பக்கம்:வைணமும் தமிழும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வைணவமும் தமிழும்



நிற்கும் முறைமைகளிலே நிறுத்தி இடையர் குலத்து மாதரி இவர்கட்குப் படைத்துக் கோட்பெயரிடுவாளாயினள். பன்னிரண்டு இராசிக்குள்ளே இடபம், கடகம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம் மீனம் என்னும் ஏழினும் குரல் முதலாய் ஏழும் முறையே நிற்பது ஒரு முறை. துலாம், தனுசு, கும்பம், மீனம் இடபம், கடகம்,சிங்கம் என்னும் ஏழினும் குரல் முதலாய் ஏழும் முறையே நிற்பது மற்றோர் முறை. இவ்விருமுறையானும் எழுவரும் நின்று கைகோத்துப் பாடுகின்றனர். ஆகலின் ஒரு கால் இடத்தில் நின்றவர் மற்றொரு கால் வலத்திலும் வலத்தில் நின்றவர் இடத்திலுமாக மாறி நிற்றல் இயல்பு. இவ்வாறு குரவையாடினர். இக்கூத்து பெரும்பாலும் இராசக்கிரீடை என வடமொழியாளர் கூறும் ஆட்டத்தையொத்திருப்பதைக் காணலாம்.

இக்கூறியவற்றிலிருந்து நாராயணனும் திருமாலும் ஆயர்பாடிக் கண்ணனும் ஒன்றுபட்டு மக்களால் வனங்கப்பெற்ற காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டின் பின்னரே ஏற்படும். பரிபாடல் (15) திருமாலையும் அவன் தமயனாகிய பலதேவனையும் குறிக்கும்.

இவற்றிலிருந்து கண்ணபிரானும் அவன்பிராட்டி நப்பின்னையும் பலதேவனும் வணங்கப்பெற்ற செய்தி நன்கு விளங்கும். பல தேவற்குத் தனிக்கோயில்கள் அக்காலத்தில் இருந்தன என்பதற்குச் சங்கத் தொகை நூல்களில் போதிய சான்றுகள் உள்ளன. திருமால் வணக்கம் இவ்வாறு தென்னகத்தே மிகப் பழங்காலத்திலிருந்தே உள்ளது என்பது தெளியப்படும்.