பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கண்ணகி தவத்தால், நோன்பால் தெய்வமாயினாள். அவள் மட்டுமா? அவளை மனையாட்டியாகப் பெற்ற கோவலனும் விண்ணிழி விமானத்தில் விண்ணகம் செல்கிறான்.

கண்ணகி, முடியுடை அரசர்களால் தொழுதேத்தும் பெருமை பெறுகிறாள். சேரன் செங்குட்டுவன் இமயத்துக் கல்லில் கண்ணகிக்குச் சிலையெடுத்து கங்கை நீராட்டி, வஞ்சித் தலை நகரில் கோயிலில் எழுந்தருளச் செய்கிறான்.

முடியுடை அரசர்கள் பலர் சூழ்ந்து போற்றுகின்றனர்; கற்புக் கடம் பூண்ட கண்ணகி தேவியிடம் நாடாளும் செங்கோன்மை தவறாதிருக்க வரம் வேண்டுகின்றனர். கண்ணகி பலராலும் போற்றப் பெறும் பத்தினித் தெய்வமாகிய வரலாறு. வாழ்க்கையில் பிறந்தது; வாழ்க்கைக்குத் துணை செய்வது.

மாதவி

சிலம்பில் கண்ணகிக்கு அடுத்த நிலையில் சிறப்பாகப் பேசப் பெறும் பாத்திரம் மாதவி. மாதவி விவாதத்திற்குரிய பாத்திரமாக விளங்கினாலும் அவள், விளங்கு புகழ் படைத்த பாத்திரமேயாம்.

மாதவி, அழகுத் திருவினள்; ஆடற் கலையில் சிறந்தவள்; பாடற்கலையில் தேர்ந்தவள். மாதவி முத்திறத்திலும் சிறந்தவள் என்று கூறுகிறார் இளங்கோவடிகள். முத்திறமாவது மேற்சொன்ன ஆடலும், பாடலும், அழகும் என்பனவாகும்.

வானவர் மகளிராகிய ஊர்வசி, ரம்பை ஆகியோர் அழகிலும் ஆடல் திறத்திலும் உயர்ந்தவர்கள் என்று கூறுதல் புராண மரபு. மாதவி, முன்னைப் பிறப்பில் ஊர்வசியாக வாழ்ந்தவள், என்ற நம்பிக்கையையும் ஆசிரியர் இளங்கோவடிகள் நமக்குத் தருகின்றார்.