவுறுகின்றன என்பதை நான் நன்கு அறிவேன். அவ்வடிப்படையிலேயே எச்சிறு நிலையினையும்’ எண்ணுகின்றேன்; துணிகின்றேன்; செயல் படுகின்றேன், நான்! நாலே முக்கால உள்ள ஒரு கோலை ஐந்தடி உள்ளது என்றோ, நாலரையடியுள்ளது என்றோ என்னால் என்றும் எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது. ஒருவரோடு அணைத்துப் போவதற்கேனும் அப்படி நான் சொல்லவேண்டும் என்றும் என்னை எதிர்ப்பார்ப்பவர்களை நான் நிறைவு செய்ய முடியாது. போலி ஆரவார நிகழ்ச்சிகளையும், புரையோட்டப் போக்குகளையும் நான் என்று வரவேற்று மாலை சூடமுடியாது. நடிப்பும், நயமான ஈரப்பேச்சும் என்னோடு பிறக்காதவை. பிறர் இழுத்த இழுப்புகளுக்கெல்லாம் நான் நீளவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு நான் இழுவையல்லன். பிறரும் அவ்வாறு நீண்டு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவனுமல்லன். அவரவர்களின் அறிவுக்குப் பொருந்தும் செயல்களையே நான் அவர்களிடம் எதிர்பார்க்கின்றேன்.

ஓர் அறிவியல் அறிஞனுக்குப் போலவே கொள்கை எனக்குப் பெரிது. அதில் ஓர் இம்மியையும் அது தவறு என்று உணராத பொழுது பிறர்க்காக மட்டும் குறைத்துக் கொண்டு என்னால் ஈடுபட முடியாது. அதைச் செயலுக்குக் கொண்டுவர என் அறிவுக்குச் சரி என்று பட்ட எந்த நடவடிக்கையிலும் நான் நம்பிக்கையுடன் ஈடுபட்டு வருபவன். அந்நடவடிக்கை பிறர் அறிவுக்கும் சரி என்று பட வேண்டும் என்று எதிர்பார்ப்பவனும் அல்லன். தேவையானால் இரவு பகலாக என் கொள்கைகளைச் சரியான உணர்வு உள்ளவர்கள் என்று நான் கருதுபவர்களிடம் எடுத்து விளக்க இதுவரை தயங்கியதுமில்லை, இனித் தயங்கப்போவதுமில்லை. இந்த நிலையில் என்னொடு வந்து பொருந்துபவர்களை நான் தடுத்தவனுமல்லன்: பொருந்தாமல் விலகிப் போகின்றவர்களை நான் கெஞ்சியவனுமல்லன்.

வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசுபவன் நான்; வினையிலும் அப்படியே! குழைவு நெளிவுகளால் என் கருத்தை என்றும் வயப்படுத்த முடியாது. கொள்கையை இறைவனாகக் கருதுகின்றேன். அக்கொள்கைப் போக்குடைய நேர் நோக்குடையவர்களை என் தோள் மேல் தூக்கிக்கொண்டு போகவும் தயங்கமாட்டேன். அமைச்சர்களைப் போய்ப் பார்க்கவும், அவர்களுக்கு மாலைசூட்டவும், அம்மாலைக்கீடாக எதையேனும் எதிர்பார்க்கவும் எனக்குத் தெரியாது. அவர்கள்பால் சலுகைகளை வேண்டுதல் நம் வாழ்வில் என்றும் நேர்ந்ததில்லை; நேரவும் நேராது. பட்டத்திற்காகவோ பதவிக்காகவோ என்னை எவரும் அடியாள் ஆக்கிவிட முடியாது. நான் வெளிப்படையாவன். எந்த விளம்பரமும், கொழு கொம்பும் எனக்குத் தேவையில்லை. என்னை நானே நடத்திக் கொள்ள எனக்குத் தெரியும். உதவி வேண்டும் என்பதற்காகப் பிறர் கால்களை முத்தமிடும் பழக்கம் எனக்கில்லை. உதவி செய்தவர்களின் கைகளை நன்றியுடன் என்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளக் காத்திருப்பவன் நான். முடிந்தால் என் கொள்கைகளைச் செயற்படுத்துவேன். இல்லெனில் அவற்றுடன் என்னைப் புதைத்துக் கொள்வேன். மொத்தத்தில் என்னால் பலருக்கும் ஊதியமுண்டு. ஆனால் எவருக்கும் என்னால் இழப்பில்லை. இந்தக் குணங்கள் ஒரு விடுதலை மறவனுக்குத் தேவையில்லை யென்றால், அவனுக்கு விடுதலை உணர்வும் தேவையில்லை என்பதே என் முடிவு.

ஏனெனில் இவைதாம் ஒருவனைத் தம் கொள்கைப் பிசிறுகளினின்று காப்பவை; தம் கடடையைப் பிறர்க்கு விலை போக்குவதினின்றும் தடுத்து நிறுத்துபவை. எனவே, இவற்றை என்றைக்கும் ஒத்துப் போகாத தன்மை என்றோ, அனைத்துக் கொள்ளாத தன்மை என்றோ குறைத்து மதிப்பிட வேண்டா. ஒத்துப் போகின்ற தன்மைகள் வேறு: அணைத்துக் கொள்கின்ற தன்மைகள் வேறு. கொள்கை நெகிழ்ச்சி என்பதெல்லாம். பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம்; மறந்துவிடக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் இயக்கத்துக்கு ஏற்றவையாகக் ஒப்புக்கொள்ளக் கூடியனவல்ல.

இனி, கொள்கையிலும் சில நெகிழ்ச்சிகள் இருக்கலாம் என்பவர்களும் சிலர் உண்டு. அந்த நெகிழ்ச்சி நிலைகள் முற்றும் அவர்களைப் பொறுத்த செய்தி. அந்த நிலையே பிறர்க்கும் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும், அதற்கு இயைபாக நானும் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டியங் கூறிப் பேசுவதும் எனக்கு ஒத்துவராத செய்திகள். எனவே, ஒத்துப் போகாத ஒன்றை எதனுடைய அடிப்படையில் என்று கவனிக்க வேண்டுமே தவிர, எட்டா முட்டித்தனமாக அஃது எல்லா நிலையிலும் இருக்க வேண்டும் என்று முரண்டு பிடிப்பது. அறியாமையும் வினைப்பிதுக்கமும் ஆகும். அறிவுடைமையும் வினைத்திறமும் ஆகாது.

இனி, இறுதியாகக் கடந்த விடுதலை மாநாட்டினின்று நான் தெரிந்துகொண்ட உண்மைகள் ஒரு சில உண்டு. அவற்றுள் ஒன்று. இக்கால், தமிழக விடுதலையை எவரும் அறிவு நிலையாகவோ, உணர்வு நிலையாகவோ விரும்பவில்லை; இயக்க நிலையாகவே விரும்புகின்றனர் என்பதே. அப்படி விரும்புகின்றவர்களும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள விழைபவர்களாவே இருக்கின்றனர். வெறும் விளம்பரத்திற்காகவோ, புகழுக்காகவோ, விடுதலையை விரும்புகின்ற நெஞ்சங்கள், அவை வாய்க்காத விடத்து, அவ்விடுதலையையும் தவிர்க்கின்ற உணர்வு கொள்பவையாகத் தான் இருக்க முடியும். விடுதலையை ஓர் உயிராகக் நிலையாக விரும்புகின்றவன் எவனோ, அவன் முதலில் தன்னை எல்லாவகைத் தளைகளினின்றும் கட்டறுத்துக் கொள்ளுபவனாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். அந்நிலையே தான் மன நிறைவுடன் ஒப்புக்கொண்ட கொள்கைக்கும் கட்டுப்பட்டு நடக்கும் மனப் பாங்கை வளர்த்துக்கொள்ளப் பயன்படுவதாகும். அம்மனப் பாங்கு வளரும் வரை தமிழினத்தை எவராலும் ஒன்றுபடுத்திவிட முடியாது. தமிழக விடுதலையும் எட்டாத ஒரு கனவாகவே போய்விடும் என்று எச்சரிகை விரும்புகின்றேன்.

இனி, கொள்கைமேல் நம்பிக்கை வைத்துள்ள நம் விடுதலை இயக்க மெய்யன்பர்கள் தொடர்பாகவும், அவர்கள் இனிநடந்து கொள் வேண்டிய வினைகள் தொடர்பாகவும் அடுத்து வரும் இதழ்களில் பேசுவோம்.

- தென்மொழி, சுவடி :12, ஓலை 10, 1975