திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்" - நீதிமொழிகள் 17:17.

நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

அதிகாரம் 17[தொகு]


1 சண்டை நடக்கும் வீட்டில் விருந்துண்பதைவிட,
மன அமைதியோடு பழஞ்சோறு சாப்பிடுவதே மேல்.


2 முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்டவனாயிருந்தால்,
அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்;
ஏனைய சகோதரர்களோடு உரிமைச் சொத்தில் பங்கு பெறுவான்.


3 வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்;
உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர்.


4 தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்;
அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலோடு கேட்பான்.


5 ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார்;
பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.


6 முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர்கள்;
பிள்ளைகளின் பெருமை அவர்கள் தந்தையரே.


7 பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை;
பொய்யான பேச்சும் அரசனுக்குப் பொருந்தவே பொருந்தாது.


8 கைக்கூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போலப் பயன்படுத்துகிறார்;
அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத்தையும் நிறைவேற்றுவார்.


9 குற்றத்தை மன்னிப்பவர் நட்பை நாடுகிறவர்;
குற்றத்தைத் திரும்பத் திரும்ப நினைப்பூட்டுகிறவன் நட்பை முறிப்பான்.


10 சொரணை கெட்டவனுக்கு நூறு அடி கொடுப்பதைவிட
உணர்வுள்ளவருக்கு ஒரு சொல் சொல்வது மிகுந்த பயனைத் தரும்.


11 தீயவர் கலகம் செய்வதையே நாடுவர்;
அவர்களை அழிக்கக் கொடிய தூதர் அனுப்பப்படுவார்.


12 மடமையில் மூழ்கிக் கிடக்கும் மதிகேடனுக்கு எதிர்ப்படுவது,
குட்டியைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவதைவிடக் கேடானது.


13 நன்மை செய்தவருக்கு எவர் தீமை செய்கிறாரோ,
அவர் வீட்டை விட்டுத் தீமை அகலாது.


14 வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்;
வாக்குவாதம் மேலும் வளருமுன் அதை நிறுத்திவிடு.


15 குற்றம் செய்தவரை நேர்மையானவரென்றும்,
நேர்மையானவரைக் குற்றம் செய்தவரென்றும்
தீர்ப்புக் கூறுகிறவர்களை ஆண்டவர் அருவருக்கிறார்.


16 மதிகேடர் கையில் பணம் இருப்பதால் பயனென்ன?
ஞானத்தைப் பெற்றுக்கொள்ளச் செலவிடுவாரா?
அவருக்குத் தான் மனமில்லையே!


17 நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்;
இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்.


18 அடுத்தவர் கடனுக்காகப் பொறுப்பேற்று,
அவருக்காகப் பிணையாய் நிற்பவன் அறிவில்லாதவனே.


19 வாதத்தை நாடுகிறவன் குற்றப் பழியை நாடுகிறான்;
இறுமாப்பான பேச்சு இக்கட்டை வருவிக்கும்.


20 கோணல் மதியுள்ளவர் நன்மையைக் காணார்;
வஞ்சக நாவுள்ளவர் தீமையில் சிக்குவார்.


21 மதிகேடனைப் பெற்றவர் கவலைக்குள்ளாவார்;
மூடருடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியே இராது.


22 மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து;
வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்.


23 கயவர் மறைவாகக் கைக்கூலி வாங்கிக்கொண்டு,
நியாயத்தின் போக்கையே மாற்றிவிடுவார்.


24 உணர்வுள்ளவர் ஞானத்திலேயே கண்ணாயிருப்பார்;
மதிகேடரின் கவனமோ நாற்புறமும் அலையும்.


25 மதிகெட்ட மகனால் தந்தைக்குக் கவலை;
பெற்ற தாய்க்குத் துயரம்.


26 நேர்மையானவருக்கு அபராதம் விதிப்பதும் நன்றல்ல;
மேன்மக்களுக்குக் கசையடி கொடுப்பதும் முறையல்ல.


