இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குன்றிருந்த மணிவிளக்கே குருவே சங்கரா
கொண்டு வந்த வினைகளை நீ அறுக்க வேண்டும்
நின்றிருந்த தீமைகளை நீ விலக்க வேண்டும்
நன்றிருந்த மனத்தோடு எனைவாழ்விக்க வேண்டும்
சத்தியத்தின் ஒளிச்சுடரே; சதுர் மறையின் பெரும் பொருளே
தத்துவத்தின் முழுமுதலே; தவஞானத் திருவிளக்கே
நெஞ்சுக்கு உறுதி வேண்டும்
நினவுக்குத் தூய்மை வேண்டும்
அன்புக்கு அறம் வேண்டும்
அறிவுக்கு வளம் வேண்டும்
நட்புக்கு இனிமை வேண்டும்
நன்மைக்கு வன்மை வேண்டும்
உண்மைக்கு ஒளி வேண்டும்
உயர்வுக்கு நீயே வேண்டும்
காஞ்சி மாவடிப் பெரியோய்
நின் திருவடிக்குச் சரண் நாங்களே!