பெருங்கதை/2 15 விரிசிகை மாலை சூட்டு

விக்கிமூலம் இலிருந்து
(2 15 விரிசிகை மாலை சூட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

2 15 விரிசிகை மாலைசூட்டு

முனிவராச்சிரமம்[தொகு]

வண்டார் சோலை வளமலைச் சாரல்
உண்டாட் டயரும் பொழிதி னொருநாள்
வழையமன் முன்றிலொடு வார்மணல் பரப்பிக்
கழைவளர் கான்யாறு கல்லலைத் தொழுகி
ஊக முகளு முயர்பெருஞ் சினைய 5
நாகப் படப்பையொடு நறுமலர் துறுமிச்
சந்தனப் பலகைச் சதுரக் கூட்டமொடு
மந்திரச் சாலை மருங்கணி பெற்ற
ஆத்திரை யாளர் சேக்குங் கொட்டிலும்
நெடியவன் மூவகைப் படிவம் பயின்ற 10
எழுதுநிலை மாடமு மிடுகுகொடிப் பந்தரும்
கல்லறை யுறையுளொடு பல்லிடம் பயின்றே
துறக்கக் கிழவனுந் துன்னிய காலை
இறக்க லாகா வெழிற்பொலி வெய்திக்
தண்பூந் தணக்கந் தமாலந் தகரம் 15
ஒண்பூங் காந்தள் வெண்பூஞ் சுள்ளி
வேயா நாற்றமொ டணிவளங் கொடுப்பக்
கையமைந் தியற்றிய செய்சுனை தோறும்
வராலும் வாளையு முராஅய் மறலக்
கழுநீ ராம்பல் கருங்கேழ்க் குவளையொடு 20
கொழுநகைக் குறும்போது குறிப்பிற் பிரியாப்
புணர்ச்சி மகளிர் போகத்துக் கழுமித்
துயிற்கண் டிறந்த தோற்றம் போல
நறவுவாய் திறந்து தாண்மதுக் கமழ
அறுகால் வண்டின மார்ப்ப வயலே 25
அந்தீம் பலவு மள்ளிலை வாழையும்
முதிர்கோட் டெங்கொடு முன்றி னிவந்து
மணிக்கண் மஞ்ஞையு மழலை யன்னமும்
களிக்குரற் பறவுங் கருங்குயிற் பெடையும்
பூவையுங் கிளியும் யூகமு மந்தியும் 30
மருளி மாவும் வெருளிப் பிணையும்
அன்னவை பிறவுங் கண்ணுறக் குழீஇ
நலிவோ ரின்மையி னொலிசிறந் துராஅய்
அரசிறை கொண்ட வாவணம் போலப்
பொலிவொடு புணர்ந்த பொழிலகம் புதைஇப் 35
பெருந்தகு படிவமொடு பிறப்பற முயலும்
அருந்தவ நோன்மைய ராத்திரைக் கொட்டிலிற்
கேள்வி முற்றிக் கிரிசை நுனித்த
வேள்விக் கலப்பை விழுப்பொருள் விரதத்துச்
சீரை யுடுக்கை வார்வளர் புன்சடை 40
ஏதமில் காட்சியோர் மாதவ ருறையும்
பள்ளி குறுகி யொள்ளிழை மகளிரொடு
வான்பொற் கோதை வாசவ தத்தையும்
காஞ்சன மாலையுங் காண்டகற் ககலப்
பெருந்தண் பிண்டி பிணங்கிய நீழல் 45
அரும்படைத் தானை யகன்ற செவ்வியுள்
வயந்தக குமரனொடு வத்தவ னிருந்துழி

விரிசிகையின் பாதாதிகேச வருணனை[தொகு]

ஏத மின்றி யிறைக்கடன் கழித்துக்
காதற் பெருந்தொடர் களைத லாற்றான்
மாதர்த் தேவியொடு மாதவம் புரிந்த 50
மன்னவ முனிவன் றன்னம ரொருமகள்
அணித்தகு பேரொளி யரத்த மடுத்த
மணிப்பளிங் கன்ன மாசில் வனப்பின்
உகிரணி பெற்ற நுதிமுறை சுருங்கி
நிரலள வமைத்த விரலிற் கேற்பச் 55
செம்மையிற் சிறந்து வெம்மைய வாகி
ஊன்பெறப் பிறங்கி யொழுகுநீ ராமைக்
கூன்புறம் பழித்த கோலப் பறவடிக்
குவிந்த வடிமையிற் கோபத் தன்ன
பரட்டி னன்னாப் பாய சீறடித் 60
திரட்டி யன்ன செல்வக் கணைக்காற்
செறிந்துவனப் பெதிர்ந்த தேன்பெய் காம்பின்
நிறங்கவின் பெற்ற காலமை குறங்கிற்
கைவரை நில்லாக் கடுஞ்சின வரவின்
பையழித் தகன்ற பரந்தேந் தல்குல் 65
துடிநடு வன்ன துளங்கிய நுசுப்பிற்
கொடியடர்ந் தொழுகிய கோல மருங்கின்
புன்றஃசுழி யலைத்துப்பொருந்திய கொப்பூழ்
வனப்புவீற் றிருந்த வாக்கமை யவ்வயிற்
றஞ்சி லாகத் தெஞ்சுத லின்றித் 70
திணைமுத லிட்ட செங்கண் முகிழ்முலை
அணைபுரை மென்மை யமைபடு பணைத்தோட்
காம்பமை சிலம்பிற் கடிநாட்காந்தட்
பூந்துடுப் பன்ன முன்கையிற் பொலிந்து
கொழுமுகை குவித்த செழுமென் சிறுவிரற் 75
கிளிவா யன்ன வொளிவா யுகிரின்
விரிந்துநிலா நிறைந்த மேதகு கமுகின்
எருத்தற் கேற்ற திருத் தகு கழுத்திற்
கூடுமதி யன்ன சேடணி திருமுகத்
தகழ்கடற் பிறந்த வாசறு பேரொளிப் 80
பவழக் கடிகை பழித்த செவ்வாய்
முருந்தொளி முருக்கிய திருந்தொளி முறுவல்
நேர்கொடு சிவந்த வார்கொடி மூக்கிற்
பொருகயல் போலப் புடைசேர்ந் துலாஅய்ச்
செருவேல் பழித்த சேயரி நெடுங்கட் 85
கண்ணிற் கேற்ப நுண்ணிதி னொழுகி
முரிந்தேந்து புருவம் பொருந்திய பூநுதல்
நாள்வாய் வீழ்ந்த நறுநீர் வள்ளைத்
தாள்வாட் டன்ன தகையமை காதின்
நீல மாமணி நிமிர்ந்தியன் றன்ன 90
கோலங் கொண்ட குறுநெறிக் கூழை
ஒருசிகை முடித்த வுறுப்பமை கோலத்து
விரிசிகை யென்னும் விளங்கிழைக் குறுமகள்

