பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயப் புகழ்பாக்கள்

211



கூத்தியான ‘அமத்தி’ என்பவள் திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரேச்சுரர் கோவிலில் விளக்கெரிக்க 30 கழஞ்சு ஊர்காற் செம்பொன் (உருகாச் செம்பொன்? செம்பொற் கட்டி?) தந்தனன். அதனை அமிர்த கணத்தார் ஏற்றுக் கொண்டனர்.[1] இவனுடைய வேறொரு கூத்தி ‘பத்திரதானி’ என்பவள் அதே கோவிலில் விளக்குக்காக 30 கழஞ்சு பொன் தந்தாள்.[2]

திருவொற்றியூரில் உள்ள அபராசிதனது 8ஆம் ஆண்டுக் கல்வெட்டு அக்கோவிலுக்கு அரிசி, நெய், வாழைப்பழம், சர்க்கரை, காய்கறிகள், பாக்கு வெற்றிலை, இளநீர், ஆணைந்து (பஞ்ச கவ்யம்). சந்தனம், கற்பூரம் என்பனவாங்க உண்டாகும் செலவிற்காக ஒருவன் 50 கழஞ்சு பொன் தந்த செய்தியைக் கூறுகிறது.[3] குமராண்டி குறும்பர் ஆதித்தன் என்னும் தலைவன் சத்தியவேட்டில் உள்ள மதங்ககேசுவரர் கோவிலுக்குத் துறையூர் என்னும் சிற்றுரையும் அதன் வருவாயையும் விட்டமை தெரிகிறது.[4] காடுபட்டிப் பேரரையன் மனைவியான போற்றி நங்கை என்பவள் திருவொற்றியூர் மகா தேவர்க்கு விளக்கெரிக்க 100 ஆடுகளை அளித்தாள்,[5] மேற்சொன்ன கோவிலிலே இரண்டு விளக்குகள் இட மகேசுவரர் மரபினர் பொன் தந்துள்ளனர்.[6] இங்ஙனம் கோவில் திருப்பணிகள் பல இடங்களில் குறைவின்றி நடந்தன.

இக்காலத்து அரசர் (கி.பி. 850-890)

இக்காலத்துக் கங்க அரசர் முதலாம் பிருதிவீபதி (கி.பி. 853-880) இரண்டாம் பிருதிவீபதி (கி.பி. 880-925) என்போர்: இராட்டிரகூட அரசர் அமோகவர்ஷ நிருபதுங்கள் (கி.பி.814-880), இரண்டாம் கிருட்டினன் (கி.பி. 880-912) என்போர்; பாண்டியமன்னர் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 830-862), வரகுண வர்மன் (கி.பி. 862-880), பராந்தக பாண்டியன்[7] (கி.பி. 880-900) என்பவர்.


  1. 158 of 1912
  2. 161 of 1912
  3. 159 of 1912
  4. 31 of 1912
  5. 32 of 1912
  6. 90 of 1912
  7. R. Gopalan’s “Pallavas of Kanchi, pp.143,144.