திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இதோ நெருப்புப் போன்ற ஒருவரின் சாயலைக் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும், அவரது இடைக்கு மேற்புறம் பளபளக்கும் வெண்கலம் போன்றும் ஒளிர்வதைக் கண்டேன்." - எசேக்கியேல் 8:2

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

இஸ்ரயேலை நெருங்கிக்கொண்டிருக்கும் அழிவு[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மானிடா! இஸ்ரயேல் நாட்டை நோக்கித்
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
இதோ முடிவு வந்துவிட்டது!
நாட்டின் நான்கு மூலைகள் வரையிலும் முடிவு வந்துவிட்டது!


3 இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது.
நான் என் சினத்தை உன்மீது அனுப்புவேன்;
உன் நடத்தைக்கு ஏற்றபடி உனக்குத் தீர்ப்பிடுவேன்;
வெறுப்புக்குரிய உன் எல்லாச் செயல்களுக்கும்
தக்க பதிலடி கொடுப்பேன்.


4 என் கண்களில் உனக்கு இரக்கம் இராது;
நான் உன்னைத் தப்பவிடேன்.
மாறாக, உன் நடத்தைக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப
உனக்குப் பதிலடி கொடுப்பேன்.
அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.


5 தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்:
இதோ வருகின்றது தீங்கு மேல் தீங்கு!
6 முடிவு வந்துவிட்டது! வந்து விட்டது முடிவு!
உனக்கெதிராக அது எழுந்து விட்டது;
இதோ, அது வருகின்றது.


7 நாட்டில் வாழ்வோனே!
எனக்குக் கேடுகாலம் வந்துவிட்டது.
அந்த வேளை வந்தேவிட்டது.
அது மலைகளின் மகிழ்ச்சி நாளல்ல;
குழப்பத்தின் நாளே.
நெருங்கிவிட்டது அந்நாள்.


8 இப்போது விரைவில் என் சீற்றத்தை
உன்மேல் பாய்ச்சி என் சினத்தை ஆற்றிக்கொள்வேன்;
உன் வழிகளுக்கேற்ப உனக்குத் தீர்ப்பிட்டு,
உன் அருவருப்புகளுக்குத் தக்கபடி
உனக்குப் பதிலடி கொடுப்பேன்.


9 என் கண்களில் உனக்கு இரக்கம் இராது;
நான் உன்னைத் தப்பவிடேன்.
மாறாக உன் நடத்தைக்கும்
உன் நடுவிலிருக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப
உனக்குப் பதிலடி கொடுப்பேன்.
அப்போது நானே ஆண்டவர் என்றும்
நானே தாக்குகிறேன் என்றும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.


10 இதோ, அந்த நாள்! அது வந்துவிட்டது!
கேடுகாலம் நெருங்கி விட்டது;
அநீதி துளிர்த்து விட்டது;
செருக்கு அரும்பிவிட்டது.


11 வன்முறை, கொடுமையின் கோலாக வளர்ந்துள்ளது;
அவர்களோ அவர்களது செழிப்போ அவர்களது செல்வமோ,
எதுவுமே தப்ப முடியாது.
அவர்களுக்குள் யாருமே மேன்மையுடன் திகழ முடியாது.


12 அந்நேரம் வந்துவிட்டது; அந்நாள் நெருங்கிவிட்டது.
வாங்குவோர் மகிழ வேண்டாம்;
விற்போர் வருந்த வேண்டாம்.
ஏனெனில் அக்கூட்டத்தினர் அனைவருமே
சினத்துக்கு இலக்காகிவிட்டனர்.


13 அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால்கூட,
விற்றோர் விற்கப்பட்ட பொருளை மீண்டும் அடையவே முடியாது.
ஏனெனில், அக்கூட்டத்தினர் அனைவரையும் பற்றிய
இக்காட்சி மாறாது.
அவர்கள் தீயவராய் இருப்பதால்,
எவரும் தம் உயிரை நிலைக்கச் செய்ய முடியாது.
14 அவர்கள் எக்காளம் ஊதி
எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தாலும்,
போரிடச் செல்வோர் யாருமில்லை.
எனெனில் என் சினம் அக்கூட்டத்தினர் அனைவர் மேலும் உள்ளது.

இஸ்ரயேலின் பாவங்களுக்கான தண்டனை[தொகு]


15 வெளிப்புறம் வாளும் உட்புறம் பஞ்சமும்
கொள்ளை நோயும் உள்ளன.
வயலில் இருப்போர் வாளால் மடிவர்.
நகரில் இருப்போரையோ
பஞ்சமும் கொள்ளை நோயும் விழுங்கும்.


16 அவர்களுள் சிலர் பிழைத்து,
தப்பி ஓடினாலும்
அவர்கள் ஒவ்வொருவரும் மலைகளில் தம் குற்றங்களுக்காகப்
பள்ளத்தாக்குப் புறாக்களைப் போலப் புலம்புவர்.


17 கைகள் எல்லாம் வலுவிழந்து போகும்;
முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப்போல் ஆகிவிடும்.


18 அவர்கள் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொள்வர்;
திகில் அவர்களை மூடிக்கொள்ளும்;
முகங்கள் எல்லாம் வெட்கி நாணும்;
அவர்களின் தலைகள் எல்லாம் மொட்டையடிக்கப்படும்.


19 தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிவர்;
பொன் அவர்களுக்குத் தீட்டுள்ள பொருள் போல் இருக்கும்;
ஆண்டவரது சீற்றம் பொங்கும் அந்நாளில்
அவர்களின் வெள்ளியாலும் பொன்னாலும்
அவர்களை விடுவிக்க இயலாது;
அவர்கள் மனநிறைவு பெறுவதும் இல்லை;
அவர்களின் வயிறு நிரம்புவதும் இல்லை;
ஏனெனில் அவர்களது குற்றப்பழியே
அவர்களுக்கு முட்டுக்கட்டையாக ஆகிவிட்டது.


20 அழகிய அணிகலன்களைப் பகட்டுக்காகப் பயன்படுத்தினர்;
அவற்றால் தங்கள் அருவருக்கத்தக்க சிலைகளையும்
வெறுக்கத்தக்க பொருள்களையும் செய்துகொண்டனர்;
எனவே அவற்றை அவர்களுக்குத்
தீட்டான பொருளாக மாறச் செய்தேன்.


21 மேலும் அதை அன்னியர் கையில்
கொள்ளைப் பொருளாகவும்
உலகின் தீயோர் சூறையாடும் பொருளாகவும் கொடுப்பேன்;
அவர்கள் அதைக் கறைப்படுத்துவார்கள்.


22 அவர்கள் செய்வதைக் கண்டுகொள்ள மாட்டேன்;
அவர்களும் என் அரும்பொருளைத் தீட்டுப்படுத்துவார்கள்;
கள்வரும் அதனுள் நுழைந்து கறைப்படுத்துவர்.


23 நீ ஒரு சங்கிலியைச் செய்து கொள்;
நாடு கொலைத் தீர்ப்புகளாலும்
நகர் வன்செயல்களாலும் நிறைந்துள்ளன.


24 ஆகையால் வேற்றினத்தாரில்
பொல்லாதவர்களைக் கூட்டி வருவேன்;
அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்;
வலியோரின் ஆணவத்தை அடக்குவேன்;
அவர்களின் திருத்தலங்கள் கறைப்படுத்தப்படும்.


25 கடுந்துயர் அடையும்பொழுது, அமைதியை நாடுவர்;
ஆனால் அது கிடைக்காது.


26 அழிவுக்குமேல் அழிவு உண்டாகும்,
வதந்திக்கு மேல் வதந்தி பரவும்;
இறைவாக்கினரின் காட்சியை நாடுவர்;
ஆனால் குருக்களிடம் திருச்சட்டமும்
மூப்பர்களிடம் அறிவுரையும் அற்றுப்போகும்.


27 அரசன் புலம்புவான்;
இளவரசன் அவநம்பிக்கையை அணிந்திருப்பான்;
நாட்டு மக்களின் கைகளோ நடுங்கிக்கொண்டிருக்கும்;
அவர்களின் வழிகளுக்கேற்ப நானும் அவர்களுக்குச் செய்வேன்;
அவர்களின் தீர்ப்பு முறைகளின்படியே
நானும் அவர்களுக்குத் தீர்ப்பிடுவேன்;
அப்போது நானே ஆண்டவரென அவர்கள் அறிந்துகொள்வர்.


அதிகாரம் 8[தொகு]

எசேக்கியேலின் இரண்டாம் காட்சி[தொகு]

(8:1 - 10:22)

எருசலேமில் சிலை வழிபாடு[தொகு]