விரிசிகையின் செயல்[தொகு]

இருந்தினி தொழுகு மியன்மலைப் பள்ளியுள்
அருந்தவ ரல்லதை யாடவ ரறியாள் 95
தவிர்வில்காதலொடு தன்வழிப் படூஉம்
கவர்கணை நோன்சிலைக் காம னிவனெனும்
மைய லுள்ளமொடு பைய வியலிப்
பிள்ளைமை கலந்த பேதைப் பெரும்பிணை
வெள்ளை நோக்கமொடு விரும்புபு விதும்பிப் 100
பவழப் பாவையும் பந்துங் கிடைஇப்
புகழப் பட்ட பூமரக் காவினுள்
நந்தி வட்டமு நாகத் தலரும்
சிந்து வாரமுஞ் சேபா லிகையும்
மணிக்குருக் கத்தியும் பணிப்பூஞ் சுள்ளியும் 105
நாட்சிறு சேடமு நறுஞ்செண் பகமும்
கோட்கமைந் தேந்திய கோலப் பன்மலர்
அம்பூங் குடங்கை யகவயி னடக்கிக்
கோம்பேர் மருங்குல் கோமகற் குறுகித்
திருந்துவாய் திறந்து தேனென மிழற்றிப் 110
பெருந்தண் மலரிற் பிணைய றொடுத்தென்
பாவையும் யானும் பண்புளிச் சூடுகம்
ஈமி னையவென் றிரந்தனணீட்ட

உதயணன் கருதுதலும் மாலை தொடுத்து விரிசிகைக்கு ஈதலும்[தொகு]

நூலொடு புணர்ந்த வாலியன் மரபிற்
றவத்தியற் பள்ளி சார்ந்தன ளுறையும் 115
இயற்கைத் திருமக ளிவளென வெண்ணி
இணைமலர் நெடுங்க ணிமைத்தலும் வாடிய
துணைமலர்க் கோதைத் தோற்றமும் கண்டே
முனிவர் மகளெனத் தெளிவு முந்துறீஇ
ஐய மின்றி யாணை யோட்டிய 120
தெய்வத் திகிரி கைவலத் துயரிய
நிலப்பெரு மன்னர் மகளிர்க் கமைந்த
இலக்கணக் கூட்ட மியற்படத் தெரியா
அரும்படை வழக்கி னன்றியு முனியாது
நரம்புபொரத் தழும்பிய திருந்துவிர லங்கையில் 125
புரிநூன் மீக்கோள் பூம்புறத் தேற்றதன்
தெரிநூல் வாங்கி யிருநூற் கொளீஇப்
பவழமும் வெள்ளியும் பசும்பொன் னடரும்
திகழ்கதிர் முத்தமுந் திருமணிக் காசும்
உறழ்படக் கோத்த வொளியின போல 130
வண்ணம் வாடாது வாசங் கலந்த
தண்ணறும் பன்மலர் தானத் திரீஇ
வாட்டொழிற் றடக்கையின் வத்தவர் பெருமகன்
சூட்டுநலம் புனைந்து சுடர்நுதற் கீய
ஈயக் கொண்டுதன் னெழின்முடிக் கேற்பச் 135
சூடுத றேற்றாள் சுற்றுபு திரியும்
ஆடமைத் தோளி யலமர னோக்கி
மடவரன் மாதரை வாவென வருளித்
தடவரை மார்பன் றாண்முத லுறீஇ
உச்சிக் கேற்ப வொப்பனை கொளீஇப் 140
பக்கச் சின்மலர் பத்தியிற் கட்டுபு
நீல நாகம் பைவிரித் தன்ன
கோலச் சிகழிகை தான்முதல் சேர்த்தி
அஞ்செங் கத்திகை யணிபெற வடைச்சிப்
பைங்கேழ்த் தாமம் பக்கம் வளைஇ 145
இருளறு மதியிற் றிருமுகஞ் சுடர
அமைபுரி தோளியை யன்பி னளைஇப்
புனைமலர்ப் பிணையல் சூட்டினன் புகன்றென்.

2 15 விரிசிகை மாலைசூட்டு முற்றிற்று.