பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


துன்பத்தையும் அங்ஙனமே கவலையின்றியும், நொந்து கொள்ளாமலும் துய்த்தால் ஊழ் தோன்றாது.

எல்லா ஊர்களையும் தமது ஊர்களாகவும் எல்லாரையும் சுற்றத்தாராகவும் கருதவேண்டும்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரி அமரர் அறிஞர் அண்ணாவுக்கும் பிடித்தமான வரி. இது பரந்த-விரிந்த, உலகியல் ஒருமைக்கொள்கையையும் மனித குலம், ஒருகுலம் என்ற உயர் கொள்கையையும் உணர்த்துகிறது.

எல்லாரும் சுற்றத்தினர். ஆதலால் ஒருவருக்கொருவர் நன்மை செய்து கொள்வர்; ஆனால் தீமை செய்து கொள்ள மாட்டார்; நன்மை செய்து கொள்ளலாம்; செய்து கொள்ள வேண்டும்.

ஆயினும், ஒருவர், ஒருவருக்கு நன்மை செய்யும் பொழுது, நன்மையைச் செய்பவர்கள் உயர்ந்தவர்களாகவும், நன்மையைப் பெற்றவர்கள் தாழ்ந்தவர்களாகவும் கருத இடம் ஏற்படலாம். அது மட்டுமின்றி, நன்மையின் அடிப்படையில் விருப்பங்களும், தீமையின் அடிப்படையில் வெறுப்புக்களும் தோன்ற இடமுண்டு.

ஆதலால், ஒருவர் நன்மை செய்தாலும் அந்த நன்மை செய்பவர் செய்தே தீரவேண்டிய கடப்பாடும், நன்மை பெறுபவருக்கு நன்மை பெறுதலுக்குரிய உரிமையும் ஊழின் வழி அமைந்தன என்று கருதுவதின் மூலம் விருப்பு வெறுப்புகளைத் தவிர்க்கலாம்; புதிய ஊழ் தோன்றுதலையும் தவிர்க்கலாம். அதுமட்டுமா?

வாழ்க்கையில் சந்திக்கும் இன்பங்களையும், துன்பங்களையும் கண்டு வெறியுணர்வின்றித் தணிந்த உணர்வுடன் அல்லது நொந்து கொள்ளும் உணர்வுடன் துய்க்கும் இயல்பும் எளிதில் வருவதன்று. அதுவும் ஊழின் வழிப்பட்டதேயாம்.