27 தம் நாவைக் காத்துக்கொள்பவரே அறிவாளி;
தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்பவரே மெய்யறிவாளர்.


28 பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்;
தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.


அதிகாரம் 18[தொகு]


1 பிறரோடு ஒத்துவாழாதவர் தன்னலத்தை நாடுகின்றார்;
பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்.


2 மதிகேடர் எதையும் அறிந்து கொள்ள விரும்பமாட்டார்;
தம் மனத்திலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.


3 கயமையும் இழிவும் சேர்ந்தே வரும்;
மதிப்பை இழப்பவர் இழிசொல்லுக்கு ஆளாவார்.


4 மனிதரின் சொற்கள் ஆழ்கடல் போன்றவை,
அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம், ஞானம் சுரக்கும் ஊற்று.


5 பொல்லாருக்குக் கருணை காட்டுவது முறையல்ல;
நேர்மையானவருக்கு நீதி கிடைக்காமல் தடுப்பது நேரியதல்ல.


6 மதிகேடர் பேசத் தொடங்கினால் வாக்குவாதம் பிறக்கும்;
அவரது பேச்சு அவருக்கு அடிவாங்கித் தரும்.


7 மதிகேடர் தம் வாயால் அழிவார்;
அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும்.


8 புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பதுபோலாம்;
அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.


9 தன் வேலையில் சோம்பலடைகிறவன்
அழிவை உண்டாக்குகிறவருக்கு உடன் பிறந்தவன்.


10 ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை;
அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட் சென்று அடைக்கலம் பெறுவார்.


11 செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும்
உரமான மதில் என்றும் எண்ணிக்கொள்கிறார்.


12 முதலில் வருவது இறுமாப்பு; அதனை அடுத்து வருவது அழிவு;
மேன்மை அடையத் தாழ்மையே வழி.


13 வினாவைச் செவ்வனே கேட்பதற்குமுன் விடையளிப்பவர்களுக்கு
அச்செயலே அவர்களுக்கு மடமையும் இகழ்ச்சியும் ஆகும்.


14 மன வலிமை நோயைத் தாங்கிக்கொள்ளும்;
மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்?


15 உணர்வுள்ளவர் மனம் அறிவைப் பெருக்கிக்கொள்ளும்;
ஞானமுள்ளவர் செவி அறிவுபெறுவதில் நாட்டங்கொள்ளும்.


16 ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும்,
அவரைப் பெரியோர்முன் கொண்டு போய்ச் சேர்க்கும்.


17 வழக்கில் எதிரி வந்து குறுக்குக் கேள்வி கேட்கும் வரையில்
வாதி கூறுவது நியாயமாகத் தோன்றும்.


18 திருவுளச் சீட்டு விவாதத்தை முடிவுறச் செய்யும்;
வாதிடும் வலியோரின் வழக்கைத் தீர்க்கும்.


19 உன் இனத்தானுக்கு உதவி செய், அவன் உனக்கு அரணாயிருப்பான்;
அவனோடு நீ சண்டையிட்டால் அவன் கதவைத் தாழிட்டுக் கொள்வான். [*]


20 ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பார்;
தம் பேச்சின் விளைவையே அவர் துய்த்தாக வேண்டும்.


21 வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே;
வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.


22 மனைவியை அடைகிறவன் நலமடைவான்;
அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்.


23 ஏழை கெஞ்சிக் கேட்பார்;
செல்வரோ கடுகடுப்புடன் மறுமொழி கொடுப்பார்.


24 கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு;
உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு.


குறிப்பு

[*] 18:19 - "அரண்சூழ் நகரைக் கைவசப்படுத்துவதைவிட,
சினங்கொண்ட சகோதரனை தன் வசப்படுத்துவது கடினம்;
அவனது பகைமை கோட்டைத் தாழ்ப்பாள்களைப் போன்றதாகும்"
என்பது வேறு பாடம்.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை