படித்தவள்
29
“தேவை இருக்கிறது. அதனால் அதை வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது” என்று திருத்தம் கூறினார்.
நாங்கள் பேச்சை எங்கே தொடங்கினோம் என்பது மறந்தே விட்டோம்.
“சென்ற பிறவியில் விட்டோம்; இப்பொழுது புதுப் பிறவிக்கு வந்திருக்கிறோம்” என்றேன்.
“டேய்! இரண்டு கப் காப்பி வாங்கி வா” என்றார்.
“சர்க்கரை போட்டதா போடாததா” என்று கேட்டான்.
நான் புதியவன்; என் இரத்தம் எந்தச் சுவை என்பது அவருக்குத் தெரியாது.
அவருக்கு உப்பு இருக்கிறது: சர்க்கரை இல்லை; எனக்கு எதுவுமே இல்லை.
“அவருக்குச் சர்க்கரை இல்லை; சீனி போட்டே வாங்கி வா” என்றார்.
“இந்தச் சர்க்கரை நோய் பொல்லாதது” என்றேன்.
“உங்களுக்கு எப்படித் தெரியும்; உங்களுக்கு இல்லையே” என்றார்.
“வந்து போய்விட்டது பத்து வருஷம் இன்சுலினில் தான் இருந்தேன். நானே போட்டுக்கொள்வேன். இப்பொழுது இல்லை” என்றேன்.
“அது எப்படி முடியும்; ஒரு முறை வந்தால் அது சாகும் வரை தொடரும் என்று கூறுகிறார்களே”