திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
மோசே மற்றும் ஆரோன் இருவரும் பார்வோன் முன்னிலையில். ஓவியர்: பெஞ்சமின் வெஸ்ட் (1738-1820). காப்பிடம்: பாப் ஜோன்ஸ் பல்கலை, அமெரிக்கா.

விடுதலைப் பயணம் (The Book of Exodus)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

பார்வோன் முன் மோசேயும் ஆரோனும்[தொகு]


1 பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து
அவனை நோக்கி, "பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு
என் மக்களைப் போகவிடு என
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்" என்று அறிவித்தனர்.
2 அதற்குப் பார்வோன்,
"யார் அந்த ஆண்டவர்?
அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்?
அந்த ஆண்டவரை நான் அறியேன்;
இஸ்ரயேலரை நான் போகவிடவும் மாட்டேன்" என்று கூறினான்.
3 அதற்கு அவர்கள்,
"எபிரேயரின் கடவுள் எங்களைச் சந்தித்தார்.
பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் செய்து
எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுமாறு எங்களை நீர் போகவிடும்.
இல்லையெனில், கொள்ளை நோயாலோ வாளாலோ
அவர் எங்களைத் தாக்கிவிடுவார்" என்று கூறினர்.
4 எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி,
"மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை
அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்?
உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்" என்று கூறினான்.


5 மேலும், பார்வோன்,
"பாருங்கள், நாட்டில் உங்கள் மக்கள் இப்போது பெருந்திரளாயுள்ளனர்.
அப்படியிருக்க, அவர்களைத் தம் வேலையிலிருந்து
ஓய்ந்திருக்கச் செய்கிறீர்கள்" என்றான்.
6 அதே நாளில், பார்வோன்
மக்களிடம் அடிமைவேலை வாங்கும் அதிகாரிகளுக்கும்
மேற்பார்வையாளருக்கும் ஆணைவிடுத்து,
7 "செங்கல் செய்வதற்காக இம்மக்களுக்கு
இதுவரை வைக்கோல் கொடுத்துவந்ததுபோல் இனிச் செய்யவேண்டாம்!
அவர்களே போய் வைக்கோல் சேகரித்துக் கொள்ளட்டும்.
8 ஆயினும் இதுவரை அவர்கள் அறுத்துக் கொடுத்த அளவு
செங்கல் தயாரித்துக் கொடுப்பது அவர்கள் கடமை.
அதிலிருந்து எதுவும் குறையக்கூடாது.
ஏனெனில், அவர்கள் சோம்பேறிகள்.
இதனால்தான், 'நாங்கள் போகவேண்டும்;
எங்கள் கடவுளுக்குப் பலியிடவேண்டும்'
என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
9 அந்த ஆள்களுக்கு வேலைப்பளுவை இன்னும் மிகுதியாக்குங்கள்.
வெற்றுப் பேச்சுகளை நம்பாமல்
அங்கே அவர்கள் வேலை செய்யட்டும்" என்றான்.


10 எனவே வேலைவாங்கும் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும்
மக்களிடம் சென்று அவர்களை நோக்கி,
"பார்வோன் கூறுவது இதுவே:
நான் உங்களுக்கு வைக்கோல் கொடுக்கமாட்டேன்.
11 நீங்களே போய், உங்களுக்குத் தேவையான வைக்கோலைக்
கிடைக்கும் இடத்திலிருந்து சேகரித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவித்தனர்.
12 எனவே வைக்கோலுக்குப் பதிலாகத்
தாளடி சேகரிப்பதற்காக மக்கள் எகிப்து நாடெங்கும் அலைந்து திரிந்தனர்.
13 "வைக்கோல் உள்ளபோது செய்துவந்த அளவில்
ஒவ்வொரு நாளுக்கும் உரிய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்"
என்று கூறி, வேலை வாங்கும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர்.
14 "முன்பு நீங்கள் செய்து வந்த அளவுக்குச்
செங்கல் அறுப்பு வேலையை நேற்றும் இன்றும்
ஏன் செய்துமுடிக்கவில்லை?" என்று கேட்டு,
பார்வோனின் வேலைவாங்கும் அதிகாரிகள்
தாங்கள் இஸ்ரயேல் மக்களுள் மேற்பார்வையாளராக
நியமித்திருந்தவர்களை அடித்தனர்.


