பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

என்னை மன்னித்து விடு கண்ணா! உன்னை எள்வளவு சீக்கிரத்தில் நான் லேசாக எடைபோட்டு விட்டேன். மலடி என்ற அவச் சொல்லை. நீ துடைத்துக் கொள்வதற்காகப் புருஷனை நெருப்பாற்றில் தள்ளி விட்டாயே என்று நான் உன்னைப் பற்றிப் போட்டுக் கொண்ட கணக்கு எவ்வளவு தவறாகப் போய் விட்டது கண்ணா! என்னைச் சாவிலே இருந்து ஒரு நொடியில் காப்பாற்றிய உன்னை நான் என்றும் தலைகுனிய விட மாட்டேன்’ என்று தனக்குள்ளே ஏதோ தீர்மானித்துக் கொண்டவனாய் வீட்டுக்குள் ஒடி கண்ணாத்தாளுக்கு பதில் கடிதம் எழுதினான் கண்ணப்பன்.

 

ண்ணப்பனிடமிருந்து யாருக்கும் கடிதம் வரவில்லையே என்று எல்லோரும் திகைத்துப் போயிருந்தார்கள். ஒரு வாரத்திற்குப் பிறகு கண்ணாத்தாளுக்கு மட்டும் அவனிடமிருந்து கடிதம் வந்தது. -

பிரியமுள்ள கண்ணாவுக்கு, உன் கடிதம் கிடைத்தது. அந்தக்கடிதம் என்னை மறுபிறவி எடுக்க வைத்து விட்டது. தக்க நேரத்தில் உன் கடிதம் வந்து சேர்ந்திராவிட்டால் நம் இருவருடைய வாழ்க்கையிலும் விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.

கண்ணா, கடிதத்தில் எதையும் விரிவாக எழுத வேண்டமென நினைத்துக் சுருக்கமாகவே எழுதியிருக்கிறேன். உன்னை எல்லோருமாகச் சேர்ந்து கர்ப்பவதியாக்கி விட்டார்கள் என்று மட்டும் எனக்குப் புரிகிறது. அதுவும் ஒருவகைக்கு நல்லது தான். இனிமேல் நீ எதையும் அடித்துப் பேசி அகப்பட்டுக் கொள்ள வேண்டாம்: ஆகவே என் கண்ணா கர்ப்பவதி தான்! ஆம்; கர்ப்பவதி யாக நடித்துவிடும்படி உனக்குச் சொல்லுகிறேன். மற்றவைகளைப் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இந்தக் கூத்தினால் மலடி என்ற கேலிப் பேச்சும் இனி உன்னைத்தீண்ட முடியாது; பிள்ளை இல்லாதவன் என்பதால் நான் என் வீட்டில் இழந்த மரியாதையையும் திருப்பிக் கொள்வேன். நாமே பெற்றால் தான பிள்ளை? கண்ணா ஒரு முறை நீ சொன்னயே - குடும்பம் என்றால் ஏதாவது ரகசியம் இருக்கவேண்டும் என்று! அதைக் காப்பாற்ற வேண்டியது இன்று முதல் நம் வீட்டுப் பொறுப்பு. -

இப்படிக்கு உன் கணவன்
கண்ணப்பன்."

கண்ணாத்தாளுக்கு இந்தக்கடிதம் துப்பறியும் கதை படிப்பது போல் இருந்தது. கடிதத்தை மறைத்துக் கொண்டு அறைக்குள் ஓடினாள்.