திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர். பளிங்குச் சிலை உருவாக்கிய கலைஞர்: நிக்கொலாசு கொர்தியே. இடம்: மரியா பேராலயம், உரோமை நகர்.


1 குறிப்பேடு (The First Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

தாவீதின் கணக்கெடுப்பு[தொகு]

(2 சாமு 24:1-25)


1 சாத்தான் இஸ்ரயேலுக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் தூண்டினான்.
2 தாவீது யோவாபையும், மற்றப் படைத்தலைவர்களையும் நோக்கி, "நீங்கள் போய் பெயேர்செபா தொடங்கி தாண்வரை வாழும் இஸ்ரயேல் மக்கள் தொகையைக் கணக்கிட்டு என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை அறியவேண்டும்" என்றார்.


3 யோவாபு பதிலுரையாக, "ஆண்டவர் தம் மக்களை இப்போது இருப்பதினும் நூறு மடங்கு மிகுதியாய்ப் பெருகச் செய்வாராக! என் தலைவராகிய அரசரே, அவர்கள் யாவரும் என் தலைவரின் பணியாளர் அன்றோ! என் தலைவர் இதை ஏன் நாட வேண்டும்? இஸ்ரயேலின் மீது பழி விழக் காரணமாக வேண்டும்?" என்றார்.
4 இறுதியில், அரசரின் கட்டளை யோவாபைப் பணிய வைத்தது. எனவே யோவாபு புறப்பட்டுப்போய் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.
5 போருக்குத் தகுந்த ஆள்களின் தொகையை யோவாபு தாவீதிடம் அறிவித்தார். வாளேந்தும் வீரர் இஸ்ரயேலில் பதினோர் இலட்சம் பேரும், யூதாவில் நான்கு இலட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தனர்.
6 எனினும், அரசரின் ஆணையை வேண்டாவெறுப்பாய் நிறைவேற்றினபடியால் லேவி, பென்யமின் குலத்தாரை யோவாபு கணக்கிடவில்லை.


7 இக்கணக்கெடுப்பு கடவுளின் பார்வையில் தீயதெனப்பட்டதால், அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார்.
8 தாவீது கடவுளிடம், "நான் இந்தச் செயலைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். உம் அடியேனை மன்னியும், மதியீனமாய்ச் செயல்பட்டேன்" என்று சொன்னார்.


9 அப்போது தாவீதுக்குக் காட்சியாளராய் இருந்த காத்து கூறியதாவது:
10 "நீ தாவீதிடம் சென்று, 'ஆண்டவர் கூறுவது இதுவே: நான் மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன்; அவற்றுள் ஒன்றை நீ தெரிந்து கொள்; அவ்வாறே உனக்குச் செய்வேன்' என்று சொல்" என்றார்.


11 காத்து தாவீதிடம் சென்று "ஆண்டவர் கூறுவது இதுவே: 'நீயே தேர்ந்துகொள்:
12 மூன்று ஆண்டுப் பஞ்சமா? உன் எதிரிகளின் வாளுக்கு அஞ்சி மூன்று மாதம் அவர்கள்முன் ஓடுவதா? இஸ்ரயேல் நாடெங்கும் சாவுண்டாகும்படி ஆண்டவரின் தூதர் மூன்று நாள்கள் நாட்டில் வருவிக்கும் ஆண்டவரின் வாளான கொள்ளை நோயா?' இப்போது, என்னை அனுப்பியவருக்குப் பதிலளிக்குமாறு உம் முடிவைக் கூறும்" என்றார்.


13 தாவீது காத்தை நோக்கி, "நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன்; ஆண்டவர் கையில் நான் சரண் அடைவதே மேல்! ஏனெனில் அவர் மிகவும் இரக்கம் உள்ளவர். மனிதர் கையில் நான் அகப்படக்கூடாது" என்றார்.


14 எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால் இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர்.
15 பின்னர், எருசலேமை அழிக்கக் கடவுள் ஒரு தூதரை அனுப்பினார். எனினும், அவர் அவ்வாறு அழிக்கும்போது ஆண்டவர் அந்தத் தீங்கைப் பார்த்து மனம் வருந்தி, அழித்துக் கொண்டிருந்த தூதரைப் பார்த்து, "போதும் உடனே நிறுத்து!" என்று கட்டளையிட்டார். அந்நேரம் ஆண்டவரின் தூதர் எபூசியனான ஒர்னானின் களத்தருகில் நின்று கொண்டிருந்தார்.


16 தாவீது தம் கண்களை உயர்த்தியபோது, ஆண்டவரின் தூதர் மண்ணுலகுக்கும் விண்ணுலகுக்கும் நடுவே, தன் கையில் உருவிய வாள் பிடித்து, அதை எருசலேமில்மீது நீட்டியிருக்கக் கண்டார். அப்போது தாவீதும் பெரியோர்களும் சாக்கு உடை உடுத்தி முகம் குப்புற விழுந்தனர்.
17 தாவீது கடவுளை நோக்கி, "மக்களைக் கணக்கிடச் சொன்னவன் நானல்லவா? நானே குற்றவாளி; நானே தீமை செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தன? என் கடவுளாகிய ஆண்டவரே! உமது கை என்மேலும் என் தந்தையின் வீட்டாரின் மேலும் இருக்கட்டும், கொள்ளை நோய் மக்களிடமிருந்து விலகட்டும்" என்று வேண்டினார்.