15 இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து,
"ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?
16 உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே
'செங்கல் அறுங்கள்' என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க,
உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்" என்று கதறினர்.
17 அதற்கு அவன், "சோம்பேறிகள்; நீங்கள் சோம்பேறிகள்;
அதனால்தான் 'நாங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிட வேண்டும்'
என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
18 எனவே இப்போதே வேலைக்குச் செல்லுங்கள்.
வைக்கோல் உங்களுக்குத் தரப்படமாட்டாது.
எனினும் வழக்கமான எண்ணிக்கையின்படி
செங்கல் அறுத்துக் கொடுக்க வேண்டும்" என்று கூறினான்.
19 'அந்தந்த நாளுக்குரிய செங்கல் தொகையிலிருந்து
எதுவும் குறைக்கப்படமாட்டாது' என்று சொல்லக் கேட்டபோது,
தாங்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டதாக
இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் கண்டனர்.
20 பார்வோனிடமிருந்து திரும்பி வரும்போது,
தங்களைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்த
மோசேயையும் ஆரோனையும் அவர்கள் சந்தித்து
அவர்களை நோக்கி,
21 "ஆண்டவர் உங்களைக் கவனித்துக் கொள்ளட்டும்!
உங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்!
ஏனெனில், பார்வோன் முன்னிலையிலும்
அவனுடைய அலுவலர் முன்னிலையிலும்
நம்மவர் வாடையே பிடிக்காதவாறு நீங்கள் செய்து விட்டீர்கள்!
நம்மைக் கொல்வதற்கான வாளை அவர்கள் கையில் வைத்துவிட்டீர்கள்" என்றனர்.

மோசேயின் முறையீடு[தொகு]


22 அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று,
"என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன்தொல்லை கொடுக்கிறீர்?
எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?
23 உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே
இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை" என்று கூறினார்.


அதிகாரம் 6[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய்;
என் கைவன்மை கண்டு அவன் அவர்களைப் போக விடுவான்;
தன் நாட்டிலிருந்து துரத்தியும் விடுவான்" என்றார்.

மோசேயின் அழைப்பு[தொகு]


2 கடவுள் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
3 "நானே ஆண்டவர்.
ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்குக்கும்
'ஆண்டவர்' என்ற என் பெயரால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை எனினும்,
எல்லாம் வல்ல கடவுளாகக் காட்சியளித்தவர் நானே! [1]
4 மேலும் அவர்கள் அன்னியராக அலைந்தபோது
தங்கியிருந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக
அவர்களுடன் உடன்படிக்கை நிலைநாட்டியதும் நானே!
5 மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்தி வைத்துள்ள
இஸ்ரயேல் மக்களின் புலம்பலைக் கேட்டு
என் உடன்படிக்கையை நினைவுகூர்ந்துள்ளேன்.
6 நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது:
நானே ஆண்டவர்.
எகிப்தியரின் பாரச் சுமைகளை நான் உங்களிடமிருந்து அகற்றுவேன்.
அவர்கள் உங்களை அடிமைப்படுத்துவதிலிருந்து விடுவிப்பேன்.
ஓங்கிய கையாலும் மாபெரும் தண்டனைத் தீர்ப்புகளாலும்
நான் உங்களுக்கு மீட்பளிப்பேன்.
7 உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன்.
உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன்.
எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி
உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே
என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும்
நான் கொடுப்பதாக வாக்களித்த அந்த நாட்டிற்கு
நான் உங்களைக் கூட்டிக்கொண்டு செல்வேன்.
அதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுப்பேன்.
நானே ஆண்டவர்!"
9 இவற்றையெல்லாம் மோசே இஸ்ரயேல் மக்களிடம் எடுத்துச் சொல்லியும்,
மன ஏக்கத்தையும் வேலையின் கொடுமையையும் முன்னிட்டு
அவர்கள் மோசேக்குச் செவிகொடுக்கவில்லை.


