பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விலக்க வேண்டும். “எல்லாரும் ஓர் குலம்” என்ற கருத்து சங்க காலத்திலிருந்து இலக்கியங்களில் ஒரே மாதிரியாக உரத்த குரலில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. யாராவது கேட்டார்களா? பின்பற்றினார்களா? படித்ததில் என்ன குறைவா? உரைகள் எழுதி அச்சிடவில்லையா? பட்டி மன்றங்களில் பேசி மகிழவில்லையா?

ஆனால், நடைமுறை என்ன? “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்பது என்னாயிற்று? தெருச் சண்டைகள்தானே வளர்ந்தன! குருதிக் கலப்புடையவர்கள் கூட, சுற்றத்தாராக இல்லையே! அண்ணன் - தம்பி சண்டை, கணவன் - மனைவி சண்டை மலிந்து வருகின்றனவே! “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்! என்பது என்னாயிற்று?

திருமுறைகளைப் போற்றிப் பூசனை செய்யும் இடங்களிலெல்லாம் சாதிவெறி முடைநாற்றம் வீசுகிறது! இன்றும் தனித்தனிப் பந்தியே போடுகின்றனர்! அது மட்டுமா? திருமந்திரத்திற்குப் புது உரை கூறுகின்றனர். சிவனை வழிபடும் உயர்ந்தோர் ஒருகுலமாம். இது சிறப்பு விதியாம். பொதுவிதியல்லவாம்! இது அந்தச் சாதி வெறியாளர்கள் கற்பிக்கும் அனுபவ உரை. “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்பது என்னாயிற்று?

“பிறக்கும் வகையினால் ஒத்தன” என்று உரை எழுதி, உரையைக் கெடுத்ததுதான் மிச்சம்! “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!” என்பது என்னாயிற்று? இந்தப் பாடலைப் பாராயணம் செய்வோர், “தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்கள், சட்டை போட்டதால் மழை பெய்யவில்லை” என்று கூறும் அளவுக்கு அப்பரடிகளின் கொள்கை வெற்றி முழக்கம் செய்கிறது!

இவர்கள் படித்தால் என்ன? பாராயணம் செய்தால் என்ன? கற்றால் என்ன? கேட்டால் என்ன? திருந்த