பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

41


ஆஹா, இந்தப் பாதசாரிகள்! இன்னுமா இவர்கள் நடக்கவேண்டும்? நாடு விடுதலை அடைந்த பிறகுமா இவர்கள் நடக்கவேண்டும்?

குறைந்த பட்சம் தனக்கென்று ஒரு வீடு, தனக்கென்று ஒரு தோட்டம், தனக்கென்று ஒரு கார், தனக்கென்று ஒரு ரேடியோ, தனக்கென்று ஒரு நூல் நிலையம் ஆகியவற்றை இவர்கள் எப்போதுதான் அடையப் போகிறார்கள்?

"உழைப்பே செல்வம், உழையுங்கள்! உழைப்பே செல்வம், உழையுங்கள்!” என்று என்றோ ஒரு நாள் மயானத்தில் கிடைக்கப்போகும் பொதுவுடைமை மண்ணான ஆறடிமண்ணைத் தவிர வேறொரு மண்ணும் இல்லாத இந்த மக்களைப் பார்த்து ஓயாமல் ஒழியாமல் அடித்துக்கொள்கிறார்களே, மேற்கூறிய வசதிகள் அத்தனையையும் வழி வழியாகப் பெற்று வரும் மேன் மக்கள், இந்தக் கீழ்மக்களை விடவா உழைத்துக் கிழித்து விடுகிறார்கள்?

அன்றுதான் நாட்டின் செல்வத்தை யெல்லாம் வெள்ளைக்காரன் கொள்ளை கொண்டு போனான்; இன்று யார் கொள்ளை கொண்டு போகிறார்கள்? அப்படியே கொள்ளை கொண்டு போனாலும் அன்றுதான் தடுத்து நிறுத்த முடியவில்லை; இன்று கூடவா தடுத்து நிறுத்தமுடியவில்லை?

மூளைக்கு மூளை வித்தியாசம் இருந்தால் என்ன? அதற்காக மூளையுள்ளவர்கள் மூளையில்லாதவர்களை ஏய்த்தா பிழைக்கவேண்டும்?

அப்படியே இருந்தாலும் வீட்டுக்கு வீடாவது வித்தியாசம் இல்லாமல் இருக்கலாமே!