வைகையும் வால்காவும்/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து

அணிந்துரை


சிவநெறிச் செல்வர், கல்வெட்டாராய்ச்சிப் புலவர்,

வித்துவான், பேராசிரியர் திரு.கா.ம. வேங்கடராமையா எம்.ஏ., பி.ஓ.எல்.

முதல்வர், செந்தமிழ்கல்லூரி, திருப்பனந்தாள், தஞ்சை மா.வ.


திருவள்ளுவர் முடியாட்சி நடந்த காலத்தில் வாழ்ந்தவர் அவர் அரசர் அமைச்சர் ஆகியோருடைய பண்புகள் பற்றிக் கூறியுள்ளமையை நாம் அறிவோம். எனினும் அவர் காலத்தை வென்றவர்; எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் ஒப்பத்தன் நூலைப் படைத்திருக்கிறார். இலெனின் ஒரு புரட்சி வீரர்; முடியாட்சியிற் கண்ட குறைகளை எதிர்த்து, அவ்வாட்சியை ஒழித்துப் பொதுவுடைமையை நிலைநிறுத்தியவர். அத்தகைய இலெனின் வழியானது வள்ளுவர் வகுத்த வழியே என்றும், வள்ளுவர் கூறிய பண்புகள் இலெனின் மாட்டுண்டு என்றும், 100 திறக்குறள்களை முதற்கண் பெய்து, அக்குறட்பாக்கள் வழி இலெனினை, அறிமுகப் படுத்துகிறார், “வைகையும்-வால்காவும்” பெற்ற (வள்ளுவரும் லெனினும்) என்ற இந்த நூலாசிரியராகிய த. கோவேந்தன் அவர்கள்.

'தனக்குவமை இல்லாதான்' (1) என்பதற்கு மார்க்கையும், செயற்கரிய' (2) என்பதற்குக் கொடுங்கோண்மை போக்கிப் பொது உடைமை நாட்டுதல் என்றும் ‘மறம்’ (8) என்பதற்கு மறப்போர் என்றும், 'அன்பிலது' (9) என்பதற்கு சாரையும் 'எச்சம்' (11) என்பதற்கு உண்மை, ஒழுக்கம், கல்வி என்றும், 'பிறன் மனை' (14) என்பதற்குப் பொய்க் கொள்கை என்றும், 'செய்தவம்' என்பதற்கு இலெனின் ஆற்றிய தொண்டு என்றும் 'வாய்மை' (28) என்பதற்கு மார்க்கின் அறம் என்றும் 'உள்ளியது' (30) என்பதற்குக் கூட்டுடைமைக் கொள்கை என்றும் இவ்வாறாக இலெனின் கொள்கைகட்கேற்பத் திருக்குறளின் சொற்களுக்குப் பொருள் சொல்லப்பட்ட பான்மை போற்றற்குரியது. 22 ஆம் பாடலில் புரட்சித் தீ வருகைக்குக் காரணம் குறளை ஒட்டிக் கூறிய பாங்கும் பாராட்டுதற்குரியதாகும்.

மொத்தத்தில் இது கருத்துச் செறிவான புதுமை நூல்.

பாவேந்தராம் புகழ் பெறற் குரிய நம் அன்பர் த. கோவேந்தன் அவர்களுடைய பாப்புனையும் திறம் ஓங்கி வளர்க ! அவர்தம் நூல்கள் மன்பதைகட்கு நல்லற உணர்ச்சி தருவன வாகுக!!

கா. ம. வேங்கடராமையா

திருப்பனத்தாள்,

10-5-1972.