வ. வே. சு. ஐயர்/வ.வே.சு. ஐயரிடம் தோற்றது ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ்!

விக்கிமூலம் இலிருந்து
வ.வே.சு. ஐயரிடம் தோற்றது ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ்!

சூரியன் மறையாத பிரிட்டிஷ் பேரரசில் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக இருந்தவர் லார்டு கர்ஸான் அவர் ஆங்கிலேய ஆட்சியின் ஆதிக்க வெறியர். அதிகார அகம்பாவத்தில், ஆணவ தந்திரத்தில் வல்லவராக விளங்கியவர் அவர் ஆணவத்திற்குக் காரணம், சூரியன் உள்ளளவும், கடல் நீர் இருக்குமளவும் பிரிட்டிஷ் பேரரசே இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமாகும்.

கர்லான் பிரபு காலத்தில், இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையின் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. எப்படியும் போராட்டத்தை அழித்தே தீருவது என்ற முடிவிலே அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்!

இந்தியாவுக்கு சுதந்திரம் தேவை என்று மிகத் தீவிரமாகப் போராட்டம் நடத்திய மாநிலங்களிலே ஒன்று தமிழ் நாடு, மற்றொன்று வங்காளமாகும்.

தமிழ் நாட்டிலே கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.கலியான சுந்தர முதலியார், சத்திய மூர்த்தி ஐயர், சேலம் விசயராகவாச் சாரியார், வ.வே.சு. ஐயர், கு. காமராஜ் போன்ற எண்ணற்றவர்கள் விடுதலைப் போராட்டத்திலே பங்கேற்று தங்களது உடல், பொருள், உயிர் அனைத்தையும் சுதந்திர தேவிக்காகப் பலிகொடுக்க உழைத்த மாவீரர்கள் ஆவர்.

வங்காள மாநிலத்திலே தோன்றிய விபின் சந்திர பாலர், சித்த ரஞ்சன் தாஸ், சுபாஷ் சந்திர போஸ், அரவிந்த கோஷ் போன்றவர்கள் அவரவர் தேசிய உணர்வுகளிலே புயல்போல உழைத்து சுதந்திர உணர்ச்சியை மக்களிடம் வேகமாகப் பரப்பி வந்தார்கள்!

வங்காள மாநிலத்தில் விடுதலைப் போராட்டம் கர்லான் பிரபு காலத்தில் கடும் புயலாக வீசிக் கொண்டிருந்ததைக் கண்ட அவர், வங்க சுதந்திர வீரர்களின் போராட்டச் செயல்களின் வேரை அறுத்தெறியத் திட்டமிட்டார்.

அன்றைய இந்திய அரசு நிர்வாகத்தில், வங்காளம் மிகப் பெரிய மாகாணமாக இருந்தது. அதை இரண்டாகப் பிரித்து விட்டால், வங்காள மக்களின் தேசிய உணர்ச்சியின் பலம் வலிமையற்றதாகி விடும். அதனால், வங்காளிகளின் சுதந்திரப் போராட்டச் சக்தி குன்றி விடும் என்று எண்ணினார் கர்சன் பிரபு.

என்ன காரணத்தைக் கூறி வங்காள மாநிலத்தை இரண்டு துண்டாக்குவது என்று கர்ஸான் யோசித்தார் நிர்வாக வசதிக்காக வங்கத்தை இரண்டாகப் பிரிப்பது என்ற திட்டத்தை மக்கள் முன்பு அவர் வைத்தார். 1905-ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தை இரண்டாகப் பிரித்தார் கர்ஸான் பிரபு!

வங்காளத்தைப் பிரித்து விட்டால், விடுதலைப் போராட்ட வேகம் தணியும்; வங்காள மக்களின் பலம் குன்றும் என்ற கர்ஸான் பிரபுவின் எண்ணம். அவர் நினைத்தபடி வெற்றி பெறவில்லை. அதற்கு நேர்மாறாக, வங்காள மக்களின் சுதந்திர உணர்ச்சி முன்பு இருந்ததை விட மேலும் பன்மடங்கு வேகமாக வளர்ந்தது!

