பெருங்கதை/2 14 உண்டாட்டு

விக்கிமூலம் இலிருந்து
(2 14 உண்டாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

2 14 உண்டாட்டு

1[தொகு]

ஆடுத லானா வளப்பின னாகி
நாடுதலை மணந்த நன்னகர் நினையான்
மாயோன் மார்பின் மன்னுபு கிடந்த
ஆரம் போல வணிபெறத் தோன்றிப்
பசும்பொற் றாதொடு பன்மணி வரன்றி 5
ஆசும்புசோ ரருவரை யகலம் பொருந்தி
ஞால மாந்தரை நாணி யன்ன
நடுங்குசெலற் கான்யாற்றுக் கடும்புன லாடி
மணிநிழற் பாறை மருங்கிற் பல்கி
அணிகலப் பேழை யகந்திறந் தன்ன 10

2[தொகு]

நறுமல ரணிந்த குறுவாய்க் குண்டுசுனை
நீணீர் முழவின் பாணியிற் பாடியும்
குழையர் கோதைய ரிழைய ரேரிணர்த்
தழையர் தாரின ருழைவயிற் பிரியார்
பல்வகை மகளிரொடு செல்வஞ் சிறந்தும் 15
கானுறை மகளிரிற் கவின்பெறத் தோன்றித்
தேனுறை சிலம்பிற் றானந் தோறும்
விரவுமலர்க் கோதையர் வேறுவே றியலிக்
குரவம் பாவைகொண் டோலுறுத் தாடியும்
விரிந்துவே யுடைத்த வெண்கதிர் முத்தம் 20

3[தொகு]

தெரிந்துவே றமைத்துச் சிற்றி லிழைத்தும்
பூங்கட் பாவைக்குப் பொற்கல மிவையெனத்
தேங்கட் சாரற் றிருந்துசினை மலர்ந்த
கோங்கந் தட்டம் வாங்கினர் வைத்தும்
செப்பட ரன்ன செங்குழைப் பிண்டிக் 25
கப்புடைக் கவிசினை நற்புடை நான்ற
தழைக்கயிற் றூசல் விருப்புற் றூக்கியும்
பைங்கொடி முல்லை வெண்போது பறித்தும்
கத்திகை தொடுத்தும் பித்திகை பிணைத்தும்
சித்திர மாகச் செந்தளிர் வாங்கிப் 30

4[தொகு]

பத்திரச் சேதம் பற்பல கிள்ளியும்
உறியோர்க் குதவுதல் செல்லா தொய்யெனச்
சிறியோ ருற்ற செல்வம் போலப்
பொருசிறை வண்டினம் பொருந்தாது மறக்க
நறுமலர்ச் செல்வமொடு நாட்கடி கமழும் 35
செண்பகச் சோலைத் தண்டழை தைஇயும்
பேறருங் கற்பிற் பிரச்சோ தனன்மகள்
மாறடு வேற்கண் வாசவ தத்தை
செல்வமுஞ் சிறப்பும் பல்லூழ் பாடிக்
குராஅ நீழற் கோல்வளை யொலிப்ப 40

5[தொகு]

மராஅங் குரவை மகிழ்ந்தனர் மறலியும்
ஆடுபொற் கிண்கிணி யடிமிசை யரற்ற
நீடி யன்ன நீழலறை மருங்கிற்
பந்தெறிந் தாடியும் பாவை புனைந்தும்
அந்தளிர்ப் படைமிசை யயர்ந்தன ரொடுங்கியும் 45
ஏன்றஃ குறவ ரிருங்குடிச் சீறூர்
மானமர் நோக்கின் மகளிரொடு மரீஇ
வெங்கண் மறவர் வில்லின் வீழ்த்த
பைங்கண் வேழத்துப் பணைமருப் புலக்கையின்
அறையுர னிறைய வைவனப் பாசவல் 50

6[தொகு]

இசையொடு தன்னைய ரியல்புபுகழ்ந் திடிக்கும்
அம்மனை வள்ளை யின்னிசை கேட்டும்
கோயின் மகளிர் மேயின ராடப்
பொருவில் போகமொ டொருமீக் கூறிய
உலுவப் பூந்தா ருதயண குமரனும் 55
வள்ளியம் பணைத்தோண் முள்ளெயிற் றமர்நகை
வான்மணிக் கொழும்பூண் வாசவ தத்தையும்
இயல்பிற் செய்ய வாயினு முயர்வரை
அருவி யாட்டினு மறற்சுனைத் திளைப்பினும்
பூங்குழை மகளிர் பொலங்கலத் தேந்திய 60

7[தொகு]

தேங்கமழ் தேறலொடு தெளிமது மடுப்பினும்
தாமரை செவ்விதழ்த் தலைக்கேழ் விரித்த
காமர் நெடுங்கண் கைம்மீச் சிவப்பக்
கனிந்த காதலொடு முனிந்து…..
மயக்க மாகி முயக்க மில்லாது 65
பிரிவரும் புள்ளி னொருமையி னொட்டி
வண்டார் சோலை வளமலைச் சாரல்
உண்டாட் டயர்பவா லுவகையுண் மகிழ்ந்தென்.

2 14 உண்டாட்டு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெருங்கதை/2_14_உண்டாட்டு&oldid=482587" இலிருந்து மீள்விக்கப்பட்டது