10 ஆண்டவர் மோசேயை நோக்கி,
11 "எகிப்திய மன்னனாகிய பார்வோன்
தன் நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிடும்படி
நீ அவனிடம் போய்ச் சொல்" என்றுரைத்தார்.
12 மோசே ஆண்டவரிடம் பேசி,
"இஸ்ரயேல் மக்களே எனக்குச் செவிசாய்க்காதிருக்க,
பார்வோன் எவ்வாறு எனக்குச் செவிசாய்க்கப் போகிறான்?
நானோ பண்பட்ட உதடுகள் இல்லாதவன்" என்று சொன்னார்.
13 ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி,
எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களைக் கொண்டுவருவதற்காக
இஸ்ரயேல் மக்களிடமும் எகிப்திய மன்னன் பார்வோனிடமும்
செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மோசே, ஆரோனின் மூதாதையர் அட்டவணை[தொகு]


14 அவர்களின் மூதாதையர் வழிவந்த குடும்பத் தலைவர்கள் இவர்களே:
இஸ்ரயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்:
அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.
இவைகளே ரூபன் வழிவந்த குடும்பங்கள்.
15 சிமியோனின் புதல்வர்:
எமுவேல், யாமின், ஓகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல்.
இவைகளே சிமியோன் வழிவந்த குடும்பங்கள்.
16 தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்:
கேர்சோன், கோகாத்து, மெராரி.
லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள்.
17 கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி.
இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள்.
18 கோகாத்தின் புதல்வர்:
அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.
கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள்.
19 மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி.
இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள். [2]
20 அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத்
தனக்கு மனைவியாக்கிக் கொண்டான்.
அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள்.
21 இட்சகாரின் புதல்வர்: கோராகு, நெபேகு, சிக்ரி.
22 உசியேலின் புதல்வர்: மீசாவேல், எல்சாபான், சித்ரி.
23 அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமான எலிசபாவை
ஆரோன் மனைவியாக்கிக்கொண்டார்.
அவருக்கு அவள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
24 கோராகின் புதல்வர்: அசீர், எல்கானா, அபியசாபு.
இவைகளே கோராகின் குடும்பங்கள்.
25 ஆரோனின் மகன் எலயாசர், பூற்றியேல் என்பவனின் புதல்வியருள்
ஒருத்தியைத் தனக்கு மனைவியாகக் கொண்டான்.
அவனுக்கு அவள் பினகாசு என்பவனைப் பெற்றெடுத்தாள்.
தம் குடும்ப வரிசைக்கேற்ப லேவியரின் மூதாதையருள் தலைவர்கள் இவர்களே.


26 'தம்தம் அணிவகுப்பின்படி
இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்யுங்கள்'
என்று ஆண்டவரிடம் கட்டளை பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
27 இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்வதற்காக
எகிப்திய மன்னனாகிய பார்வோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களும்
மோசே, ஆரோன் ஆகிய இவர்களே!

மோசே, ஆரோனுக்கு ஆண்டவரின் கட்டளை[தொகு]


28 அக்காலத்தில் எகிப்து நாட்டில்
ஆண்டவர் மோசேயுடன் பேசியருளினார்.
29 ஆண்டவர் மோசேயுடன் பேசி,
"நானே ஆண்டவர்.
நான் உன்னோடு பேசுவதையெல்லாம்
எகிப்திய மன்னன் பார்வோனிடம் நீ எடுத்துக் கூறு"
என்று அறிவித்தபோது,
30 மோசே ஆண்டவரிடம்,
"பாரும், நான் பண்பட்ட உதடுகள் இல்லாதவன்.
பார்வோன் எவ்வாறு எனக்குச் செவி கொடுக்கப்போகிறான்?" என்றார்.


குறிப்புகள்

[1] 6:2-3 = தொநூ 17:1; 28:3; 35:11; விப 3:13-15.
[2] 6:16-19 = எண் 3:17-20; 26:57-58; 1 குறி 6:16-19.


(தொடர்ச்சி):விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை