திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 59 முதல் 60 வரை

விக்கிமூலம் இலிருந்து
"எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!" - எசாயா 60:1.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 59 முதல் 60 வரை

அதிகாரம் 59[தொகு]

மக்களின் பாவங்கள் கண்டிக்கப்படல்[தொகு]


1 மீட்க இயலாதவாறு
ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை;
கேட்க முடியாதவாறு
ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.


2 உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும்,
உங்கள் கடவுளுக்கும் இடையே
பிளவை உண்டாக்கியுள்ளன;
உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு
அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.


3 உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைபட்டுள்ளன;
உங்கள் விரல்கள் தீமையால் தீட்டுப்பட்டுள்ளன.
உங்கள் உதடுகள் பொய்களை உதிர்க்கின்றன;
உங்கள் நாக்கு தீயவற்றை முணுமுணுக்கின்றது.


4 நீதியான வழக்கைக் கொண்டு வருபவர் எவரும் இல்லை;
உண்மையுடன் வழக்காடுபவர் யாருமில்லை;
வெறுமையான வாதங்கள்மீது நம்பிக்கை வைத்துப்
பொய்யைப் பேசி,
வஞ்சனையைக் கருத்தரித்துத்
தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.


5 நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்;
சிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்;
அவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்;
உடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.


6 அவற்றின் வலைகள் உடையாகப் பயன்படா;
அவற்றின் வேலைப்பாடுகளைக் கொண்டு
எவரும் தம்மைப் போர்த்துக்கொள்ளமாட்டார்;
அவர்களின் செயல்கள் தீயன;
அவர்களின் கையில் இருப்பன வன்முறைச் செயல்களே!


7 தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன;
குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்;
அவர்கள் எண்ணங்கள் தீயவை;
பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.


8 அமைதி வழியை அவர்கள் அறியார்;
நீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை;
தாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்;
அவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார். [1]

மக்கள் தம் பாவங்களை அறிக்கையிடல்[தொகு]


9 ஆதலால், நீதி எங்களுக்கு வெகு தொலையில் உள்ளது;
நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை.
ஒளிக்கெனக் காத்திருந்தோம்; காரிருள்தான் கிட்டியது;
விடியலை எதிர்பார்த்தோம்; இருளிலேயே நடக்கின்றோம்;


10 பார்வையற்றோரைப் போல்
சுவரைப்பிடிக்க நாங்கள் தடவுகின்றோம்;
கண்ணில்லாதவரைப்போல்
எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்;
நண்பகலிலும் மங்கிய பொழுதிலும்
செத்தவர்போல் இருக்கின்றோம்.


11 கரடியைப் போல் நாங்கள் யாவரும் உறுமுகின்றோம்;
புறாக்களைப்போல் பெருமூச்சுடன் விம்முகின்றோம்;
நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம்,
ஒன்றையும் காணவில்லை;
விடுதலையை எதிர்பார்த்திருந்தோம்,
அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.


12 உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன;
எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச்
சான்று சொல்கின்றன;
எங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன;
எங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.


13 ஆண்டவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து
அவரை வஞ்சித்தோம்;
எங்கள் கடவுளைப் பின்பற்றாமல் அகன்று போனோம்;
ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்
பற்றிப் பேசினோம்;
பொய்யானவற்றை மனதில் உருவாக்கி
அவற்றை மொழிந்தோம்.


14 நீதி துரத்தப்பட்டது; நேர்மை தொலையில் நின்றது;
பொது இடங்களில் வாய்மை நிலைகுலைந்தது;
உண்மைக்கு அங்கே இடம் இல்லை.


15 உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது;
தீமையினின்று விலகியவர் சூறையாடப்படுகின்றார்;
ஆண்டவர் அதைக் கண்டார்;
அவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.

மக்களை மீட்க ஆண்டவரின் ஆயத்தம்[தொகு]


16 இதில் தலையிட ஓர் ஆள்கூட இல்லை
என்று கண்டு ஆண்டவர் திகைப்புற்றார்;
அவரது கையே அவருக்கு வெற்றி கொணர்ந்து;
அவரது நேர்மையே அவரைத் தாங்கி நின்றது. [2]


17 அவர் நேர்மையை மார்புக் கவசமாய்
அணிந்துகொண்டார்;
விடுதலையைத் தலைச்சீராவாய்த்
தம் தலையில் வைத்துக்கொண்டார்;
அநீதிக்குப் பழிவாங்குதலை
ஆடையாய் உடுத்திக் கொண்டார்;
அன்புவெறியை மேலாடையாகப்
போர்த்திக் கொண்டார். [3]


18 தம் பகைவரின் செயல்களுக்குத்
தக்க கைம்மாறு அளிப்பார்;
அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்;
தம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்;
தீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.


19 மேலை நாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;
கீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்;
ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர,
ஓடிவரும் ஆறென அவர் வருவார்.


20 சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்;
யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார்,
என்கிறார் ஆண்டவர்.


21 அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே;
உன்மேல் இருக்கும் என் ஆவியும்
உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும்
உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும்
வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும்
இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது,
என்கிறார் ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 59:7-8 = உரோ 3:15-17.
[2] 59:16 = எசா 63:5.
[3] 59:17 = எபே 6:14,17; 1 தெச 5:8.

அதிகாரம் 60[தொகு]

எருசலேமின் வருங்கால மேன்மை[தொகு]


1 எழு! ஒளிவீசு!
உன் ஒளி தோன்றியுள்ளது.
ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!


2 இதோ! இருள் பூவுலகை மூடும்;
காரிருள் மக்களினங்களைக் கவ்வும்;
ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்;
அவரது மாட்சி உன்மீது தோன்றும்!


3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்;
மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.


4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்;
அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு
உன்னிடம் வருகின்றனர்;
தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்;
உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.


5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்;
உன் இதயம் வியந்து விம்மும்;
கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்;
பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.


6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்;
மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின்
இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்;
சேபா நாட்டினர் யாவரும் பொன்,
நறுமணப்பொருள் ஏந்திவருவர்.
அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.


7 கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும்
உன்னிடம் ஒருங்கே சேர்க்கப்படும்;
நெபயோத்தின் கிடாய்கள் உனக்குப் பணிவிடைசெய்யும்;
எனக்கு உகந்தவையாக அவை என் பீடத்திற்கு வரும்;
இவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப் பெருமைப்படுத்துவேன்.


8 மேகங்கள் போலும்
பலகணி நோக்கிப் பறந்து செல்லும் புறாக்கள் போலும்
விரைந்து செல்லும் இவர்கள் யார்?


9 தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்;
இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான
ஆண்டவரின் பெயரை முன்னிட்டு,
உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும்,
வெள்ளியையும், பொன்னையும்
அவர்களுடன் எடுத்து வரவும்,
தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்;
ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர்
உனக்கு மேன்மை அளித்துள்ளார்.


10 அன்னிய நாட்டவர் உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்;
அவர்களின் மன்னர் உனக்குப் பணிவிடை செய்வர்;
ஏனெனில், சினமுற்று நான் உன்னை நொறுக்கினேன்;
நான் கனிவுற்று உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்.


11 உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும்;
இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்;
பிற இனத்தாரின் செல்வம் உன்னிடம் கொண்டு வரப்படவும்,
அவர்களின் மன்னர் ஊர்வலமாய் அழைத்து வரப்படவும்,
அவை திறந்திருக்கும். [1]


12 உனக்குப் பணிபுரியாத வேற்று நாடோ
அரசோ அழிந்துவிடும்;
அவை முற்றிலும் பாழடைந்து போகும்.


13 லெபனோனின் மேன்மை உன்னை வந்து சேரும்;
என் திருத்தூயகத்தைச் சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத்
தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம்
ஆகியவை கொண்டு வரப்படும்;
என் பாதங்களைத் தாங்கும் தலத்தை மேன்மைப்படுத்துவேன்.


14 உன்னை ஒடுக்கியவரின் புதல்வர்
உன்னிடம் தலைவணங்கி வருவர்;
உன்னை அவமதித்தவர் அனைவரும்
உன் காலடியில் பணிந்து வீழ்வர்;
'ஆண்டவரின் நகர்' என்றும்,
'இஸ்ரயேலின் தூயவரது சீயோன் என்றும்
உன்னை அவர்கள் அழைப்பர். [2]


15 நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்;
உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை;
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்;
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.


16 நீ பிற இனத்தாரின் பாலைப் பருகுவாய்;
மன்னர்களின் மார்பிலிருந்து பாலை உறிஞ்சுவாய்;
ஆண்டவராகிய நானே உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும்
யாக்கோபின் வல்லவரே உன்னை மீட்பவர் என்றும்
நீ அறிந்து கொள்வாய்.


17 வெண்கலத்திற்குப் பதிலாய்ப் பொன்னையும்
இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும்
மரத்திற்குப் பதிலாய் வெண்கலத்தையும்
கற்களுக்குப் பதிலாய் இரும்பையும்
கொண்டு வருவேன்;
உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும்
உங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன்.


18 உன் நாட்டில் வன்முறை பற்றியும்
உன் எல்லைப் பகுதிகளுக்குள்
பாழாக்கலும் அழித்தலும் பற்றியும்
இனி எந்தப் பேச்சும் எழாது;
உன் மதில்களை 'விடுதலை' என்றும்
உன் வாயில்களைப் 'புகழ்ச்சி' என்றும் அழைப்பாய்.


19 கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம்!
பால்நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்!
ஆண்டவரே இனி உனக்கு முடிவிலாப் பேரொளி!
உன் கடவுளே இனி உனக்கு மேன்மை! [3]


20 உன் கதிரவன் ஒருபோதும் மறையான்;
உன் நிலா இனித் தேய்ந்து போகாள்;
ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்;
உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம்.


21 உன் மக்கள் அனைவரும் நேர்மையாளராய் இருப்பர்;
அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வர்;
நான் மாட்சியடையுமாறு நட்டு வைத்த
மரக்கிளை அவர்கள்;
என் கைவேலைப்பாடும் அவர்களே.


22 அவர்களுள் சிறியவர் ஓராயிரமாய்ப் பெருகுவர்;
அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்;
நானே ஆண்டவர்;
ஏற்ற காலத்தில் இதை நான்
விரைவாய்ச் செய்து முடிப்பேன்.


குறிப்புகள்

[1] 60:11 = திவெ 21:25-26.
[2] 60:14 = திவெ 3:9.
[3] 60:19 = திவெ 21:23; 22:5.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 61 முதல் 62 வரை