1 ஆறாம் ஆண்டில், ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாள்,
நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன்.
யூதாவின் மூப்பரும் என் முன்பாக அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கே தலைவராகிய ஆண்டவரின் கை என்மீது விழுந்தது.
2 அப்போது இதோ நெருப்புப் போன்ற ஒருவரின் சாயலைக் கண்டேன்.
அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும்,
அவரது இடைக்கு மேற்புறம்
பளபளக்கும் வெண்கலம் போன்றும் ஒளிர்வதைக் கண்டேன். [1]
3 அவர் கைபோன்று தெரிந்த ஒன்றை நீட்டி
என் தலை முடியைப் பிடித்தார்.
கடவுள் அருளிய இக்காட்சியில்
ஆவி என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவில் தூக்கி
எருசலேமுக்குக் கொணர்ந்து அங்கே
ஆண்டவரது சகிப்பின்மையைத் தூண்டும் சிலை இருக்கும்
வடதிசை நோக்கி அமைந்த
உள்வாயிலின் முற்றத்தில் என்னை விட்டது.
4 அங்கே சமவெளியில் நான் கண்ட காட்சியைப் போன்று
இஸ்ரயேலின் கடவுளது மாட்சி இலங்கியது. [2]
5 அவர் என்னை நோக்கி,
"மானிடா! உன் கண்களை உயர்த்தி வடக்கே பார்" என்றார்.
நானும் வடதிசைநோக்கி என் கண்களை உயர்த்தினேன்.
அங்கே வடக்கில் பலிபீடத்தின் முற்றத்தில்
நுழைவாயிலின் அருகே
ஆண்டவரது சகிப்பின்மையைத் தூண்டும் சிலை இருந்தது.
6 அவர் என்னை நோக்கி,
"மானிடா! அவர்கள் செய்வதைப் பார்த்தாயா?
என் திருத்தலத்திலிருந்து நான் விலகியிருக்குமாறு
இஸ்ரயேல் வீட்டார் செய்கிற
மிகவும் அருவருக்கத்தக்கவற்றைப் பார்க்கின்றாய் அல்லவா?
திரும்பி வா,
இதை விடவும் அருவருக்கத்தக்கவற்றைக் காண்பாய்" என்றார்.
7 பின்னர் அவர் என்னை முற்றத்தின் வாயிலுக்குக் கொண்டு சென்றார்.
அங்கே சுவரில் ஒரு துளை இருக்கக் கண்டேன்.
8 அவர் என்னிடம்,
"மானிடா! சுவரை உடை" என்றார்.
நான் சுவரை உடைத்தபோது அங்கே ஒரு வாயிற்படி இருந்தது.
9 அவர் என்னை நோக்கி,
"உள்ளே போய் அவர்கள் செய்யும்
தீய அருவருப்பான செயல்களைப் பார்" என்றார்.
10 நான் உள்ளே நுழைந்து பார்த்தேன்.
இதோ எல்லாவகை ஊர்வனவும், வெறுக்கத்தக்க விலங்குகளும்,
இஸ்ரயேல் வீட்டினரின் தெய்வ உருவங்களும்
சுவரைச் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன.
11 அவற்றிற்கு முன் இஸ்ரயேல் வீட்டு மூப்பர்களில் எழுபதுபேர்
கையில் நறுமணம் கமழும் தூபகலசத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் நடுவே சாப்பானின் மகன் யாசனியாவும் நின்று கொண்டிருந்தார்.
12 ஆண்டவர் என்னை நோக்கி,
"மானிடா! இஸ்ரயேல் வீட்டு மூப்பர்கள்
இருளில் தாங்கள் வைத்த தெய்வ உருவங்களின்முன்
என்ன செய்கிறார்கள்? பார்த்தாயா!
'ஆண்டவர் நம்மைப் பார்க்கவில்லை;
ஆண்டவர் நாட்டைக் கைவிட்டுவிட்டார்' என
அவர்கள் சொல்கின்றனர்" என்றார்.
13 மீண்டும் அவர் என்னை நோக்கி,
"திரும்பி வா.
இவர்கள் செய்யும் இன்னும் பெரிய
அருவருக்கத்தக்க செயல்களைக் காணப் போகிறாய்" என்று சொன்னார்.
14 பின் அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின்
வடக்கு வாயிலுக்குக் கூட்டிவந்தார்.
அங்கே பெண்கள் உட்கார்ந்து தம்மூசுக்காக [3]
அழுது கொண்டிருந்தனர்.
15 பின் அவர் என்னை நோக்கி,
"பார்த்தாயா? மானிடா! மீண்டும் திரும்பி வா.
இவற்றிலும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக்
காணப்போகிறாய்" என்றார்.
16 அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின்
உள் கூடத்திற்குக் கூட்டி வந்தார்.
அங்கே ஆண்டவரது கோவிலின் வாயிற்பகுதியில்,
மண்டபத்திற்கும், பீடத்திற்கும் இடையில்,
ஏறக்குறைய இருபத்தைந்து பேரைக் கண்டேன்.
அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும்
முகம் கிழக்குத் திசையையும் நோக்கி இருந்தன.
அவர்கள் கிழக்கே பார்த்துக் கதிரவனைத்
தொழுது கொண்டிருந்தனர்.
17 அவர் என்னை நோக்கி,
"பார்த்தாயா? மானிடா!
யூதா வீட்டார் இங்கு செய்கிற அருவருப்புகள் அற்பமானவையோ?
அவர்கள் நாட்டை வன்முறையினால் நிரப்பி
மீண்டும் மீண்டும் எனக்குச் சினமூட்டுகிறார்கள்.
அதோ பார், திராட்சைக் கிளைகளைத்
தங்கள் மூக்கிற்கு எதிராகத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.
18 எனவே நான் அவர்களிடம் சினத்துடன் நடந்து கொள்வேன்.
என் கண் அவர்களுக்கு இரக்கம் காட்டாது.
நான் அவர்களைத் தப்பவிடேன்.
என் செவிகளில் அவர்கள் பெரும் குரலிட்டு அழுதாலும்
நான் கேட்கமாட்டேன்."


குறிப்புகள்

[1] 8:2 = எசே 1:27.
[2] 8:4 = எசே 1:28.
[3] 8:14 - நிலவளம் காக்கும் தெய்வம்.



(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை