பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

205


அரசு அறந்தழீஇய அரசு, போர் முனையிலும் வீரம் விளைவிக்கும் கொற்றமுடைய அரசு.

சேரர் பண்பு பாடப் பண்ணும் தமிழும் காத்திருந்தன. இங்ஙனம் புகழ் பூத்த சேர அரசர்களின் தலைநகர் வஞ்சி நகரமாகப் பெரும்பாலும் இருந்தது. ஒரு சில காலத்தில் கருவூர், வெஞ்சாமாக்கூடல் ஆகியன தலைநகரங்களாக இருந்திருக்கின்றன. சிலம்புக்குரிய வரலாறு நிகழ்ந்த போது தலைநகரமாக இருந்தது வஞ்சி நகரமே. வஞ்சி நகரம் என்பது திருவஞ்சைக் களமா? திருவனந்தபுரமா? என்பது ஆராய்தலுக்குரியது.

இயற்கை வளம் செறிந்தது சேர நாடு. குறிஞ்சி, நெய்தல், முல்லை, மருதம் ஆகிய நான்கு வகை நிலங்களும் சேர நாட்டில் உண்டு, சேர நாடு புலவர் பாடும் புகழ்பெற்றது.

பதிற்றுப்பத்து சேரர்களுக்கே உரிய இலக்கியம். பத்துப் பாட்டுகள் ஒரு தொகுதி. இப்படி பத்துத் தொகுதி. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேரனைப் பற்றியது. இதில் ஐந்தாம் பத்து செங்குட்டுவனுக்குரியது. செங்குட்டுவனுக்குரிய பத்தினை இயற்றியவர் பரணர். இந்தப் பத்து செங்குட்டுவனை “கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன்” என்று அழைக்கிறது. பரணர் செங்குட்டுவனின் வீரத்தினையும் கொடைச் சிறப்பினையும் விரிவாக எடுத்துப் பேசுகிறார்.

சேரர் குலத்தில்தான் சேரமான் பெருமான் நாயனார் - கழறிற்றறிவார் தோன்றினார். கழறிற்றறிவார் சிவநெறி நின்றொழுகியவர். நம்பியாரூரருக்குத் தோழராகச் சிவ பெருமான் மூலம் ஆகியவர். இத்தகு புகழ் பெற்ற சேரர் குலத் தோன்றல்தான் செங்குட்டுவன். செங்குட்டுவனுக்கு முடிசூட்டிக் கொள்ளும் வாய்ப்பினை நல்க, இளங்கோ துறவியானார்; கவியரசானார்.

சேரன் செங்குட்டுவன் மனைவி சோழர் குலத்தில் தோன்றிய பெண். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி