பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியனும் - ஹிட்லரும்
முதல் அங்கம்
முதல் காட்சி
இடம்-திரு ஒற்றியூர்க் கடற்கரை யோரம்.
காலம்-விடியுமுன்.

புதிதாய்க் கட்டப்பட்ட பல சாமான்கள் நிறைந்த ஓர் வீட்டின் அறை. இதன் ஒரு புறம் பலவிதமான புதிய ரசாயன யந்திரங்கள் நிறைந்திருக்கின்றன. அறையின் மத்தியில் ஒரு மேஜையைச் சுற்றி மூன்று நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. ரசாயன யந்திரங்களுக் கெதிரில் இருக்கும் மற்றொரு சிறு மேஜையின் முன், கையில் ஒரு ரசாயனக் குழலுடன், விஸ்வநாதன் நின்று கொண்டிருக்கிறான். அறையின் மற்றொரு பக்கமுள்ள பலகணி ஒரு திரையால் மூடப்பட்டிருக்கிறது.

வி. உம் ! (கையிலிருக்கும் குழலைக் கலக்கிப் பார்த்து) இன்றைத்தினம் இதன் சூட்சுமத்தைக் கண்டு பிடிப்பேன் என்று, எனக்குள் ஏதோ சொல்கிறது! இந்த இரகசியத்தை மாத்திரம் நான் கண்டு பிடிப்பேனாயின், இந்த பாழாய்ப்போன யுத்தத்தை, அடியோடு உலகினின்றே ஒழித்து விடுவேன்!

(கதவைத் தட்டுகிற சப்தம்)

வி. ஆ ! மறுபடியும் கதவைத் தட்டுகிறார்கள் !- இந்த ஒரு இரவாவது என்னைத் தொந்திரவு செய்யாமல் விடமாட்டார்களா? (பூட்டப்பட்டிருக்கும் கதவருகில் போய்) இப்பொழுது யார் தட்டுகிறது?
(வெளியிலிருந்து வேலைக்காரியின் குரல்-கொஞ்சம் காபியாவது சாப்பிடுகிறீர்களா என்று அம்மா கேட்கச் சொன்னார்கள்)