பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பரபரப்புக்குப்
பின்னால்!

பந்தய மைதானத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அனைவரும், ஆனந்தத்துடன் எழுந்து ஆரவாரம் செய்தனர். வெற்றி வீரனாகப் பந்தய மைதானத்தை அவன் சுற்றி வருவதைக்கண்டு, வியப்பின் எல்லைக்கே சென்று, விந்தைமிகு வீரனை வாயார வாழ்த்தி வரவேற்றனர்.

26 மைல்களுக்குரிய அந்த மாரதான் ஓட்டத்தை எவ்வளவு சீக்கிரமாக ஓடிமுடித்து வந்துவிட்டான் என்பதுதான் அவர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டது. பாரீஸ் நகரத்தின் படுமோசமான பாதையில் அல்லவா ஓட்டக்காரர்களை ஓடவிட்டிருந்தார்கள்! அத்தனை மேடு பள்ளத்திலும் ஏறி இறங்கி, எதிர்ப்பினைத் தந்த இன்னல்களையும் மீறி, எத்தனை விரைவாக ஓடி வந்து விட்டான் என்பதிலே அவர்களுக்கு உற்சாகம்.

புகழாரம் சூட்டிக்கொள்ளப்போகும் பெருமதிப்பிற்குரிய அவ்வீரனை, புகைப்படக்காரர்கள் மின்னல் வேகத்தில் படங்களாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீரன் முகத்திலே ஓடிவந்த களைப்பும் இல்லை.