ஒற்றுமையாக இருந்த வங்காள மக்களைக் கர்சன் பிரபு பிரித்து வைத்துவிட்டானே என்ற மனக் கொதிப்பால், எல்லா மக்களும் ஒன்று கூடி ஆங்கிலேயர் ஆட்சியை மட்டுமன்று, தனிப்பட்ட முறையில் வைசிராய் கர்சானையும் கர்ண கடூரமாக எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிடையே தேசிய உணர்வு ஒரு புதிய உத்வேகத்தோடு கொதித்தெழுந்தது. அன்று வரையில் இல்லாத எதிர்ப்பைக் கர்சான் நிர்வாகத்திடம் அவர்கள் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். வைசிராயும், தனது அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்தி மக்களைப் பழிவாங்கியபடியே ஆட்சியை நடத்தி வந்தார்.

இதைக் கண்ட வங்காள உழவர்கள், தொழிலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள். மாணவர்கள் எல்லாரும் ஒருமுகமாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேசியக் கல்வியைப் பரப்புவதற்குரிய பள்ளிகளும், கல்லூரிகளும் அவர்களால் ஏற்படுத்தப்பட்டன. தெருக்கூத்துக்கள் மூலமாகவும், தேசப் பற்றுட்டிடும். பாடல்கள் நாடகங்கள் மூலமாகவும் மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை மூட்டினார்கள். இந்த நேரத்திலே இளைஞர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

வெள்ளையர் ஆட்சியை எப்படி வீழ்த்துவது என்று அவர்கள் திட்டம் போட்டார்கள். எந்தெந்த இங்கிலீஷ்காரன் கர்சானுக்கு கைக் கூலியோ அல்லது யார்யார் கர்சானுக்குத் துண்டு கோலாக இருந்து தேசியப் போராட்ட வீரர்களைத் துன்புறுத்தினார்களோ, அல்லது வைசிராய்க்கு ஏவலர்களாக இருந்தார்களோ அவர்களை எல்லாம் கொன்றொழிப்பது என்ற முடிவுக்கு வந்து அவர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள் அவர்களை எங்கெங்கே கொல்வது, எப்படியெப்படிக் கொல்வது என்று திட்டம் வகுத்தார்கள். அப்போதுதான் சுயராச்சியம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு அவர்கள் பலியானார்கள் அதன் விளைவு என்ன?

வங்காள மாநிலம் பிரிக்கப்பட்டு விட்டாலும் கூட, எல்லாப் பகுதி சிற்றூர், பேரூர், நகரங்களில் இளைஞர்கள் இரகசியச் சங்கங்களை உருவாக்கி அதனையே சதிக் கூடமாகவும் மாற்றிக் கொண்டார்கள். ஆசிரமங்கள் பல ஆங்காங்கே அவர்களால் உருவாக்கப்பட்டு அங்கேயும் இதே சிந்தனை ரேகைகளே ஓடின!

அந்தச் சங்கங்கள் ஒவ்வொன்றிலும் எண்ணற்ற இளைஞர்கள் உறுப்பினரானார்கள். அவர்கள் உடற்பயிற்சி, குஸ்தி, மல்யுத்தம், வேல்கொம்புச் சண்டை ஒத்திகைகளை நாள்தோறும் நடத்தினார்கள். இன்னும் தீவிரமாகச்சொல்வது என்றால், குத்துச்சண்டை, வாட்போர், குதிரையேற்றம், குறிபார்த்துக் குண்டுவீசுதல், துப்பாக்கி ஏந்திச் சுடுதல் போன்ற வீராவேசக் கலைகள் வேறு என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம் ஒத்திகை நடத்திப் பயிற்சி பெற்றார்கள்.

கல்கத்தா நகரிலே உள்ள காளிகோயிலுக்குள் சென்று, வாளால் தங்கள் மார்பைக் கிழித்து ரத்தம் எடுத்து, அதைக் கையிலே தேங்க வைத்து, தாயே! என் தாய் நாடான இந்தியாவை வெள்ளையர்களிடம் இருந்து விடுவித்திட எங்கள் உடலுக்கும், நெஞ்சுக்கும் உரம் தா! அதற்காக எமது இன்னுயிரையும் தரத் தயார் இதோ காணிக்கையாக்குகின்றோம் என்று காளிதேவி முன்பு அவரவர் குருதியைக் கொட்டி அர்ப்பணித்தார்கள்; சபதம் எடுத்துக் கொண்டார்கள்.

அந்த வாலிபர்கள் வெறும் சூளுரை ஏற்றுக் கொண்டதோடு மட்டும் நிற்கவில்லை. எப்போது? எங்கே? வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்! இங்கிலீஷ்காரர்களைப் பழிக்குப் பழிவாங்கும் திட்டத்தை இந்தியாவிலே மட்டுமன்று, வேறு எந்த நாடானாலும் அங்கேயும் சென்று நீண்ட நாட்களானாலும் தங்கிப் பழிவாங்கவும் தயாராகி ஒவ்வொருவராக ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று கொண்டே இருந்தார்கள். அதே நேரத்தில், ஆங்கிலேயனைத் தனிப்பட்ட நிலையிலும், குடும்பத்தோடும் கொன்று குவித்து, இங்கிலீஷ் பிறவிகளின் கரு உருக்களை அழிப்பது என்ற கடுங்கோய வஞ்சத்துக்கு அந்த இளைஞர்கள் தோள்தட்டிப் புறப்பட்டுவிட்டார்கள்.

யார்யார் இங்கிலீஷ்காரனுக்கு வால் பிடித்து ஜால்ரா தட்டினானோ, அவனையெல்லாம் கூட ஒழிப்பது என்ற முடிவுக்கு அந்த இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள்.

இலண்டன் மாநகர் நோக்கி ஒரு கும்பல் புறப்பட்டது. பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றுவதற்காக! துரோகிகள் யார்யார் என்று பட்டியலிட்டுக் கொண்டு அவரவர் முகவரிகளுடன் அந்தக் கும்பல் லண்டன் சென்றது கப்பலில்!

எந்தக் கர்சான் வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிளந்தானோ, அவனையே இரண்டாகப் பிளக்க இந்திய இளைஞர் குழு இரண்டு மூன்றாகப் பிரிந்து பழிப்பணியிலே இறங்கியது! அந்தக் குழுக்களிலே ஒன்றுதான், வைசிராய் கர்சான் பிரபு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது அவர்மீதே வெடி குண்டை வீசியது தலை தப்பினால் போதும் என்று கர்சான் ஓடி ஒளிந்து கொண்டான்! அப்போதும் அவரை வாலிபர் பட்டாளம் விடவில்லை! அவர்கள் வெளியே காத்துக் கொண்டிருந்தபோது போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டு விட்டதால் கர்சான் உயிர்தப்பி ஓடினான்!

பயங்கரச் செயல்களில் இவ்வாறு ஈடுபட்ட வாலிபர்கள் மீது பிரிட்டிஷ் அரசு பயங்கரவாதிகள் என்ற பட்டத்தைச் சூட்டி அவர்களைப் பிடிக்க சட்டங்களை ஆயுதங்களாக்கி வைத்துக் கொண்டு காத்திருந்தது. அல்லும் பகலும் இந்தப் பயங்கரவாதிகள் எங்கே தங்களது உயிரைப் பழிவாங்கி விடுவார்களோ என்று பயந்தபடியே பல வெள்ளையர் குடும்பம் குடல் நடுங்கி விழித்தபடியே இருந்தது-அவரவர் வீடுகளில் இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பாதுகாப்புக் கொடுப்பதே அப்போதைய அரசுக்குரிய வேலையாக இருந்தது.

வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிளந்து விட்டால், வங்காளிகளின் சுதந்திர தேசிய உணர்ச்சியை அடக்கி அழித்துவிட முடியும் என்று எண்ணிச் செயல்பட்ட கர்சான் ஆட்சியின் வெறிப்பணி, குளிக்கக் குளத்திலே இறங்கியவன் சேறாபிஷேகக் கோலத்தோடு வெளியே வந்த விகார கோர வடிவமாகத் திகழ்ந்து விட்டது. இதுதான் வங்காளப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் நிலையாக இருந்தது. இந்திய வாலிபர்களின் சுதந்திரப் போராட்டச் செயல்கள் எல்லாம் பயங்கரவாதம் என்ற பெயரில் இங்கிலாந்து நாடு முழுவதும் பரவி விட்டன. பிரிட்டிஷ் அரசு தனது சொந்த இனத் தற்காப்புக்காக இந்தச் செயலைக் காட்டுத் தீயைப் போல பரவ இடம் கொடுத்து விட்டது.

வங்காளத்தில் மட்டுமா இந்தத் தீவிரவாத தேச பக்தி தோன்றியது? கர்சான் பிரபு எங்கே தோன்றி ஆடிப்பாடிக் கல்வி கற்று சுகபோக வாழ்வு கண்டு அரசு ஆட்சிப் பணியை ஏற்றானோ. அந்த மண் முழுவதும் பயங்கரவாதப் பீடபூமிபோலவே திகழ்ந்து வந்தது. லண்டன் மாநகரிலும் பயங்கர வாதம் படுவேகமாகவே பரவியது எனலாம்.

இந்தியாவிலே இருந்து பாரிஸ்டர் படிப்புப் படிக்க லண்டன் மாநகர் சென்றவர்களும், பல்வேறு விவகாரங்களுக்காக லண்டன் சென்றவர்களும், லண்டன் சென்றவுடன் பயங்கரவாதிகளாகவே மாறிவிட்டார்கள். வன்முறை ஒன்றைத் தவிர வேறு வழியே கிடையாது இந்தியா தனது சுதந்தரத்தைப் பெற்றிட என்பதை, இந்திய இளைஞர்கள் நம்பினார்கள். இவர்கள் எல்லாரும் லண்டனிலே உள்ள இந்தியா விடுதி என்ற கட்டடத்திலே தங்கலானார்கள்.

இலண்டன் மாநகரிலே உள்ள "இந்தியா விடுதி" என்ற உணவு விடுதியில், இந்தியாவிலே இருந்து கல்வி கற்கவோ,வேறு பணிகள் காரணமாகவோ வருபவர்கள் எல்லாரும் தங்கி அவரவர் பணிகளைப் பார்ப்பார்கள். அதனால், அங்கு தங்குவோர் அனைவரும் ஒருவர்க்கு ஒருவர் அறிமுகமாகி, இந்திய விடுதலைப் போர் பற்றிய முழு விவரங்களை உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்வார்கள். அந்த விடுதிக்குள் சுதந்திர் இந்தியா என்ற நிறுவனத்தை இந்திய வாலிபர்கள் துவக்கி நடத்தி வந்தார்கள்.

அந்த இந்தியா விடுதியிலேயும் சரி, 'சுதந்திர இந்தியா' நிறுவனத்திலும் சரி, இந்தியாவை வன்முறையில் எவ்வாறு விடுவிக்கலாம் என்ற திட்டத்தைப் பற்றியே அவர்கள் சிந்தித்து செயல்படுத்துவார்கள். இந்த விடுதியிலே தங்கும் இந்தியர்கள் ஒன்றுகூடி அடிக்கடி கூட்டம் நடத்தி, இந்திய சுதந்திரம் பற்றி விவாதித்து முடிவு காண்பார்கள்.

இலண்டன் நகரிலே உள்ள ஸ்காட்லாண்ட் யார்டு என்ற இரகசியப் போலீஸ் நிறுவனம் உலகிலேயே மிகப் புகழ்பெற்ற போலீஸ் பிரிவாகும். அந்தப் பிரிவில் துப்பறியும் வல்லமை பெற்ற பெரும் நிபுணர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து நாட்டிலும் சரி, அல்லது உலகின் மிகப் பெரும் மாநகர்களிலே ஒன்றான லண்டன் நகரிலும் சரி, எது எந்த மூலையிலே, எப்போது நடந்தாலும் சரி, அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே ஸ்காட்லாண்டு யார்டு போலீசுக்கு உடனே முழுவிவரமும் தெரிந்துவிடும். பிறகு அந்த விவரத்தை வைத்துக் கொண்டு மேலாலுள்ள நடவடிக்கைகளை அந்தப் போலீஸ் துறை கண்டு பிடித்து விடும். அவ்வளவு உலகப் புகழ் பெற்ற பாராட்டுதல்களைப் பெற்ற துறை ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் துறை.

இந்நிலையில், இந்தியா விடுதியில் நடைபெறும் சம்பங்கள். எல்லாமே ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் துறைக்கு அவ்வப்போது தெரிந்து வந்தது. அதனால், அந்த ரகசியப் போலீஸ் துறை அந்த விடுதியில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளையும் எச்சரிக்கையுடன் கவனித்து வந்தது. நம்மை ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் துறை ரகசிய மாகக் கவனிக்கின்றது என்பதை இந்திய இளைஞர்களும் சந்தேகமின்றித் தெரிந்து கொண்டார்கள்.

இந்திய இளைஞர்கள் அனைவரும் பாரிஸ்டர் சட்டப் படிப்பு படிக்க வந்தவர்கள் தானே! அதனால், தாங்கள் செய்யும் எந்தவிதச் செயலையும் எவரும் கண்டுபிடிக்க முடியாதபடி தட்யங்களோ, அதற்கான ஆதார எழுத்து வடிவச் சான்றுகளோ ரகசியப் போலீசாரிடம் சிக்கிவிடாதபடி மிக எச்சரிக்கையுடன் விழிப்பாகச் செயல்பட்டு வந்தார்கள்.

மிகுந்த பாதுகாப்புடனும், கவனத்துடனும் எதையும் செய்யப் பழகிவிட்ட இந்திய வாலிபர்களை ரகசியப் போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்படியே இலண்டன் இரகசியப் போலீசாரும் இந்திய இளைஞர்களும் இருவரில் ஒருவர் எப்போது சிக்குவார்கள்; பழிதீர்த்துக் கொள்ளலாம் என்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தார்கள்.

இந்த நேரத்தில், இங்கிலீஷ்காரர்களை எல்லாம், பொதுவாக இங்கிலாந்து நாட்டு மக்களை எல்லாம், குறிப்பாக் லண்டன் மாநகரத்து ஆங்கிலேயர்களுக்குகெல்லாம் ஏன் பிரிட்டிஷ் ஆட்சிக்கே அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்தது.

மதன்லால் திங்க்ரா என்ற இந்திய தீவிரவாத இளைஞன், லண்டன் மாநகரிலே இரண்டு மூன்று மாதங்களாகத் தங்கியிருந்தான் இந்திய சுதந்திரத்தை வன்முறைகளால் பெறமுடியும் என்ற குறிக்கோளை உடையவன் அவன். வங்கத்தை இரண்டாகப் பிளந்தானே கர்சான் பிரபு, அவனுக்குக் கைக்கூலியாக எடுபிடியாக, ஆள் காட்டியாக, லார்டு கர்சானின் ஆணவக்குரலை இந்தியர் மேல் திணித்து அமுல் படுத்தும் அதிகாரி ஏவலாளராக இருந்த கர்ஸான் வைலி, லால்காக்கா என்ற இரண்டு வெள்ளைக்காரர்களை, அவர்கள் பணி ஓய்வு பெற்று லண்டன் திரும்பிய சூட்டோடு சூடாக மதன்லால் திங்க்ரா துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டான்.

அந்த வெள்ளைக்கார அதிகாரிகள் இருவரும், இந்தியாவிலே கர்ஸான் ஆலோசகர்களாக இருந்து இந்திய மக்களுக்கு எண்ணிலாத தீமைகளைச் செய்தவர்கள். அவர்களை எப்படியும் சுட்டுக் கொல்வது என்ற குறிக்கோளுடன் மதன்லால் திங்க்ரா லண்டனிலே தங்கி இருந்தான். அந்த ஆங்கிலேயர்களைச் சுட்டுக் கொன்ற மதன்லால் திங்க்ராவை, லண்டன் போலீஸ் கைது செய்து சிறையிலே அடைத்தது.

வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. மராட்டிய சிங்கம், பாரிஸ்டர் படிப்புப் படித்துத் தேர்வு பெற்றுப் பட்டம் பெற இருந்த விநாயக ராவ் சாவர்கர் எனப்படும். வி.டி.சாவர்கரை பிரிட்டிஷ் அரசு திங்க்ரா வழக்குடன் இணைத்து அவரையும் கைதுசெய்து அப்போது சிறையிலே அடைந்திருந்தது.

சிறைக்கு அடிக்கடி சென்ற சாவர்கரைச் சந்தித்துப் பேசுகின்ற ஒருதாடிக்கார இளைஞனைப் போலீசார் கண்கானித்து வந்தார்கள். அந்த இளைஞர் மீது ஸ்காட்லாண்ட் யார்டு போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. யார் இந்தத் தாடிக்கார வாலிபன்?

அந்த வாலிபரைக் கைது செய்யப் போலீஸ் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆனால், அந்தத் தாடிக்காரரோ போலீஸ் செய்யப் போகும் செயலை முன் கூட்டியே தெரிந்து கொண்டதால் எச்சரிக்கையாக நடக்கலானார்! போலீஸ் தன்னைக் கைது செய்ய வர இருக்கிற நேரத்தையும், நாளையும் தெரிந்து கொண்ட தாடிக்கார இளைஞர். இலண்டன் நகரை விட்டு வெளியேறத் தயாரானார்!

பாதிராத்திரி வேளை! லண்டன் மாநகர மக்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். திடீரென ரகசியப் போலீசார் இந்தியா விடுதியிலே புகுந்து, முக்கிய பகுதிகளை எல்லாம் சோதனை செய்து வந்தனர். போலிசார் விடுதியை நாற்புறமும் சூழ்ந்து கொண்டார்கள்.

ஒரே ஒர் அதிகாரி மட்டும், மாறு வேடத்தில் உணவு விடுதியின் வாயிற்படி வழியாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குடுமியும், தாடியும் வைத்துக் கொண்டும், திடகாத்திரமான உடற்கட்டுடனும் பார்ப்பதற்கு ஒரு பராக்கிரம சாலியைப் போல உள்ள மனிதர் ஒருவர், அந்த விடுதியிலே இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அவரது கையில் பெட்டி ஒன்று இருந்தது.

தாடிக்காரரிடம், மாற்றுடையில் வந்த போலீஸ் அதிகாரி ஒரு கவரை நீட்டினார்.

தாடிக்காரர் அசகாய சூரர். அக் கவரைத் தனது கையால் கூடத் தொடவில்லை. ஆனால் அதன் மீது எழுதப் பட்டிருந்த பெயரை படித்தார். பிறகு, கவரைத் தம்மிடம் நீட்டிய போலீசைப் பார்த்து. "நீங்கள் யாருக்கோ எழுதப்பட்டுள்ள கவரை என்னிடம் காட்டித். தருகிறீர்கள். உள்ளே சென்று விசாரித்துப் பாருங்கள்! நான் வருகிறேன்” என்று கூறிக் கொண்டே மெதுவாக அவ்விடத்தை விட்டு வெளியே சென்றார்!

அந்தத் தாடிக்காரருடைய பேச்சில் அச்சமோ, பயமோ, திணறலோ, பதற்றமோ, பரபரப்போ, முகக்களை இழப்போ, அல்லது மாறுதலோ கொஞ்சமும் இல்லை. அவர் பேசும் போது தெளிவாகவும், நறுக்குத் தெறித்தாற் போலவும். அருமையான அழகான ஆங்கில மொழியிலே பேசியதைக் கண்ட அந்தப் போலீஸ் அதிகாரி மெய் மறந்து நின்றார்!

பின்னர் தாடிக்காரர் கையிலிருந்த பெட்டியின் மேல் பாகத்தில் வி.வி.எஸ். என்று எழுதப் பட்டிருந்ததைக் காட்டி, கவர்மீது எழுதப்பட்டிருக்கும் பெயருக்கு உரியவர் இல்லை என்கிறீர்கள். உங்களுகடைய பெட்டி மீதும் இதே பெயர் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளதே. இதன் பொருள் என்ன? என்று எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டு விட்டார்.

தாடிக்காரர், தடுமாறாமல், “என் பெயர் வி. விக்ரம் சிங் அதையே சுருக்கி நான் வி.வி.எஸ். என்று எழுதியிருக்கிறேன். உங்களுக்கு மேலும் ஏதாவது சந்தேகமிருந்தால், என் பெட்டியைத் திறந்து பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று கூறிக் கொண்டே தனது கையிலே இருந்த பெட்டியை மாறு வேடத்திலிருந்த போலீஸ் அதிகாரியிடம் கொடுத்தார்.

ஒரு போலீஸ்காரரின் கேள்விக்கு எந்த விதத் தடுமாற்றமும் இல்லாமல், பதில் டக்டக்கென்று நறுக்குத் தெறித்தாற் போலத் தயக்கமேதும் இல்லாமல் வந்ததால், தாம் தேடி வந்த வி.வி.எஸ். என்பவர் தாடிக்காரர் அல்லர் என்பதை முடிவு செய்து கொண்டு, அவரிடம் ‘சாரி, என்று கூறிவிட்டு போகுமாறு விடை கொடுத்தார் அந்த அதிகாரி.

 மாறு வேடப் போலீஸ் அதிகாரி விடுதிக்குள் போனார். ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து நோக்கினார் அனைவரின் வரலாற்றையும் பொறுமையோடு புலன்விசாரணை செய்தார்! அவர் யாரைத் தேடிவந்தாரோ அவரைக் கண்டு பிடிக்க முடியாமல் தோற்றார் - பாவம்?

ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் அதிகாரியை ஏமாறவைத்துத் தப்பிய அந்தத் தாடிக்காரர் பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரீஸ் நகருக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே காமா அம்மையாரின் உதவியோடு தங்கி இருந்தார். இந்தச் செய்தி பல நாட்களுக்குப் பிறகு தான்் லண்டன் நகர் ரகசியப் போலீசுக்குத் தெரிந்தது.

தம்மிடம் தந்திரமாகப் பேசி தப்பித்துச் சென்ற அந்தத் தாடிக்காரர்தான், போலீஸ் தேடிக்கொண்டிருந்த இந்திய இளைஞர் என்பதை அந்த ரகசியப் போலீஸ் அதிகாரி அறிந்தார். ஓர் இந்திய இளைஞன், தன்னை - அதாவது உலகப்புகழ் பெற்ற ஸ்காட்லாண்ட் பார்டு ரகசியப் போலீசையே ஏமாற வைத்துவிட்டுத்தப்பிச்சென்று விட்டானே, என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்.

பல்வேறு இடங்களிலே மாறுவேடங்களோடு வலம் வந்த அந்தத் தாடிக்காரரை, பிரிட்டிஷ் ரகசியப் போலீஸ் வல்லவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

இந்தியாவுக்கு வந்து சேர்ந்த அந்தத் தாடிக்காரர். புதுச்சேரியிலே இருந்தபடியே, லண்டனிலுள்ள ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் அதிகாரிக்கு தான் மிக ஜாக்கிரதையாக மீண்டும் இந்தியா வந்து சேர்ந்து விட்டதை தந்தி மூலம் அறிவித்தார்.

பிரிட்டன் ரகசியப் போலீஸ் படையை ஏமாறவைத்த அந்தத் தாடிக்காரர் யார் தெரியுமா? அவர்தான் தீவிர தேசபக்தர் வ.வே. சுப்பிரமணிய ஐயர் எனப்படும் வ.வே.சு. ஐயராவார். அவருடைய தீரம் செறிந்த வீர வரலாற்றைத் தொடர்ந்து படிப்போம்.