இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
45
என்ற நூலினால் அறிகின்றோம். இச் செய்தி ‘இசைப்பா' 'இயற்பா’ என்னும் பாகுபாட்டைத் தெளிவாக உணர்த்துகின்றது. இசைப்பா தொகுதிகட்குப் பண் தாளங்கள் அமைந்திருத்தலும் கவனிக்கத்தக்கது. திருவாய்மொழிப்பாசுரங்கள் முழுமைக்கும் பண், தாளங்கள் உள்ளன. "பண்ணார் பாடல் இன்கவிகள்"[1] என்று,சடகோபரே அருளிச் செய்திருப்பதும், இவர்தம் சீடரான மதுரகவிகளும்,
- தேவுமற் றறியேன்; குருகூர் நம்பி
- பாவின் இன்னிசை பாடித் திரிவனே[2]
என்று கூறியிருப்பதையும் நோக்கலாம். பெரிய திருமொழிக்குப் பண், தாளங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஏட்டில் காணப்படுகின்றன.
- “இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை”[3]
- "பண்ணார் பாடல்"[4]
- “பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்"[5]
- "பண்கள் அகம் பயின்ற சீர்ப்பாடல்”[6]
முதலியனவாக வரும் பெரிய திருமொழிப்பகுதிகளும் இத் தொகுதியும் இசைப்பா எனத் தெரிவிக்கின்றன. இங்ஙனமே முதலாயிரத்திற்கும் பண், தாள அமைப்புகள் முன்பு வழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். பெரியாழ்வார் பாசுரங்கள் பண்ணில் இயன்றவை என்பதை,
- 'பட்டநாதன் பண்ணியநா நூற்றேழு பத்து மூன்றும்' [7]