18 ஆண்டவரின் தூதர் காத்தை நோக்கி, "எபூசியனான ஒர்னாவின் களத்திற்குச் சென்று ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்புமாறு தாவீதுக்குச்" சொல் என்றார்.
19 ஆண்டவர் பெயரால் காத்து கூறிய வாக்கின்படி தாவீது சென்றார்.
20 அந்நேரத்தில் ஒர்னான் கோதுமை போரடித்துக் கொண்டிருந்தார். அவர் திரும்பியபோது தூதரைக் கண்டார். அவரோடிருந்த அவருடைய நான்கு புதல்வர்களும் ஒளிந்து கொண்டனர்.
21 தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் தலைநிமிர்ந்து பார்த்து, போரடிக்கும் களத்தை விட்டு வெளியேறி, முகம்குப்புறத் தரையில் விழுந்து அவரை வணங்கினார்.
22 தாவீது ஒர்னானை நோக்கி, "உமது போரடிக்கும் களம் இருக்கும் இடத்தை எனக்குக் கொடும். கொள்ளை நோய் மக்களைவிட்டு நீங்கும்படி அவ்விடத்தில் ஆண்டவருக்கு நான் ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும்; அதன் முழு விலையையும் உமக்குத் தருவேன்" என்றார்.


23 ஒர்னான் தாவீதை நோக்கி, "என் தலைவராகிய அரசர் அதை எடுத்துக்கொண்டு தாம் விரும்பும் வண்ணம் செய்வாராக! இதோ! எரிபலிக்காக மாடுகளும் விறகுக்காகப் போரடிக்கும் கருவிகளும் படையலுக்காகக் கோதுமையும் இருக்கின்றன. அனைத்தையும் நான் தருகிறேன்" என்றார்.


24 அரசர் தாவீது ஒர்னானை நோக்கி, "அப்படியல்ல, நான் அதை முழு விலைக்கு வாங்குவேன். உமக்கு உரியதை ஆண்டவருக்காக எடுத்துக்கொள்ளமாட்டேன். எனக்கு எந்தச் செலவுமின்றி எரிபலி செலுத்தவும் மாட்டேன்" என்றார்.
25 அவ்வாறே தாவீது அறுநூறு பொற்காசுகளை [*] ஒர்னானுக்குக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்.
26 தாவீது அங்கு ஒரு பலிபீடத்தை ஆண்டவருக்குக் கட்டி எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி, ஆண்டவரிடம் வேண்டுதல் செய்தார். அவர் பலிபீடத்தின் மேலிருந்த பலியின்மேல் வானின்று இறங்கிய நெருப்பின்மூலம் ஆண்டவர் பதிலளித்தார்.


27 தூதரிடம் அவருடைய வாளை மறுபடியும் அதன் உறையில் வைக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்.
28 அப்பொழுது தாவீது எபூசியரான ஒர்னானின் களத்தில் ஆண்டவர் தமக்குப் பதிலளித்ததைக் கண்டு அங்கேயே பலி செலுத்தினார்.
29 மோசே பாலைநிலத்தில் எழுப்பிய ஆண்டவரின் திருக்கூடாரமும், எரிபலிபீடமும் அந்நாள்களில் கிபயோனின் தொழுகை மேட்டில் இருந்தன.
30 தாவீது ஆண்டவரின் தூதரது வாளுக்கு அஞ்சியபடியால், கடவுள் அருளும் வாக்கைப் பெற அவர் அங்குச் செல்ல இயலவில்லை.

குறிப்பு

[*] 21:25 'செக்கேல்' என்பது எபிரேய பாடம்.

அதிகாரம் 22[தொகு]


1 அப்பொழுது தாவீது, "கடவுளாகிய ஆண்டவரின் கோவில் இங்கே இருக்கும். இஸ்ரயேலர் பலியிடும் எரிபலிபீடமும் இங்கேயே இருக்கும்" என்றார்.

கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள்[தொகு]


2 தாவீது இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்துவந்த அன்னியரைக் கூடிவரச் செய்தார். கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கான செதுக்கப்பட்ட கற்களைத் தயார் செய்வதற்கென்று கல் தச்சரை அவர் நியமித்தார்.
3 தாவீது வாயில்களின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளுக்கும் கீல் முளைகளுக்குமான ஏராளமான இரும்பையும் அளவிட இயலா வெண்கலத்தையும் தயார் செய்தார்.
4 அவர் எண்ணிலடங்காக் கேதுரு மரங்களையும் தயார் செய்தார். ஏனெனில், சீதோன், தீரின் மக்கள் ஏராளமான கேதுரு மரங்களைத் தாவீதுக்குக் கொண்டு வந்தார்கள்.
5 தாவீது, "என் மகன் சாலமோன் அனுபவமற்ற இளைஞன். ஆண்டவருக்குக் கட்டப்பட்ட வேண்டிய கோவிலோ பெரியதும் உலகெங்கிலும் பெரும் புகழும் மாட்சியும் பெற்றதாயும் இருக்க வேண்டும். எனவே அதற்கு வேண்டியவற்றை நானே தயாரித்து வைப்பேன்" என்று கூறி, தாவீது அவருடைய சாவுக்குமுன் ஏராளமான பொருள்களைச் சேகரித்து வைத்தார்.


6 மேலும் தம் மகன் சாலமோனை அழைத்து இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தைக் கட்டுமாறு பணித்தார்.
7 தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, "என் மகனே, கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஒரு கோவிலைக் கட்ட என் மனத்தில் நினைத்திருந்தேன்.
8 மாறாக, ஆண்டவர் என்னோடு பேசி, 'நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்ட வேண்டாம்.
9 இதோ! உனக்கு ஒரு மகன் பிறப்பான்! அவன் அமைதியின் மன்னனாய் இருப்பான்! சுற்றிலுமுள்ள அவனுடைய பகைவர்களிடமிருந்து அவனுக்கு அமைதியை அருள்வேன்! எனவே அவனுடைய பெயர் "சாலமோன்" எனப்படும்! அவனுடைய வாழ் நாள்களில் இஸ்ரயேலுக்கு நிறைவாழ்வும் அமைதியும் அருள்வேன்.
10 அவன் என் பெயருக்குக் கோவில் கட்டுவான்; அவன் எனக்கு மகனாய் இருப்பான்; நான் அவனுக்குத் தந்தையாயிருப்பேன்; இஸ்ரயேலில் அவன் அரச அரியணையை என்றென்றும் நிலைநாட்டுவேன்' என்றார். [1]


11 இப்போதும், என் மகனே! ஆண்டவர் உன்னோடு இருப்பராக! அவர் உன்னைக் குறித்துக் கூறியபடியே உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தை நீ கட்டி முடிப்பதில் வெற்றி பெறுவாயாக!
12 உன் கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து இஸ்ரயேலை ஆள்வதற்கு வேண்டிய அறிவையும் விவேகத்தையும் ஆண்டவர் உனக்குக் தந்தருள்வாராக!
13 ஆண்டவர் மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து அதன்படி செய்தால் நீ வளம் பெறுவாய்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே! [2]
14 இதோ! எளியேன் ஆண்டவரின் இல்லத்திற்காக நாலாயிரம் 'டன்' [3] பொன்னும், நாற்பதாயிரம் 'டன்' [4] வெள்ளியும் எடை மதிப்பட இயலா வெண்கலமும், இரும்பும் ஏராளமாய்ச் சேகரித்துள்ளேன்; மரங்களும், கற்களும் தயார் செய்து வைத்துள்ளேன்; நீ இன்னும் அதிகம் சேகரிப்பாய்.
15 வேலை செய்யத் திரளான ஆள்களும், கல்தச்சர், கொத்தர், தச்சர் ஆகியோரும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றைக் கொண்டும் எல்லாவித வேலைப்பாடுகளையும் செய்யக்கூடிய எண்ணற்ற கைவினைஞர்களும் இருக்கின்றனர்.
16 எழு! செயல்படு! ஆண்டவர் உன்னோடு இருப்பராக!" என்றார்.


17 மேலும் தம் மகன் சாலமோனுக்கு உதவி செய்யும்படி இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவருக்கும் தாவீது கட்டளையிட்டுக் கூறியது:
18 "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருந்து, எத்திக்கிலும் உங்களுக்கு அமைதியைத் தந்துள்ளார் அல்லவா? உலகில் வாழ்வோரை என் கையில் ஒப்படைத்துள்ளார். ஆண்டவருக்கு முன்பாகவும், அவர் தம் மக்களுக்கு முன்பாகவும், உலக நாடுகள் அடக்கி வைக்கப்பட்டுள்ளன.
19 இப்போது, உங்கள் இதயத்தாலும், உங்கள் உள்ளத்தாலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நாடுங்கள். நீங்கள் சென்று, ஆண்டவரின் திருத்தலத்தை எழுப்புங்கள். ஆண்டவரின் பெயருக்கென எழுப்பப்படும் கோவிலுக்கு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையும், கடவுளின் எல்லாப் புனித கலன்களும் கொண்டு வரப்படட்டும்."

குறிப்புகள்

[1] 22:7-10 = 2 சாமு 7:1-16; 1 குறி 17:1-14.
[2] 22:13 = யோசு 1:6-9.
[3] 22:14 'ஒரு இலட்சம் தாலந்து' என்பது எபிரேய பாடம்.
[4] 22:14 'பத்து இலட்சம் தாலந்து' என்பது எபிரேய பாடம்.

(தொடர்ச்சி): குறிப்பேடு - முதல் நூல்: அதிகாரங்கள் 23 முதல் 24 வரை