பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

179


என்ன? “கமிஷன்” வந்தால் என்ன? போனால் என்ன? என்று ஏனோதானோ என்று நினைக்கக் கூடாது.

நாட்டு மக்கள், நல்லவர்களாக இல்லாதுபோனால் அந்த நாட்டில் நல்லாட்சி அமையாது அமையமுடியாது. எனவே, ஓர் அரசின் சிறப்புக்கு அந்த நாட்டு மக்களின் நடத்தையும் காரணம் என்று கண்ணகி வாயிலாக இளங்கோவடிகள் உணர்த்துகின்றார். அதனால், பாண்டியன் செய்த தவறு திடீரென்று விளைந்ததன்று என்று கண்ணகி ஓர்கிறாள்.

ஒரு மனிதனிடத்தில் குற்றம் திடீரென்று தோன்றி விடாது. அதற்கொரு வரலாறு இருக்கும். அந்தக் குற்றத்தை வளர்த்தவர்கள் இருப்பார்கள் என்பதே உண்மை. பாண்டியன் தன் அமைச்சர்களிடத்தில் கலந்து ஆராயாமல் “கொன்று அச்சிலம்பைக் கொணர்க!...” என்றது தன்னிச்சையான வாக்கு.

தன்னிச்சையான மனப்போக்குக் கொள்ளுதல், தன்னிச்சையாகச் செயற்படுதல் சமுதாய வாழ்வில் பெரிய குற்றம். மானுட சமுதாய அமைப்பில் தன்னிச்சையாய்ச் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற இயற்கை நியதியே இருக்கிறது. பிறர் சொல்வதைக் கேட்டு அறிந்து, தெளிந்து செயற்பட வேண்டும் என்பதற்காக இரண்டு செவிகள் வழங்கப் பெற்றிருக்கின்றன. ஆனால் கேட்பாரைத் தான் காணோம்.

அமைச்சர்களாக இருந்தோரும், ஊர்காவலர்களாக இருந்தோரும் அரசன் தங்களுடன் சூழ்ந்து ஆராயாமல், பொற்கொல்லன் சொற்கேட்டு அவ்வழிச் செயற்பட்டு விட்டானே என்று துணுக்குற்றாரில்லை. அங்ஙனம், துணுக்குறாததற்குக் காரணம் இந்நிகழ்வுக்கு முன்பும் மன்னன் அப்படித்தான் செய்திருப்பான் என்று நம்ப இடமிருக்கிறது.